பக்கம்:மனத்தின் தோற்றம்-ஆய்வுக் கட்டுரைகள்.pdf/174

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

172

மனத்தின் தோற்றம்


தூநீர் மாலை தூத்தகை யிழந்தது
நிகர்மலர் நீயே கொணர்வாய் என்றலும்” (8-15)

என்பது பாடல் பகுதி. மூக்கால் மலரை மோந்து பார்த்தலும் கூடாதாம். கழற்சிங்கர் என்னும் அரசனின் மனைவி கடவுளுக்கு உரிய மலரை எடுத்து மூக்கால் மோந்ததால் செருத்துணை நாயனார் என்பவர் அரசியின் மூக்கை அரிந்து விட்டாராம். இதையறிந்த மன்னர் கழற் சிங்கன் மலரை எடுத்த கையையல்லவா முதலில் வெட்ட வேண்டும் என்று கூறித் தம் மனைவியின் கையை வெட்டி விட்டாராம். இவரும் ஒரு நாயனார். எவ்வளவு கடுமைச் செயல் இது! இது பெரியபுராணக் கதை.

சவகர்லால் நேரு ஒரு முறை காஷ்மீர் சென்றபோது அங்கு ஓரிடத்தில் இருந்த நறு மலர்களை அண்ணல்காந்தி யடிகளிடம் கொண்டுவந்து அளித்துச் சிறப்பு செய்வதற்காக எடுத்தாராம். பின் அவற்றை மூக்கால் மோந்தாராம். அப்போது அவருடைய உதவியாளராக உடன் சென்றிருந்த எச். வி. ஐயங்கார் என்னும் தமிழர், நேருவை நோக்கி, மோந்த மலரை அளிப்பது எங்கள் பக்கத்தில் (தமிழகத்தில்) வழக்கமில்லை என்று கூறினாராம். உடனே நேரு மோந்த மலர்களைக் கீழே போட்டு விட்டு வேறு புது மலர்களை எடுத்துச் சென்றாராம். மோந்ததே கூடாதெனின், கண்ணிர் பட்டது சிறிதும் கூடா தன்றோ!

பெண்கள் தனித்து ஏகாமை

மாதவி மணிமேகலையை மலர் வனம் சென்று வேறு மலர் கொண்டு வருக என்றதும், சுதமதி என்ற தோழி, மணிமேகலையைத் தனியே அனுப்பலாகாது; அவளை ஆடவர் கண்டால் அகலார்; அவர்கள் உள்ளத்தில் காம உணர்வு தோன்றாராயின் பேடிகளாகத்தான் அவர்கள் இருக்கவேண்டும்.