பக்கம்:இந்திய சமுதாய வரலாற்றில் பெண்மை.pdf/48

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.



46

இந்திய சமுதாய.../சீதையின் கதை


காவ்ய இராமாயணம் என்ற நூலின் ஆசிரியர் திரு.கே.எஸ். ஸ்ரீனிவாசன் விளக்குவது இங்குக் கருதத்தக்கது.

இதிகாச புராணங்கள், இலக்கியங்கள் எல்லாமே இயற்கை நியதிகளையும், மானிட இயல்புகளையும், உலக உண்மைகளையும் ஆதாரமாகக் கொண்டே உருவாயின என்பதுதான் மெய். என்றாலும் உண்மையான மனிதகுல வரலாறுதான் கற்பனைகளுக்கும் கற்பிதங்களுக்கும் உடலும் உயிரும் அளிக்கின்றன என்பதை மறுக்க முடியாது.

கைகேயி, தாயாண் சமுதாயத்திலிருந்து தயரதனால் கொண்டு வரப்பட்டவள். கைகேயி அறிவிற் சிறந்தவள். தயரதன் மேற் கொண்ட சம்பராசுரன் போரில், முன் நின்று தேரோட்டி அவனை வெற்றி பெறச் செய்கிறாள். தயரதனின் உளம் கவர்ந்த நாயகியாகிறாள். எனவே, தன் மகனுக்குத் தான் பட்டம் என்ற உரிமையை வைத்திருக்கிறாள். இது தசரதனுக்கும் உறுத்துகிறது. எனவே தான் கைகேயியின் மைந்தனைத் தாய் மாமன் வீட்டுக்கு அனுப்பி விட்டு உடனே மனைவியரைக் கூடக் கலந்தாலோசிக்காமல் இராமனுக்கு இராச்சியாபிடேகம் செய்ய முனைகிறான் தசரதன்.

கைகேயி, தன் உரிமையைக் கோரும் போது, தசரதன் பரிதாபத்துக்குரிய நியாயவானாகவும் கைகேயி மிகக் கொடியவளாகவும் உருவகப்படுத்தப்படுகின்றனர். உண்மையில் இது ‘மாத்ரு வாக்கிய பரிபாலன’மாகவே இருந்தாலும் இராமன் ‘பித்ரு வாக்கிய பரிபாலனம்’ செய்யவே காட்டுக்குச் செல்வதாகப் பிரகடனப்படுத்தப்படுகிறது.

பதினாறு வயது நிரம்பப் பெறாத ராமனுக்கு, சின்னஞ் சிறுமியான விளையாட்டுப் பருவச் சீதை மனவாட்டியாகிறாள். வில் அதற்கு ஒரு சாக்காகிறது.

இந்தப் பெண்ணுக்கு, தந்தையாதிக்கத்தின் விளைவான பெற்றவர் பாசம், பழகிய இடத்திலிருந்து பெயர்த்தெடுத்தல்