கல்லாடம்/26-30

விக்கிமூலம் இலிருந்து
பாடல்:26

காமம் மிக்க கழிபடர் கிளவி[தொகு]

வானவர்க்கு இறைவன் நிலம்கிடை கொண்டு திருவுடல் நிறைவிழி ஆயிரத் திரளும் இமையாது விழித்த தோற்றம் போல கஞ்சக் கொள்ளை இடையற மலர்ந்து மணம்சூழ் கிடந்த நீள்கருங் கழியே! (5) கருங்கழி கொடுக்கும் வெள்இறவு அருந்தக் கைபார்த் திருக்கும் மடப்பெடை குருகே! பெடைக்குருகு அணங்கின் விடுத்தவெண் சினையொடு காவல் அடைக்கிடக்கும் கைதைஅம் பொழிலே! வெம்மையொடு கூடியும் தண்மையொரு பொருந்தியும் (10) உலகஇருள் துரக்கும் செஞ்சுடர் வெண்சுடர் காலம் கோடா முறைமுறை தோற்ற மணிநிரை குயிற்றிய மண்டபம் ஆகி பொறைமாண்டு உயிர்க்கும் தாயாம் மண்மகள் காளையாது உடுக்கும் பைந்துகில் ஆகி (15) வேனிற் கிழவன் பேரணி மகிழ முழக்காது தழங்கும் வார்முரசு ஆகி நெடியோன் துயிலா அறிவொடு துயில பாயற்கு அமைந்த பள்ளியறை யாகி சலபதி ஆய்ந்து சேமநிலை வைத்த (20) முத்துமணி கிடக்கும் சேற்றிருள் அரங்காய் புலவுஉடற் பரதவர் தம்குடி ஓம்ப நாளும் விளைக்கும் பெருவயல் ஆகி கலமெனும் நெடுந்தேர் தொலையாது ஓட அளப்பறப் பரந்த வீதி யாகி (25) சுறவ வேந்து நெடும்படை செய்ய முழக்கமொடு வளைத்த அமர்க்களம் ஆகி மகரத் தெய்வம் நாள் நிறைந்து உறைய மணிவிளக்கு நிறைந்த ஆலயம் ஆகி நீர்நெய் வார்த்துச் சகரர் அமைத்த (30) தீவளர் வட்டக் குண்டம் ஆகி எண்திகழ் பகுவாம் இனமணிப் பாந்தள் தண்டில் நின்றுஎரியும் தகளி யாகி பஞ்சவன் நிறைந்த அன்புடன் வேண்ட மாறிக் குனித்த நீறணி பெருமாற்கு (35) அமுத போனகம் கதுமென உதவும் அடும்தீ மாறா மடைப்பள்ளி ஆகி இன்னும் பலமாய் மன்னும் கடலே நுங்கள் இன்பம் பெருந்துணை என்றால் தண்ணம் துறைவற்கு இன்று இவள் ஒருத்தி (40) நெருப்புறு மெழுகின் உள்ளம் வாடியும் அருவி தூங்கக் கண்ணீர் கொண்டும் அரவின்வாய் அரியின் பலவும் நினைந்தும் நிலையாச் சூளின் நிலையா நெஞ்சம் கொண்டனள் என்என என்முகம் நாடி (45) உற்ற வாய்மை சற்றும் தருகிலீர் அன்றெனின் நும்மின் ஒன்றுபட் டொருகால் 'இவளோ துயரம் பெறுவதென்?' என்று வினவாது இருக்கும் கேண்மை, மனனால் நாடின் கொலையினும் கொடிதே! (50)

பாடல்:27

இடம் அணித்து என்றல்[தொகு]

பொருப்பு வளன்வேண்டி மழைக்கண் திறப்ப குருகுபெயர்க் குறைத்து உடல்பக எறிந்த நெடுவேள் கடவுள் மயில்கொடி முன்றில் பெருங்கிளை கூண்டு வெட்சிமலர் பரப்பி இறால்நறவு அளாய செந்தினை வெள்இடி (5) தேக்கினல் விரித்து நால்திசை வைத்து மனவுஅணி முதியோன் வரை அணங்கு அயர்ந்து மூன்று காலமும் தோன்றக் கூற வேலன் சுழன்று குறுமறி அறுப்ப கருவி நுதிகொள் நெறியினல் ஈந்தின் (10) முற்றிய பெருநறவு எண்ணுடன் குடித்து நெட்டிலை அரம்பைக் குறுங்காய் மானும் உளியம் தணித்தகணை கொள்வாய்த் திரிகல் ஒப்புடைத் தாய வட்டவாய்த் தொண்டகம் கோல்தலை பனிப்ப வான்விடு பெருங்குரல் (15) வீயாது துவைக்கும் கடன்மலை நாகிர் வருந்தியேற் றெடுத்த செந்திரு மடமகள் ஒருவுக உளத்துப் பெருகிய நடுக்கம் எம்மூர்ச் சேணும் நும்மூர்க் குன்றமும் பெருந்தவர் குழுவும் அருங்கதி இருப்பும் (20) பொதியமும் களிப்ப விரிதரு தென்றலும் கனைகடல் குடித்த முனிவனும் தமிழும் மேருவும் மூவர்க்கு ஓதிய புரமும் உலகம்ஈன் றளித்த உமையும் மாஅறனும் தேவர்க்கு அரசனும் காவல் தருவும் (25) வழுவா விதியும் எழுதா மறையும் செங்கோல் வேந்தும் தங்கிய குடியும் தவம்சூழ் இமயமும் கமஞ்சூல் மழையும் எல்லையில் ஈங்கிவை சொல்லிய அன்றி கண்ணன் கரமும் வெண்ணெயும் போலப் (30) பாசடை புதைத்த நெட்டாற்று ஏரியுள் பூத்தலர் விரித்த சேப்படு தாமரை உள்வளை உறங்கும் வள்ளவாய்க் கூடல் நிறைந்துறை முக்கண் பெருந்திறல் அடிகள் அடியவர்க்கு எவ்வளவு அதுஆம் கொடிபுரை நுசுப்பின் பெருமுலை யோளே! (36)

பாடல்:28

நின்குறை நீயே சென்று உரை என்றல்[தொகு]

வேற்றுப் பிடிபுணர்ந்த தீராப் புலவி சுற்றமொடு தீர்க்க உய்த்த காதலின் கருங்கை வெண்கோட்டுக் சிறுகண் பெருங்களிறு உளத்துநின் றளிக்கும் திருத்தகும் அருநூல் பள்ளிக் கணக்கர் பால்பட் டாங்கு (5) குறிஞ்சிப் பெருந்தேன் இறாலொடு சிதைத்து மென்னடைப் பிடிக்குக் கைபிடித் துதவி அடிக்கடி வணங்கும் சாரல் நாட! அந்தணர் இருக்கை அகல்வோர் சூழ்ந்தென நல்நயம் கிடந்த பொன்னகர் மூடிப் (10) புலைசெய்து உடன்று நிலைநிலை தேய்க்கும் தள்ளா மொய்ம்பின் உள்உடைந்து ஒருகால் வேதியன் முதலா அமரரும் அரசனும் போதுதூய் இரப்ப புணரா மயக்கம் நாரணன் நடித்த பெருவாய்த் தருக்கத்து (15) அறிவுநிலை போகி அருச்சனை விடுத்த வெள்ளமுரண் அரக்கர் கள்ளமதில் மூன்றும் அடுக்குநிலை சுமந்த வலித்தடப் பொன்மலை கடுமுரண் குடிக்கும் நெடுவில் கூட்டி ஆயிரம் தீவாய் அரவுநாண் கொளீஇ (20) மாதவன் அங்கி வளிகுதை எழுநுனி செஞ்சரம் பேரிருள் அருக்கன் மதிஆக தேர்வரை வையம் ஆகத் திருத்தி சென்னிமலை ஈன்ற கன்னிவிற் பிடிப்ப ஒருகால் முன்வைத்து இருகால் வளைப்ப (25) வளைத்தவில் வட்டம் கிடைத்தது கண்டு சிறுநகை கொண்ட ஒருபெருந் தீயின் ஏழுயர்வானம் பூழிபடக் கருக்கி அருச்சனை விடாதங்கு ஒருப்படும் மூவரில் இருவரைக் காவல் மருவுதல் ஈந்து (30) மற்றொரு வற்கு வைத்த நடம் அறிந்து குடமுழவு இசைப்பப் பெரும்அருள் நல்கி ஒருநாள் அருச்சனை புரிந்திடா அவர்க்கும் அரும்பெறல் உளதாம் பெரும்பதம் காட்டி எரியிடை மாய்ந்த கனல்விழி அரக்கர்க்கு (35) உலவாப் பொன்னுலகு அடைதர வைத்த சுந்தரக் கடவுள் கந்தரக் கறையோன் மாமி ஆடப் புணரி அழைத்த காமர் கூடற்கு இறைவன் கழலிணை களிப்புடை அடியர்க்கு வெளிப்பட் டென்ன (40) ஒருநீ தானே மருவுதல் கிடைத்து கள்ளமும் வெளியும் உள்ளமுறை அனைத்தும் விரித்துக் கூறி பொருத்தமும் காண்டி ஈயா மாந்தர் பொருள்தேய்ந் தென்ன நுண்ணிடை சுமந்து ஆற்றாது கண்ணிய சுணங்கின் பெருமுலை யோட்கே! (46)

பாடல்:29

இரவுக்குறி வேண்டல்[தொகு]

வள்ளியோர் ஈதல் வரையாது போல எண்திசை கருஇருந்து இனமழை கான்றது வெண்ணகைக் கருங்குழல் செந்தளிர்ச் சிறடி மங்கையர் உளமென கங்குலும் பரந்தது தெய்வம் கருதாப் பொய்யினர்க்கு உரைத்த (5) நல்வழி மான புல்வழி புரண்டது காலம் முடிய கணக்கின் படியே மறலி விடுக்க வந்த தூதுவர் உயிர்தொறும் வளைந்தென உயிர்சுமந்து உழலும் புகர்மலை இயங்கா வகைவரி சூழ்ந்தன (10) வெள்ளுடற் பேழ்வாய்த் தழல்விழி மடங்கல் உரிவை மூடி கரித்தோல் விரித்து புள்ளி பரந்த வள்ளுகிர்த் தரக்கின் அதள்பியற் கிட்டு குதியாய் நவ்வியின் சருமம் உடுத்து கரும்பாம்பு கட்டி (15) முன்புரு விதிகள் என்புகுரல் பூண்டு கருமா எயிறு திருமார்பு தூக்கி வையகத் துயரின் வழக்கறல் கருதி தொய்யில் ஆடும் கடனுடைக் கன்னியர் அண்ணாந்த வனமுலைச் சுண்ணமும் அளறும் (20) எழிலிவான் சுழலப் பிளிறுகுரற் பகட்டினம் துறைநீர் ஆடப் பரந்தகார் மதமும் பொய்கையும் கிடங்கும் செய்யினும் புகுந்து சிஞ்சை இடங்கரை பைஞ்சிலைச் சேலை உடற்புலவு மாற்றும் படத்திரை வையை (25) நிறைநீர் வளைக்கும் புகழ்நீர்க் கூடல் வெள்ளியம் பொதுவில் கள்ளவிழ் குழலொடும் இன்பநடம் புரியும் தெய்வ நாயகன் அருவிஉடற் கயிறும் சுனைமதக் குழியும் பெருந்தேன் செவியும் கருந்தேன் தொடர்ச்சியும் (30) ஓவா, பெருமலைக் குஞ்சரம் மணக்க வளம்தரும் உங்கள் தொல்குடிச் சீறூர்க்கு அண்ணிய விருந்தினன் ஆகி நண்ணுவன் சிறுநுதற் பெருவிழி யோளே! (34)

பாடல்:30

நகர் அணிமை கூறல்[தொகு]

புயற்கார்ப் பாசடை எண்படப் படர்ந்த வெள்ளப் பெருநதி கொள்ளைமுகம் வைத்து நீட நிறைபாயும் வான வாவிக்குள் ஒருசெந் தாமரை நடுமலர்ந் தென்ன மூவடி வழக்கிற்கு ஓரடி மண்கொடு (5) ஒருதாள் விண்ணத்து இருமைபெற நீட்டிய கருங்கடல் வண்ணன் செங்கருங் கரத்து ஒன்றால் இருமலை அன்றேந் தியதென உந்திஒழுக் கேந்திய வனமுலை யாட்டியும் வரைபொரும் மருமத்து ஒருதிறன் நீயும் (10) முழைவாய் அரக்கர் பாடுகிடந் தொத்த நிறைகிடைப் பொற்றை வரைகடந்து இறந்தால் எரிதழற் குஞ்சி பொறிவிழி பிறழ்எயிற்று இருளுடல் அந்தகன் மருள்கொள உதைத்த மூவாத் திருப்பதத்து ஒருதனிப் பெருமான் (15) எண்ணில் பெறாத அண்டப் பெருந்திரள் அடைவுஈன் றளித்த பிறைநுதற் கன்னியொடும் அளவாக் கற்பம் அளிவைத்து நிலைஇய பாசடை நெடுங்காடு காணிகொள் நீர்நாய் வானவில் நிறத்த நெட்டுடல் வாளைப் (20) பேழ்வாய் ஒளிப்ப வேட்டுவப் பெயர் அளி இடைவுறழ் நுதப்பின் குரவைவாய்க் கடைசியர் களைகடுந் தொழில்விடுத்து உழவுசெறு மண்ட பண்கால் உழவர் பகடுபிடர் பூண்ட முடப்புது நாஞ்சில் அள்ளல் புகநிறுத்தி (25) சூடுநிலை உயர்த்தும் கடுங்குலை ஏற பைங்குவளை துய்க்கும் செங்கட் கவரி நாகொடு வெருண்டு கழைக்கரும்பு உழக்க அமுதவாய் மொழிச்சியர் நச்சுவிழி போல நெடுங்குழை கிழிப்பக் கடுங்கயல் பாயும் (30) தண்ணம் பழனம் சூழ்ந்த கண்இவர் கூடல் பெருவளம் பதியே! (32)

"https://ta.wikisource.org/w/index.php?title=கல்லாடம்/26-30&oldid=486157" இலிருந்து மீள்விக்கப்பட்டது