பக்கம்:மகாபாரதம்-அறத்தின் குரல்.pdf/145

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

நா. பார்த்தசாரதி

143


கண்ணபிரான் தன் கோபத்தைச் சிறிதும் வெளிக் காட்டிக் கொள்ளாமல் பொறுமையாக வீற்றிருந்தார். அவருடைய இந்த அசாத்தியப் பொறுமையைக் கண்டு அவையோர் வியப்பும் திகைப்பும் அடைந்தனர். சிசுபாலன் பேசி நிறுத்தியதும் அதுவரை அடக்கமாகவும் அமைதி யாகவும் வீற்றிருந்த கண்ணபிரான் மெல்ல எழுந்து நின்றார். “சிசுபாலா? தகுதியைப் பற்றிய உன் பேச்சுக்களை இங்கே கூடியிருப்பவர்கள் முடிவு செய்வதற்குள் நாமே முடிவு செய்து கொண்டு விடுவது நல்லது. எங்கே? நீ இப்போது போருக்குத் தயார் தானே?” -இவ்வாறு கூறிக் கொண்டே யுத்தத்திற்குத் தயாராகத் தம் தேரில் ஏறி நின்றார் கண்ணபிரான்.

சிசுபாலன் திடுக்கிட்டுப் போனான், ‘கண்ணனிடம் மிருந்து போருக்கு அழைப்பு வரும்‘ -என்பதை இவ்வளவு விரைவில் அவன் எதிர்பார்க்கவே இல்லை. ஆனாலும் சமாளித்துக் கொண்டு தேரிலே ஏறித்தானும் போருக்குத் தயாராக நின்றான். அவையிலிருந்து வெளிப்புறம் போருக்கு வசதியான இடத்திற்குச் சென்ற பின் இருவருக்கும் போர் தொடங்கியது. வேள்விக்கு வந்திருந்தவர்களும் சூழ இருந்து போர் நிகழ்ச்சியைக் கண்டனர். சிசுபாலன் பேச்சிலேதான் வீரனாகத் தென்பட்டான். ஆனால் போரிலோ? நொடிக்கு நொடி கண்ணபிரானின் ஆற்றலுக்கு முன்னால் அவன் கை தளர்ந்து கொண்டே வந்தது ‘தகுதி யாருடையது?’ -என்று நிரூபிக்க விரும்புகின்றவரைப் போல முழு ஆற்றலோடு போரில் ஈடுபட்டிருந்தார் கண்ணபிரான். இறுதியில் தம் வலக்கரத்திலிருந்த திகிரியை (சக்ராயுதத்தை) அவன் கழுத்தைக் குறி வைத்துச் செலுத்தினார் அவர். திகிரி வேகமாகச் சுழன்று அவன் கழுத்தை நெருங்கிக் கொண்டிருந்தது. கூடியிருந்தவர்கள் வியப்பு நிழலிடுகிற முகபாவத்துடன் கண்களை இமைக்காமல் பார்த்துக் கொண்டிருந்தனர். திகிரி சிசுபாலனின் தலையை அரிந்து தலையைப் பிரித்ததும் மற்றோர் ஆச்சரியகரமான நிகழ்ச்சியும் நடந்தது.