பக்கம்:ஆறுமுகமான பொருள்.pdf/28

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

6

பாஸ்கரத் தொண்டைமான்



கூறும் அடியார் வினை தீர்ப்பவனது கோலத்தைத்தான் நாம் எங்கும் காணலாமே என்றாலும் ஆதி அருணாச்சலம் அமர்ந்த பெருமாளாய், அருணகிரியாரது வினைகளை எல்லாம் தீர்த்தவன் அந்த அண்ணாமலையிலே கம்பத்து இளைஞனார் கோயிலிலேயே உருவாகி இருக்கிறான். வேலோடு வில்லும் ஏந்தி, வானோர் வணங்கும் வில்தானைத்தலைவனாக இலங்கும் திருக் கோலத்தையே பார்க்கலாம் அங்கே.

குன்றுருவ வேல்வாங்கி நின்றவனையும் பல கோலங்களில் பல இடத்தும் பார்க்கிறோம். இருந்தாலும் அந்தச் செங்கோட்டு மலையின் மேல் கோழிக் கொடியும், கையில் வேலும் ஏந்தி நிற்கும் அந்த செங்கோட்டு வேலனைக் காண்பதிலே உள்ளத்திலேயே ஒரு நிறைவு ஏற்படுகிறது அல்லவா. ஆம். அந்த சேலார் வயல்பொழில் செங்கோடனைக் கண்டு தொழ நாலாயிரம் கண் படைத்திலேனே அந்த நான்முகனே என்று அருணகிரியாரே பிரலாபிக்க வேண்டுமென்றால் அவன் அழகு சொல்லும் தரத்ததாமோ.

நமக்கெல்லாம் நன்கு தெரியும் சூரபதுமனை முடிக்க இந்தக் குமரன் எழுந்தருளிய இடம், அந்த திருச்சீரலைவாய் என்னும் திருச்செந்தூர் என்று. மாறுபடு சூரனை வதைத்த கையில் வேலேந்தி நிற்கின்ற குமரனது வடிவம் மிக்க அழகானது. சிறப்பானதும் கூட. சூரனை முடித்து விட்டோம் இனி அச்சம் ஒன்று வேண்டாம் என்று சொல்லி மக்களை எல்லாம் தம் பக்கம் அழைத்து அருள் செய்யும் அபய வரத ஹஸ்தத்தோடு காட்சி கொடுக்கும் அவனது கோலம் கண்கொள்ளாக் காட்சியாகும். அதிலும் அவனுக்கு விபூதி அபிஷேகம் பண்ணிக் கண்டால் அப்படியே மெய்மறப்போம் நாம்.

இத்தனைக் கோலத்தில் அவனை நாம் கண்டாலும் அவன் தன் காதலியாம் குறமகள் வள்ளியை மணக்க எந்த வடிவில் வந்திருக்கிறான் என்பதும் தெரிய வேண்டாமா? தினைப்புனம் காக்கும் வேட்டுவக் குமரியை மணக்க வேடுவனாகவே அல்லவா வந்திருக்கிறான். இந்த வேட்டுவக் கோலத்தைத் தேடித்தான் நான் பல தலங்களுக்குச் சென்றேன். வள்ளிமலையின் படிகளில் எல்லாம் ஏறி இறங்கினேன். அங்கெல்லாம் அவன் காணக் கிடைக்கவில்லை. கடைசியில் அவன் நாமக்கல்லை அடுத்த கொல்லிமலையிலே