பாரதியாரின் தெய்வப்பாடல்கள்/3. வேலன் பாட்டு

விக்கிமூலம் இலிருந்து
3. வேலன் பாட்டு
ராகம்-புன்னாகவராளி தாளம்-திஸ்ர ஏகம்

வில்லினை யொத்த புருவம் வளைத்தனை;
வேலவா!-அங்கொர்
வெற்பு நொறுங்கிப் பொடிப்பொடி
யானது, வேலவா!
சொல்லினைத் தேனிற் குழைத்துரைப் பாள்சிறு
வள்ளியைக்-கண்டு
சொக்கி மரமென நின்றனை
தென்மலைக் காட்டிலே
கல்லினை யொத்த வலிய மனங்கொண்ட
பாதகன்-சிங்கன்
கண்ணிரண் டாயிரங் காக்கைக்
கிரையிட்ட வேலவா!
பல்லினைக் காட்டிவெண் முத்தைப் பழித்திடும்
வள்ளியை-ஒரு
பார்ப்பனக் கோலந் தரித்துக்
கரந்தொட்ட வேலவா! 1

வெள்ளலைக் கைகளைக் கொட்டி முழங்குங்
கடலினை-உடல்
வெம்பி மறுகிக் கருகிப்
புகைய வெருட்டினாய்.
கிள்ளை மொழிச்சிறு வள்ளி யெனும்பெயர்ச்
செல்வத்தை-என்றும்
கேடற்ற வாழ்வினை-இன்ப
விளக்கை மருவினாய்.
கொள்ளை கொண்டே அமராவதி வாழ்வு
குலைத்தவன்-பானு
கோபன் தலைபத்துக் கோடி
துணுக்குறக் கோபித்தாய்.
துள்ளிக் குலாவித் திரியுஞ் சிறுவன
மானைப்போல்-தினைத்
தோட்டத்திலேயொரு பெண்ணை
மணங்கொண்ட வேலவா! 2

ஆறு சுடர்முகங் கண்டுவிழிக்கின்ப
மாகுதே;-கையில்
அஞ்ச லெனுங்குறி கண்டு
மகிழ்ச்சியுண் டாகுதே,
நீறு படக்கொடும் பாவம் பிணிபசி
யாவையும்-இங்கு
நீக்கி அடியரை நித்தமுங்
காத்திடும் வேலவா!
கூறு படப்பல கோடி யவுணரின்
கூட்டத்தைக்-கண்டு
கொக்கரித் தண்டங் குலுங்க
நகைத்திடுஞ் சேவலாய்!
மாறு படப்பல வேறு வடிவொடு
தோன்றுவாள்-எங்கள்
வைரனிவ பெற்ற பெருங்கன
லே.வடி வேலவா! 3