பக்கம்:ஆறுமுகமான பொருள்.pdf/65

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

ஆறுமுகமான பொருள்

43


சென்றவர்கள் திரும்பவில்லை. குறித்த பதினான்கு வருஷமும் கழிந்ததா இல்லையா என்று கணக்கிட்டுத் தெரியவோ அறியான் குகன். ராமனோ, சீதாபஹரணத்தால் நேர்ந்த துயரில் மூழ்கிக் கிடக்கிறான். இலங்கை மீது படையெடுத்துப் போர் நடத்துகிறான். இதையெல்லாம் அறிய ஏது இல்லை குகனுக்கு. அதனால் உடல் மெலிகிறான் உள்ளம் நைகிறான். இந்த நிலையில் குகனது வழிபடு கடவுளான முருகன் அவன் துயர் தீர்க்க விரைகிறான். வள்ளியைச் சீதையாகவும், தேவகுஞ்சரியை வட்சுமணனாகவும் மாற்றி, தானும் ராமன் உருத்தாங்கி குகனது கனவில் தோன்றி தம்பி கவலைப்படாதே குறித்த தவணை முடிய இன்னும் சிறிது காலம் உண்டு. அப்போது வருகிறோம். கவலையை விடு' என்று சொல்லி மறைகிறான். குகனும் அன்று முதல் தேறி வருகிறான். இப்படி அந்தக் குகனதுதுயர் துடைத்து அவனுக்கு ஆனந்தத்தைக் கொடுத்த அந்தக் குகன்தான். குகசுவாமிமூர்த்தி - ஆனந்த நாயகமூர்த்தி என்று பெயர் பெறுகிறான்.

இப்படி ஒரு கதை. புது ராமாயணம் ஆகத்தான். இதைக் கூறுகிறது திருச்செந்தூர்த் தலபுராணம்.

சுந்தரச் சிலை இராமன்
 தோற்றமும் காட்டி, ஞானம்
முந்திய பிரமானந்த
 சித்தியும் கொடுத்து, வேத
மந்திரக் குகச் சுவாமி
 என்னவும் வாய்ந்த, பேர்
ஆனந்த நாயகன் என்று
 ஓது நாமமும் குமரன் பெற்றான்

என்பது பாட்டு.

கதை எப்படியேனும் இருக்கட்டும். இந்தக் கதைக்குப் பின்னால் அமைந்து கிடக்கிறது ஓர் அற்புதமான உண்மை. தமிழ்நாட்டின் சைவ வைஷ்ணவச் சண்டை பிரசித்தம், அப்படி இருந்தும் முருகனைத் தமிழ்த் தெய்வம் என்று அங்கீகரிப்பதிலே அவனை 'மால் அயன் தனக்கும் ஏனைவானவர் தனக்கும், யார்க்கும் மூல காரணமாய் நின்ற மூர்த்தி' என்று தொழுவதிலே, இருவருமே இணைந்து நின்றிருக்கிறார்கள். அரன் மகனே மால்மருகனாகிறான். ஆதலால்