246 பொன் ിയു
'வம்புகள் இல்லாத இடம் உலகத்திலேயே கிடையாது ஐயா! எதிர்கொண்டு நீந்தத் தெரிந்தவன்தான் வாழலாம். படித்துப் பட்டம் பெற்றுக் கல்லூரியிலிருந்து வெளியேறிய உங்களைப் போன்ற இளைஞர்களில் பலர் பிறரிடம் பழகுவதற்கே கூச்சமும் பயமும் உள்ளவர்களாக இருக்கிறீர்கள். நியாயமான துணிவையும், நேர்மையான நம்பிக்கைகளையும் கொடுக்க முடியாத படிப்பும் ஒரு படிப்பா என்று சில சமயங்களில் படிப்பின் மேலேயே வெறுப்பாக இருக்கிறது எனக்கு. இன்றைய சமூகத்தில் படித்தவர்கள்தான் கோழைகளாக இருக்கிறார்கள், படித்தவர்கள் தாம் பொய் சொல்லுகிறார்கள், படித்தவர்கள் தாம் பிறரை ஏமாற்றுகிறார்கள். சமயங்களில் தாங்களே ஏமாறவும் செய்கிறார்கள். உண்மையிலேயே ஒரு சமயமாக வழிபடுவதற்குக் கற்றுக் கொடுக்காத படிப்பினால் நாட்டுக்கும் பயனில்லை; நமக்கும் பயனில்லை' என்று சத்தியமூர்த்தி வேகமாகப் பேசுவதைக் கேட்பதற்கே தயங்கிப் பயந்தார் பாடனி விரிவுரையாளர். நியாயத்தையும், உண்மையையும் இவ்வளவு வேகமாக வற்புறுத்திப் பேசுகிற முதல் மனிதனை இப்போதுதான் வாழ்க்கையில் மிக அருகே சந்திக்கிறார் அவர்.
'நீங்கள் ரொம்பவும் 'ப்ரொக்ரஸிவ் (முற்போக்காக) ஆக இருக்கிறீர்கள். சில சமயங்களில் உங்கள் பேச்சைக் கேட்பதற்கே பயமாகவும் தயக்கமாகவும் இருக்கிறது" என்று அவர் பதில் கூறிய விதத்திலிருந்தே அவருடைய பயந்த சுபாவத்தைச் சத்தியமூர்த்தி புரிந்து கொண்டான். புதுமையாகவும் முற்போக்காகவும் நினைப்பதற்கும் பேசுவதற்கும் பயப்படுகிறவர்களே நம்மைச் சுற்றி இவ்வளவு பேர் இருக்கும்போது அப்படி வாழவும் செயலாற்றவும் துணிகிறவர்கள் எப்போது எப்படி வரப்போகிறார்கள் என்றெண்ணி ஆற்றாமையோடு பெருமூச்சு விட்டான் சத்தியமூர்த்தி.
'நண்பரே! நம்முடைய நாட்டைப்போல் எல்லாவிதத்திலும் இரண்டுங்கெட்ட சூழ்நிலையில் உள்ள ஒரு நாட்டுக்குப் பெரிய வறுமை இப்போது என்ன தெரியுமா? முற்போக்காகப் பேசுவதற்கும், செயலாற்றுவதற்கும் மனிதர்கள் கிடைக்காத குறையைவிட முற்போக்காக நினைப்பதற்கே மனிதர்கள் கிடைக்காத குறைதான் பெரிய வறுமை செயலாற்றுவதற்குச்