பக்கம்:மகாபாரதம்-அறத்தின் குரல்.pdf/556

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

554

அறத்தின் குரல்


இதற்குள் துரியோதனன் சமந்தபஞ்சக மலையிலுள்ள பூஞ்சோலையில் குற்றுயிரும் குலையுயிருமாக அடிபட்டுக் கிடக்கிறான் என்ற செய்தி அசுவத்தாமன் முதலிய கெளரவப்படை வீரர்களுக்கு எப்படியோ தெரிந்துவிட்டது. கெளரவர்படைத் தலைவர்களும், மற்ற வீரர்களும் செய்தியைக் கேள்விப்பட்ட மறுகணமே சமந்தபஞ்சக மலைக்கு விழுந்தடித்துக் கொண்டு ஓடினர். அங்கே சென்றதும் இரத்த வெள்ளத்தினிடையே கிடக்கும் துரியோதனனுடைய உயிர் நீங்கப் போகிற உடலைத் தாங்கிக் கொண்டு கதறியழுதான் அசுவத்தாமன்.

“ஐயோ! உன் கதி இப்படியா ஆகவேண்டும்? மகாமன்னனாக வாழ வேண்டிய நீ இப்படி மண்ணிலா கிடப்பது? பாண்டவர்களை நாளையே தோற்று ஓடச் செய்து இந்த மண்ணுலகத்தின் ஏக சக்ராதிபதியாக உன்னை ஆக்கவேண்டுமென்று கனவு கண்டு கொண்டிருந்தேனே? அந்தக் கனவையெல்லாம் பாழாக்கி விட்டாயே, என்னை முன்பே படைத் தலைவனாக ஆக்கியிருந்தால் உனக்கு இந்தக் சுதி நேராதபடி உயிரைக் கொடுத்தாவது காப்பாற்றியிருப்பேனே? யார் யாரோ திறமையற்றவர்களை எல்லாம் படைத் தலைவர்களாக்கி உன் வினையை நீயே தேடிக் கொண்டாய். அந்தோ! உன் நிலை பரிதாபத்துக்குரிய தாகிவிட்டது. இவற்றையெல்லாம் இப்போது பேசி என்ன பயன்? விதி முடிகின்ற நேரம் இது. ஆயிற்று. எல்லாமே முடிவை நெருங்கிக் கொண்டிருக்கின்றன. ஆனால் துரியோதனா ஒரே ஒரு வாக்குறுதி மட்டும் உனக்கு நான் இந்த அந்திம காலத்தில் அளிக்கின்றேன். உன் உயிர் சாவதற்குள் உன் கண்கள் காணும்படியாகவும், காதுகள் கேட்கும்படியாகவும், அந்த வாக்குறுதியை நிறைவேற்றிக் காட்டுகின்றேன். பார்த்து விட்டு அல்லது கேட்டுவிட்டு அதன் பிறகு நீ மாண்டு போகலாம்.

உன்னை இக்கதிக்கு உள்ளாக்கிய வீமனையும், அவனுடைய சகோதரர்களையும் கொன்று குவிக்கிறேன்.