பக்கம்:நல்வழிச் சிறுகதைகள்-2.pdf/46

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.



44 ⚫ நல்வழிச் சிறுகதைகள்

"உங்கள் மனத்தில் என்ன இருந்தது ? என்ன இல்லை ?” என்று கேட்டான் மதிவாணன்.

இதற்கு என்ன பதில் சொல்வதென்றே அவருக்குப் புரியவில்லை. திருதிருவென்று விழித்தார்.

மன்னர் இளைஞனை நோக்கி, “மதிவானா, உன் கேள்விகளுக்கு நீயே விடை சொல்,” என்று ஆணையிட்டார்.

“புலவர் அரிசங்கரர் சோழ நாட்டிலிருந்து வருகிறார். சேர நாட்டுக்குப் போவோம் என்று நினைத்துக் கொண்டு பாண்டிய நாட்டுக்கு வந்தார். ஆனால், இங்கு தோல்வியடைந்து விட்டதால், சேரநாடு செல்லாமல் காசிக்கே திரும்பப் போகிறார். இதுவரை தன்னை மிஞ்சிய ஆளில்லை என்ற தற்பெருமை அவர் மனத்தில் இருந்தது ; இப்போது அது இல்லை!” என்று தன் மூன்று கேள்விகளுக்கும் உரிய விடைகளைத் தொகுத்துக் கூறினான் மதிவாணன்.

புலவர் அரிசங்கரர் எதிர்பாராத விதமாகத் தாம் அந்த இளைஞனிடம் ஏமாந்து போனதை எண்ணித் தலை குனிந்தார். கூடி நின்ற மக்களோ, இவ்வளவு எளிய பதில்களே சொல்லத் தெரியாத இவர் எப்படி ஐம்பத்து நான்கு நாடுகளிலும் வாதில் வெற்றி பெற்றார் என்று வியப்படைந்தார்கள்.

பாண்டியன் அவரைப் பத்திரமாகக் காசிக்கு அனுப்பி வைத்தான்.

கருத்துரை:- உருவத்தால் சிறியவர் என்று எண்ணி ஒருவர் திறமையைக் குறைவாக மதிப்பிட்டு விடக் கூடாது.