508
சங்க இலக்கியத்
கல்லிவர் முல்லை’ (குறிஞ். 77) என்பர். இதனை வெப்பாலை எனவும் வழங்குவர். இவையன்றி, கொடிப் பாலை, கருடப் பாலை, ஏழிலைப் பாலை எனப் பல தாவரங்கள் வழக்கில் உள்ளன. இருப்பினும், சங்க இலக்கியம் குறிப்பிடும் பாலை மரம் எது? இதனுடைய காய்கள் பற்றுக் குறடு போன்று இருக்குமெனத் தொண்டமான் இளந்திரையன் குறிப்பிடுகின்றார் (நற். 107). இம்மரத்தில் காய்கள் இரட்டையாகவே உண்டாகும். அவையிரண்டும் அடியில் ஒன்றாகி இணைந்தும், குறடு போல் நடுவில் உள்வளைவாக விரிந்தும், நுனியில் இவையிரண்டும் ஒட்டினாற் போலவும் இருக்கும். இம்மரத்தின் இவ்வியல்பினை நற்றிணைப் பாடல்தான் குறிப்பிடுகின்றது. இதனைக் கொண்டு இதுவே அகத்திணைப் பாலை மரமென அறுதியிட முடிகின்றது. இம்மரத்தில் வெள்ளிய பூங்கொத்துக்கள் உண்டாகுமென்று இப்பாடலில் காணப்படும் குறிப்பும், இதனையே பாலை என வலியுறுத்துவதற்கும் துணை செய்கின்றது.
இசைத் தமிழில் பாலை என்ற சொல் இடம் பெற்றுள்ளது. ஏனைய திணைகளைக் கூறும் மலர்களுக்கு உள்ளவாறு போல, பாலை யாழும், பாலைப் பண்ணும் சங்க இலக்கியத்துள் காணப்படுகின்றன. பாலை யாழினை மகளிரும், பாணரும் மீட்டிப் பாடுவர்.
“வண்டுபடு கூந்தல் முடிபுனை மகளிர்
தொடைபடு பேரியாழ் பாலை பண்ணி
பணியா மரபின் உழிஞை பாட”-பதிற். 46 : 4-6
“பாணர் கையது பணிதொடை நரம்பின்
விரல்கவர் பேரியாழ் பாலை பண்ணி
குரல்புணர் இன்னிசைத் தழிஞ்சி பாடி”-பதிற். 57 : 7-9
“வாங்கு இருமருப்பின் தீம்தொடை பழுனிய
இடனுடைப் பேரியாழ் பாலை பண்ணி
படர்ந்தனை செல்லும் முதுவாய் இரவல”-பதிற். 66 : 1-3
மற்று பாடினி இனிய குரலில் பாலைப் பண்ணிசைப்பாள் என்பர்; ‘ஒரு திறம் பாடினி முரலும் பாலை அங்குரலின்’ (முரலும்-இசைக்கும், குரல்-இசை, ஓசை) -பரி. 17 : 17. மேலும், பரிபாடலில் முதலில் அமைந்த 11 பாடல்களின் (2-12) பண்ணும் பாலை யாழ் ஆகும்.
பாலை மரத்தில் பால் வடியும். மலரில் நறுமணமில்லை. ஆதலின் பாலைப் பூவை யாரும் விழைவதில்லை. இங்ஙனமே