பக்கம்:அறிவியல் தமிழின் விடிவெள்ளி.pdf/96

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

88

மணவையாரின் இஸ்லாமிய இலக்கியப் பணி


வல்லது. வெறிதான ஓலை என்றும் சலசலக்கும்; பச்சோலைக்கில்லை ஒலி' என்பது போல் விளம்பர ஆர்ப்பாட்டம் ஏதுமிலாது வளர்ந்த அன்னார், பேசவும் எழுதவும் தொடங்கிய நாள் முதலாக, இஸ்லாமிய இலக்கியம் பற்றியே சிந்தித்துப்பணி ஆற்றியவர். இயற்றப்பட்ட காலம் முதல் உரை இல்லாமல் இருந்த காசிம்புலவர் திருப்புகழ் போன்ற நூல்களுக்கு உரைகாணல், திருத்தப்பிரதி உருவாக்கல், அருங்காப்பியங்களுக்குக் கருத்தரங்குகள் நடத்துதல், மாநாடுகள் திரட்டல், அவ்விஸ்லாமிய இலக்கிய வடிவங்களை நூலுருப்பெறச் செய்தல், வானொலி உரை வழி எழுத்தோவியம் உருவாக்கல், அகராதி திரட்டல், களஞ்சியம் புதுக்குதல், கூரியர் பணி வேறு எனப் பல்துறைப் பணி ஏற்றுத் திரிந்து பறந்து வரும் இவ்விலக்கியத் தும்பியை என்ன சொல்லிப் பாராட்டுவது?

தீனில் நெருங்கியவர்க்கும், நெருங்க மறந்தவர்க்கும் கருணையோடு உதவுவது திருமறை, அதைத் தந்தவன் யார்? கடற்கரையை நெருங்கியவர்க்கு முத்தையும், மூழ்கியவருக்குப் பவளத்தையும், அகன்றவர்க்கு மழைமேகத்தையும், அணைந்தவர்க்கெல்லாம் வற்றாக்கடலென வாரித்தரும் அற்புதன், புரிந்தார்க்கும் புரியாதவர்க்கும், நல்லார்க்கும், பொல்லார்க்கும், கற்றார்க்கும் கல்லாதார்க்கும் களிப்பருளும் களிப்பான அல்லாவன்றோ? அவன் புகழையும், அவனது அன்புத் தூதர் நபி (சல்) அவர்களின் பெருமையும் நாளெல்லாம் பேசினால் போதாது என்று பொழுதெல்லாம் ஏடுகளில் எழுதிவரும் இஸ்லாமிய இலக்கியப் பணியாளராய் எம்மிடையே மலர்ந்த மணவையார் நிச்சயம் ஒரு மகரந்த மலர்!

இலக்கியங்களிலும் நல்ல இலக்கியங்கள் - ஒழுக்க இலக்கியங்கள் கற்றால்தானே, வெள்ளத்தனைய மலர்நீட்