பக்கம்:மிஸ்டர் விக்கிரமாதித்தன் கதைகள்.pdf/308

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

305


இங்ஙனம் செய்துவந்தகாலை அந்த ஊரிலிருந்த குடிசைகளில் சில திடீர், திடீரென்று தீப்பற்றி எரிய, அங்ஙனம் எரிந்த குடிசைகளுக்குப் பதிலாக வள்ளல் மாரி புதிய குடிசைகள் கட்டிக் கொடுக்க, அதையும அங்கிருந்த வம்பர்களில் சிலர் திரித்து, ‘இதெல்லாம் யாருடைய சூழ்ச்சி என்கிறீர்கள்? எல்லாம் அந்த வள்ளல் மாரியின் சூழ்ச்சிதான்! தருமம் செய்யத் தனக்கு அடிக்கடி சந்தர்ப்பம் வாய்க்க வேண்டும் என்பதற்காக அவன் தன் ஆளை விட்டுக் குடிசைகளுக்குத் தீ வைக்கச் சொல்லியிருக்கிறான்!' என்று வாய் கூசாமல் சொல்ல, 'அட, கடவுளே! இந்த அபவாதத்துக்கு ஒரு முடிவே இல்லையா?' என்று வாய்விட்டு அலறிய வள்ளல், 'தாங்காது அப்பனே, இனி தாங்காது!’ என்று உடனே ஓடிப் போய் ஓர் ஆறுதலுக்காக மிஸ்டர் விக்கிரமாதித்தரைப் பார்ப்பாராயினர்.

அவர் குறை கேட்டார் விக்கிரமாதித்தர்; சிரித்தார். ‘என்ன சிரிக்கிறீர்கள்?’ என்றார் வள்ளல் மாரி, ‘ஒன்றுமில்லை; சும்மாத்தான்!' என்றார் விக்கிரமாதித்தர். 'காரணமில்லாமல் நீங்கள் சிரிக்கமாட்டீர்களே?' என்றார் அவர்; ‘காரணத்தோடுதான் சிரித்தேன்!' என்றார் இவர். 'என்ன காரணம்?' என்றார் மாரி, 'சொல்கிறேன்!' என்று விக்கிரமாதித்தர் சொன்னதாவது:

‘கொடுத்தால் நல்லவன்; கொடுக்காவிட்டால் கெட்டவன் என்பது மட்டும் இந்த உலக நீதி அன்று; இன்னொரு நீதியும் உண்டு!'

விக்கிரமாதித்தர் இங்ஙனம் சொல்லி நிறுத்தியதும், 'அது என்ன நீதி?' என்று மாரி ஆவலோடு கேட்க, 'அதோ பாருங்கள்!' என்று அவர் தமக்கு எதிர்த்தாற்போலிருந்த மாந்தோப்பைச் சுட்டிக் காட்ட, 'அந்த மாந்தோப்புக்கும் நீங்கள் சொல்ல வந்த நீதிக்கும் என்ன சம்பந்தம்?’ என்று இவர் கேட்க, 'இருக்கிறது' என்று விக்கிரமாதித்தர் அவரைப் பின்னும் தொடர்ந்து கேட்டதாவது:

மி.வி.க -20