தவறு செய்வது மனிதப் பண்பு. அதனைத் திருத்திக்கொண்டும், திருந்தி வாழ்வதும் தெய்வப் பண்பு என்று அதற்குமேல் விளக்கம் கூறுவதும் உண்டு.
'தன்னை அறிந்தவன் தலைவன். தானே தனக்குப் பகைவனும், தலைவனும்' என்றும் நமது பழம்பாடல் கூறிச் சென்றிருக்கின்றது.
தன்னுடைய நிலை என்ன? தன்னுடைய தகுதி என்ன? தன்னுடைய திறமையின் அளவென்ன? திறமையை தகுந்த இடத்தில் பயன்படுத்தும் வழிகள் என்ன? என்றெல்லாம் வாழ்வில் தெரிந்துகொள்ளும் முன், அவைகளை சோதனை போட்டுத் தெரிந்து கொள்ளுகின்ற வாய்ப்பினைத்தான் விளையாட்டு வழங்குகிறது.
வாழ்க்கையின் 'சோதனைக்கூடம்', வாழ்வின் ஆராய்ச்சிக் கூடம் விளையாட்டு என்றால் அது. உண்மையே தவிர- மிகையல்ல.
விளையாட்டிலே பங்கு பெறுகின்ற ஒவ்வொருவனும், தனது தகுதியை அளந்து கொள்கிறான். மிகுதிக்கு என்ன செய்யவேண்டும் என்ற கருத்துக்களை தொகுத்து வைத்துக் கொள்கிறான்.
அவ்வளவு அனுபவங்களையும் அயராமல் வாரி வழங்குவது விளையாட்டு என்றால், அதன் தத்துவமே ஆதார சுருதியாக, அப்படித்தானே விளங்குகிறது.
உடல் நலம் உள்ளவனே விளையாட்டில் பங்கு பெற முடியும். உள்ளத்தில் நம்பிக்கை உள்ளவனே விளையாட்டில் போராட முடியும். மற்றவர்களை மதிக்கத் தெரிந்தவனே, மற்றவர்களுடன் கலந்துறவாட