12
அன்பர் சொல்வதையோ-செய்வதையோ கவிஞர் மறுத்தால் அவர் கண்களில் நீர் ததும்பிவிடும். ஆகவே, கவிஞரும் இந்தப் 'பக்தி'க்குக் கட்டுப்பட்டுவிடுவார்.
உணவுக்குப் பின் உரையாடல் நிகழ்ந்தது; அன்பரைப் பார்த்து, “உங்களுக்கு எத்தனை குழந்தைகள்? என்று கேட்டார் கவிஞர்.
"எட்டுக் குழந்தைகள்" என்றார் அன்பர்.
“உங்களுக்கு வயது எத்தனை?”' என்றார் கவிஞர்.
"முப்பத்து ஐந்து" என்றார் அன்பர்.
’முப்பத்தைந்து-எட்டுக் குழந்தைகள்' என ஒரு முறை தனக்குள் கூறிவிட்டு, "இனிமேல் கொஞ்சம் அடக்கமாகத் தானே இருங்கள்” என்றார் கவிஞர். அவ்வளவுதான், எல்லோருக்கும் ஒரே சிரிப்பு!
"தவிப்பதற்கோ பிள்ளை?" என கர்ப்பத்தடையைப் பற்றி பாடியவர் அல்லவா? அன்பரும் சிரித்துப் புரிந்து கொண்டார்.
ஒரு காரியத்துக்காக, பலருடைய ’தயவை’ நாடிச் சென்று அதை நிறைவேற்றிக் கொள்ளும் முறை கவிஞருக்குப் பிடிக்காது.
ஏதோ ஒரு விஷயம் பற்றி ஒரு நாள் தம்பியிடம் [மன்னர் மன்னன்] கவிஞர் சொன்னார்; தம்பி, ஸ்ரீதரன் என்பவரிடம் சொன்னார்; ஸ்ரீதரன், சுப்பிரமணியம் என்பவரிடம் சொல்லியிருக்கிறார், விஷயம் முடியவில்லை.