குலோத்ததுங்கச் சோழன் உலா

விக்கிமூலம் இலிருந்து

கவிச்சக்கரவர்த்தி ஒட்டக்கூத்தர்
அருளிய
இரண்டாம் குலோத்துங்க சோழன் உலா

சிட்டு நூலகம்
9, பாரதி நகர் முதல் தெரு,
தியாகராய நகர், சென்னை 600 017
பதிப்பு 2015

முன்னோர் பெருமை[தொகு]

தேர் மேவு பாய்புரவிப் பாசடைச் செங்கமலம்

போர்மேவு பாற்கடல் பூத்தனையோன் – பார்மேல் 1

மருளப் பசுவொன்றில் மம்மர்நோய் தீர

உருளுத் திருத்தேர் உரவோன் – அருளினால் 2

பேராப் பெரும்பகை தீரப் பிறவேந்தர்

ஊராக குலிச விடையூர்ந்தோன் – சோராத் 3

துயில்காத்து அரமகளிர் சோர்குழைகாத்து உம்பர்

எயில்காத்த நேமி இறையோன் – வெயில்காட்டும் 4

அவ்வா னவர் கோன் ஒருமணி ஆசனத்தில்

ஒவ்வாமல் ஏத்த உடனிருந்தோன் – கவ்வை 5

எழக்குரைக்கும் பேழ்வாய் இருங்கூற்றுக்கு ஏற்ப

வழக்குரைக்கும் செங்கோல் வளவன் – பழக்கத்தால் 6

போந்த புலியுடனே புல்வாய் ஒருதுறைநீர்

மாந்த உலகாண்ட மன்னர்பிரான் – காந்தெரியில் 7

வெந்தா ருயிர்பெற்று உடல்பெற்று விண்ணாள

மந்தாகினி கொணர்த்த மன்னர்கோன் – முந்திப் 8

பொருதேர்கள் ஈரைந்தின் ஈரைவர் போர்பண்டு

ஒருதேரால் வென்ற உரவோன் – கருதி 9

மலைபத்தும் வெட்டும் உருமின் மறவோன்

தலைபத்தும் வெட்டும் சரத்தோன் – நிலைதப்பா 10

மீளி தலைகொண்ட தண்டத்தான் மீளிக்குக்

கூளி தலைபண்டு கொண்டகோன் – நாளும் 11

பதுமக் கடவுள் படைப்படையக் காத்த

முதுமக் கட்சாடி முதலோன் – பொதுமட்க 12

வாங்குஎயில் நேமி வரையாக மண்ணாண்டு

தூங்குஎயில் கொண்ட சுடர்வாளோன் – ஓங்கிய 13

மால்கடல் பள்ளி வறிதாக மண்காத்து

மேல்கடல் கீழ்கடற்கு விட்டகோன் – கோல் கொன்று 14

அலையெறியும் காவேரி யாற்றுப் படைக்கு

மலை யெறியும் மன்னர்க்கு மன்னன் – நீலையறியாத் 15

தொல்லார் கலிவலையந் தோள்வலைய முன்றிருந்த

வில்லான் நடுவுள்ள வெற்பெடுத்தான் – ஒல்லைக் 16

கொலையேறு உடம்படையக் கொய்தலும் எய்தாத்

துலையேறி வீற்றிருந்த தோன்றல் – தலையேறு 17

மண்கொண்ட பொன்னிக் கரைகட்ட வாராதாள்

கண்கொண்டசென்னிக் கரிகாலன் – எண்கொள் 18

பணம்புணர்ந்த மோலியான் கோமகளைப் பண்டு

மணம்புணர்ந்த கிள்ளிவளவன் – அணங்கு 19

படுத்துப் பொறையனைப் பொய்கைக்குப் பண்டு

கொடுத்துக் களவழிப்பாக் கொண்டோன் – அடுத்தடுத்துச் 20

சீறும் செருவில் திருமார்பில் தொண்ணூறும்

ஆறும் படுதழும்பின் ஆகத்தோன் ஏறப் 21

பிரம வரக்கன் அகலம் பிளந்து

பரமர் திருத்தில்லை பார்த்தோன் – நரபதியர் 22

தாழ முன்சென்று மதுரைத் தமிழ்ப்பதியும்

ஈழமும் கொண்ட இகலாளி – சூழவும் 23

ஏறிப் பகலொன்றில் எச்சுரமும் போயுதகை

நூறித் தன்தூதனை நோக்கினோன் – வேறாகக் 24

கங்கா ந்தியும் கடாரமும் கைவரச்

சிங்கா தனத்திருந்த செம்பியர்கோன் – எங்கோன் 25

புவிராச ராசர் மனுமுதலோர் நாளில்

தவிராத சுங்கம் தவிர்த்தோன் – கவிராசர் 26

போற்றும் பெரியோன் இவன்பின்பு பூதலங்கள்

ஆற்றும் திருத்தோள் அகனங்கன் – வேற்றார் 27

விரும்பரணில் வெங்களத்தீ வேட்டுக் கலிங்கப்

பெரும்பரணி கொண்ட பெருமான் – தரும்புதல்வன் 28

இரண்டாம் குலோத்துங்கன்[தொகு]

கொற்றக் குலோத்துங்க சோழன் குவலயங்கள்

முற்றப் புரக்கும் முகில்வண்ணன் – பொன்துவரை 29

இந்து மரபில் இருக்கும் திருக்குலத்தில்

வந்து மனுகுலத்தை வாழ்வித்த – பைந்தளிர்க்கை 30

மாதர்ப் பிடிபெற்ற வாரணம் அவ் வாரணத்தின்

காதற் பெயரன் கனகளபன் – யாதினும் 31

தீட்டற் கரிய திருவே திருமாலை

சூட்டத் திருமகுடஞ் சூடியபின் – நாட்டு 32

முறைவிட்ட வேற்று முடிமன்னர் தத்தம்

சிறைவிட்டு அரசருளிச் செய்து – கறைவிட்டு 33

மைஞ்ஞாகம் எட்டும் மதநாக மோர் எட்டும்

பைஞ் ஞாகம் எட்டும் பரந்தீர – இஞ்சாலம் 34

தாதைக்குப் பின்பு தபனற்குத் தோலாத

போதத் திமிரப் பொறைநீக்கி – மாதரில் 35

ஒக்க அபிடேகம் சூடும் உரிமைக்கண்

தக்க தலைமைத் தனித்தேவி – மிக்க 36

புவனி முழுதுடைய பொற்றொடியும் தானும்

அவனி சுரர்சுருதி ஆர்ப்ப – நவநிதி தூய் 37

தில்லையில் செய்த திருப்பணிகள்[தொகு]

ஏத்துத்தருங் கடவுள் எல்லையில் ஆனந்தக்

கூத்துக் களிகூரக் கும்பிட்டுப் – போத்தின்மேல் 38

தில்லைத் திருமன்ற முன்றில் சிறுதெய்வத்

தொல்லைக் குறும்பு தொலைத்தெடுத்து – மல்லல் 39

தசும்பு வளர்கனித் தண்பெரு நாவல்

அசும்பு பசும்பொன் அடுக்கிப் – பசும்பொன் 40

அலகை இகந்த அசலகுல வச்ரப்

பலகை ததும்பப் பதித்து – மலர் கவிகைக் 41

காக்கிங் கடலேழின் முத்தும் வரகங்கை

தூங்கு மருவியில் சூழப் போக்கி – நோக்கம் 42

தொடுக்கும் சிரச்சேடன் சூடா மணி கொண்டு

எடுக்கும் திருத்தீபம் ஏற்றி – அடுக்கிய 43

தூய வயிரத்தால் வாவியாய்ச் சூழ் கடந்த

பாய மரகதத்தால் பாசடை யாய்த் – தூய 44

பரு முத்தால் ஆவியாய்ப் பற்பரா கத்தால்

திருமிக்க செந்தா மரையாய்ப் – பெருவர்க்க 45

நீலத்தால் வண்டின் இரையாய் உரையில்

கோலத்தால் கோயில் பணிகுயிற்றி – சூலத்தான் 46

ஆடும் திருப்பெரும்பேர் அம்பலமும் கோபுர

மாடம் பரந்தோங்கு மாளிகையும் – கூடிப் 47

பொலங்கோட்டு மாமேருப் பூதரமும் போய

வலங்கோட்டு திகிரியு மானத் – தலங்கொள் 48

நிலைஏழு கோபுரங்கள் நேரே நெருங்க

மலைஏழும் என்ன வகுத்துத் – தலையில் 49

மகரங்கொள் கோபுரங்கண் மாக விமானச்

சிகரங்க ளாகித் திகழ – நிகரில் 50

எரிபொற் படர்பாறை என்னலாய் எங்கும்

விரிபொன் திருமுற்றம் மின்னர் – சொரிபொன் 51

கடாரப் பனிநீர் கவினிக் கனபொன்

தடாகங்க ளாகித் ததும்ப – விடாதுநின்று 52

அற்பக லாக அனந்த சதகோடி

கற்பக சாதி கதிர்கதுவப் – பொற்பூண் 53

வரமகளிர் தத்தம் பணிமுறைக்கு வந்த

சுரமகளிர் ஆகித் துறும – ஒருதான் 54

பிறக்கும் இமயம் பெருங்கடவுள் குன்றம்

மறக்கும் படிசெல்வ மல்கச் –சிறக்கும் 55

இருக்காதி எம்மறையும் எவ்வுலகும் ஈன்றாள்

திருக்காமக் கோட்டந் திகழ்வித்து – அருக்கர் 56

புனையா மணியாலும் பொன்னாலு மின்ன

மனையாலோ ரோர்தேர் வகுத்து –முனைவன் 57

திருவீதி ஈரிரண்டும் தேவர்கோன் மூதூர்ப்

பெருவீதி நாணப் பிறக்கி வருநாளில் 58

பொங்கார் கலிசூழ் புவனம் பதினாலும்

கங்கா புரிபுகுந்து கண்டுவப்பத் – தங்கள் 59

புவனிபெற வந்த பூபாலர்க் கெல்லாம்

பவனிஎழுச்சி பணித்து 60

குலோத்துங்க சோழன் உலா வருதல்[தொகு]

மடமயி லொக்க மகுடங் கவித்தாள்

உடனுறை பள்ளி யுணர்ந்து – தடமுகில் 61

அஞ்சன சைலத்து அபிடேகம் செய்வதென

மஞ்சன மாடி வழிமுதல் – செஞ்சடை 62

வானவன் பொற்றாள் வணங்கி மறையவர்க்குத்

தானம் அனைத்தும் தகைபெறுத்தி – வானிற் 63

கிளைக்கும் சுடர்இந்த்ர நீலக் கிரியை

வளைக்கும் இளநிலா மானத் – திளைக்கும் 64

உருவுடைய ஆடைதவிர்த்தொரு வெள்ளைத்

திருவுடை யடை திகழ்த்தி – ஒருபுடைப் 65

பச்சை யுடைவாள் விசித்த தொருபசும்பொன்

கச்சை நவரத்னக் கட்டெரிப்ப – வச்ர 66

வெருவுதர வெல்லா இரவிகளும் வீழத்

திருவுதர பந்தனம் சேர்த்தித் – திருமார்பில் 67

கார்கடல் மீதே கதிர்முத்தத் தாமங்கள்

பாற்கடல் போர்த்த தெனப்பரப்பிப் – பாற்கடல் 68

வந்த வனச மகளேபோல் மற்றது

தந்த கடவுள் மணிதயங்கப் – பந்தச் 69

சுரகனகத் தோள்வலையச் சூட்டுகவித்த

உரகப் பணாமணி யொப்ப – விரவி 70

மகரக் குழைதோள் மீல்வந்தசைவ மேருச்

சிகரச் சுடர்போல் திகழ – நிகரில் 71

முடியின் மணிவெயிலும் முத்தக் குடையில்

வடியு நிலவு மலையப் – படியில் 72

வயங்கு கடக மகுடாதி மின்னத்

தயங்கு பெரும்போதி சாத்தி – முயங்கிய 73

செவ்வி நுதலில் திருநீற்றுப் புண்டரம்

வவ்வி மகளிர்மனங்கவற்ற – நொவ்விய 74

நாவியும் மான்மதச் சாந்து நறையகில்

ஆவியும் ஆகண்டமும் அளப்பத் – தீவிய 75

தோள்மாலை வாசக் கழுநீர் சுழல்சோதிக்

கோண்மாலூ கூசக்குளிர்கொடுப்ப – நாண்மாலை 76

வேந்தர் தொழுதிறைஞ்ச வேதியர் ஏத்தெடுப்பப்

போந்து புறநின்ற போர்க்களிற்றை – வேந்தரில் 77

மாக்காதல் யாதவனும் மாறழிந்த மீனவனும்

வீக்காமல் எங்குள்ள மெய்ம்முகிற்கும் – கோக்கடவுட்கு 78

எட்டாத வச்சிரமும் எல்லா உருமேறும்

வெட்டாமல் எங்குள்ள வெற்பினுக்கும் – முட்டா 79

முதுவாய் வடவையும் முந்நான்கு கோளும்

கதுவாமல் எல்லாக் கடற்கும் – பொதுவாய் 80

அபயம் கொடுக்கும் அயிரா பதத்தை

உபய வயக்கோட் டுருமை –விபவ 81

நிருத்தம் தருமோர் நிதிப்பொருப்பைக் கண்ணுற்று

எருத்தம் திருக்கவின வேறித் – திருத்தக்க 82

பள்ளித் திருத்தொங்கல் சோலை பகல்விலக்க

வெள்ளிக் கவிகை மிசையோங்க – ஒள்ளிய 83

ஒற்றை வலம்புரி யூத வதன்பின்பு

மற்றை யலகில் வளைகலிப்பக் – கற்றைக் 84

கவரி இரட்டக் கடவுள் முரசார்த்து

உவரி உலாவாடி யொப்ப – அவிர்வாளும் 85

சங்கும் திகிரியும் சார்ங்கமும் தண்டமும்

எங்கும் சுடர்விட்டு இருள்களையக் – கொங்கத்து 86

விற்கொடியும் மீனக்கொடியும் கொடுவரிப்

பொற்கொடி ஒன்றின் புடை போதத் – தெற்கின் 87

மலையா நிலம்வரவே வார்பூங் கருப்புச்

சிலையான் வரவு தெரியத் – தொலையாது 88

வீசுந்திவலை விசும்புகூர் மங்குலால்

வாசவன் வந்த வரவறியக் – கூசாதே 89

யாவர் ஒழிவார் இவன்வரவே மற்றுள்ள

தேவர் வருவர் எனத்தெளிய – யாவர்க்கும் 90

பின்னர் வழங்கு முழங்கு பெருங்களிற்றுத்

தென்னர் முதலானோர் சேவிப்ப – முன்னர்ப் 91

பரவி யுலகில் பலமண்ட லீகர்

புரவி மிசை கொண்டு போத – அருவிபோல் 92

விட்டு மதம் பொழியும் வேழத் திசைவேழம்

எட்டு மொழியப் புகுந்தீண்டக் – கட்டி 93

இரவிக்கு நிற்பன ஏழும் ஒழியப்

புரவிக் குலமுழுதும் போத – விரவி 94

உடைய நிதிக்கடவுள் ஊர்தி ஒழிய

அடைய நரவெள்ளம் ஆர்ப்ப – விடையே 95

எழுந்த துகளுருவ வேறியும் சுண்ணம்

விழுந்த துகளுருவ வீழ்ந்தும் –தொழுந்தகைய 96

விண்ணுலகு மண்ணுல தாகி விளங்கவிம்

மண்ணுலகு பொன்னுலகாய் மாறாட – எண்ணரிய 97

மாகதரும் மங்கலப் பாடகரும் விஞ்சையர்

பூசுத ராயினார் போற்பரவ – நாகர் 98

கொழுந்தெழு கற்பக சாதி குவித்துத்

தொழுந்தொறும் மன்னர் சொரிய – எழுந்துள 99

கைம்மழை என்னக் கனகப் பெயறூர்த்து

மைம்மழை மாட மறு கணைந்தான் - தம்முடைய 100

காணுகின்ற மக்களின் செயல்களும் கூற்றும்[தொகு]

சாலை தொறும்திரள்வார் சாளரங்கள் கைக்கொள்வார்

மேலை நிலாமுற்றம் மேல்தொகுவார் – மாலைதாழ் 101

தெற்றி யடைய மிடைவார் சிலர்பலர்

நெற்றி சுருங்க நெருங்குவார் – பொற்றொடியார் 102

மாளிகையில் ஏறுவார் மண்டபத்தில் மண்டுவார்

குளிகை மதடந்தொறும் நுறுவார் – நீளும் 103

இரண்டு மருங்கினும் இப்படி மொய்ப்பத்

திரண்டு பலர்எதிரே சென்று – புரண்ட 104

கரும்புருவ வல்வில்லும் கண்மலர் அம்பும்

பெரும்புவன வெல்லை பிடிப்பர் – கரும்பு 105

திரைக்கு திரைமுரல நீலக் குழாங்கள்

இரைப்பின் மொகுமொகு வென்ன – விரைச்சுருள் 106

மேகா ளகங்கள் மிறுவாய் வைத்துதக்

காகான மென்னும் படிகலிப்பப் – போகத் 107

தகரங் கமழ்கதுப்பில் தாழ்குழை தோடாழ்

மகரம் பிறழ்கொடியின் வாய்ப்ப –இகல் அனங்கன் 108

சேனா சமுகம் தெரிப்ப அதனெதிர்

சேனா பராகம் எணத்திகழப் – பூதாறும் 109

கண்ணம் எதிர்தூ யுடனே தொடியுந்து உய்

வண்ணம் இழப்பார் மனமிழப்பார் – மண்ணுலகில் 110

இன்னற் பகைவன் இவன்காண் அகனங்கன்

மன்னர்க்கு மன்னன் மகன் என்பார் – முன்னர் 111

முதுகுல மன்னர் முடிவணங்க வந்த

விதுகுல நாயகி சேய்என்பார் – குதுகலத்தால் 112

கண்மரும் செவ்விக் கடவுள் திசாதேவர்

எண்மருங் காணும் இவன்என்பார் – மண்ணவர்க்கும் 113

தேவர்க்கும் தாகர்க்கும் தெய்வமுனிவர்க்கும்

யாவர்க்கும் காணும் இவன்என்பார் – தீவிய 114

மாதவியும் செங்கழு தீரும் வலம்புரியும்

தாதகியும் கொள்ளத் தரின்என்பார் – தீவியா 115

ஒறுக்கும் மிதிலை ஒருவில்லைத் தொல்லை

இறுக்கும் அவன் இவன்என்பார் – மறுக்காமல் 116

சென்று கனைகடல் தூர்த்துத் திருக்குலத்து

நின்ற பழிதுடைப்பாய் நீஎன்பார் – இன்றளவும் 117

துஞ்சும் துயிலிழந்த தண்டர் குழல்துளையில்

நஞ்சும் குமிழிஎழ் நாளென்பார் – பஞ்சவனே 118

வாடையினும் தண்ணென்னும் மந்தா நிலம் எமக்குக்

கோடையினும் தீது கொடிதென்பார் – கூடி 119

முருகுவார் கூந்தலார் மொய்த்தலர்ந்த கண்ணால்

பருகுவார் போல்வீழ்ந்து பார்ப்பார் – பொருமதனன் 120

பார்த்தானோ புங்கானு புங்கம் படப்பகழி

தூர்த்தானோ யாதென்று சொல்லுகேம் – ஆர்த்தான் 121

உனைத்தான் சிலையிக் கொருகோடி கோடி

வளைத்தான் அரும்புலகின் மாய்த்தான் – இளைத்தார் 122

பேதை[தொகு]

இனையர் பலர்திகழ ஈங்கொருத்தி முத்தில்

புனையும் சிறுதொடிக்கை பூவை – களைமுகில்தேர் 123

ஆடாத தோகை அலராத புண்டரிகம்

பாடாத பிள்ளைப் பசுங்கிள்ளை – சூடத் 124

தளிராத சூதம்தழையாத வஞ்சி

குளிராத திங்கள் குழவி – அளிகள் 125

இயங்காத தண்கா இயக்காத தேறல்

வயங்காத கற்பக வல்லி – தயங்கிணர்க் 126

கூழைச் சுருள்முடிக்கக் கூடுவதும் கூடாதாம்

ஏழைப் பருவத்து இளம்பே தை – சூழும் 127

நிலைத்தாய வெள்ளம் நெருங்க மருங்கே

முலைத்தாயர் கைத்தாயர் மொய்ப்பத் – தலைத்தாமம் 128

தொக்கக் கவிகைக் குலோத்துங்க சோழனை

மிக்க பராந்தகனை மீனவனைப் – புக்கார் 129

வணங்க வணங்கி வழுத்த வழுத்தி

அணங்க அணங்காள் அகலாள் – குணங்காவல் 130

மன்னன் புனையம் திருமுத்த மாலையை

அன்னம் படித்தாட ஆறுஎன்னும் – பின்னவன் 131

கோவைத் திருப்பள்ளித் தொங்கல் குழாங்கிளிக்கும்

பூவைக்கு நல்ல பொழிலென்னும் – பாவை 132

அயிர்க்கும் இருகோட்டு அயிரா பதத்தை

மயிற்கு மலையென்று மன்னும் – குயிற்கிளவி 133

தேன்வாழும் தாமம்சூழ் தெய்வக் கவிதையை

மான்வாழ மாசில் மதியென்னும் – கோனுடைப் 134

பாங்குவளை யாழிப் பார்மடந்தை தன்னுடைய

பூங்குவளை மாலை புனைகென்னும் – தேங்கமலத் (து) 135

அற்புத வல்லி அவனே பிறந்துடைய

கற்பக மாலையைக் காதலிக்கும் – பொற்பார் 136

பொலம்புரி காஞ்சிப் புகழ்மகட்கே தக்க

வலம்புரி மாலைக்கு மாழ்கும் – பொலன்தொடி 137

போரார வாரப் பொலன்கொடி பெற்றுடைய

போரா மாலைக்கும் பேதுறும் – தேரியல் 138

ஏத்திழை மாதர் எவர்க்கும் பொதுவாய

பூத்துழாய் மாலை புனைக என்னும் – வேந்தன்முன் 139

இவ்வகை அல்லது இலங்கிழையார் மால்கூரும்

அவ்வகை கூரான் அயலொருத்தி – எவ்வுலகும் 140

பெதும்பை[தொகு]

முற்றமுடிக்க முடிக்காம வேள் சூட்டும்

கொற்ற முடியனைய கொண்டையாள் – அற்றைநாள் 141

சாத்தும் அபிடேகத் தாரைபோல் தாழ்கின்ற

கோத்த பருமுத்தக் கோவையாள் – தேத்து 142

விடம்போல் பணிகட்கு வேழங்கட் கெல்லாம்

கடம்போல் கொலையூறும் கண்ணாள் – அடங்கா 143

வயிர்ப்பாள் மறலி மகளுருக்கொல் ஈதென்று

அயிப்பார் அயிர்க்கும் அழகாள் – உயிர்ப்பானை 144

கொல்லிக்கும் உண்டும் உயிருண்மைத்ரி கூடத்துச்

சொல்லிக் கிடக்கும் துணைமணிக்கும் – வல்லி 145

இதற்கு நடைவாய்த்து உயிர்வாய்த்த தென்ன

மதர்க்கும் ஒருதிரு மாது – முதற்கண் 146

பணிவாயில் ஆயம் பரந்தகலக் கிள்ளைக்கு

அணிதாயின் முத்தம் அருளி – மணிவாயால் 147

சொல்லாய் எனக்கு என்னை சொல்லாயோ நாயன்றே

வல்லாய் பிறவறிய சொல்லாவோ – கல்லாணக் 148

கோழித் திருநகரக் கொற்றவற்கு வெற்றிப்போர்

ஆழித் தடக்கை அபயற்கு – வாழியாய் 149

காக்கும் கடலேழும் ஆடும் கடாரமோ

ஆக்கு ந்தியேழும் ஆரமோ – தேக்கிய 150

பண்ணேழுங் கன்னாவ தவகிசமொ பண்டனந்த

மண்ணேழும் வாகு வலயமோ – தண்ணறும் 151

தூவல் நறவம் பொழிலேழும் தொங்கலோ

காவல் மலையேழும் கந்துகமோ – ஏவலால் 152

செய்யு நலனுடைய கோளேழுந் தீபமோ

பெய்யு முகிலேழும் பேரியமோ – வையகம் 153

கூறும் அவையிவை யென்று குறுந்தொடி

வேறு துணிவினவும் வேலைக்கண் – சீறும் 154

ஒருதனடியின் மடிய வுபய

மருது பொருத வயவன் – விருதன் 155

விலையில் அமுத மதன விமலை

முலையின் முழுகு முருகன் – வலைய 156

கனக சயில வெயிலி கணவன்

அனகன் அதுலன் அமலன் – தினகரன் 157

வாசவன் தென்னன் வருணன் அளகேசன்

கேசவன் பூசக்ர கேயூரன் – வாசிகை 158

ஆழிப் பெருமான் அபயன் அனபாயன்

சூழிக் கடாயானை தோன்றுதலும் – தாழாது 159

சென்றாள் திருமுன்பு செந்தளிர்க் கைகுவித்து

நின்றாள் இனிவறிதே நிற்குமே – என்றாலும் 160

கோடு கழல்கண்டல் கொண்டற்கு மாலதி

ஓடு நகாதே யுடையாதே – பீடுற 161

வந்து தொடுங்குன்ற வாடைக்கு இளங்கொன்றை

கொத்து தொடாதே குழையாதே – செந்தமிழ்த் 162

தென்றல் எதிர்கொண்ட தேமாங் கொழுங் கன்று

மன்றல் கமழாதே வாழாதே – என்றுபோய் 163

சூதள வல்ல துணை முலை தூயகண்

காதள வல்ல கடந்தனபோய் – மாதர் 164

உருவத் தனவன்று ஒளியோக்கம் ஆக்கம்

பருவத் தனவன்று பாவம் - தெருவத்து 165

உடைவது உடையாதாம் உள்ளம் உறவோர்த் (து)

அடைவது அடையாதாம் அச்சம் – கடைகடந்து 166

சேயினும் நல்ல பெழமாள் திருத்தடந்தோள்

தோயினும் தோய மனந்துணியும் – ஆயினும் 167

ஏந்து தடந்தோன் இணைப்புக் கண்டிலன்

காத்து தனதடம் கண்டிலன் – பூத்தடம் 168

தேரின் அகலும் திருந்து அல்குல் கண்டிலன்

காரின் நெகிழ்அளகம் கண்டிலன் – மாரவேன் 169

எய்யும் ஒருகருப்பு வல்வில் எடுத்தானோ

கொய்யும் மலரம்பு கோத்தானோ – தையன்மால் 170

மந்தா கினிக்கோன் திருப்புருவ வார்சிலையும்

செந்தா மரைக்கண்டும் செய்ததென் – நொந்தார் 171

வளைந்தளிர் செங்கை மடுத்தெடுத்து வாசக்

கிளைத் தளிர்ப்பாயற் கிடத்தி – துளைத்தொகை 172

ஆய்க்குழல் என்றால் அதுவும் அவனுதும்

வேய்க்குழல் என்று விளம்பியும் – தீக்கோன் 173

நிகழ்நிலா அன்று நிருபகுல துங்கன்

புகழ்நிலா வென்று புகழ்ந்தும் – இகலிய 174

பல்லிய மன்று பரராச கேசரி

வல்லியம் என்று மருட்டியும் – மெல்லிய 175

கல்லார மன்று கதிரோன் திருமருமான்

மெல்லார மென்று விளம்பியும் – நல்லார் 176

அருத்தி அறிவார் அவையிவை யென்று

திருத்தி விடவிடாய் தீர்ந்தாள் – ஒருத்தி 177

மங்கை[தொகு]

உருவ வரிக்க ணொழுக ஒழுகப்

புருவ முடன் போதப் போத – வெருவி 178

வனமுலை விம்மி வளர வளரப்

புனைதோள் புடைபோதப் போத – வினைவர் 179

அருங்கலை அல்குல் அகல அகல

மருங்குபோய்உள்வாங்க வாங்க – நெருங்கு 180

பரவர ராச பயங்கரன்மேல் வேட்கை

வரவர ஆற்றாத மங்கை – பொரவரு 181

தேமிரைக்கும் காலையின் ஞாயிற்றி வஞ்செவ்வி

தாமரைக்கே சாலும் தரத்ததோ – காமர் 182

அமுத மதியத் தலர்நிலா முற்றும்

குமுத நறுமுகைக்கே கூறோ – நமதுகார் 183

கானின் மடமயிற்கே காணியோ கண்ணிள

வேனில் குயிற்கே விதித்ததோ – தேனிமிர் 184

தண்டா மரையாள் தலைவனை யாமும்போய்

கண்டால் என்னும் கடைப்பிடியாள் – பண்டை 185

ஒளியார் அணங்கு ஆகல் தம்மைத்தாம் ஒன்றும்

தெளியாத வாறே தெளிந்தும் – களியன்னம் 186

வாவிக் கரையில் வரநீர் அரமகளிர்

சேவிக்க நின்றாடும் செவ்வியாள் – காவில் 187

புகுதில் வனதெய்வப் பூங்குழை ஆயத்

தொகுதி புடைபரந்து சூழ்வாள் – மிகுதேன் 188

நிரையா வந்தரு செய்குன்ற நீங்கா

வரையர மாதரின் வாய்ப்பாள் – பெருவிலைய 189

முத்தில் விளங்கின் முளரித் தவளப்பூங்

கொத்தின் அணங்கனைய கோலத்தாள் – பத்திய 190

பச்சை மரகதம் பூணிற் பணைமுலைசூழ்

கச்சை நிலமகள்போல் காட்சியாள் – நிச்சம் 191

உரக பணமணிகொண்டு ஒப்பிக்கில் ஒப்பில்

வரகமலை யன்ன வனப்பாள் – நரபதி 192

மைம்முகில் வண்ணத்து வானவன் மீனவன்

கைம்முகில் மேல்வரக் கண்டதற்பின் – மொய்ம்மலர் 193

நீலமே வேய்ந்தெடுக்க நீலமே பூண்டுடுக்க

நீலமே யன்றி நினையாதாள் – நீலமே 194

முன்னுடைய செங்கேழ் எறிக்கும் முறிக்கோலம்

தன்னுடைய மாமை தழீஇக் கொள்ளப் – பின்னர் 195

நெருங்கு கழுநீரும் நீலோற் பலமும்

ஒருங்கு மலர்தட மொத்தும் – மருங்கே 196

இறங்கிய கற்பக வல்லியும் ஏறி

உறங்கிய தும்பியும் ஒத்தும் – பிறங்க 197

வயங்கு தளிரினும் மாங்கொம்பர் பூக்கொண்டு

உயங்கு கருவிளை யொத்தும் – தயங்குவாள் 198

கோலத்தார் மௌலிக் குலோத்துங்க சோழற்கு

ஞாலத்தார் எல்லார்க்கு நாயகற்கு – நீலத்தின் 199

காசும் கலாபமும் மேகலையும் காஞ்சியும்

தூசும் துகிலும் தொடியும்நான் – கூசேன் 200

வெளியே தருவேன் விரையாரத் தொங்கல்

கிளியே தருமேல் நீகேளாய் – அளியேநீ 201

தாதுகடி கமழ் தாதகித் தாமத்தின்

போது கொழுதப் புறப்படாய் – ஓதிமமே 202

எங்கள் பெருமானை இங்கே தரவாநீ

உங்கள் பெருமான் உழைச்செல்லாய் – பைங்கழற்கால் 203

சேயை நினைந்தேகின் நம்முடைய சேக்கையான்

சாயல் மயிலே தலைப்படாய் – பாயும் 204

கடமானே போல்வார்க்கு நீ நின்னைக் காட்டின்

மடமானே தானே வருங்காண் – கடிதென்று 205

கொள்ளைகொள் காமன் கொடும்பகைக்குக் கூசித்தன்

பிள்ளைகளோடு இருந்து பேசுவாள் – உள்ள 206

அலகில் குலநீல ரத்னா பரணம்

விலகி வெயிலை விலக்க – உலகில் 207

பெரிய பெருமான் பெரும்பவனி வீதி

இரிய எதிரேற்று இகழ்ந்தாள் – வரிவளை 208

ஆயத்தார் என்னில் அளியத்தார் எல்லாரும்

நேயத்தார் அல்லரே நிற்பரே – தேயத்தார் 209

மன்னனை அஞ்சாதேவாரணத்தை அஞ்சாதே

மின்னனை யானையும் மிதுரா – முன்னர் 210

கடமாக்குந் தெய்வக் களிறு விரும்பும்

இடமாதும் யாம் என்பார் போலப் – படமாய் 211

இரைப்பச் சுரும்போடு இருள் அளக பாரம்

நிரைத்து வனமாகி நிற்பார் – விரைப்பூண் 212

முலையாய் வளரும் முரண்குவடு கொண்டு

மலையாய் நெருங்க வருவார் – தொலையாத 213

பாய பருமுத்தின் மாலைபல தூக்கித்

தூய அருவியாய்த் தோன்றுவார் – சாயல் 214

கொடியாய் அடிசுற்றிக் கொள்வார் புரக்கும்

பிடியாய் நறுந்துகள் பெய்வார் – விடுதுமோ 215

யாழாய் மிடற்றால் வணக்குதும் யாமென்பார்

தோழாய் வளைத்தெங்கும் சூழ்போவார் – ஆழிக்கைத் 216

தியாகனை மானதனைத் திக்கானை எட்டுக்கும்

பாகனையே பின்சென்று பற்றுவார் - தோகையர் 217

நற்றுகில் கொண்ட நறுந்துழாய் மார்பாதின்

போற்றுகில் தந்தருளிப் போதென்பார் – மற்றிவள் 218

தன்சங்கம் கொண்ட தடந்தா மலைக்கண்ணா

நின்சங்கம் தந்தருள்க நீயென்பார் – மின்கொள்ளும் 219

இன்துயிற் கெல்லாம் எறிபாற் கடல்கொள்ளும்

நின்துயில் தந்தருள் நீ என்பார் – என்றென்று 220

மானும் மயிலும் அனையார் வளைத்துளைப்பத்

தானும் களிறும் தடையுண்ட – கோனும் 221

தடுத்த கொடிக்குச் சதமடங்கு வேட்கை

அடுத்த திருநோக்கு அருளாக் – கொடுத்த 222

திருநகை மூரல் திகழ்ந்தான் அணங்கும்

ஒருநகை கூர்ந்தொருவாறு உய்ந்தாள் – பெருநகை 223

எய்தி அணங்கன் எழப்போனான் மாதரும்

உய்து சிறந்தாள் உழைச்சென்றார் – நொய்தில் 224

தொடுக்கும் புறஞ்சொல் தொடாமே முலைமீது

அடுக்கும் பசலை அடாமே – உடுக்கும் 225

துகிலும் சரியாமே சுற்றத்தார் எல்லாம்

புகிலும் புகாமே பொராமே – அகில்நாறும் 226

பள்ளியில் செல்லாள் பருவ முருகன்தோய்

வள்ளியில் சால வயங்கினாள் – ஒள்ளிழை 227

மடந்தை[தொகு]

பின்னர் ஒருத்தி பெருமைக்கு அரமகளிர்

முன்னர் உரைக்கும் முதன்மையான் – சென்னியில் 228

வண்ட லிடுநாவி வார்குழற்கு மாறுடைந்து

கொண்டல் சொரிமுத்தின் கொண்டையும் – பண்டுவந் 229

நேற்றுப் பணைபணைக்கும் மென்தோள் இரண்டுக்கும்

தோற்றுச் சொரிமுத்தின் சூழ்நொடியும் – ஆற்றல் 230

கலம்புரி செல்வக் கழுத்திற்குத் தோற்ற

வலம்புரி முத்தின் வடமும் – பொலம்பூண் 231

எதிர்க்கு முலைக்கு இரிந்த திக்கயக் கோடிட்ட

கதிர்க்கு நகைமுத்தின் கச்சும் – அதிர்க்கும் 232

அடல்விடும் அல்குல் பரவைக்கு உடைந்து

கடல்விடும் முத்தின் கலையும் – உடலீமேல் 233

ஏந்தும்இளைய இளநிலா விட்டெறிப்பப்

போந்து மறுகு புகுந்தொழந்தாள் – வேந்தனும் 234

சட்கோடி மாணிக்க மொன்றும் சமந்தகமும்

உட்கோடு கேயூரத் தூடெறிப்பக் – கொட்கும் 235

கடல்சேப்ப வந்தகவுத்துவம் ஒன்றும்

அடல்சேக்கு மார்பிற்கு அமைய – உடலி 236

அனந்த பணாமவுலி ஆயிரமும் ஒற்றை

தனந்தலை மௌலிக்கு நாண – இனங்கொள் 237

முறுகு கதிரின் முகத்திரிய வேற்று

மறுகு திருமலர வந்தான் குறுகும் 238

நடையாய் வெள்ளமும் நாணிரம்பு திங்கட்

குடையாய் வெள்ளமும் கூடி – அடைய 239

மதியுதய மென்று வணங்க வசை

பதியுதய மென்று பணிய – துதியில் 240

ஒருவரும் ஒவ்வா வுருவமிக் கூறும்

இருவரும் எய்திய எல்லைத் – தெருவில் 241

நெருங்க மகளிர் நிறந்திறக்க வெய்து

மருங்கு வருகின்ற மாரன் – திருந்திய 242

பாய பகட்டல்குல் பாரா அதன்பரப்பில்

போய மருங்குல் புறநோக்கார் – சாயா 243

முலையின் கதிர்ப்பு முருகு கெழுதோள்

நிலையின் பணைப்பு நிணையாக் – கொலையால் 244

உடைக்கும் உலகடைய ஊடாடு கண்ணின்

கடைக்கு முடிவின்மை காணாக் – கிடைக்கும் 245

பருவக்கொடி வதனப் பங்கேருகத்தின்

புருவக்கொடி முடியப் போகா – உருவக் 246

களிக்கும் புடவி சதகோடி கற்பம்

அளிக்கும் பெருமானை அஞ்சா – குளிர்க்கும் 247

கடுங்கால் கொடுந்தேரை முட்டக் கடாவிக்

கொடுங்காற் சிலையைக் குனித்து – நடுங்கா 248

முகுந்தன் இவனென்று முன்பெய்த வேவிற்

புகுந்த திதுவென்று போனான் – திகந்த 249

முழுதாள் அபயனை முகிழ்நகையும் தோளும்

தொழுதாள் ஒருதானே தோற்றாள் – அழுதாள் 250

திரிந்தாள் கலைநிலையும் செம்பொன் துகிலும்

சரிந்தாள் துணைவியர்மேல் சாய்ந்தாள் – பரிந்தார் 251

முடைக்கை எதிர்க்குரவை கோத்தாய் முரல்யாழ்

நடைக்கை தொடுக்கை நகையோ – விடைப்பேர் 252

இனந்தழுவிப் பின்னையைக் கொள்வாய் இவளைத்

தனந்தழுவிக் கொள்கை தவறோ – அனந்தம் 253

கருந்துகில்அக் கோவியரைக் கொள்வாய் கமலை

தருந்துகில்நோக்கத் தகாதோ – விருந்து 254

துளவ முகிற்கிது வந்தது தூய

வளவர் திருக்குலத்து வந்தோ – அளவிறந்த 255

வன்கண் இவள் அளவும் கண்டே மடவரல்

புன்கண் அடியேம் பொறேமென்று – மின்கண் 256

இவை இவை சொல்லிப் போயின்னமளி யேற்றிக்

கவிரிதழ் பின்னுங் கலங்கத் – துவரின் 257

வியக்கும் துகிரியைய மேம்பட்டுலகை

மயக்கும் திருவாய் மலர்க்கும் – நயக்கும் 258

பொருப்புருவத் தோளின் புதுமைக்கு நேரே

திருப்புருவம் செய்த செயற்கும் – பரப்படையச் 259

செங்கேழ் எறித்து மறிக்கும் திருநயனம்

பங்கேருகம்சூழ் படுகொலைக்கும் – அங்கே 260

தரிக்குமே தென்றலும் சந்த்ரோ தயமும்

பரிக்குமே கண்கள் படுமே – புரிக்குழலார் 261

பாலிருத்தி மம்மர் படப்படப் – பையப்போய்

மாலிருத்தி யுள்ள மயங்கினாள் - மேலொருத்தி 262

அரிவை[தொகு]

நாளை அரவிந்தச் சாதி தலைவணங்கத்

தோளை உரகர் தொழவிருப்பாள் – நாளை 263

வளவர் பெருமான் வரும்பவனி என்று

கிளவி விறலியர்வாய்க் கேட்டாள் – அளவுடைத் 264

தோரிரா வன்றுஅம்ம இவ்விரா ஓதிமத்தோன்

பேரிரா என்று பிணங்கினாள் – பேரிரா 265

என்று விடியுங் கொல்என்றாள் விடிவளவும்

நின்றுசுடுங்கொல் நிலவென்றாள் – நின்றார் 266

அடுத்தடுத்து ஏந்திய திவ்யா பரணம்

எடுத்தெடுத்து ஒப்பித்து எழுந்து – சுடர்க்கதிரோன் 267

மாலைப் பகைவியைப் போக்கி வருவித்த

காலைத் துணைவியைக் கண்டெழுந்தாள் – காலையோன் 268

சேமித்த பூங்கோயில் எல்லாம் திருவென்று

காமித் திதழின் கடைதிறப்ப – நேமி 269

மணக்கத் துணையன்றில் வாயலகு வாங்கித்

தணக்கக் கடிகாவில் சார்ந்தாள் – கணக்கதிர் 270

வந்து பொருவதொரு மாணிக்கச் செய்குன்றில்

இந்து சிலாதலத்தில் ஏறினாள் – குந்திக் 271

கடப்பன கன்னிமா னோக்கியும்அன்னம்

நடப்பன பார்த்து நயந்தும் – தொடக்கிக் 272

களிக்கு மயிற்குலம் கூத்தாடக் கண்டும்

கிளிக்குலம் பாட்டெடுப்பக் கேட்டும் – பளிக்குருவப் 273

பாவை மணக்கோலம் பார்த்தும் பலநகை

பூவைபகரப் புறஞ்சாய்த்தும் – கோவை 274

அளிக்களி யாட்டம் அயர்ந்தும் கபோத

விளிக்களி கூர்ந்து வியந்தும் – களிக்கப் 275

பழிச்சி வணங்கிப் பெருமாள் பவனி

எழுச்சி முரசோர்ந் திருந்தாள் – கழற்செழியர் 276

தென்சங்கம் கொண்டான் திருச்சங்கம் செய்குன்றில்

தன்சங்க மாகி எதிர்தழங்க – மின்சங்கம் செய்குன்றில் 277

போல விழுந்தும் எழுந்தும் புடையாயம்

கோல மறுகு குறுகுவாள் – ஞாலம் 278

எடுக்கும் பணிமன்னன் மின்னென் றிறைஞ்சிக்

கொடுக்கும் சுடிகைக் குதம்பை – கடுக்கும் 279

மயில்கொண்டும் சாயல் வதனாம் புயத்து

வெயில் வேண்ட வேண்டி விளைப்ப – பயில்கதிர் 280

வெல்லாது தோட்சுடிகை மேகா கைவிருள்மேல்

எல்லாப் பருதியும் போலெறிப்ப –கொல்குலத்து 281

வீழ்சோதி சூழ்கச்சு மேரு கிரிச்சிகரம்

சூழ்சோதி சக்ரம் தொலைவிப்ப – கேழொளிய 282

பைம்பொற் கடிதடம்சூழ் மேகலை பார்சூழ்ந்த

செம்பொன் திகிரி யெனத்திகழ – அம்பொன் 283

புறவும் சகோரமும் பூவையும் மானும்

பிறவும் இனமென்று பெட்ப – உறவாய் 284

அடர்ந்த பொலன்கேழ் அடிச்சிலம்புகன்னம்

தொடர்ந்து மறுமாற்றம் சொல்ல – நடந்துபோய் 285

மானவற்குப் புக்கதுறை வல்லவற்கு வில்லவற்கு

மீனவற்குச் சென்று வெளிப்பட்டாள் – தானே 286

அலரு முகமும் குவிகையு மாகி

மலரு முகுளமு மானப் – பலர்காணத் 287

தேனும் அமுதும் கலந்தனைய தீங்கிளவி

மானு மடைய மனங்கொடுத்தாள் – கோனும் 288

தடாதே தடுத்தானைத் தன்கடைக்கண் சாத்தி

விடாதே களிறகல விட்டான் – படாமுலைமேல் 289

ஒத்திலங்கு வேர்வந்து உறைப்ப நறைக்கழுத்து

நித்திலங்கால் சங்க நீதி நிகர்த்தாள் – எத்திசையும் 290

சோர்கின்ற சூழ்தொடிக்கைச் செம்பொன் தொடிவலயம்

தேர்கின்ற பற்ப நிதி நிகர்த்தாள் – தேரின் 291

அரிவை துகில்நெகிழ அல்குல் அரவின்

உரிவை விடும்படமும் ஒத்தாள் – சொரிதளிர் 292

மாங்கொம்பர் என்ன வருவாள் கரமரப்

பூங்கொம்பர் என்னப் புறங்கொடுத்தாள் – பாங்கியரும் 293

ஒற்றை யுடைவாள் ஒருபுடையாள் கொற்றவையேல்

மற்றை அருகிவளை வைத்திலனே – பெற்றுடைய 294

வாரத் தரணியாள் வாழ்தோள் எதிர்மற்றை

ஆரத் திருத்தோள் அளித்திலனே – தேரொத்த 295

பூந்தா மரையாள் எதிரே இப் பெற்றொடிக்கும்

ஏந்தார மார்ப மிசைத்திலனே – வேந்தர்கோள் 296

அன்னங்காள் நீர்சென்று அரற்றிர் சுபோதங்காள்

இன்னம் அபயம்புக்கு எய்திடீர் – நன்னுதல் 297

பாவைகாள் கொல்யானை பாவடிக் கீழ்ப்பணியீர்

பூவைகாள் செங்கோனமை போற்றிசெய்யீர் - தாவிப்போய் 298

பேதை மடமான் பிணைகாள் வளைத்துளையீர்

கோதை மதுகரங்காள் கூப்பிடீர் – யாதெல்லை 299

என்னா இதற்குஎன்று இரங்கி இலங்கிழை

தன்னார்வ மாற்றெதிர் சாற்றினார். பின்னர் 300

தெரிவை[தொகு]

பொருவில் ஒருத்தி புறங்காக்கு மாதர்

இருவில் இடைநின்று இறைஞ்சித் – திருவுலாப் 301

போதும் பெருமாள் புகுதும் அளவும் இங்கு

யாதும் பயிலா திருத்துமோ – சூதாடேம் 302

பந்தாடுதும் நாம் பசுபொற் குழைசென்று

வந்தாடும் கண்ணாய் வருக என்று – சந்தாடும் 303

கொம்மை வருமுலையும் தோளும் குறியாதே

அம்மென் மருங்குல்பார்த்து அஞ்சாதே – தம்முடனே 304

கொண்டார் அருகிருந்த பாணரும் கோடியரும்

கண்டார் எவரும் கடுகினார் – மண்டி 305

எடுத்தார் எடுத்தன யாவும் எவரும்

கொடுத்தார் ஒருதானே கொண்டான் – அடுத்தடுத்து 306

முன்னம் எறிபாந்தின் மும்மடங்கு நான்மடங்கு

இன்னம் எறிய வருக என்றாள் – அன்னம் 307

அடியும் இருகையும் அம்புயம் என்று

படியும் ஒழுங்கில் பயில – முடியும் 308

தொடையிடை போய சுழல்கூந்தல் பந்தர்க்(கு)

இடைநடை நின்றகால் ஏய்ப்ப – அடைய 309

விழுந்தன பார்கடவா வாறுபோன் மேற்போய்

எழுந்தன கைகடவா என்னக் – கொழுந்தளிரால் 310

ஏற்றுதி விண்கொளா அம்மனை எம்மனை

ஆற்றுதி யீதிங்கு அரிதென்னப் – போற்றரும் 311

கையோ பதயுகமோ கண்ணா கடுகினவை

ஐயோ அறிதல் அரிதென்னப் – பொய்யோ 312

திலக நுதலில் திருவே என் றோதி

உலகு வியப்பவென் றோத – அலகிறந்த 313

பந்தாட் டயர்ந்து பணைமுலையார் பாராட்ட

வந்தாட்டு நீராட்டு மண்டபத்து – விந்தை 314

பெருமான் அனபாயன் பெரிய மூன்றும்

தருமார வாரந் தழங்க – ஒருமாதர் 315

ஏந்து துகில் ஒன்று உடுத்தாளோ இல்லையோ

போந்து மறுகு புகுந்தொழிந்தாள் – மாந்தளிரும் 316

தாதும் தமனிய மாலையும் தண்கழுநீர்ப்

போதும் பிறவும் புறம்புதையா – ஓதிக்குச் 317

சென்னி யமுனைத் தரங்கமும் தீம்புனல்

பொன்னி அறலும் புறங்கொடுப்பப் – பின்னர் 318

ஒழுங்காய சேயரிக்கண் ணூடொட்டு மையால்

மழுங்காது கைபோய் மதர்ப்பச் – செழுங்கழுத்து 319

ஒன்று புனைந்த தொருசங்க மாணிக்கம்

இன்று பயந்த தெனவிளங்க – நின்றிலங்கும் 320

உச்சக் கலன்அணியாத் தோளினைக் கோரிரண்டு

பச்சைப் பசுங்காம்பு பாடழிய – நிச்சம் 321

அசும்பு பொலன்கச்சின் அற்றத்தே கொங்கை

விசும்பு குடிவாங்க வீங்கப் – பசுஞ்சுடர்க் 322

கோல வயிறுஉதர பந்தனக் கோள்நீங்கி

ஆலின் வளர்தளிரி னைதாகி – மேலோர் 323

இழியும் ஒருசாம ரேகையு முந்திச்

சுழியும் வெளிவந்து தோன்றக் – கெழிய 324

இசையின் கலாபாரம் யாப்புறா அல்குல்

திசையின் புடையடையச் செல்ல – மிசையே 325

பொறைபுரி கிம்புரி பூட்டாத் துடைதூ(சு)

உறையும் மரகதம் ஒப்ப – அறையும் 326

சிலம்பு சுமவாத செந்தா மரைபோய்

உலம்பு குரலஞ்சா தோடக் – கலம்பல 327

தாங்கி உலகம் தரிப்பத் தரியென்று

பாங்கியர் எம்மருங்கும் பாராட்டப் – பூங்கேழ் 328

உருவிலொளிபோய் உலகடையக் கோப்பத்

தெருவில் எதிர்கொண்டு சென்றாள் – பெருமாளும் 329

கொற்றக் குடைக்கீழ் வடமேருக் குன்றனைய

வெற்றிக் களியானை மேல்வந்தான் – பற்றி 330

இருவரும் தம்மில் எதிரெதிர் நோக்க

ஒருவர் எனவேட்கை ஒத்தார் – குருசில் 331

மறந்த கடல்கடைய வந்தாள்மேல் அன்பு

சிறந்த திருவுள்ளம் செல்லச் – சிறந்தவள் 332

ஆகம் நாகத்திருந்தாள் ஆகத் துருவுள்ளம்

கோக னகத்தில் கொடுசென்றான் – நாகிள 333

நவ்வி மடநோக்கான் ஞாலத்தை யோரடியால்

வவ்வி இருதோளில் வைத்தமால் – செவ்வி 334

முருகு கமழ முகந்து முகந்து

பருகு மடமகளைப் பாரா – அருகு 335

மடுத்து முயங்கி மயங்கிய தாயர்

எடுத்து மலரணைமேல் இட்டார் – அடுத்தொருவர் 336

கொய்யாத கற்பகப் பூமாலை கொண்டைக்கும்

நெய்யாத பொன்துகில் நீவிக்கும் – செய்யாத 337

தொங்கல் துளைக்கோவை அல்குற்கும் சூழ்கனகத்

துங்கப் பணிவலையம் தோளுக்கும் – கொங்கைக்கும் 338

பொன்னிப் புகாரில் பொலன்குழம்பும் வல்லத்திற்

கன்னிப் பனந்தோடு காதிற்கும் – சென்னி 339

அளிப்பக் கொணர்ந்தனம்யாம் அன்னமே என்று

தெளிப்பச் சிறிதே தெளிந்தாள் - கிளிக்கிளவி 340

பேரிளம் பெண்[தொகு]

மற்றொருத்தி செந்தா மரைமலர் என்னுடனே

செற்றொருத்தி வாழும்எனச் செறுவாள் – சுற்றவும் 341

தெட்டுத் தசும்பு அசும்பு தெங்கிள் இறம்பாளை

மட்டுத் தமனிய வள்ளத்து – விட்டு 142

மறித்து வயிர மடலொன்றின் வாக்கித்

தெறித்து ஞமிறொப்பிச் செவ்வி – குறித்துக்கொண்டு 343

ஏந்தி முகமன் இயம்பி இருந்தொரு

காந்தி மதிவதனி கைக்கொடுப்ப –மாந்தி 344

குதலை குழறிக் குயிற்கும் கிளிக்கும்

விதலை உலகில் விளைத்து – நுதலை 345

வியரா அலங்கரியா வேந்தன் கொடுமை

அயரா வெளிவிடா அஞ்சாப் – பெயரா 346

அருகிருந்த பாணனை நோக்க அவனும்

குருசில் வருதமரம் கூறப் – பரிபுரக் 347

காலும் நிதம்பமும் கையும் திருக்கழுத்தும்

கோலும் மதாணிக் குலமெல்லாம் – மேலோன் 348

குரகநம் ஏழும் முழுகிக் குளிப்ப

மரகதச் சோதி வயங்கப் – புருவ 349

இடைபோய்க் குமிழின் மலர்வந்திறங்கப்

புடைபோய்க் கருவிளை பூப்ப – விடையாக 350

ஏக முருக்கு மலர இளம்பாளைப்

பூக மிடறு வரப்போதிய – போகப் 351

பெரும்பெரும் தெங்கிளநீர் தாழ்ந்து பிறங்கப்

பழம்பெருங் காம்பு பணைப்ப – விரும்பிய 352

நறுந்துணர் மாந்தளிர் வார்ந்து நலியக்

குறுந்தொடிக் காத்தள் குலைப்பச் – செறிந்து 353

சலித்துத் தளியிள வஞ்சி தளரக்

கலித்துக் கதலி கவின – ஒலித்தே 354

அளிக்கும் சகோரமும் அன்னமும் மானும்

களிக்கும் மயீர கணமும் – விளிக்கும் 355

புறவும் தொடர்ந்துடனே போத வலையே

பிறவும் இனமென்று பெட்பச் – சுறவுயர்ந்தோன் 356

காலை புகுந்து கரப்ப தொருபசும்பொன்

சோலை எனவந்து தோன்றினான் – ஞாலத்தோர் 357

தெய்வப் பெருமாளும் சேவடி முன்குவித்துக்

கைவைத்து நின்றிவளைக் கண்ணுற்றான் – தையல் 358

வெருவமுன் சூர்தடிந்த வேளே நயக்கும்

பருவமும் மார்பில் பணைப்பும் – புருவமும் 359

செந்தா மரைக்கண்ணும் மாமேரு வைச்சிறிய

பந்தாகக் கொள்ளும் பணைந்தோளும் – உந்தியும் 360

உய்ய இருகாதும் மூக்கும் உடுபதியை

நைய எறிக்கும் நகைநிலவும் – செய்ய 361

பவளத் துவர்வாயும் பாதாம் புயமும்

கவளக் களிற்றெளிதில் கண்டு – குவளைக் 362

கருநெடுங் கண்களிப்ப உள்ளம் களிப்ப

பருநெடுந் தோளும் பணைப்ப – ஒருநின் 363

சிலமுபுகளோர் ஏழும் சென்றடைந்து நோலேன்

அலம்பு கடலேழும் ஆடேன் – வலம்புவனம் 364

ஏழும் செலவயரேன் எங்கோவே நின்குடைக்கீழ்

வாழும் திருவெனக்கு வாய்க்குமே – தாழி 365

முடைதழுவும் தோளும் முலையும் தழுவ

விடைதழுவு தாமரைக்கை வீரா – கடகரியைக் 366

கைகழுவி கோரத்தைக் கால்தழுவி நின்புலியை

மெய்தழுவிக் கொள்ள விடுவாயோ – மொய்திரைசூழ் 367

ஞாலம் மறிக்கவும் நாயக நின்புகல்வில்

கால் உததி கலக்கவும் சால 368

வருந்தா வகைவருந்த வாழி பெயரும்

பெருந்தேவி யார்க்குப் பெறலாம் – திருந்திய 369

குந்தம் ஒசித்ததுவும் கொற்றத் திருத்தோளால்

வந்த விடையேழு மாய்த்ததுவும் – முந்துறக் 370

கோவிய மாதர்க்கே உள்ளம் குறைகிடந்த

ஆவியே மாதாக அஞ்சுகமே – ஓவிய 371

சேரன் சிலையினும் சீரிதே சென்றொசிய

மாரன் சிலையை வணக்காயால் – சேரன்தன் 372

முன்றில் பனைதடிந்தாய் முட்டா திரவொறுக்கும்

அன்றில் பனைதடிதல் ஆகாதோ – கன்றி 373

மலைக்கும் செழியர் படைக்கடலை மாய்த்தாய்

அலைக்கும் கடல்மாய்த்து அருளாய் – மலைத்தவம் 374

தங்கள் புகழ்நிலவை மாய்த்தாய் அரிமரபில்

திங்களின் தண்ணிலவு தீராயால் – பொங்கொலிநீர்த் 375

தெம்முனை யாழ்தடிந்தாய் எங்கள் செவிகவரும்

எம்முனை யாழ்தடிந்தால் என்செய்யும் – செம்மணியின் 376

செஞ்சோதி சிங்களத்து மாற்றுவாய் செக்கரின்

வெஞ்சோதி கண்டால் விலக்காயால் – வெஞ்சமத்துக் 377

காதி விடைபண்டு காடவன் முன்தடிந்தாய்

வீதி விடைதடிய வேண்டாவோ – யாது கொல் 378

வன்பல் லவந்துகைத்த வாட்டானை யின்றிந்த

மென்பல் லவந்துகையாய் மேம்பாடு – தன்பூங் 379

கருப்புச் சிலைகொண்டு மோதும் கழுத்தில்

சுருப்பு நாண்புக்கழுத்தத் தூக்கும் – நெரும்புமிழ் 380

அப்புக் கழுவேற்று மாறாப் பெருங்கோப

வெப்புப் படுத்தெங்கண் மெய்யுருக்கும் – தப்பா 381

உடல்பிள வோட வொருதேரிட் டூரும்

அடல்மகர போசன மாக்கும் – விடுதூதால் 382

அக்கால தண்டம் அகற்றி உலகளித்தாய்

இக்காம தண்டம் எளிதன்றே – மைக்கோல 383

வண்ணா வளர்ந்த மகரா லயமறந்த

கண்ணா அநங்கன்போர் காவாயேல் – மண்ணுலகில் 384

எப்படி யாவர் இளம்பிடியார் என்று என்று

மைப்படியும் கண்ணாள் வருந்தினாள் – இப்படியே 385

தையலார் பொன்தோகைச் சாயலார் கையகலா

மையலார் போராய் மன்றுஏற – வையம் 386

பெருங்குடையா நீரேழும் பாரேழும் பேணும்

ஒருகுடையான் போந்தான் உலா 387

குலோத்துங்கச் சோழன் உலா முற்றும்