பக்கம்:கம்பராமாயணம் (உரைநடை).pdf/288

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

288

கம்பராமாயணம்



‘விளைவு புகழுக்கு இகழ்வு; நாட்டுக்கு அழிவு’ என்ற முடிவுக்கு வந்தான்; இரத்தினச் சுருக்கமாய்த் தன் உணர்வையும் சிந்தனையும் வெளிப்படுத்தினான்.

“சீதையை திட்டியின் விடம் அன்ன கற்பின் செல்வியை இன்னுமா விடவில்லை? இது விதியின் செயல்; ஐயா, இந்த உலகத்தை அடியோடு பெயர்க்கலாம்; அதற்கு ஒரு எல்லையையும் அமைக்கலாம்; சீதையைப் புல்லலாம் என்பதும் இராமனை வெல்லலாம் என்பதும் நடவாத செயல்கள்” என்று கூறினான்.

“உன் மையலுக்குக் காரணமான தையலை விட்டுவிடு; இராமன் சரணம் தாழ்ந்து மன்னிப்புப் பெறுக; நின் தம்பியொடு அளவளாவுதல் பிழைக்கும் வழி; அவள் உன் உயிரோடு ஒன்றிவிட்டிருக்கலாம்; கற்பு, அறம் இவை அற்பம் என்று கருதுகிறாயா? அது உன் விருப்பம்; எதிலும் ஒரு செயல்திறன் வேண்டும்; அணி அணியாய்ப் படைகளை அனுப்பி, அவை அழிவைக் கண்டு அழுவது ஏன்? அது போர்த்திறனும் அன்று; நம் வலிமையை எல்லாம் ஒருங்குதிரட்டிப் போர் செய்வதே தழைக்கும் வழி”.

“இரண்டில் ஒன்றைத் தேர்ந்து எடுத்துக் கொள்” என்றான்.

“அறம் ஆற்றல் உடையது; தனி ஒருவனால் உலக நெறியை மாற்றமுடியாது; உனக்காக நீதிகளைத் திருத்தம் செய்ய முடியாது; நீதான் திருந்தி வாழ வேண்டும்” என்றான்.