திரும்பி வந்த மான் குட்டி/முன்கோபி ராஜா

விக்கிமூலம் இலிருந்து

(படம்)

வெங்காயபுரம் ராஜாவுக்கு எப்போதுமே முன் கோபம் அதிகம். அதனாலே அவரை எல்லோருமே ‘முன் கோபி ராஜா’, ‘முன்கோபி ராஜா’ என்றே அழைப்பார்கள். அவருடைய உண்மையான பெயர் என்ன என்பது எவருக்குமே தெரியவில்லை. ஆகையால், நாமும் அவரை ‘முன் கோபி ராஜா’ என்றே அழைப்போமா? சரி.

முன்கோபம் மிக அதிகமாக இருந்தாலும், அவருக்கு மூளை மிகக் கொஞ்சமாகவே இருந்தது.

அவருக்கு ஒரு மந்திரி இருந்தார். அவர் பெயர் அறிவொளி. பெயருக்கு ஏற்றபடி நல்ல அறிவாளியாக இருந்தார்; மிகவும் நல்லவர்.

முன்கோபி ராஜா திடும்திடுமென்று ஏதாவது முடிவு செய்வார். அது கெட்ட முடிவு என்றால், பட்டென்று சொல்லிவிடுவார் அந்த மந்திரி.

உடனே முன்கோபி ராஜாவுக்கு மூக்குக்குமேல் கோபம் வந்துவிடும். “நான் ராஜாவா? நீர் ராஜாவா? நான் சொல்கிறபடிதான் நீர் நடக்க வேண்டும்” என்று சீறுவார்.

“நல்லது எது? கெட்டது எது? என்று எடுத்துச் சொல்லி, நல்லதைச் செய்யச் சொல்வதுதானே மந்திரியுடைய வேலை?” என்று மந்திரி சமாதானமாகச் சொல்வார்.

“ஆமாம், பெரிய்ய வேலை!” என்று அலட்சியமாய்க் கூறுவார் முன்கோபி ராஜா.

ஒருநாள் அரண்மனை ஜோசியரிடத்திலே “ஏனய்யா, வரவர நம்ம நாட்டிலே பஞ்சம் அதிகமாயிருக்கிறதே! இதற்கு என்ன செய்யலாம்?” என்று ராஜா கேட்டார்.

ஜோசியர் பஞ்சாங்கத்தை எடுத்து வைத்துக் கொண்டு ஏதேதோ கணக்கெல்லாம் போட்டுப் பார்த்தார். பிறகு, “நம்ம காளி கோயிலில் 51 சேவல்களைப் பலி கொடுத்தால் பஞ்சம் பஞ்சாய்ப் பறந்து விடும்” என்றார்.

அப்போது பக்கத்திலிருந்த மந்திரி சொன்னார்:

“அரசே, பஞ்சம் தீர வேண்டுமானால், விவசாயத்தைப் பெருக்க வேண்டும்; நெல் விளைச்சலுக்கு நல்ல உரம் போடவேண்டும். குளம் குட்டைகளிலே தண்ணீர் தங்குகிற மாதிரி ஆழமாக வெட்ட வேண்டும்...”

மந்திரி சொல்லி முடிக்கவில்லை.

“அட சட், வாயை மூடும். இல்லாத போனால், பிளாஸ்திரி போட்டு வாயை மூடிவிடுவேன்... எனக்குத் தெரியும் என்ன செய்ய வேண்டுமென்று. நீர் என்ன, என்னைவிட அறிவாளியா? உமது தலையும் என் தலையும் ஒரே அளவுதானே இருக்கின்றன. உமக்கு மட்டும் எப்படி அறிவு அதிகமாக இருக்க முடியும்?” என்று மிக மிகக் கோபமாகக் கேட்டார் ராஜா,

மந்திரி மிகவும் பொறுமைசாலிதான். இருந்தாலும் எத்தனை நாளைக்குத்தான் இப்படிப் பொறுத்துப் பொறுத்துப் பார்ப்பார்? பொறுமை இழந்த அவர், “அரசே, இனியும் நான் தங்களிடம் மந்திரியாக இருக்க விரும்பவில்லை. இன்றே என் பதவியை ராஜிநாமா செய்கிறேன்” என்று கூறி, அன்றைக்கே மந்திரி வேலைக்கு முழுக்குப் போட்டுவிட்டு வீடு போய்ச் சேர்ந்தார்.

“இவர் போனால் என்ன? இவரை விட மிக மிக மூளையுள்ளவரை விரைவிலே நியமித்துக் காட்டுகிறேன்” என்று அலட்சியமாகக் கூறினார் ராஜா.

பிறகு, வெகுநேரம் யோசனையில் மூழ்கினார். திடீரென்று, ‘அதுதான் சரி. பெரிய மண்டையிருக்கிற ஒருவரை மந்திரியாக்கிவிடலாம். மண்டை பெரிதாக இருந்தால், நிச்சயம் மூளையும் அதிகமாக இருக்கும். மூளை அதிகமாக இருந்தால் நிச்சயம் அறிவும் நிறைய இருக்கும்” என்ற முடிவுக்கு வந்தார்.

மறுநாள் நாடு முழுவதும் தண்டோரா போடச் சொன்னார்.


  ‘டமர டமர டம் டமர டமர டம். இதனால்
  அறிவிப்பது என்னவென்றால், யார் யாருக்கு
  மண்டை பெரிதாயிருக்கிறதோ, அவர்களெல்லாம்
  வருகிற வெள்ளிக்கிழமை 10 மணிக்கு
  அரண்மனை மண்டபத்திற்கு வந்துவிட
  வேண்டும். அவர்களிலே ஒருவரை நம் ராஜா,
  மந்திரியாகத் தேர்ந்தெடுக்கப் போகிறார்...
  தேர்ந்தெடுக்கப் போகிறார்... டும், டும், டும்;
  டும், டும், டும்.’

இந்த அறிவிப்பைக் கேட்டதும், தலை பெரிதாயிருக்கிறவர்களெல்லாம் அரண்மனை நோக்கி வெள்ளிக்கிழமை காலையில் வந்து சேர்ந்தார்கள். மொத்தம் 43 பேர் இருந்தார்கள்!

ராஜா நிறையச் சணல் கயிறு கொண்டு வரச் சொன்னார். ஒவ்வொருவர் தலையையும் சணல் கயிற்றால் சுற்றளவு பார்த்து அந்த அளவுக்குச் சனல் கயிற்றைத் தனித்தனியாக வெட்ட வேண்டு மென்பது அவரது திட்டம்!

அப்போது அவர் அருகிலிருந்த மெய்க்காப்பாளன், “மகாராஜா இஞ்ச் டேப்பும், தாளும், பென்சிலும் கொண்டு வரட்டுமா? அளவைப் பார்த்துத் தாளிலே குறித்துக் கொள்ளலாம்” எனறான.

உடனே ராஜாவுக்குச் ‘சுர்’னு கோபம் வந்து விட்டது. “நீராஜாவா? நான் ராஜாவா? எனக்கா புத்தி சொல்கிறாய்! அதிகப் பிரசங்கி. இன்றிலிருந்து நீ என் மெய்க்காப்பாளன் இல்லை! வாயில் காப்பாளன்தான்! நேராக அரண்மனை வாசலுக்குப் போய் அங்கே நில்!” என்று அவனை அடித்து விரட்டினார்.

அப்புறம் ஒவ்வொருவர் தலையையும் சணலால் அளந்து அந்த அளவுக்குச் சணலைத் தனித் தனியாக வெட்டினார். வெட்டிய துண்டுகளை அங்கேயிருந்த ஒரு நீண்ட மேஜைமேல் வைத்தார். பிறகு, எது மிகவும் நீளமானது என்று பார்த்தார். எல்லாவற்றையும்விட ஒன்று மிக நீளமாக இருந்தது.

“ஆ! இந்த அளவு தலைக்காரர்தான் இனி என்னுடைய மந்திரி” என்று குதித்தார். ஆனால் அந்த அளவு யாருடையது? அதுதான் தெரியவில்லை. அதில்தான் எந்த அடையாளமும் இல்லையே! அதனால் அவர் அந்தச் சணலை எடுத்துப் போய், ஒவ்வொருவர் தலையிலேயும் வைத்து வைத்துப் பார்த்தார். 41-வது ஆளுக்குத்தான் அது சரியாக இருந்தது. உடனே அவரையே மந்திரி யாக்கிவிட்டார். மற்றவர்களையெல்லாம் திருப்பி அனுப்பி விட்டார்!

அந்த மண்டை பருத்த மந்திரியிடம், “மந்திரி, நம் நாட்டு மக்களிலே பெரும்பாலோர் எலும்பும் தோலுமாக இருக்கிறார்கள். அவர்களெல்லாம் நன்றாகக் கொழு கொழு என்று ஆக வேண்டும். அதற்கு என்ன செய்யலாம்? உங்களுக்குத்தான் அதிகமான மூளை இருக்கிறதே! அதை உபயோகித்து ஒரு நல்ல யோசனையாகக் கூறுங்கள். அதன்படி செய்யலாம்” என்றார் ராஜா. உடனே அந்த மண்டை பருத்த மந்திரி சிறிதுகூடத் தயங்கவில்லை. “இது ரொம்பச் சுலபங்க. நல்லாக் கொழு கொழுன்னு இருக்கிறவங்களையெல்லாம் தண்டோராப் போட்டு வரவழைப்போம். அவர்களிலே ரொம்பக் கொழு கொழுன்னு இருக்கிற சில பேரைத் தேர்ந்தெடுப்போம். அவங்க எப்படிக் கொழு கொழுன்னு ஆனாங்க, அப்படி ஆகணும்னா என்ன என்ன செய்யனும்னு அவங்க ஒருத்தரை ஒருத்தர் கலந்து ஆலோசிச்சு முடிவு சொல்லட்டும்” என்றார்.

“அப்படியா! சரி, இதோ இன்றைக்கே தண்டோராப் போடச் சொல்கிறேன்” என்றார் முன்கோபி ராஜா.

அந்த நாட்டிலேதான் பஞ்சமாயிற்றே! தொந்தி பருத்த ஆள் எங்கே கிடைப்பார்கள்? இருந்தாலும், இந்தச் செய்தி அண்டை அயலில் உள்ள நாடுகளுக்கு எட்டவே, குறிப்பிட்ட நாளில் நன்றாகத் தொந்தி பருத்த 17 பேர் நடக்க முடியாமல் நடந்து அரண்மனைக்கு வந்தார்கள்.

“மந்திரி, சணல் கயிறு எங்கே? கொண்டு வரச் சொல்லுங்கள். இவர்களது தொந்திகளை அளந்து பார்ப்போம்” என்றார் ராஜா.

“அரசே, அதெல்லாம் வேண்டாம். இதோ இப்படிச் செய்தே தேர்ந்தெடுத்து விடலாம்” என்று சொல்லி விட்டு அந்த மண்டை பருத்த மந்திரி என்ன செய்தார் தெரியுமா?

முதலிலே ஒருவரின் பின்புறமாகப் போய் நின்றார். தம் இரு கைகளாலும் அந்த மனிதரின் தொந்தியை வளைத்துப் பிடித்தார். மந்திரியுடைய முன் கைகள் இரண்டும் ஒன்றை ஒன்று தொட்டு விட்டன.

உடனே அவரை இடப்பக்கமாக நிற்கச் சொன்னார்.

இன்னொருவரின் தொந்தியை வளைத்துப் பிடித்தார். அவருடைய முன் கைகள் இரண்டும் ஒன்றை ஒன்று தொடவில்லை.

உடனே அவரை வலப்பக்கமாக நிற்க வைத்தார். இப்படி ஒவ்வொருவராய்ப் பார்த்தார். இடப்பக்கத்தில் 12 சின்னத் தொந்திக்காரர்களும், வலப்பக்கத்திலே 5 பெரிய தொந்திக்காரர்களும் நின்றார்கள்.

பெரிய தொந்திக்காரர் ஐவரையும் தேர்ந்தெடுத்து அரண்மனையிலேயே ஒரு மண்டபத்தில் தங்கச் சொன்னார் முன்கோபி ராஜா. எப்படி நாட்டிலே உள்ள மக்கள் அனைவரையும் கொழுகொழு வென்று ஆக்குவது என அவர்கள் கலந்து பேசி விரைவிலே தக்க ஆலோசனைகள் கூறவேண்டும் என்று உத்தரவு போட்டார்.

பெரிய தொந்திக்காரர்கள் ஐவரும் நன்றாகச் சாப்பிடுவார்கள், சாப்பிட்டவுடனே தூங்குவார்கள்; துங்கி எழுந்தவுடனே சாப்பிடுவார்கள். இப்படியே காலங்கடத்தி வந்தார்கள். முன்கோபி ராஜா ஆள் அனுப்பிக் கேட்கிற போதெல்லாம், கலந்து பேசிச் சீக்கிரம் முடிவு செய்வதாகத் தகவல் அனுப்பினார்கள்

இப்படி ஒரு வாரம் ஓடிவிட்டது. ஒரு நாள் ராஜா அந்தப்புரத்திலே இருக்கிறபோது, அரண்மனைத் தலைமைச் சமையல்காரர் கையில் கரண்டியுடன் ஓடிவந்து,“மகாராஜா, மகாராஜா, அரிசி, பருப்பெல்லாம் தீர்ந்து போச்சு. ஒரு மாசத்துக்கு வாங்கி வச்சதை ஒரே வாரத்திலே அந்த அஞ்சு பேரும் தீர்த்துட்டாங்க மகாராஜா” என்று முறையிட்டார்.

உடனே ராஜாவுக்கு அபாரமான கோபம் வந்து விட்டது. அதைவிட அவருடைய பட்டத்து அரசிக்குக் கோபம் பீறிட்டது. “நாட்டிலேதான் பஞ்சம் என்றால், நம் அரண்மனையிலுமா பஞ்சம்?” என்று அலறினாள். . ராஜா, ராணியைச் சமாதானப் படுத்திவிட்டு நேராக அந்த ஐவரும் இருந்த மண்டபத்திற்கு வேக வேகமாகச் சென்றார். குறட்டை விட்டுத் தூங்கிக் கொண்டிருந்த அவர்களை மிகுந்த சிரமப்பட்டு எழுப்பி, “என்ன இது! இப்படி ஒரு வாரமாக வயிறு முட்டத் தின்றுவிட்டுத் தூங்குகிறீர்களே! என்ன முடிவு செய்தீர்கள்?” என்று ஆவேசமாகக் கேட்டார்.

அவர்கள் எழ முடியாமல் எழுந்தார்கள். நடுநடுங்கியபடி நின்றார்கள். என்ன சொல்வதென்று புரியாமல் விழி விழி என்று விழித்தார்கள்.ராஜாவின் கோபம் மேலும் அதிகமாகிவிட்டது.

“தண்ட சோற்றுத் தடியன்கள். உங்கள் தொந்திகளைக் கலக்குகிறேன் பாருங்கள்” என்று கூறிக் கொண்டே முன்கோபி ராஜா இரண்டு கைகளில் உள்ள விரல்களையும் மடக்கிக் கொண்டு, இருவரின் அருகிலே சென்றார். உடனே அவர்கள், “ஐயோ! அப்பா” என்று அலறிக் கொண்டு ஓட முடியாமல் ஓடினார்கள். அவர்களைத் தொடர்ந்து மற்ற மூவரும் மேல் மூச்சு கீழ் மூச்சு வாங்க ஓடினார்கள்.

“தொலைந்தார்கள். இனியும் இவர்களை வைத்துச் சோறு போட்டால், பஞ்சம், கடும் பஞ்ச மாகிவிடும்” என்று ஆறுதல் அடைந்தார் ராஜா.

உடனே அவர் மண்டை பருத்த மந்திரியை அழைத்து வரச் சொன்னார்.

“ஓய், உமது யோசனையைக் கேட்டால் உருப்பட்டாற் போலத்தான். பஞ்சம் போக வழி கேட்டால், பஞ்சம் அதிகமாக வழி சொல்லிவிட்டீரே! அந்த ஐந்து தூங்குமூஞ்சித் தடியன்களும் சேர்ந்து அரண்மனைச் சமையல் சாமான்களையே ஏப்பம் விட்டு விட்டார்கள். அவர்களிடமிருந்து ஒரு யோச னையும் வரவில்லை. நான் மிரட்டிக் கேட்டதும் அவர்கள் திருட்டு விழி விழித்தபடி திரும்பி ஓடி விட்டார்கள். இப்படிப்பட்ட யோசனையைச் சொல்லவா உம்மை மந்திரி ஆக்கினேன்! உமது மண்டைதான் பெரிதாயிருக்கிறது. உள்ளே இருப்பதெல்லாம் களிமண். வெறும் களிமண்!” என்று கூறிக் கொண்டே, அந்த மந்திரியின் மண்டையை இரண்டு கைகளாலும் பிடித்துப் பலங்கொண்ட மட்டும் அமுக்கினார் முன்கோபி ராஜா.

“ஐயோ! எனக்கு என்னங்க தெரியும்? பிச்சை எடுத்துக்கிட்டிருந்த என்னை நீங்கதானே மந்திரி

யாகத் தேர்ந்தெடுத்தீங்க? இப்போ என்னைச் சும்மா விட்டிடுங்கோ. எனக்கு மந்திரி பதவியும் வேண்டாம்; மண்ணாங்கட்டியும் வேண்டாம்” என்று அழாக் குறையாகக் கெஞ்சினார் அந்த மனிதர்.

அப்புறம்...?

அவர் ஓடிப் போய்விட்டார். முன்கோபி ராஜாவுக்குப் புத்தி வந்தது. பழைய மந்திரி அறிவொளியை அழைத்து வரச் சொல்லி அவரையே மீண்டும் மந்திரியாக்கிவிட்டார்.

அப்பொழுது மந்திரி அறிவொளி சொன்னார்:

“அரசே, கோபம் குடியைக் கெடுக்கும் என்பார்கள். சாதாரண ஒரு மனிதனுடைய கோபம் அவனுடைய மனைவி, மக்கள், அக்கம் பக்கத்திலுள்ள வர்களைத் தான் கெடுக்கும். ஆனால், தாங்களோ ஒரு ராஜா. இந்த ராஜ்யத்திலுள்ள எல்லாக் குடி மக்களும் உங்கள் குடும்பம் போல். ஆகையால், கோபம் கூடாது” என்றார்.

“மந்திரி, இனி உம்முடைய யோசனையைக் கேட்டுத்தான் எதுவும் செய்வேன்” என்று கூறி மந்திரியைக் கட்டிப்பிடித்து, அவர் முதுகிலே தட்டிக் கொடுத்தார். அன்று முதல் அவருடைய முன் கோபமும் மெல்ல மெல்லப்பறக்கத் தொடங்கியது!