பக்கம்:கால்பந்தாட்டம்.pdf/15

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

டாக்டர் எஸ்.நவராஜ் செல்லையா

13


கவினுறச் செல்வதுபோல, கால் பந்தாட்டமும் அகில உலக அளவிலே செழித்தோங்கத் தொடங்கியது. 1904ஆம் ஆண்டு அகில உலகக் கால் பந்தாட்டக் கழகம் தோன்றியது. இன்று நூற்றுக்கணக்கான நாடுகள் அங்கத்தினர்களாக சேர்ந்து, பணியாற்றி, நாட்டிற்கும் ஆட்டத்திற்கும் நல்லதோர் பெருமையை தேடிக் கொடுத்திருக்கின்றன. கொடுக்கின்றன.

பல்வேறு நாடுகளில் பல்வேறு பெயர்களில், பல்வேறு முறைகளாகக் கால்பந்தாட்டம் ஆடப் பெற்றாலும், ஒலிம்பிக் போட்டிக்குரிய ஆட்டமாக 'கழகக் கால்பந்தாட்டமே' (Association Football)இருந்து வருகிறது. நமது பாரத நாடும் இந்தப் பந்தாட்ட முறையைத் தழுவியே ஆடி மகிழ்கிறது.

வியாபாரத்திற்காக வந்த வெள்ளையர்கள், வரும் பொழுதே தாய்மொழிப் பற்றைத் தாங்கி வந்தது போலவே, பொழுது போக்குவதற்கென்று பல விளையாட்டுகளையும் கொண்டு வந்தார்கள். அவைகளிலே குறிப்பிடத்தக்கவை - கிரிக்கெட், வளைகோல் பந்தாட்டம், கால்பந்தாட்டம் என்று பல ஆட்டங்களைக் குறிப்பிடலாம்.

ஆங்கிலேய அதிகாரிகள் ஆரம்ப காலத்தில் தங்கியிருந்த நகரங்கள் கல்கத்தாவும் பெங்களுருமே யாகும். அங்கே அவர்கள் தங்கள் பொழுதுபோக்குக்காக ஆடத் தொடங்கினார்கள். அவர்களைத் தொடர்ந்து அரசாங்கப் பணியாளர்களும், அவருக்குத் துணையாக உள்ள இராணுவத்தினரும், வியாபாரத் துறையினரும், மற்றும் கல்லூரிகளில் பணியாற்றிய ஆங்கிலேய ஆசிரியர்களுமே ஆரம்ப காலங்களில் ஆடி மகிழ்ந்தனர்.