ராஜம் கிருஷ்ணன்
37
"எனக்கு வாயிலியே நுழையாது போலிருக்குதே? வாங்க வாங்க இட்டிலி காப்பி எல்லாம் ரெடியாயிருக்கும்...” என்று கூப்பிட்டு விட்டு உள்ளே நடக்கிறாள். அந்த அறையைக் கடந்து இன்னொரு பெரியகூடம். கூடத்தின் நடுவே கொத்து விளக்கு. பெரிய புகைப்படங்கள் சுவர்களை அலங்கரிக்கின்றன.
எங்கும் சாதாரணமாகக் காணக்கூடிய காந்தி, நேரு, சுபாஷ், விஜயலட்சுமி படங்கள் அல்ல.
அண்ணாதுரை படத்தை மட்டுமே அவளால் புரிந்து கொள்ள முடிகிறது. கண்ணபிரானின் தகப்பன், மாமன் என்று உறவு வட்டத்தில் உள்ளவர்களாகவும் இருக்கலாம்.
பெரிய கூடத்தையும் கடந்து குளியலறைப் பக்கம் செல்கையில் அந்தப் பெரிய வீட்டின் பரப்பையும் நவீன வசதிகளையும் கண்டு வியக்கிறாள். “பல் துலக்கப் பல்பொடி இருக்குது. இந்தா முகம் துடைச்சிக்கத் துண்டு-” என்று அந்தம்மாள் உபசரிக்கும்போது அவள் மனம் நெகிழ்கிறாள். இது யார் வீடோ? அவள் இதுவரையிலும் இப்படி ஒரு கனிவையும் ஆதரவையும் நுகர்ந்ததில்லையே?
“உட்காரம்மா?” என்று அந்தம்மா இன்னோர் அறைக்கு அவளை அழைத்துச் சென்று உபசரிக்கிறாள். அங்கு ஒரு குடும்பத்தினர் கூடி உணவு கொள்ளும் மேசையும் நாற்காலிகளும் இருக்கின்றன.
கண்ணபிரானும் தனராஜும் அங்கு வரவில்லை. அவர்கள் மாடிக்குப் போயிருக்கிறார்கள் போலிருக்கிறது.
மேசையில் ஒரு வாழையிலைத் துண்டைப் போட்டு அதில் ஆவி பரக்கும் இட்டிலிகளையும் சட்டினியையும் அவளே வைக்கிறாள்.
மைத்ரேயிக்கு மிகவும் கூச்சமாக இருக்கிறது.
“நீ சாப்பிடலிங்களா?”
“நாமான் காலையிலே பலகாரம் சாப்பிடறது வழக்கமில்ல. நீ சாப்பிடு. செத்தப்போனா வடிவு வரும்.