பக்கம்:இந்திய இலக்கியச் சிற்பிகள் வரிசை-ஔவை. சு. துரைசாமிப் பிள்ளை.pdf/28

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.



பேராசிரியப் பெருந்தகை

29

கற்பிக்கும் முறை

ஆசிரியத் தொழில் என்பது தெய்வீகத் தொண்டு, 'ஏதோ ஊதியம் வாங்குகின்றோம். எதையோ சொல்லித் தருகின்றோம்' என்றில்லாமல், வருங்காலத் திருநாட்டை ஒளிரச் செய்யும் மாணவ நன்மணிகளை உருவாக்கும் பொறுப்பு நம்பால் உள்ளது' என்று எண்ணிக் கடமையாற்ற வேண்டும். இந்திய நாட்டின் குடியரசுத் தலைவராக விளங்கிய டாக்டர் இராதாகிருட்டிணன், இப்போதுள்ள டாக்டர் அப்துல் கலாம் ஆகியோர் நல்லாசிரியர்களால் உருவாக்கப் பட்டவர்கள். இவ்வகையில் உரைவேந்தர், ஆசிரியத் தொழிலுக்கு முற்றிலுமாகத் தம்மை ஆயப்படுத்திக் கொண்டவர். கரந்தைப் பள்ளி, உயர்நிலைப்பள்ளி, திருவேங்கடவன் கீழ்த்திசைக் கல்லூரி, அண்ணாமலைப் பல்கலைக்கழகம் எனப் படிப்படியாக ஒவ்வொரு நிலையிலும் பல்வேறு அனுபவங்களைப் பெற்றதனால் அவை யனைத்தையும் தியாகராசர் கல்லூரியில் பயன்படுத்திப் பேரும், புகழும் பெற்றுக் கொண்டார்.

கற்பிப்பதில் உரைவேந்தர் கையாண்ட முறை புதுமையானது. மாணவர்களைச் சொற்களுக்குத் தனித்தனியே பொருளுணரச் செய்வதில், கருத்துக்களை அவர்களது உள்ளத் திரையில் உருவோவியமாகப் பதியச் செய்வதையே நோக்கமாகக் கொண்டு, அதற்கு ஏற்பக் கற்பிக்கும் முறையைக் கையாண்டார். குறிப்பாகச் செய்யுட் பாடம் நடத்தும் பொழுது ஒவ்வொரு செய்யுளையும் கருத்து விளங்க, நிறுத்த வேண்டிய இடங்களில் நிறுத்தி, இடத்திற்கு ஏற்ப எடுத்தும் படுத்தும் வலிந்தும் மெலிந்தும் தெளிவாக இசையொடு படித்துக் காட்டுவார். அப்படிப் படிக்கும்போதே, பாட்டின் திரண்ட கருத்து, மாணவர்கள் உள்ளத்தில் நன்றாகப் பதிந்து விடும்; பல சொற்களுக்கு மாணவர்களே பொருள் உணர்ந்து கொள்வர். ஒருகால் பொருள் விளங்காதன இருப்பின், அவற்றிற்குப் பொருள் கூறுவார்.

உரைநடைப் பாடம் நடத்துவதிலும் தனிமுறையைக் கையாண்டார். வரிசையாகப் படித்துக் கொண்டு போனால், மாணவர்கள் சோர்வடைவர் என்பதனால், அதன் மையக் கருத்தைச் சுட்டிக் காட்டி, ஒவ்வொரு பத்தியிலும் கூறப்படும் அதன் செய்திகளை வகைபட விரித்துரைத்து, முடிவில் அவற்றை நிரல்படத் தொகுத்துக் கூறுவார். இதனால் உரைநடைப் பாடத்திலும் மாணவர்கள் தெளிவும் மனநிறைவும் பெறுவர்!

தொல்காப்பியம் போன்ற பேரிலக்கண நூல்களைப் பாடம் சொல்வதிலும் உரைவேந்தர் பேரார்வமுடையவர். அவர் கற்பிக்கும்