பக்கம்:மிஸ்டர் விக்கிரமாதித்தன் கதைகள்.pdf/333

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

330

மிஸ்டர் விக்கிரமாதித்தன் கதைகள்

மட்டும் வாயும் வயிறும் இல்லையா, என்ன? மற்றவர்களுக்கு எண்ணிக் கொடுத்தால் கலைஞனுக்கு எண்ணாமல் கொடுக்க வேண்டும் என்று நினைப்பவன் நான். அதனால் தான் எந்த விதமான விலையும் பேசாமல், எந்த விதமான கணக்கும் பார்க்காமல் என்னால் முடிந்த இச் சிறு தொகையை உங்களுக்குக் காணிக்கையாக அளிக்கிறேன். தயவு செய்து ஏற்றுக்கொள்ள வேணும்' என்று மிஸ்டர் விக்கிரமாதித்தர் அந்த நோட்டை அவருடைய கையில் திணித்துவிட்டு மேலே செல்வாராயினர்."

முப்பத்திரண்டாவது மாடி ரிஸப்ஷனிஸ்ட்டான நித்திய கல்யாணி இந்தக் கதையைச் சொல்லி முடித்துவிட்டு, "இனிமேல் நீங்கள் போகலாம்; போய் மிஸ்டர் விக்கிரமாதித்தரைப் பார்க்கலாம்!' என்று அவர் இருந்த அறைக்கு வழி காட்ட, போஜனும் நீதிதேவனும் அப்போதும் தங்கள் கொட்டாவியை மறக்காமல் விட்டுக்கொண்டே போய் அவரைப் பார்க்க, "இரண்டு மாதங்களுக்கு முன்னால் அல்லவா நீங்கள் வந்து என்னைப் பார்ப்பதாக எழுதியிருந்தீர்கள்? இவ்வளவு தாமதமாக வந்து நிற்கிறீர்களே, என்ன காரணம்?" என்று விக்கிரமாதித்தர் கேட்க, "நாங்கள் என்னவோ இரண்டு மாதங்களுக்கு முன்னாலேயே உங்களைப் பார்க்க வரத்தான் வந்தோம்; உங்கள் ரிஸப்ஷனிஸ்ட்டுகள்தான் தினம் ஒரு கதையாகச் சொல்லி, உங்களை அப்பொழுதே பார்க்க விடாமல் எங்களைத் தடுத்து விட்டார்கள்!" என்று போஜனும் நீதிதேவனும் சொல்ல, “எங்கே, கூப்பிடு அவர்களை!" என்று விக்கிரமாதித்தர் தம் ஆபீஸ் பையனை விட்டு அவர்களை அழைத்து வரச் செய்து, "நீங்களா இவர்களுக்குத் தினம் ஒரு கதையாகச் சொல்லிக் கொண்டிருந்தீர்கள்?" என்று கேட்க, "நாங்களாவது, இவர்களுக்குக் கதை சொல்வதாவது! இவர்கள் தினந்தோறும் வருவார்கள்; எங்களைப் பார்த்ததும் அப்படியே ஒரு கணம்