பக்கம்:செம்மொழிப் புதையல்.pdf/105

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

சித்தாந்த கலாநிதி உரைவேந்தர் ஒளவை துரைசாமி

103


அடிக்கடி, அவள் “தோழி, தோழி" என்கிறாள்; அவளை இவளும் "அன்னாய்"என அழைக்கிறாள். ஆகவே, அவளை நாம் தலைவியென்றும், இவளை அவட்குத் தோழி யென்றும் வழங்குவோம்.

தலைவியும் தோழியும் ஆற்றிடைக்குறைக்குச் செல்கின்றனர்.அதனை துருத்தி (an island in the bed of a river) யென்றலும் மரபு. அங்கே, மா, வேம்பு, ஆல், தென்னை முதலிய மரங்கள் அழகுறத் தழைத்துப் பூத்துக் காய்த்து நலம் கனிந்திருக்கின்றன. புதர் தன்பால் செறிந்த பூவால் நறுமணம் கமழ, தென் காற்று மெல்ல வந்து தளிர்களை இனிதசைப்ப, தரை முழுதும் அறுகுபடர்ந்து பசுங்கம்பலம் விரித்ததுபோல் இன்பம் செய்கிறது. கிள்ளையும் புறவும் குயிலும் பூவையும் இசைபாடும் இவ் வினிய விடம் இவ் விருவர் மனத்தையும் வேறிடம் பெயராதவாறு பிணித்து விடுகிறது. “அன்னாய், இங்கே சிறிதே அமர்வோமே என்ன இனிய இடம்;” என்கின்றாள் தோழி.

தலைவி:-என்னை யாதும் வினவல். தோழி, இன்பமுடைய வர்க்கே இயற்கைக் காட்சியும் இன்பமளிக்கின்றது.

தோழி :-இதற்குத்தான் “கெட்டார்க்கு நட்டாரோ இல்" என்று சான்றோர் கூறுகின்றனர். அதுகிடக்க; ஏன் இவ்வாறு பேசுகின்றாய்? இயற்கை யாவர்க்கும் பொது. வாழ்க்கையில் இன்பமுடையார்க்கேயன்றி, அதனை இழந்தார்க்கும் அஃது இன்பம் வழங்குவதில் இழுக்குவது கிடையாது.

தலைவி:-அப்படித்தான் அறிவுடையோர் கூறுகின்றளர். ஆனால், என்னளவில் அது மாறுபட்டிருக்கிறது.

தோழி :- அப்படியானால், இதோ! இங்கே தோன்றும் தென்மலையும், செழுங்கானமும், சேயாறும் உங்கட்கு இன்பம் செய்யவில்லையோ?

தலைவி :- இவற்றைக் காணும்போது என் உள்ளம் திகீர் என்று கலங்குகின்றது. மானினம் துணையொடு கூடிச் செல்வதும், பறவைகள் தத்தம் துணையோடிருந்து பாடி மகிழ்வதும் எனக்கு வருத்தம் செய்யுமே என்று என் நெஞ்சம் அஞ்சுகின்றது.