பக்கம்:கும்மந்தான் கான்சாகிபு.pdf/28

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

20

வந்த கான் சாகிபு, அதுவரை தான் விதைத்த விதைகளையெல்லாம், தானே அறுவடை செய்ய ஆரம்பித்தான்.

ஆரம்ப முதல் கான் சாகிபு கும்பினியின் நல்லெண்ணத்தில் பெருநிலை பெற்றிருப்பது ‘கடன்காரன்’ ஆர்க்காட்டு நவாபுக்குப் பிடிக்கவில்லை. மேலும், தென் பாண்டிப் பாளையங்களையெல்லாம் அழித்து ஒழித்து, ஹைதரையும் கலக்கும் அளவுக்கு கான் சாகிபு வலிமை பெற்று வருவதும், தன் திறமை மிக்க ஆட்சியால் இந்துக்களும், வெள்ளையரும் போற்றப் புகழ் பெற்று வருவதும் வருங்காலத்தை மோப்பம் பிடிப்பதில் வல்ல ஆர்க்காட்டு நவாபுக்கு அணுவளவும் பிடிக்கவில்லை. கான் சாகிபைப் பற்றிக் கணத்துக்குக் கணம் கும்பினியிடம் புகார்கள் படித்த வண்ணம் இருந்தான். கரைப்பார் கரைத்தால் கல்லும் கரையும் அன்றோ? கும்பினியாருக்குச் சந்தேகமும், சஞ்சலமும் தோன்றின.

ஆர்க்காட்டு நவாபு தொடக்க முதல் தனக்குப் பகையாய் இருக்கும் உண்மையை உணர, உணரக் கான் சாகிபுக்கு ஆத்திரம் பொங்கிற்று. கும்பினி தன்னால் பெற்ற நன்மைகளை மறந்து விட்டு, நவாபின் பேச்சைக் கேட்பது அவன் ஆத்திரத்தை அதிகப் படுத்தியது. ஆத்திரம் பொங்கப் பொங்க, அவன் அறிவு எவ்வெவ்வாறோ பாய்ந்து பதறியது. தனக்கு விரோதமாகக் கும்பினிக்குச் செய்தி சொல்பவர்கள் ஆர்க்காட்டு நவாபும், திருவாங்கூர் மன்னனும், திருச்சியில் இருந்த ஆங்கில அதிகாரிகளுமே