பக்கம்:இந்திய சமுதாய வரலாற்றில் பெண்மை.pdf/171

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

ராஜம் கிருஷ்ணன்

169


இடமளிப்பது பெரும்பான்மை மக்களின் அறியாமை. அதை அப்படியே வைத்துக்கொண்டு, மேம்பாட்டுத் திட்டங்கள் என்று பொருளைச் செலவழிப்பது, உறுதியில்லா அடித்தளத்தில் உப்பரிகை கட்டினாற் போல்தான் என்பது நன்கு விளக்கமாகி யிருக்கிறது. அந்நியக் கடன்களும் பணவீக்கமும் பெருமுதலாளித் துவத்தையும் கள்ளச் சந்தையையும் வன்முறைகளையுமே ஊக்கமாகப் பெருக்கியிருக்கின்றன.

நேருவின் ஆட்சிக் காலத்திலேயே இந்தக் கேடுகளுக்கு வழி அமைந்துவிட்டது. இந்திரா-சஞ்சய் முழு தன்னாட்சி நடைமுறைக்கு அன்றே கால்கோள் இடப்பட்டிருந்தது என்றால் தவறில்லை.

இந்த நடைமுறை, மேலும் மேலும் ஆட்சி அதிகாரங்களைக் குவித்துக் கொண்டு பலப்படுத்திக்கொள்ள, மக்களுக்குக் கவர்ச்சித் தூண்டில் துணுக்குகள்போல் வங்கி தேசியம், பொதுத் துறை நிறுவனங்கள் என்று காட்டப் பட்டன. மக்களுக்கும் பெருமுதலாளித்துவம் வளர்த்த கறுப்புப்பன முதலைகளுக்கும் இடையே ஏற்றத் தாழ்வு என்பது நாளுக்கு நாள் ஆழ்ந்தும் அகன்றும் வந்திருக்கிறது.

கல்வி, சுகாதாரம், உணவு, உறையுள், காற்று, நீர் போன்ற இன்றியமையாத அடிப்படைத் தேவைகளும் வசதிகளும் இருபது அம்சத் திட்டம், ஐந்து அம்சத் திட்டம் என்ற காகிதப் பிரசாரங்களிலும் சுலோகங்களிலும், பாட்டுக்களிலும் ஏட்டுச்சுரைக்காயாக இட்டு நிரவப்பெற்றன.

எந்த ஒரு தகுதியுமின்றி அரசியலில் தன்னாட்சி செலுத்திவந்தத சஞ்சயின் ‘மாருதி லிமிடட்’ சிறுகார் திட்டம், அரசின் கோடிக் கணக்கான ரூபாய்களை விழுங்கி உருவாயிற்று. இதில் அண்ணி ஸோனியா, அவர் மக்கள் ராஹூல், பிரியங்கா ஆகியோர் பெயர்களையும் அவன் பயன்படுத்தியிருந்தான். சஞ்சய் காரணமான இந்த