பக்கம்:இந்திய சமுதாய வரலாற்றில் பெண்மை.pdf/76

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

74

இந்திய சமுதாய... /துணை இழப்பும் துறவறமும்


தள்ளிக் கொன்றுவிட்டு அவள் புத்த சங்கத்தில் சேர்ந்து பிக்குணியானாள்.

இவ்வாறு துறவியானவர்கள் தங்கள் வரலாறுகளைப் பாடி வைத்திருப்பதை ஒரு வகையில் குரல் கொடுத்த முன்னோடிகள் எனலாம். கணிகையர் பலர் போக வாழ்க்கையை விடுத்துத் துறவு பூண்டனர். அம்பாலி, அர்த்தகேசி, பத்மாவதி, விமலா என்ற பெயர்கள் புகழ் பெற்ற கணிகையர்க்குரியவை. சநாதன வேத குருபீடங்கள் கணவனை இழந்த மனைவிக்கு, அக்கினியில் புகுவதிலிருந்து விலக்களித்து, கட்டாயத் துறவை விதித்தன.

பெண்ணின் தலையை முண்டிதம் செய்து அலங் கோலமாக்கும் வழக்கம், சமண, புத்த சமயங்கள் துறவுரிமை அளித்ததன் எதிரொலியாகப் பெண்ணுக்கு வந்து விடிந்தது என்று கொள்ளலாம்.

தமிழ்ச்சங்க இலக்கியங்களின் காலத்தை வரையறை செய்வதில், கருத்து வேற்றுமைகள் இருக்கின்றன. 'சங்கம்' என்ற சொல்லே, புத்தமதம் சார்ந்ததாகும். கி.பி. ஐந்தாம், ஆறாம் நூற்றாண்டி ல் தோன்றிய 'மணிமேகலை' என்ற காப்பியத்தில்தான் 'புலம்புரிச் சங்கம் பொருளொடு முழங்க' என்று காணப்படுகிறது என்று பேராசிரியர் வித்தி யானந்தன் 'தமிழர் சால்பு' என்ற நூலில் குறிப்பிடுகிறார்.

சங்க நூல்களில், 'சங்கம்' என்ற சொல்லே வழங்கப்படவில்லை என்றும் அவர் விளக்குகிறார்.

எனினும் 'புலவர் அவை' என்ற அமைப்பும், ஒரே தன்மையுடைய பண்புகளைக் கொண்ட இலக்கியங்கள் எழுந்த அக்காலமும் அப்பாடல்களால் தெரிய வருகின்றன.

சங்ககாலம் என்பது கி.மு. முதலாம் நூற்றாண்டு தொடங்கிக் கி.பி. மூன்றாம் நூற்றாண்டின் முற்பகுதி வரையுள்ள காலப்பரப்பைச் சங்ககாலமெனக் கொள்ளலாம் என்பது பொதுவாக ஒப்புக்கொள்ளப்பட்டிருக்கிறது.