பக்கம்:அவள்.pdf/47

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

அம்மா 3


முதலியார் பிரமாதமாகப் பேசுவார். ஆனால் அவர் மனமும் அவர் உடலைவிடப் பெரிது.

***

மிக மிகச் சிறிய வீடு. இரண்டே சின்ன அறைகள் சமையலறையையும் சேர்த்து. ஆனால் அந்தப் பிரம்மாண்டமான கொல்லையைப் பார்த்த அம்மாவால் சும்மா இருக்க முடியவில்லை. முதலியார் வீட்டிலிருந்து கடப்பாரையும் மண்வெட்டியும் வாங்கிக்கொண்டாள்.

வந்த ஒரு வாரத்துள் கொல்லைப்புறத்துக்கு முகமே மாறிவிட்டது. அத்தனையும் அம்மா.

அவளே கொம்புகளை நட்டுப் பந்தல் போட்டாயிற்று. நாளடைவில் அவரைக்கொடியும் படர ஆரம்பித்து விட்டது. பந்தலின் நிழலில் நாங்கள் விளையாடுவோம். அங்கிருந்து தொங்கும் புடலையைப் பார்த்து எங்களுக்கு வியப்பாயிருக்கும்.

"தொடாதேங்கோ துஷ்டைகளா?" அம்மா சமையலறையிலிருந்து இரைவாள். ஆனால் நாங்கள் தொடுவோம். ஒருதடவை ஒரு புடலை தானாவே பந்தலிலிருந்து கழன்று கீழே தொப்பென்று விழுந்து, அதோ வாழை தட்டிருக்கும் இடத்துக்குச் சரசரவென்று போய் ஜலதாரையுள் மறைந்தது. அம்மா ஒடி வந்து எங்களை மூர்க்கமாக அணைத்துக்கொண்டு அன்று 超Afr@}3km} மாலை எல்லோருக்கும் சுத்திப் போட்டாள்.

கொல்லையின் ஒரு மூலையில் மாட்டுக் கொட்டகை. "அம்மா..." கலியாணி கத்துகிறது. அதற்கு மடிகனம் தாங்காமல் துளிக்கிறது. இன்னும் சற்று நேரம் பார்த்து விட்டு, குப்பன் வராவிட்டால், அம்மாவே கறந்து விடுவாள்.

அம்மாவுக்குக் கண் கண்டது கை செய்யும்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அவள்.pdf/47&oldid=1496194" இலிருந்து மீள்விக்கப்பட்டது