பக்கம்:காட்டு வழிதனிலே.pdf/5

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

முன்னுரை

காட்டு வழியிலே ஒரு கவர்ச்சி இருக்கிறது. அங்கே கவிதைக் கன்னி இன்ப நடம் புரிகின்றாள். தனியாக அந்த ஒற்றையடிப் பாதையிலே நடந்து இயற்கையோடு ஒன்றியவர்கள் அதில் திளைத்து உள்ளக் கிளர்ச்சியும் எழுச்சியும் பெறுகிறார்கள்.

சிறந்த கவிதைகளையும், பெரியார்களது உயர்ந்த சிந்தனைச் செல்வங்களையும் துய்க்கும்போதும் இந்த உள்ளக் கிளர்ச்சி ஏற்படுகிறது.

மேலே கூறிய இரண்டு செயல்களின் விளைவாகவே இந்நூலில் அடங்கியுள்ள கட்டுரைகள் தோன்றின.

உள்ளத்தின் எழுச்சியிலே குமுறியெழுந்த எண்ணங்களைக் கலையழகோடு தீட்டுவது இலக்கியக் கட்டுரைகள். நான் முயன்றிருக்கிறேன். அம் முயற்சியின் வெற்றி. எல்லையை இக் கட்டுரைகளைப் படிக்கும் நீங்கள்தான் முடிவு செய்ய வேண்டும்.

பூவீன் சிரிப்பு என்ற தலைப்பிலே ஒரு கட்டுரைத் தொகுதி வெளியீட்டேன். அதை மக்கள் ஆவலோடு படித்துப் பாராட்டினார்கள். அவ்வாறு பாராட்டியிராவிட்டால் மற்றொரு தொகுதி வெளியிடவேண்டுமென்ற எண்ணமே எழுந்திராது. ஆங்கில இலக்கியக் கட்டுரைகளின் பாணியிலே புதிய முறையிலே கட்டுரைகள் எழுதியதை மெச்சிப் பாராட்டியதற்காக எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்ளவே இம்முன்னுரை எழுதுகிறேன். இதற்குமேல் வேறொன்றும் நான் இங்குக் கூறவேண்டியதில்லை என்று தோன்றுகிறது. காட்டு வழியிருக்கிறது; கவிதையும் ஆழ்ந்த சிந்தனையைத் தூண்டும் கருத்துக்களும் இருக்கின்றனவா என்று நீங்களே பார்த்துக் கொள்ளுங்கள். வணக்கம்.