பாராட்டுரைகள்
சிறுவர் பாட்டு-முதற்பகுதி-முதற்பதிப்பாக 1960-ஆம் ஆண்டில் வெளிவந்த போது பத்திரிகைகள் பல சிறந்த மதிப்புரைகள் எழுதின. அவற்றுள் சிலவற்றை இங்குத் தொகுத்து வெளியிட்டுள்ளோம்.
கல்கி
குழந்தைகளுக்காக நாரா நாச்சியப்பன் நிறைய எழுதியுள்ளார். குழந்தைகளுக்கான அவருடைய பாடல்களின் தொகுப்பே இந்தப் புத்தகம். அகர வரிசையில் பாடல்களை அமைத்திருக்கும் முறை அழகாக இருக்கிறது. அன்பு, ஆசை, இன்பம், ஈகை, உண்மை. ஊக்கம், எண்ணம், ஏற்றம், ஐயம், ஒழுக்கம், ஒர்தல், ஒளவை, அஃகேனம் (இப்படியே க, ங, ச வுக்கும்) இந்தத் தலைப்புக்களில் அறிவை வளர்க்கும் அழகழகான பாடல்கள் பல இடம் பெற்றுள்ளன. ஒரு பக்கத்துக்கு ஒரு பாட்டு-படத்துடன் என்று இந்தப் புத்தகம் சிறப்பாகக் கொண்டு வரப்பட்டிருக்கிறது.
முரசொலி
அழகான சந்தங்களில் எளிதான சொற்கள் சேர்த்து, அறிவுக் கருத்துக்களைக் தருகிறார் ஆசிரியர். கவிதைகளில் எளிமை இருக்கிற அளவிற்குக் கவிதை உணர்வுமிருக்கிறது.