47
களவு நூலில் கைதேர்ந்தவன். களவு நூலில் வல்ல கள்வர் பார்வைக்குக் குற்றமற்றவராகக் காணப்படுவர். ஆதலால் மேல் தோற்றத்தைக் கண்டு ஏமாறலாகாது. இவர்கள் மந்திரம், தெய்வம், மருந்து, நிமித்தம், தந்திரம், இடம், காலம், கருவி, ஆகிய எட்டின் துணைகொண்டு வாழ்பவர்கள்.இவற்றின் துணையினால் குற்றமற்றவர் போலவும் தனவந்தர் போலவும் யோகிகள் போலவும் கற்றறிந்தவர் போலவும் ஒழுக்கத்திற் சிறந்த சான்றோர் போலவும் நடிப்பர். ஆதலால் நீவிர் முகத்தைக் கண்டு ஏமாறலாகாது.” என நயமாக வற்புறுத்தினான்.
கோவலன் கொல்லப்படுதல்
ஊழ்வலிமை உடையது அல்லவா? ஆதலால் காவலருள் கொலை அஞ்சாத இளைஞன் ஒருவன் முன்னர்ப் பாய்ந்து தன் உடைவாளால் கோவலனை வெட்டி வீழ்த்தினான். அந்தோ கொடுமை! கொடுமை!!
10. கண்ணகி துயரம்
ஆயர்பாடியில் அபசகுனங்கள்
மேற்கண்ட நிகழ்ச்சியை முன்னிட்டி ஆயர் பாடியில் சில அபசகுனங்கள் காணப்பட்டன. குடத்தில் இருந்த பால் உறையவில்லை; எருது கண்ணிர் விட்டது; உறியில் இருந்த வெண்ணெய் உருகி மெலிந்தது; ஆட்டுக்குட்டி சுறுசுறுப்பு இல்லாமல் குழைந்து கிடந்தது; பசுவின் பால் காம்புகள் ஆடின; பசுவின் கழுத்தில் கட்டப்பட்டிருந்த பெரிய மணிகள் இற்று நிலத்தில் விழுந்தன.