பக்கம்:சோழர் கால அரசியல் தலைவர்கள்.pdf/98

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

96

“இரண்டொன்றா முடிந்துதலை இறங்கப் போட்டு
வெட்டுதற்கோ கவிஒட்டக் கூத்த னில்லை”

என்ற படிக்காசுப் புலவர் பாடற்பகுதி வலியுறுத்தும். கூத்தரது இச்செயலைத் தடுக்கவேண்டுமென்று நெற் குன்றங்கிழார் நினைத்தார் ; அதனால் ஒட்டக் கூத்தரின் முன்நின்று பின்வரும் பாடலைப் பாடியதாகத் தமிழ் நாவலர் சரிதை கூறும் :-

“கோக்கண்டு மன்னர் குறைகடற் புக்கிலர் கோகனகப்
பூக்கண்டு கொட்டியும் பூவா தொழிந்தில; பூவில் விண்ணோர்
 காக்கண்ட செங்கைக் கவிச்சக்ர வர்த்திநின் கட்டுரையாம்
பாக்கண் டொழிவர்க ளோதமிழ் பாடிய பாவலரே.”

இப்பாடலின்கீழ் “கவிஞரை வெட்டவேண்டா என்று நெற்குன்றவான முதலியார் பாடியது” என்ற ஒரு குறிப்பும் அந்நூலுள் காணப்படுகிறது.

நம்பிகாளி

இவர் காலத்தில் நம்பிகாளி என்ற ஒரு புலவர் இருந்தார். அவரைப் பற்றித் தக்கயாகப் பரணி உரையாசிரியரும் குறித்திருக்கிறார். தக்கயாகப் பரணி 457-ஆம் தாழிசை உரையில், “உலகக் கவிப்பு என்னும் பெயர் கவிச் சக்ரவர்த்திகள் தாம்படைத்த திரிசொல்லென உணர்க. பண்டு நம்பிகாளியார் கடற்குப் பெயர் மழு வென்றிட்டு எறிதலும், கூர்த்தலும், திரைத்தலும் உடைய தென்றார்; அதுபோலும் இதுவென்க“ என்றமை காண்க.

நம்பிகாளியார் அந்நாளில் வாழ்ந்த ஒரு சிறந்த புலவர். ஒட்டக்கூத்தர் ஆக்கிய சொல்லிற்கு நம்பிகாளி ஆக்கிய சொல்லைத் தக்கயாகப் பரணி உரையாசிரியர் மேற்கோளாகக் காட்டியிருக்கின்றமையின் நம்பிகாளியும்