பக்கம்:மிஸ்டர் விக்கிரமாதித்தன் கதைகள்.pdf/204

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

விந்தன்

201

கூடு விட்டுக் கூடு பாய்ந்தான்; நானோ இன்னும் வீடு விட்டு வீடுகூடப் பாயவில்லை. ஒன்றல்ல, இரண்டல்ல; நூற்றெட்டு மனைவிமாரை வைத்துக்கொண்டு அவன் எப்படியோ சமாளித்தான். என்னாலோ எனக்குள்ள ஒரே ஒரு மனைவியை வைத்துக்கொண்டுகூடச் சமாளிக்க முடியவில்லை. இந்த நிலையில் நீங்கள் என்னைக் காதலித்து என்ன பிரயோசனம்? ஆளை விடுங்கள் அம்மா, ஆளை விடுங்கள்!' என்று அவள் தம் தோளின்மேல் வைத்த கையை அவர் எடுத்து அவளுடைய மடியின்மேல் விட, 'நூற்றெட்டு மனைவிமார் அரண்மனையில் இருந்தும் தம்மை விரும்பும் பெண்களையெல்லாம் அந்த விக்கிரமாதித்தர் காதலித்தாரே, அதே மாதிரி நீங்களும் ஏன் காதலிக்கக் கூடாது?’ என்று அவள் சிரித்துக்கொண்டே கேட்க, 'காதலிக்கலாம் அம்மா, காதலிக்கலாம். அந்த விக்கிரமாதித்தன் காதலித்த பெண்களைத் தானமாகப் பெற்றுக்கொள்ள அந்தக் காலத்தில் எத்தனையோ பேர் காத்துக்கொண்டிருந்தார்கள். இந்தக் காலத்தில் நான் காதலித்த பெண்களை யாருக்காவது தானமாகக் கொடுக்கப் போனால் அவர்கள் என்னை உதைக்கவல்லவா வருவார்கள்? அதை என் உடம்பு தாங்காதே!' என்று விக்கிரமாதித்தர் பரிதாபமாகச் சொல்ல, ‘கவலைப்படாதீர்கள்; என்னால் உங்களை யாரும் உதைக்க வந்துவிட மாட்டார்கள்!' என்று அவள் பின்னும் சிரித்துக் கொண்டே அவருடைய கழுத்தைத் தன் இரு கைகளாலும் கட்டிப் பிடித்து வளைக்க, ஐயோ, விபத்து! பயங்கர விபத்து!' என்பதாகத்தானே விக்கிரமாதித்தர் அலறுவாராயினர்.

அவள் திடுக்கிட்டு, ‘என்ன விபத்து! எங்கே விபத்து? யாராவது காருக்குக் குறுக்கே வந்து விழுந்துவிட்டார்களா, என்ன?’ என்று காருக்கு முன்னால் பார்த்துக்கொண்டே கேட்க, 'அதெல்லாம் ஒன்றுமில்லை; உன்னால் எனக்கு நேர்ந்த காதல் விபத்தைத்தான் சொன்னேன்!' என்று அவர் சொல்ல, 'நல்ல ஆண்பிள்ளை ஐயா, நீங்கள்? ஒரு பெண்