பக்கம்:இந்திய நாத்திகமும் மார்க்சீயத் தத்துவமும்.pdf/19

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

மதத்தை நாங்கள் ஒதுக்கி விடுகிறோம். ‘மனித சகோதரத்துவம்’ என்னும் எங்களது சோஷலிஸ்டுக் குறிக்கோள், கடவுளை விடவும், இயேசுநாதரைவிடவும் முக்கியமானது.” இவ்வாறு கூறிவிட்டு ராதாகிருஷ்ணன் தமது முடிவுக்கு வருகிறார்: “"கடவுளையும், கிருஸ்துவையும் வழிபடுவோரைவிட உண்மையான, உணர்ச்சியுள்ள மதவாதிகளாக இவர்கள் இருக்கிறார்கள்."
மார்க்ஸ், எங்கல்ஸ், லெனின் ஆகியோரிலும் கம்யூனிஸத்திலும் மதத்தையும், மத உணர்ச்சியையும், மத நம்பிக்கையையும் ராதாகிருஷ்ணன் காண்கிறார். இப்புரட்டு வாதத்திற்கு பண்டைய இந்தியத் தருக்க முறையில் ‘சாமான்ய சாலம்’ என்று பெயர். நமது முன்னோர்களுக்கு புரட்டுமுறை வாதங்கள் பற்றி மிக நன்றாகவே தெரிந்திருந்தது.
சாமான்ய சாலம் என்றால் என்ன?
தன்னுடைய கொள்கைக்கு எதிரான கொள்கையுடையவர், சொல்லுகிற சொற்களையும், வாக்கியங்களையும், தன்னுடைய கொள்கைக்குப் பொருத்தமான பொருளில் மாற்றிக் கூறுவதும், இதனுள் எதிரான கொள்கையுடைய வாதங்களையே திரித்துவிடுவதும் ஆகும். இதனை ‘அறிவியல் அயோக்யத்தனம்’ என்று பச்சையான தமிழில் கூறலாம். இம்முறையைத்தான் ஆத்திகர்கள் பண்டைக் காலத்திலும், நடுக் காலத்திலும் நாத்திகத்தை ஆத்திகமாக்கப் பயன்படுத்தியுள்ளார்கள். இதற்கு ஓர் உதாரணம் காண்போம். உதயணர் என்பவர் நடுக்கால தத்துவவாதி. இவர் கடவுள் உண்டென்று நிரூபிக்க முயலும் ‘நியாயம்’ என்ற தத்துவப் பிரிவின் சார்பாளர். இவருடைய “நியாய குஸிமாஞ்சலி” என்ற நூலைத்தான் ஆத்திகர்கள் ‘கடவுளை'நிரூபிக்கத் துணையாகக் கொள்ளுகிறார்கள். அவருடைய வாதம் முழுவதையும் இங்கே தருவோம்.

“உலகில் யாருமே நாத்திகரில்லை. ஒவ்வொருவரும் தங்கள், தங்கள் வழியில் கடவுளை நம்புகிறார்கள்” என்று

18