பக்கம்:மனத்தின் தோற்றம்-ஆய்வுக் கட்டுரைகள்.pdf/55

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

சுந்தர சண்முகனார்

53



புதுவை மாநிலத்தில் தமிழாசிரியர்கள் போராடி, உயர் நிலைப் பள்ளிகட்கு அன்று - நடுநிலைப் பள்ளிகட்குத் தலைமையாசிரியர் பதவி அளிக்கச் செய்தனர். உடனே, மற்ற பாடத்து ஆசிரியர்கள் போராடியதால், தமிழாசிரியர் கள் தலைமையாசிரியர் பதவியிலிருந்து கீழே இறக்கப் பட்டனர். இப்போது புதுச்சேரி மாநிலத்தில் அரசுக் கல்வித் துறையில் உள்ள அலுவலர்களுள் யாரும் இதற்குப் பொறுப்பாளர் ஆகார். இது முன்பு எப்போதோ நடந்தது. ஆனால், அந்தக் காலத்தில் அகத்தியர் தமிழை இயம்பியதால் புகழ் பெற்றாராம். காலத்தின் கோலம் என்னே!

தமிழ் நாட்டின் வடக்கே இருந்து கொண்டு காட்டில் இராமனை வரவேற்ற அகத்தியர் எந்த மொழியில் பேசி யிருப்பார்? இராமனோடு எந்த மொழியில் உரையாடி யிருப்பார்? - என்பதை அறிஞர்கள் ஆய்க. மற்றும், தம்பராமாயணம் சுந்தர காண்டத்தில்,

“தென்சொல் கடந்தான் வடசொல்
கடற்கு எல்லை தேர்ந்தான்”

என இராமன் கம்பரால் சுட்டப்பட்டிருப்பதும் ஈண்டு நினைவுகூரத் தக்கது.

இதுகாறும் மேலே கூறப்பட்டுள்ள தமிழ் பற்றிய செய்திகள், கம்பராமாயணம் - ஆரணியகாண்டம் - அகத்தியப் படலத்தில் அறிவிக்கப்பட்டுள்ளது. அதனால், அந்த அகத்தியப் படலம் 'கம்பரின் தமிழ்ப் படலம்' என்று கூறப்படும் உரிமைக்கு ஏற்றதே. கம்பரின் தமிழ்ப் படலம் என்பது இந்த அகத்தியப் படலமே.