சிவவாக்கியார்

விக்கிமூலம் இலிருந்து

சிவ வாக்கியார் பாடல்களில் புரட்சிகரமான சிந்தனைகள் பல நிறைந்துள்ளன. உருவ வழிபாடு தல யாத்திரை மத வாதம் வேதம் ஓதல் சாதி யாசாரம் முதலானவற்றை எதிர்த்து ஒன்றே குலம் ஒருவனே தேவன் உள்ளமே கோயில் என்னும் கொள்கையை அவர் உலகிற்கு உணர்த்துகிறார்.

  • பக்கம் 114 - 178

10 வரை[தொகு]

காப்பு[தொகு]

அரியதோர் நமச்சிவாயம் ஆதியந்தம் ஆனதும்

ஆறிரண்டு நூறுதேவர் அன்றுரைத்த மந்திரம்

சுரியதோர் எழுத்தை உன்னி சொல்லுவேன் சிவவாக்கியம்

தோச தோச பாவமாயை தூர தூர ஓடவே

கரியதோர் முகத்தையுற்ற கற்பகத்தைக் கைதொழக்

கலைகள் நூற் கண் ஞானமும் கருத்தில் வந்துதிக்கவே

பெரியபேர்கள் சிறிய பேர்கள் கற்றுணர்ந்த பேரெலாம்

பேயனாகி ஓதிடும் பிழை பொறுக்க வேண்டுமே (1)
மிகவும் அரியதான நவசிவாய என்ற அஞ்செழுத்தே ஆதியும் அந்தமும் ஆகி உள்ளது. எண்சான் உடம்பைப் பெற்ற அறிய பிறவியை அடைந்த மனிதர்களும் முப்பத்து முக்கோடி தேவர்களும் அன்றும் இன்றும் ஓதி வருவதும் அனைவருக்கும் எடுத்துரைத்த மந்திரம் 'ஓம் நமசிவாய' என்பதே. அதுவே அனைத்தும் அடங்கிய ஒரெழுத்தானதையும் என் உயிரில் வாலையாக  விளங்குவதையும் உணர்ந்து அந்த ஓரெழுத்தை தியானித்து அதன் உள்ளிருக்கும் சிவனை அறிந்து இதனை அனைவரும் தெரிந்து கொள்ளவேண்டும் என்றே ஈசனை தியானித்து இந்த சிவ வாக்கியம் என்ற நூலைச் சொல்லுகின்றேன். இதனைப் படித்து உணர்பவர்களுக்கு எல்லா தோஷங்களும், பற்றிய பாவ வினைகளும், தொடரும் மாயைகள் யாவும் விலகி தானே வெகு தூரம் ஓடிவிடும். "கரியதோர் முகத்தையுற்ற கற்பகம்" இது உபதேசத்தினால் உணர்ந்து கொள்ள வேண்டிய மெய்ப்பொருள். இந்த ஒரு பொருளை உலகோர் உணர்வதற்கே இந்த சிவவாக்கியம் முழுவதும் சொல்லி இருக்கின்றார் சிவவாக்கியர். கரிய நிறமுடைய தும்பிக்கையை முகத்தில் உடையவரும் கேட்ட வரங்கள யாவையும் கற்பகத்தருவை போல் வழங்கும் கருணை உடையவரான கணபதியை கைகள் தொழுது வேண்டுகின்றேன். ஆய கலைகள் அறுபத்தி நான்கும், வேத ஆகம புராண சாஸ்திர நூல்களில் உள்ள உண்மைகளும், முக்கண் ஞான அறிவும் என் கருத்தில் தோன்றி இந்நூலில் உதிக்க வேண்டும். அறிஞர் பெருமக்களும், வயதில் சிறியவராயினும் ஞானம் பெற்றவர்களும், யோக ஞானம் அனைத்தையும் கற்று உணர்ந்தவர்களும் மற்றும் யாவரும் பேயனாகிய யான் சொல்லுகின்ற சிவ வாக்கியத்தில் உள்ள தவறுகளை பொறுத்து அருள வேண்டும்.

அக்ஷர நிலை[தொகு]

ஆன அஞ் செழுத்துளே அண்டமும் அகண்டமும்
ஆன அஞ் செழுத்துளே ஆதியான மூவரும்
ஆன அஞ் செழுத்துளே அகாரமும் மகாரமும்
ஆன அஞ் செழுத்துளே அடங்கலாவ லுற்றவே (2)

நமசிவய என்ற அஞ்செழுத்துக்குள்ளே அண்டமாகிய இவ்வுலகமும் அகண்டமாகிய  ஆகாய வெளியும் அமைந்துள்ளது. ஆதி பராசக்தியினால் ஆன அஞ்செழுத்தே ஆதியாகி, அதிலேயே பிரம்மா, விஷ்ணு, சிவன் என்ற மும்மூர்த்திகளும்  அமர்ந்திருக்கின்றனர். அந்த அஞ்செழுத்தின் உள்ளேயே அகாரமாகவும் மகாரமாகவும், அறிவும் மனமும், ஒளியும் இருளும், இறையும் மாயையுமாய் அமைந்துள்ளது. ஆதலின் இந்த அஞ்செழுத்தை அறிந்துணர்ந்து ஓதுங்கள். இந்த அஞ்செழுத்துக்குள் தான்  அனைத்து தத்துவங்களும் அடங்கி அது நமக்குள்ளேயே பஞ்சாட்சரமாகி உற்ற பொருளாய் உட்கலந்து இருக்கின்றது.

சரியை விலக்கல்[தொகு]

ஓடி ஓடி ஓடி ஓடி உட்கலந்த சோதியை
நாடி நாடி நாடி நாடி நாட்களும் கழிந்து போய்
வாடி வாடி வாடி வாடி மாண்டுபோன மாந்தர்கள்
கோடி கோடி கோடி கோடி எண்ணிறந்த கோடியே (3)

அருட்பெருஞ் சோதியான ஆண்டவனாகிய ஈசனை அங்கும் இங்கும் ஓடி ஓடி தேடுகின்றீர்கள். அவன் உங்கள் உடம்பின் உள்ளே கலந்து சோதியாக ஓடி உலாவுவதைக் காணாது, அவனையே நாடி பற்பல இடங்களுக்கும் ஓடி ஓடி தேடியும் அலைந்தும் காண முடியாமல் உங்கள் ஆயுள் நாட்கள் கழிந்து போய் கொண்டிருக்கிறது. அவனை ஞான நாட்டத்துடன் நாடி அச்சோதியாகிய ஈசன் நம் உடலிலேயே உட்கலந்து நிற்பதை, மாண்டு போகும் மனிதர்கள் எண்ணற்ற கோடி பெறற்கரிய இம் மானிடப் பிறவியை பெற்ற இவர்கள் என்றுதான் சோதியாக இறைவன் தம்முள்ளே கலந்து நிற்பதை உணர்ந்து கொள்வார்களோ? தம்முளே உறையும் உயிரை அறியாமல் அவ்வுயிரை ஈசனிடம் சேர்த்து பிறவா நிலை பெற முயலாமல் அவனை அகிலமெங்கும் தேடி ஓடி நாடி வாடி இறந்து போகின்றனரே.

யோக நிலை[தொகு]

உருத்தரித்த நாடியில் ஒடுங்குகின்ற வாயுவைக்
கருத்தினால் இருத்தியே கபாலம் ஏற்ற வல்லிரேல்
விருத்தரும் பாலராவர் மேனியும் சிவந்திடும்
அருள் தரித்த நாதர் பாதம் அம்மைபாதம் உண்மையே (4)

நம் உடம்பில் சுழுமுனை நாடியில் மூலாதாரத்தில் தனஞ்செயன் எனும் பத்தாவது வாய்வு ஒடுங்கி பாம்பைப் போல் சுருண்டு உறங்கிக் கொண்டிருக்கின்றது. இதையே யோகிகள் குண்டலினி சக்தி என்பர். தாயின்  கர்ப்பத்திலிருந்து முழு உருவமாய் வெளிவரும் பொது தனஞ்செயன் என்ற இக்காற்றின் செயலால் தான் பிண்டம் பிறக்கின்றது. . அதன் பிறகு எச்செயலும் இன்றி மூலாதாரத்திலேயே ஒடுங்கி உள்ளது. உயிர் உடம்பை விட்டு போன பிறகு மூன்று நாட்கள் இருந்து இவ்வுடம்பை அழுகச் செய்தபின் கபாலத்தைப் பிளந்து வெளியேறும். ஆதலால் இதனை நன்குஅறிந்து வாசியோகம் எனும் யோக தந்திரத்தால் கருத்தோடு இருத்தி அதனை எழுப்பி சுழுமுனையினால் முதுகுத் தண்டின் வழியாக மேலே ஏற்றி கபாலம் எனும் உச்சியில் உள்ள சகஸ்ரதளத்தில் கொண்டு சேர்த்து தியானம் செய்து வரவேண்டும். .இதனை முழுமுயற்சியுடன் பயிற்சி செய்து தொடர்ச்சியாக தியானத்தில் இருந்து வருபவர்கள் கிழவனாக இருந்தாலும் இளமை பெற்று மெய்பரவசத்தால் குழந்தையைப் போல் மாறுவர். அவர்கள் உடல் பொன் நிறமாக மாறும். இந்த யோக தந்திரத்தை முறையாக அனுசரித்து செய்து வந்தால் இறையருள் கிடைக்கப் பெற்று இன்புறலாம். . நம் உடம்பிலேயே சிவசக்தி திருவடியான் பாதம் மெய்ப்பொருள் என்பதுவே உண்மை.

தேக நிலை[தொகு]

வடிவுகண்டு கொண்ட பெண்ணை மற்றொருவன் நத்தினால்
விடுவனோ அவனை முன்னர் வெட்ட வேண்டும் என்பனே
நடுவன் வந்து அழைத்தபோது நாறும் இந்த நல்லுடல்
சுடலை மட்டும் கொண்டு போய்த் தோட்டிகைக் கொடுப்பரே (5)

அழகிய பெண்ணைக் கண்டு மணமுடித்துக் கொண்டவன் அப்பெண்ணை வேறு ஒருவன் தொட்டு விட்டால், விடாதே அவனைப் பிடித்துக் கட்டுங்கள்.   முதலில் அவனை வெட்டவேண்டும் என்று அரிவாளை எடுப்பான். அந்த அழகிய பெண்ணை விதிவசத்தால் எமன் வந்து உயிரை எடுத்துப் போய்விட்டால் என்ன செய்வாய்? மிக அழகிய பெண்ணாயிற்றே என்று அந்தப் பிணத்தை அப்படியே வைத்திருக்க முடியுமா?  அவ்வுடம்பில் பிணவாடை வீசி நாற்றமடிக்குமல்லவா. ஆகவே அதனை அந்த அழகிய உடம்பை, சுடுகாட்டிற்கு எடுத்துச் சென்று தோட்டியின் கையில் கொடுத்து அவன், அந்த தோட்டி, அவ்வுடலை தொட்டுத் தூக்கி எரிக்கவோ, புதைக்கவோ சொல்லுவார்கள். அப்போது மட்டும் அந்த தோட்டியின் மீது கோபம் வருவதில்லையே? அது ஏன் என்று யோசியுங்கள். அந்த அழகின் மீதிருந்த மோகமோ அன்போ எங்கே போயிற்று என சிந்தியுங்கள். அப்போது புரியும் அழியும் பொருள்களின் மீதுள்ள ஆசை நிலைப்பதில்லை என்று.

ஞானநிலை[தொகு]

என்னிலே இருந்த ஒன்றை யான் அறிந்தது இல்லையே
என்னிலே இருந்த ஒன்றை யான் அறிந்து கொண்டபின்
என்னிலே இருந்த ஒன்றை யாவர் காண வல்லரோ
என்னிலே இருந்திருந்து யான் உணர்ந்து கொண்டனே (6)

எனக்குள்ளே ஒன்றான மெய்ப்பொருளாக இறைவன் இருக்கின்றான் என்பதை நான் முன்பு அறிந்து கொள்ளவில்லை. அப்பரம்பொருளை பல இடங்களில் தேடியும், நல்ல நூல்களைப் படித்தும், நல்லோரிடம் பழகியும், நல்ல குருநாதர் மூலம் அது என்னிடமே இருப்பதை யான் அறிந்து கொண்டேன். . தனக்குள் இருந்த உயிரை அறிந்து அதனுள் இருக்கும் ஈசனை யார் காண வல்லவர்கள். . என்னிலே இருந்த அந்த மெய்ப்பொருளை அறிந்து அதையே என் உள்ளத்தில் இருத்தி தியானத்தில் இருந்து, இருந்து அந்த உண்மையை யான் உணர்ந்து கொண்டேன்

7[தொகு]

நினைப்பதொன்று கண்டிலேன் நீயலாது வேறிலை
நினைப்புமாய் மறப்புமாய் நின்ற மாயை மாயையோ
அனைத்துமாய் அகண்டமாய் அனாதிமுன் அனாதியாய்
எனக்குள் நீ உனக்குள் நான் நினைக்கு மாற தெங்கனே (7)

 நான் தியானத்திலிருந்து நினைப்பது ஒன்றான மெய்ப் பொருளே, அது நீயேயன்றி வேறு ஒன்றையும் நான் கண்டது இல்லை. நான் தியானத்தில் அமர்ந்து  நான் என் நினைவை புருவ மத்தியில் நிறுத்தி பார்க்கும்போது அங்கு உன் நினைவைத் தவிர வேறு நினைவு இல்லை. நான் நினைப்பதாகவும், மறப்பதாகவும், நின்ற மனம் ஒரு மாயையோ, இவ்வுலகில் உள்ள அனைத்துமாகவும் எல்லாம் அடங்கியுள்ள ஆகாயமாகவும் அநாதி காலங்களுக்கும் முன் உள்ள அனாதியாகவும் உள்ளவன் நீயே. எனக்குள் நீ இருப்பதுவும் உனக்குள் நான் இருந்ததையும் உணர்ந்த பிறகு எல்லாம் உன்செயல் என்று அறிந்த பிறகு உன்னை நினைப்பது எவ்விதம் என் ஈசனே, உன்னை மறந்தால் தானே நினைக்க முடியும். உன்னை மறவேன் நானே!!!!

8[தொகு]

மண்ணும் நீ விண்ணும் நீ மறிகடல்கள் ஏழும் நீ
எண்ணும் நீ எழுத்தும் நீ இசைந்த பண் எழுத்தும் நீ
கண்ணும் நீ மணியும் நீ கண்ணுள் ஆடும் பாவை நீ
நண்ணும் நீர்மை நின்றபாதம் நண்ணுமாறு அருளிடாய் (8)

 பூமியாகவும், ஆகாயமாகவும், ஏழு கடல் நீராகவும், காற்று நெருப்பு என பஞ்ச பூதங்களாக இருப்பவனும் நீயே. எட்டிரண்டு என்ற எண்ணாகவும், அகார உகார எழுத்தாகவும் ஆகி இசையுடன் கூடிய தேவாரப் பண்ணாகவும், ஏழு ஸ்வரங்களான சரிகமபதநி என்ற ராக எழுத்தாகவும் உள்ளவன் நீயே. கண்ணாகவும், கண்மணி யாகவும், கண்ணுள் ஆடும் பாப்பாவாகவும் ஆனவனும் நீயே. . இப்படி அனைத்துமாய் உள்ள உண்மையான பிரம்மா ஞானத்தை எனக்கு வழங்கி என்னுள் நீராகி நின்ற நினது திருவடி பாதத்தை என்றும் என் தியானத்தில் வைக்க அருள்செய் ஈசா!

9[தொகு]

அரியும் அல்ல அயனும் அல்ல அப்புறத்தில் அப்புறம்
கருமை செம்மை வெண்மையைக் கடந்து நின்ற காரணம்
பெரியதல்ல சிறியதல்ல பற்றுமின்கள் பற்றுமின்கள்
துரியமும் கடந்து நின்ற தூர தூர தூரமே (9)

 மெய்ப் பொருள் விஷ்ணுவுமல்ல, பிரம்மாவும் அல்ல. விஷ்ணுவாலும், பிரம்மாவாலும் அடி முடி காண முடியாமல் அப்பாலுக்கப்பாலாய் நின்றவன் ஈசன். அவன் அதுவாகி அப்புறத்தில் அப்புறமாய் கருமை செம்மை வெண்மை நிறங்களைக் கடந்து நின்ற சோதியாகி காரணப் பொருளாய் நமக்குள்ளேயே இருக்கிறான். அச்சிவனே சீவனாக கருமையிலும் சிகப்பு வெள்ளை அணுக்களிலும் கலந்து நின்று உயிரும் உடலும் இயங்க காரணமாக இருக்கின்றான்.  அவனுடைய திருவடி நமக்குள் இருப்பதைஉணருங்கள். . அது பெரியதும் இல்லை, சிறியதும் இல்லை, யாவிலும் நடுவாய் இருப்பது. அப்பாதத்தையே பற்றி நின்று தியானியுங்கள். அது துரியமாகிய ஆஞ்ஞா கமலத்தில் ஆகாயத் தத்துவத்தையும் கடந்து நிற்பதால் வெகு தூரமாய் தோன்றுகின்றது. இதனை தனக்குள்ளேயே அறிவை அறிந்து உண்மையை என்று உணர்ந்து தியானியுங்கள்.

10[தொகு]

அந்தி மாலை உச்சி மூன்றும் ஆடுகின்ற தீர்த்தமும்
சந்திதர்ப் பணங்களும் தபங்களும் செபங்களும்
சிந்தைமேவு ஞானமும் தினம் செபிக்கு மந்திரம்
எந்தை ராம ராம ராம ராம என்னும் நாமமே (10)

 அதிகாலை, மதியம், மாலை என்று மூன்று நேரங்களிலும் நீராடி குளித்து விட்டு இயம நியமங்களுடன் இருந்து சந்தியா வந்தனம் தர்ப்பணங்கள் போன்றவைகளை செய்வதும், பெறற்கரிய தவங்கள் புரிந்து காயத்ரி செபம் செய்வதும், இதனால் வரும் பலன்களால் சிந்தையில் எப்போதும் ஞானம் ஒன்றையே வைத்து தியானம் செய்வதினால் வரும் பலன்களும் எந்தையாகிய ஸ்ரீ இராமனின் ராம மந்திர செபத்தை செய்வதனாலே கிடைக்கும். ஆதலால் என் குருநாதரின் இராம நாமத்தை தினமும் செபித்து தியானித்திருங்கள். 

20 வரை[தொகு]

கதாவுபஞ்ச பாதகங்களைத் துரந்த மந்திரம்
இதாம் இதாம் இதல்ல என்று வைத்துழலும் ஏழைகாள்
சதாவிடாமல் ஓதுவார் தமக்கு நல்ல மந்திரம்
இதாம் இதாம் இராம ராம ராம என்னும் நாமமே (11)

  செய்த பாவங்கள் யாவும் அகலவும், பஞ்சமா பாதகங்களை செய்யா வண்ணம் காப்பதற்கும் ஒதுவதற்குரிய அறிய மந்திரம் இதுவாக இருக்குமோ அல்லது அதுவாக இருக்குமோ என்று பற்பல மந்திரங்களை ஓதி உச்சரித்து வையகத்தில் வாழ்ந்து உழன்று வரும் ஏழை பக்தர்களே! இதோ சர்வ நேரந்த்திலும் சர்வ காலங்களிலும் உச்சரித்து ஒதுவ்த்ர்குரிய அறிய நல்ல மந்திரம் இதுதான் என்பதனை உணர்ந்து எப்போதும் இராம ராம ராம என்னும் நாமத்தை என்றும் மறவாது ஓதி உயர்வடையுங்கள்.

நானதேது நாயதேது நடுவில் நின்றது ஏதடா
கோனதேது குருவதேது கூறிடும் குலாமரே
ஆனதேது அழிவதேது அப்புறத்தில் அப்புறம்
ஈனதேது ராமராம ராம என்ற நாமமே (12)

  நான் என்று ஆனது எது? நீ என்பது எது? ஞாமாகி நமக்குள் நடுவாக நின்றது என்ன? கோனாகி இவ்வுடலை ஆட்சி செய்வது எது? குருவாக அமைந்திருப்பது எது? அது என்பதை எதுவென்று கூறிடுங்கள் எமக்குள மக்களே! ஆதியாக ஆனது எது? அது நம் உடம்பில் அழியாத பொருளாய் நின்றது எது? அது நம் உடம்பிலேயே அப்புரத்துக்கும் அப்புறமாய் வெளியாக நின்று உடல் அழிந்த பிறகும் கூட வருவது எது என்பதை நன்கு சிந்தித்து அறிந்து கூறுங்கள். இவை யாவும் ஒன்றே என அறிவை அறியவைத்து நம் பிறவியை ஈடேற்ற சரியானது இராம நாமமே என்பதை உணர்ந்து இராம மந்திரத்தை ஓதுங்கள்.

யோக நிலை
சாத்திரங்கள் ஓதுகின்ற சட்டநாத பட்டரே
வேர்த்து இரைப்பு வந்தபோது வேதம் வந்து உதவுமோ
மாத்திரைப்போ தும்முளே மறிந்து தொக்க வல்லிரேல்
சாத்திரப்பை நோய்கள் ஏது சத்தி முத்தி சித்தியே (13)

  சாஸ்திரங்கள் வேத பாராயணங்கள் போன்றவைகளை தினமும் ஓதுகின்ற சட்டநாதப்பட்டரே! உங்களுக்கு நோய்வேர்த் வந்து மாரடைப்பு ஏற்பட்டு வேர்த்து இறைத்து உயிர் ஊசலாடும் போது நீங்கள் சொல்லி வந்த வேதம் அந்நேரம் வந்து உதவுமோ? உதவாது. ஆதலால் ஒரு நொடி நேரமாவது உங்களுக்குள்ளே உள்ள மைப்போருளை அறிந்து வாசியோகம் செய்து அதையே தொக்கியிருந்து தியானம் செய்து வந்தீர்களானால் சோற்றுப் பையான இவ்வுடம்பிற்கு நோய் என்பது வராது. மரண காலத்திலும் ஈசன் கருணையினால் சக்தியும், முத்தியும், சித்தியும் கிடைக்க மெய்பொருளை அறிந்து தியானியுங்கள். தினம் தினம் தாங்கள் சொல்லி வந்த வேத சாத்திரங்களுக்கும் அதனால் சக்தி கிட்டி முக்திபெற்று சித்தி அடைவீர்கள்.

நாலுவேதம் ஓதுவீர் ஞானபாதம் அறிகிலீர்
பாலுள் நெய் கலந்தவாறு பாவிகாள் அறிகிலீர்
ஆலம்உண்ட கண்டனார் அகத்துளே இருக்கவே
காலன் என்று சொல்லுவீர் கனாவிலும் அதில்லையே (14)

  ரிக், யஜூர், சாம,அதர்வணம் என்ற நான்கு வேதங்களும் நன்றாக மனப்பாடம் செய்து ஒதுவீர்கள். ஆனால் அந்த நான்கு வேதங்களும் சொல்லும் ஞான பாதம் எது என்பதை அறிவீர்களா? அமுதம் வேண்டி திருப்பார் கடலை கடையும்போது, ஆதிசேசன் கக்கிய ஆலகால விஷத்தை உண்டு அவனியைக் காத்த நீலகண்டன் நம் உள்ளத்தில் இருப்பதையும் ஞானபாதம் எனும் மெய்ப்பொருளை அறிந்தவர்க்கும் காலன் என்ற எம் பயம் கிடையாது. . அதை அறிந்து அதையே எண்ணி தியானிப்பவர்களுக்கு கனவில் கூட எம பயமோ எம வேதனையோ இருக்கவே இருக்காது.

வித்தில்லாத சம்பிரதாயம் மேலும் இல்லை கீழும் இல்லை
தச்சில்லாத மாளிகை சமைந்தவாற தெங்கனே
பெற்ற தாயை விற்றடிமை கொள்ளுகின்ற பேதைகாள்
சித்தில்லாத போது சீவன் இல்லை இல்லை இல்லையே (15)

  பரம்பொருளே அனைத்துக்கு வித்தாக இருக்கின்றது. அதனாலேயே எல்லா சம்பிரதாயங்களும் மேலுலகிலும், பூலோகத்திலும் அமைந்துள்ளது. அவனின்றி ஓரணுவும் அசையாது. தச்சன் இல்லாது மாளிகை அமையுமா? அஸ்திவாரம் இல்லாத கட்டிடம் எழும்புமா? நம் உடம்பில் உயிராகி வித்தாகி இருப்பவன் ஈசன், மானிடப் பிறவிகள் சிவனை வித்தாகக் கொண்டே நடமாடும் கோயிலாக உடம்பு அமைந்துள்ளது. பெற்ற தாயை மறந்து(விற்று)விட்டு மற்ற பெண்களை அடிமை கொள்ளும் பேதை மக்களே!! பெற்ற ஞானத்தை விற்று சிவன் உறையும் சீவர்களை அடிமைகளாக மாற்றுகின்ற பேத ஞானிகளே!!! சிவன் இல்லது போனால் அந்த சீவனும் இல்லையே!!! இந்த உடம்பும் இல்லையென ஆகிவிடும் என்பதனை உணர்ந்து அச்சிவனையே நினைத்து தியானம் செய்யுங்கள்.

அஞ்சும் மூன்றும் எட்டாதாம் அநாதியான மந்திரம்
நெஞ்சிலே நினைந்து கொண்டு நூறுருச் செபிப்பிரேல்
பஞ்சமான பாதகங்கள் நூறு கோடி செய்யினும்
பஞ்சுபோல் பறக்கும் என்று நான்மறைகள் பன்னுமே (16)

'நம சிவய என்ற அஞ்செழுத்தும்' எ, உ, ம் என்ற மூன்றெழுத்தும் சேர்ந்த ' ஓம் நமசிவய' என்ற எட்டெழுத்து மந்திரமே அனாதியாக விளங்கும் ஈசனின் மந்திரம், இதுவே அநாதியான மந்திரம். இதனை நன்கு அறிந்து கொண்டு நம் உள்ளமாகிய கோவிலிலே இறுத்தி நினைந்து நீங்கள் கண்ணீர் விட்டு அழுது உருக் கொடுத்து செபித்து தியானியுங்கள். எந்த ஜென்மத்தில் செய்த பஞ்சமா பாதகங்களும், பாவங்களும் அனைத்தும் இம்மந்திர செபத்தால் காற்றில் பஞ்சு பறப்பது போல் நம்மை விட்டு பறந்துவிடும். எவ்வித பழிபாவங்களையும் செய்யா வண்ணம் நம்மை நன்னெறியில் நடக்கச் செய்யும் என்று நான்கு மறைகளும் சொல்லுகின்றது. ."ஓம் நமசிவய"
 
அண்டவாசல் ஆயிரம் ப்ரசண்டவாசல் ஆயிரம்
ஆறிரண்டு நூறுகோடியான வாசல் ஆயிரம்
இந்த வாசல் ஏழை வாசல் ஏகபோகமான வாசல்
எம்பிரான் இருக்கும் வாசல் யாவர்காண வல்லரே (17)

 இவ்வுலகத்திற்கும் பிற உலகங்களுக்கும் ஆயிரமாயிரம் வழிகள் வாசல்களாக அமைந்திருக்கின்றது. எண் சாண் உடம்பு எண்ணாயிரம் கோடி உயிர்களிலும் கோடிக்கணக்கான வாசல்கள் கொண்டு இப்பூமியில் இலங்கி வருகின்றது. இதிலே இறைவன் பத்தாவது வாசலிலிருந்து உலாவுகின்றான். இந்த வாசல் ஏழை வாசலாகவும், ஏகமாகி நின்று இறை இன்பம் கிட்டும் வாசலாகவும் எளிமையாக எல்லோரிடமும் மறைவாக இருக்கின்றது. இந்த பத்தாவது வாசலை அறிந்து யோகா ஞானத்தால் அவ்வாசலின் பூட்டைத் திறந்து எம்பிரானாகிய ஈசன் இருக்கும் வாசலை யாவர் காணவல்லவர்கள்.

சாமநாலு வேதமும் சகல சாத்திரங்களும்
சேமமாக ஓதிலும் சிவனை நீர் அறிகிலீர்
காம நோயை விட்டு நீர் கருத்துளே உணர்ந்தபின்
ஊமையான காயமாய் இருப்பன் எங்கள் ஈசனே (18)

 காலம் தவறாது நான்கு வேதங்களையும், சகல சாஸ்திரங்களையும் வெகு நேர்த்தியாகவும், ஒழுங்காகவும், மிக அழகாகவும், நன்றாக ஓதி வந்தாலும் சிவன் தங்களுக்குள் நீராக உள்ளதை அறியார்கள். தன உடம்பில் உயிர் இருப்பதையும், அதற்குள் சிவன் இருப்பதையும் அறிந்துணரமாட்டார்கள். தனக்குள் உட்பகையாக இருக்கும் காமம் என்ற நோயை அகற்றிவிட்டு அதே காமம் தோன்றும் இடத்தில் கருத்துடன் எண்ணத்தை வைத்து ஈசனை உணர்ந்து தியானித்தால் நம்மில் ஊமை எழுத்தாகி சூட்சும உடம்பில் இருப்பான் எண்கள் ஈசன் என்பதை அறிந்து நீங்களும் உணர்ந்து தியானியுங்கள்.

சங்கிரண்டு தாரை ஒன்று சன்ன பின்னல் ஆகையால்
மங்கி மாளு தேஉலகில் மானிடங்கள் எத்தனை
சங்கிரண்டையும் தவிர்த்து தாரை ஊதவல்லிரேல்
கொங்கை மங்கை பங்கரோடு கூடி வாழல் ஆகுமோ (19)

அஞ்செழுத்திலே பிறந்து அஞ்செழுத்திலே வளர்ந்து
அஞ்செழுத்தை ஓதுகின்ற பஞ்சபூத பாவிகாள்
அஞ்செழுத்தில் ஓர் எழுத்து அறிந்து கூற வல்லிரேல்
அஞ்சல் அஞ்சல் என்று நாதன் அம்பலத்தில் ஆடுமே (20)

30 வரை[தொகு]

அஞ்சும் அஞ்சும் அஞ்சுமே அனாதியானது அஞ்சுமே
பிஞ்சு பிஞ்சது அல்லவோ பித்தர்காள் பிதற்றுறீர்
நெஞ்சில் அஞ்சு கொண்டு நீர் நின்று தொக்க வல்லிரேல்
அஞ்சும் இல்லை ஆறும் இல்லை அனாதியானது ஒன்றுமே (21)

நீளவீடு கட்டுறீர் நெடுங்கதவு சாத்துறீர்
வாழவேண்டும் என்றலோ மகிழ்ந்திருந்த மாந்தரே
காலன் ஓலை வந்தபோது காயகன்று நிற்பிரே
ஆலம்உண்ட கண்டர்பாதம் அம்மைபாதம் உண்மையே (22)

ஓடம் உள்ள போதலோ ஓடியே உலாவலாம்
ஓடம் உள்ள போதலோ உறுதிபண்ணிக் கொள்ளலாம்
ஓடம்உடைந்தபோதில் ஒப்பிலாத வெளியிலே
ஆடும் இல்லை கோலும் இல்லை யாரும் இல்லை ஆனதே (23)

கிரியை நிலை
வீடெடுத்து வேள்விசெய்து மெய்யினோடு பொய்யுமாய்
மாடுமக்கள் பெண்டிர் சுற்றம் என்றிருக்கும் மாந்தர்காள்
நாடுபெற்ற நடுவர் கையில் ஓலைவந்து அழைத்திடில்
ஓடுபெற்ற அவ்விலை பெறாதுகாண் இவ்வுடலமே (24)

உற்பத்தி நிலை
அண்ணலே அனாதியே அநாதிமுன் அநாதியே
பெண்ணும் ஆணும் ஒன்றலோ பிறப்பதற்கு முன்னெலாம்
கண்ணிலா நீர்ச் சுக்கிலம் கருதிஓங்கும் நாளிலே
மண்ணுளோரும் விண்ணுளோரும் வந்தவாறு எங்கனே (25)

அறிவு நிலை
பண்டுநான் பறித்தெறிந்த பன்மலர்கள் எத்தனை
பாழிலே செபித்து விட்ட மந்ததிரங்கள் எத்தனை
மிண்டனாய்த் திரிந்தபோது இரைத்த நீர்கள் எத்தனை
மீளவும் சிவாலயங்கள் சூழ வந்தது எத்தனை

அண்டர்கோன் இருப்பிடம் அறிந்துஉணர்ந்த ஞானிகள்
ஆண்டறிந்த பான்மைதன்னை யார் அறியவல்லரே
விண்டவேத பொருளை அன்றி வேறு கூற வகாயிலா
கண்டகோயில் தெய்வம்என்று கையெடுப்பது இல்லையே (26)

தூரம் தூரம் தூரம் என்று சொல்லுவார்கள் சோம்பர்கள்
பாரும் விண்ணும் எங்குமாய்ப் பரந்த இப்பராபரம்
ஊருநாடு காடுதேடி உழன்றுதேடும் ஊமைகாள்
நேரதாக உம்முளே அறிந்துணர்ந்து நில்லுமே (27)

  இறைவன் வெகு தூரத்தில் இருக்கின்றான் என்றும் அவனை ஆன்மீக நாட்டம் கொண்டு அடையும் வழி வெகுதூரம் என்றும் சொல்லுபவர்கள் சோம்பேறிகள். அவன் பார்க்கும் இடமெங்கும் நீக்கமற நிறைந்து மண்ணாகவும், வின்னாகவும் எங்கும் பறந்து இருக்கின்றான். அவனை பல ஊர்களிலும், பல தேசங்களிலும் பற்பல காடுகளிலும் மலைகளிலும் உழன்று அலைந்து தேடும் ஊமைகளே! அவ்வீசன் உனக்குள் உள்ளதை உணர்ந்து முதுதண்டு வளையாமல் நேராக பத்மாசனத்தில் அமர்ந்து தியானித்து அறிந்து உணர்ந்து கொள்ளுங்கள்.

தங்கம் ஒன்று ரூபம் வேறு தன்மையான வாறுபோல்
செங்கண்மாலும் ஈசனும் சிறந்திருந்த தும்முளே
விங்களங்கள் பேசுவீர் விளங்குகின்ற மாந்தரே
எங்குமாகி நின்ற நாமம் நாமம் இந்த நாமமே (28)

யோக நிலை
நெருப்பை மூட்டி நெய்யைவிட்டு நித்தம் ந்ததம் நீரிலே
விருப்பமோடு நீர் குளிக்கும் வேதவாக்யம் கேளுமின்
நெருப்பும் நீரும் உம்முளே நினைந்து கூற வல்லிரேல்
சுருக்கம் அற்ற சோதியை தொடர்ந்து கூடல் ஆகுமே (29)

பாட்டிலாத பரமனைப் பரமலோக நாதனை
நாட்டிலாத நாதனை நாரிபங்கர் பாகனை
கூட்டிமெள்ள வாய்புதைத்து குணுகுணுத்த மந்திரம்
வேட்டகாரர் குசுகுசுப்பை கூப்பிடா முடிந்ததே (30)

40 வரை[தொகு]

செய்யதெங்கிலே இளநீர் சேர்ந்த காரணங்கள் போல்
ஐயன் வந்து என்னுளம் புகுந்து கோயில் கொண்டனன்
ஐயன் வந்து என்னுளம் புகுந்து கோயில் கொண்டபின்
வையகத்தில் மாந்தர் முன்னம் வாய் திறப்பது இல்லையே (31)

மாறுபட்ட மணி துலக்கி வண்டின் எச்சில் கொண்டுபோய்
ஊறுபட்ட கல்லின்மீதே ஊற்றுகின்ற மூடரே
மாறுபட்ட தேவரும் அறிந்து நோக்கும் என்னையும்
கூறுபட்டு தீர்க்கவோ குருக்கள் பாதம் வைத்ததே (32)

கோயிலாவது ஏதடா குளங்களாவது ஏதடா
கோயிலும் குளங்களும் கும்பிடும் குலாமரே
கோயிலும் மனத்துளே குளங்களும் மனத்துளே
ஆவதும் அழிவதும் இல்லை இல்லை இல்லையே (33)

செங்கலும் கருங்கலும் சிவந்த சாதி லிங்கமும்
செம்பிலும் தராவிலும் சிவன் இருப்பன் எனகிறீர்
உம்பதம் நிந்துநீர் உம்மை நீர் அறிந்தபின்
அம்பலம் நிறைந்த நாதர் ஆடல் பாடல் ஆகுமே (34)

பூசை பூசை என்று நீர் பூசை செய்யும் பேதை காள்
பூசையுன்ன தன்னிலே பூசை கொண்டது எவ்விடம்
ஆதிபூசை கொண்டதோ அனாதிபூசை கொண்டதோ
ஏதுபூசை கொண்டதோ இன்னதென்று இயம்புமே (35)

இருக்குநாலு வேதமும் எழுத்தை அறவோதிலும்
பெருக்கநீறு பூசிலும் பிதற்றலும் பிரான் இரான்
உருக்கி நெஞ்சை உட்கலந்த உண்மை கூற வல்லிரேல்
சுருக்கம் அற்ற சோதியை தொடர்ந்து கூடலாகுமே (36)

கலத்தின் வார்த்து வைத்த நீர் கடுத்த தீ முடுக்கினால்
கலத்திலே கரந்ததோ கடுத்த நீ குடித்ததோ
நிலத்திலே கரந்ததோ நீள்விசும்பு கொண்டதோ
மனத்தின் மாயை நீக்கிலே மனத்துளே கரந்ததோ (37)

பறைச்சியாவது ஏதடா பணத்தியாவது ஏதடா
இறைச்சிதோல் எலும்பினும் இலக்கமிட்டு இருக்குதோ
பறைச்சிபோகம் வேறதோ பணத்திபோகம் வேறதோ
பறைச்சியும் பணத்தியும் பகுந்து பாரும் உம்முளே (38)

வாயிலே குடித்த நீரை எச்சில் என்று சொல்லுறீர்
வாயிலே குதப்புவேத மெனப்படக் கடவதோ
வாயில் எச்சில் போக என்று நீர்தனைக் குடிப்பீர்காள்
வாயில் எச்சில் போன வண்ணம் வந்திருந்து சொல்லுமே (39)

ஓதுகின்ற வேதம் எச்சில் உள்ள மந்திரங்கள் எச்சில்
போதங்களானது எச்சில் பூதலங்கள் ஏழும் எச்சில்
மாதிருந்த விந்து எச்சில் மதியும் எச்சில் ஒலியும் எச்சில்
ஏதில் எச்சில் இல்லதில்லை இல்லை இல்லை இல்லையே (40)

*

50 வரை[தொகு]

பிறப்பதற்கு முன்னெல்லாம் இருக்குமாறு தெங்கனே
பிறந்து மண்ணிறந்து போய் இருக்குமாறு தெங்கனே
குறித்து நீர் சொலாவிடில் குறிப்பில்லாத மாந்தரே
அறுப்பனே செவி இரண்டும் அஞ்செழுத்து வாளினால் (41)

அம்பலத்தை அம்புகொண்டு அசங்கென்றால் அசங்குமோ
கம்பமற்ற பாற்கடல் கலங்கென்றால் கலங்குமோ
இன்பமற்ற யோகியை இருளும் வந்து அணுகுமோ
செம்பொன் அம்பலத்துளே தெளிந்ததே சிவாயமே (42)

சித்தம் ஏது சிந்தை ஏது சீவன் ஏது சித்தரே
சத்திஏது சம்புஏது சாதிபேதம் அற்றெது
முத்தி ஏது மூலம் ஏது மூலமந்திரங்கள் ஏது
வித்தில்லாத வித்திலே இன்னதென்று இயம்புமே (43)

ஒடுக்க நிலை
சித்தமற்று சிந்தையற்று சீவன்றறு நின்றிடம்
சத்தியற்று சம்புவற்று சாதிபேத மற்றுநன்
முத்தியற்று மூலமற்று மூலமந் திரங்களும்
வித்தை இத்தை ஈன்றவித்தில் விளைந்ததே சிவாயமே (44)

கிரியை விலக்கிச் சாதி ஒன்றெனல்
சாதியாவது ஏதடா சலம் திரண்ட நீரலோ
பூதவாசல் ஒன்றலோ பூதம் ஐந்தும் ஒன்றலோ
காதில் வாளி காரை கம்பி பாடகம் பொன் ஒன்றலோ
சாதிபேதம் ஓதுகின்ற தன்மை என்ன தன்மையே (45)

அறிவு நிலை
கறந்தபால் முலைபுகா கடைந்த வெண்ணெய் மோர்புகா
உடைந்துபோன சங்கின் ஓசை உயிர்களும் உடற்புகா
விரிந்த பூ உதிர்ந்த காயும் மீண்டுபோய் மரம்புகா
இறந்தவர் பிறப்பதில்லை இல்லை இல்லை இல்லையே (46)

அறையினில் கிடந்தபோது அன்று தூமை எனகிறீர்
துறை அறிந்து நீர்குளித்த அன்று தூமை என்கிறீர்
பறையறைந்து நீர்பிறந்த அன்று தூமை என்கிறீர்
புரைஇலாத ஈசரோடு பொருந்துமாறது எங்கனே (47)

தூமை தூமை என்றுளே துவண்டு அலையும் ஏழைகாள்
தூமையான பெண்ணிருக்க தூமைபோனது எவ்விடம்
ஆமைபோல மூழ்கிவந்து அநேக வேதம் ஓதுறீர்
தூமையும் திரண்டிருண்டு சொற்குருக்கள் ஆனதே (48)

சொற்குருக்கள் ஆனதும் சோதிமேனி ஆவதும்
மெய்க்குருக்கள் ஆனதும் வேணபூசை செய்வதும்
சற்குருக்கள் ஆனதும் சாத்திரங்கள் சொல்வதும்
செய்க்குருக்கள் ஆனதும் திரண்டுருண்ட தூமையே (49)

கைவடங்கள் கொண்டு நீர் கண்சிமிட்டி நிற்கிறீர்
எவ்விடங்கள் கண்டுநீர் எண்ணி எண்ணிப் பார்க்கிறீர்
பொய் இறந்த சிந்தையைப் பொருந்தி நோக்க வல்லிரேல்
மெய்கடந்தது உம்முளே விரைந்து கூடல் ஆகுமே (50)

60 வரை[தொகு]

ஆடுகாட்டி வேங்கையை அகப்படுத்துமாறு போல்
மாடுகாட்டி என்னை நீ மதிமயக்கல் ஆகுமோ
கோடு காட்டி யானையைக் கொன்றுரித்த கொற்றவா
வீடுகாட்டி என்னை நீ வெளிப்படுத்த வேணுமே (51)

இடதுகண்கள் சந்திரன் வலது கண்கள் சூரியன்
இடக்கைசங்கு சக்கரம் வலக்கை சூல மான்மழு
எடுத்தபாத நீள்முடி எண் திசைக்கும் அப்புறம்
உடல்கலந்து நின்ற மயம் யாவர் காண வல்லரோ (52)

நாழிஉப்பு நாழி உப்பு நாழியான வாறு போல்
ஆழியோனும் ஈசனும் அமர்ந்து வாழ்ந்திருந்திடம்
எருதில் ஏறும் ஈசனும்இயங்கு சக்ரதரனையும்
வேறு வேறு பேசுவார் வீழ்வர் வீண்நரகிலே (53)

தில்லைநாயகன் அவன் திருவரங்கனும் அவன்
எல்லையான புவனமும் ஏக முத்தியும் அவன்
பல்லுநாவும் உள்ளபேர் பகுந்துகூறி மகிழுவார்
வல்லபங்கள் பேசுவார் வாய்புழுத்து மாய்வரே (54)

எத்திசைக்கும் எவ்வுயிர்க்கும் எங்கள் அப்பன் எம்பிரான்
சத்தியான வித்துளே முளைத்தெழும் தவச்சுடர்
சித்தமும் தெளிந்து வேத கோயிலும் திறந்த பின்
அத்தன் ஆடல் கண்டபின் அடங்கல் ஆடல் காணுமே (55)

உற்ற நூல்கள் உம்முளே உணர்ந்துணர்ந்து பாடுவீர்
பற்றறுத்து நின்றுநீர் பராபரங்கள் எய்திலீர்
செற்றமாவை யுள்ளரைச் செருக்கறுத்து இருந்திடில்
சுற்றமாக உம்முளே சோதி என்றும் வாழுமே (56)

போததாய் எழுந்ததும் புனலதாகி வந்ததும்
தாததாய்ப் புகுந்ததும் தணலதாய் விளைந்ததும்
ஓதடா அஞ்சுமூன்றும் ஒன்றதான அக்கரம்
ஓதடா நீ இராமராம ராமவென்னும் நாமமே (57)

அகாரம் என்ற அக்கரத்துள் அவ்வுவந்து உதித்ததோ
உகாரம் என்ற அக்கரத்தில் உவ்வுவந்து உதித்ததோ
அகாரமும் உகாரமும் சிகாரமன்றி நின்றதோ
விகாரமற்ற யோகிகாள் விரித்துரைக்க வேணுமே (58)

அறத்திறங்க ளுக்கும்நீ அகண்டம் எண் திசைக்கும் நீ
திறத்திறங் களுக்குநீ தேடுவார்கள் சிந்தை நீ
உறக்கம் நீ உணர்வு நீ உட்கலந்த சோதி நீ
மறக்கொணாத நின்கழல் மறப்பினும் குடிகொளே (59)

அண்டம் நீ அகண்டம் நீ ஆதிமூல மானோன் நீ
கண்டம்நீ கருத்தும் நீ காவியங்கள் ஆனோன் நீ
புண்டரீக மற்றுளே புணருகின்ற புண்ணியர்
கொண்டகோல மான நேர்மை கூர்மை என்ன கூர்மையே (60)

70 வரை[தொகு]

மை அடர்ந்த கண்ணினார் மயக்கிடும் மயக்கிலே
ஐஇறந்து கொண்டு நீங்கள் அல்லல் உற்று இருப்பீர்காள்
மெய்அறிந்த சிந்தையாய் விளங்குஞானம் எய்தினால்
உய்யறிந்து கொண்டு நீங்கள் ஊழிகாலம் வாழ்விரே (61)

கரு இருந்த வாசலால் கலங்குகின்ற ஊமைகாள்
குரு இருந்து சொன்ன வார்த்தை குறித்து நோக்க வல்லிரேல்
உரு இலங்கு மேனியாகி உம்பராகி நின்ற நீர்
திரு இலங்கு மேனியாகச் சென்றுகூடல் ஆகுமே (62)

தீர்த்தம் ஆட வேண்டுமென்று தேடுகின்ற தீனர்காள்
தீர்த்தம் ஆடல் எவ்விடம்தெளிந்து நீர் இயம்பிலீர்
தீர்த்தமாக உம்முளே தெளிந்து நீர் இருந்தபின்
தீர்த்தமாக உள்ளதும் சிவாயஅஞ் செழுத்துமே (63)

கழுத்தையும் நிமிர்த்திநல்ல கண்ணையும் விழித்துநீர்
பழுத்துவாய் விழுந்து போன பாவம் என்ன பாவமே
அழுத்தமான வித்திலே அனாதியாய் இருப்பதோர்
எழுத்திலோ எழுத்திலே இருக்கலாம் இருத்துமே (64)

கண்டு நின்ற மாயையும் கலந்து நின்ற பூதமும்
உண்டுறங்கு மாறுநீர் உணர்ந்திருக்க வல்லிரேல்
பண்டை ஆறும் ஒன்றுமாய்ப் பயந்த வேத சுத்தராய்
அண்டைமுத்தி ஆகிநின்ற ஆதிமூலம் ஆவிரே (65)

ஈன் றவாசலுக்கு இரங்கி எண்ணிறந்து போவீர் காள்
கான் றவாழை மொட்டலர்ந்த காரணம் அறிகிலீர்
நான் றவாசலைத் திறந்து நாடி நோக்க வல்லிரேல்
தோன் றுமாயை விட்டொழிந்து சோதி வந்து தோன்றுமே (66)

உழலும் வாசலுக்கு இரங்கி ஊசலாடும் ஊமைகாள்
உழலும் வாசலைத் துறந்து உண்மைசேர எண்ணிலீர்
உழலும் வாசலைத் துறந்து உண்மைநீர் உணர்ந்தபின்
உழலும் வாசல் உள்ளிருந்த உண்மைதானும் ஆவிரே (67)

மூலநாடி தன்னிலே முளைத்தெழுந்த சோதியை
நாலு நாழி உம்முளே நாடியே இருந்தபின்
பாலனாகி வாழலாம் பரப்பிரமம் ஆகலாம்
ஆலம் உண்ட கண்டர் ஆனை அம்மை ஆணை உண்மையே (68)

இருக்கவேண்டும் என்றபோது இருத்தலாய் இருக்குமோ
மரிக்க வேண்டும் என்றலோ மண்ணுளே படைத்தனர்
சுருக்கமற்ற தம்பிரான் சொன்ன அஞ்செழுத்தையும்
மரிக்குமுன் வணங்கிடீர் மருந்தெனப் பதம் கெடீர் (69)

அம்பத்தொன்றில் அக்கரம் அடக்கம் ஓர் எழுத்துளோ
விண்பரந்த மந்திரம் வேதம் நான்கும் ஒன்றலோ
விண்பரந்த மூல அஞ்செழுத்துளே முளைத்ததே
அங்கலிங்க பீடமாய் அமர்ந்ததே சிவாயமே (70)

80 வரை[தொகு]

சிவாயம் என்ற அக்ஷரம் சிவன் இருக்கும் அக்ஷரம்
உபாயம் என்று நம்புதற்கு உண்மையான அக்ஷரம்
கபாடம் உற்ற வாசலைக் கடந்து போன வாயுவை
உபாயம் இட்டு அழைக்குமே சிவாய அஞ் செழுத்துமே (71)

உருவும் அல்ல வெளியும் அல்ல ஒன்றைமேவி நின்றதல்ல
மருவும் அல்ல காதம் அல்ல மற்றதல்ல அற்றதல்ல
பெரியதல்ல சிறியதல்ல பேசும் ஆவி தானும் அல்ல
அரியதாகி நின்ற நேர்மை யாவர் காண வல்லரே (72)

ஆத்துமா அனாதியோ ஆத்துமா அனாதியோ
மீத்திருந்த ஐம்பொறி புலன்களும் அனாதியோ
தர்க்கமிக்க நூல்களும் சதாசிவமும் அனாதியோ
வீக்கவந்த யோகிகாள் விரைந்து உரைக்க வேணுமே (73)

அறிவிலே பிறந்திருந்த ஆகமங்கள் ஓதுறீர்
நெறியிலே மயங்குகின்ற நேர்மை ஒன்று அறிகிலீர்
உறியிலே தயிர் இருக்க ஊர்புகுந்து வெண்ணெய் தேடும்
அறிவிலா மாந்தரோடு அணுகுமாறது எங்ஙனே (74)

அன்பு நிலை
இருவர் அரங்க மும்பொருந்தி என் புருகி நோக்கிலீர்
உருவரங்கம் ஆகி நின்ற உண்மை ஒன்றை ஓர்கிலீர்
கரு அரங்கம் ஆகிநின்ற கற்பனை கடந்து பின்
திருஅரங்கம் என்று நீர் தெளிந்திருக்க வல்லிரே (75)

தன்னைத் தான் அறியவேண்டும் எனல்
கருக்குழியில் ஆசையாய்க் காதலுற்று நிற்கிறீர்
குருக்கிடுக்கும் ஏழைகாள் குலாவுகின்ற பாவிகாள்
திருத்துருத்தி மெய்யினால் சிவந்த அஞ்செழுத்தையும்
உருக்கழிக்கும் உம்மையும் உணர்ந்துணர்ந்து கொள்ளுமே (76)

சமயவாதிகள் செய்கையை மறுத்தல்
மண்ணிலே பிறக்கவும் வழக்கலாது உரைக்கவும்
எண்ணிலாத கோடி தேவர் என்னது உன்னது என்னவும்
கண்ணிலே மணி இருக்கக் கண்மறந்த வாறுபோல்
எண்ணில் கோடி தேவரும் இதின் கணார் இழப்பதே (77)

மண்கலம் கவிழ்ந்தபோது வைத்துவைத்து அடுக்குவார்
வெங்கலம் கவிழ்ந்தபோது வேணும் என்று பேணுவார்
நம்கலம் கவிழ்ந்தபோது நாறும் என்றஃ போடுவார்
எண் கலந்து நின்றமாயம் என்ன மாயம் ஈசனே (78)

மிக்க செல்வம் நீர்படைத்த விறகு மேவிப் பாவிகாள்
விறகுடன் கொளுத்திமேனி வெந்துபோவது அறிகிலீர்
மக்கள் பெண்டீர் சுற்றம் என்று மாயை காணும் இவையெலாம்
மறலிவந்து அழைத்தபோது வந்து கூடலாகுமோ

ஒக்கவந்து மாதுடன் செறிந்திடத்தில் அழகியே
ஒருவராகி இருவராகி இளமைபெற்ற ஊரிலே
அக்கணிந்து கொன்றை சூடி அம்பலத்தில் ஆடுவார்
அஞ்செழுத்தை ஓதிடில் அனேக பாவம் அகலுமே (79)

மாடுகன்று செல்வமும் மனைவி மைந்தர் மகிழவே
மாடமாளிகைப் புறத்தில் வாழுகின்ற நாளிலே
ஓடிவந்து காலதூதர் சடுதியாகவே மோதவே
உடல் கிடந்து உயிர்கழன்ற உண்மை கண்டும் உணர்கிலீர்

பாடுகின்ற உம்பருக்கு ஆடுபாதம் உன்னியே
பழுதிலாத கர்மகூட்டம் இட்ட எங்கள் பரமனே
நீடு செம்பொன் அம்பலத்துள் ஆடுகொண்ட அப்பனே
நீலகண்ட காளகண்ட நித்திய கல்வியாணனே (80)

90 வரை[தொகு]

கானமற்ற காட்டகத்தில் வேந்தெழுந்த நீறுபோல்
ஞானம் உற்ற நெஞ்சகத்தில் வல்லதே தும் இல்லையே
ஊனமற்ற சோதியோடு உணர்வு சேர்ந்து அடக்கினால்
தேன் அகத்தின் ஊறல்போல் தெளிந்ததே சிவாயமே (81)

பருகி ஓடி உம்முளே பறந்துவந்த வெளிதனை
நிரவியே நினைந்து பார்க்கில் நின்மலம் அதாகுமே
உருகி ஓடி எங்குமாய் ஓடும் சோதி தன்னுளே
கருதுவீர் உமக்கு நல்ல காரணம் அதாகுமே (82)

சோதிபாதி ஆகி நின்று சுத்தமும் பலித்துவந்து
போதியாத போதகத்தை ஓதுகின்ற பூரணா
வீதியாக ஓடிவந்து விண்ணடியில் ஊடுபோய்
ஆதிநாதன் நாதன் என்று அனந்தகாலம் உள்ளதே (83)

இறைவனால் எடுத்த மாடத் தில்லையம்பலத்திலே
அறிவினால் அடுத்த காயம் அஞ்சினால் அமைந்ததே
கருவுநாதம் உண்டுபோய் கழன்ற வாசல் ஒன்பதும்
ஒருவராய் ஒருவர்கோடி உள்ளுளே அமர்ந்ததே (84)

நெஞ்சிலே இருந்திருந்து நெருங்கி ஓடும் வாயுவை
அன்பினால் இருந்துநீர் அருகிருத்த வல்லிரேல்
அன்பர்கோயில் காணலாம் அகலும் எண் திசைக்குளே
தும்பி ஓடி ஓடியே சொல்லடா சுவாமியே (85)

தில்லையை வணங்கி நின்ற தெண்டனிட்ட வாயுவை
எல்லையைக் கடந்து நின்ற ஏகபோக மாய்கையே
எல்லையைக் கடந்து நின்ற சொர்க்கலோக வெளியிலே
வெள்ளையும் சிவப்புமாகி மெய்கலந்து நின்றதே (86)

உயம்புஉயிர் எடுத்ததோ உயிர் உடம்பு எடுத்ததோ
உடம்பு உயிர் எடுத்தபோது உருவம் ஏது செப்புவீர்
உடம்புஉயிர் எடுத்தபோது உயிர் இறப்பது இல்லையே
உடம்புமெய் மறந்து கண்டு உணர்ந்து ஞானம் ஓதுமே (87)

அவ்வெனும் எழுந்தினால் அகண்டம் ஏழும் ஆகினாய்
உவ்வெனும் எழுத்தினால் உருத்தரித்து நின்றனை
மவ்வெனும் எழுந்தினால் மயங்கினார்கள் வையகம்
அவ்வும் உவ்வும் மவ்வுமாய் அமர்ந்ததே சிவாயமே (88)

மந்திரங்கள் உண்டுநீர் மயங்குகின்ற மானிடர்
மந்திரங்கள் ஆவது மரத்தில் ஊறல் அன்றுகாண்
மந்திரங்கள் ஆவது மதத்தெழுந்த வாயுவை
மந்திரத்தை உண்டவர்க்கு மானம் ஏதும் இல்லையே (89)

என்ன என்று சொல்லுவேன் இலக்கணம் இலாததை
பன்னுகின்ற செந்தமிழ்ப் பதம் கடந்த பண்பென
மின்னகத்தில் மின் ஒடுங்கி மின்னதான வாறுபோல்
என்னகத்துள் ஈசனும் யானும் அல்லது இல்லையே (90)

100 வரை[தொகு]

ஆலவித்தில் ஆல் ஒடுங்கி ஆலமான வாறுபோல்
வேறுவித்தும் இன்றியே விளைந்துபோகம் எய்திடீர்
ஆறுவித்தை ஓர்கிலீர் அறிவிலாத மாந்தரே
பாரும் இத்தை உம்மிளே பரப்பிரமம் ஆவிரே (91)

அவ்வுதித்த மந்திரம் அகாரமாய் உகாரமாய்
எவ்வெழுத்து அறிந்தவர்க்கு எழுபிறப்பது இங்கிலை
சவ்வுதித்த மந்திரத்தைத் தற்பரத்து இருத்தினால்
அவ்வும் உவ்வும்மவ்வுமாய் அமர்ந்ததே சிவாயமே (92)

நவ்விரண்டு காலதாய் நவின்ற மவ் வயிறதாய்
சிவ்விரண்டு தோளதாய் சிறந்தவவ்வு வாயதாய்
யவ்விரண்டு கண்ணதாய் அமர்ந்துநின்ற நேர்மையில்
செவ்வை ஒத்து நின்றதே சிவாயம் அஞ்செழுத்துமே (93)

இரண்டுமொன்று மூலமாய் இயங்கு சக்கரத்துளே
சுருண்டு மூன்று வளையமாய் சுணங்குபோல் கிடந்த தீ
முரண்டெழுந்த சங்கின் ஓசை மூலநாடி ஊடுபோய்
அரங்கன் பட்டணத்திலே அமர்ந்ததே சிவாயமே (94)

கடலிலே திரியும் ஆமை கரையிலே ஏறி முட்டையிட்டுக்
கடலிலே திரிந்தபோது ரூபமான வாறுபோல்
மடலுளே இருக்கும் எங்கள் மணியரங்க சோதியை
உடலுளே நினைத்து நல்ல உண்மையானது உண்மையே (95)

மூன்று மண்டலத்தினும் முட்டி நின்ற தூணிலும்
நான்ற பாம்பின் வாயிலும் நவின்றெழுந்த அட்சரம்
ஈன்ற தாயும் அப்பனும் எடுத்துரைத்த மந்திரம்
தோன்றும் ஓர் எழுத்துளே சொல்ல எங்கும் இல்லையே (96)

மூன்று மூன்று மூன்றுமே மூவர் தேவர் தேடிடும்
மூன்றும் அஞ்செழுத்துமாய் முழங்கும் அவ்வெழுத்துளே
ஈன்ற தாயும் அப்பனும் இயங்குகின்ற நாதமும்
தோன்றும் மண்டலத்திலே சொல்ல எங்கும் இல்லையே (97)

சோருகின்ற பூதம்போல் சுணங்கு போல் கிடந்தநீர்
நாறுகின்ற கும்பியில் நயந்தெழுந்த மூடரே
சீறுகின்ற ஐவரைச் சிணுக்கறுக்க வல்லிரேல்
ஆறுகோடி வேணியார் ஆறில் ஒன்றில் ஆவிரே (98)

வட்ட மென்று உம்முளே மயக்கி விட்ட திவ்வெளி
அட்டரக் கரத்துளே அடக்கமும் ஒடுக்கமும்
எட்டும் எட்டும் எட்டுமாய் இயங்கு சக்கரத்துளே
எட்டலாம் உதித்தது எம்பிரானை நாம் அறிந்தபின் (99)

பேசுவானும் ஈசனே பிரம ஞானம் உம்முளே
ஆசையான ஐவரும் அலைத்தலைகள் செய்கிறார்
ஆசையான ஐவரை அடக்கி ஓர் எழுத்திலே
பேசிடாது இருப்பிரேல் நாதன் வந்து பேசுமே (100)

110 வரை[தொகு]

நமசிவாய அஞ்செழுத்தும் நல்குமேல் நிலைகளும்
நமசிவாய அஞ்சில் அஞ்சும் புராஞமான மாயையும்
நமசிவாய அஞ்செழுத்து நம்முளே இருக்கவே
நமசிவாய உண்மையை நன்கு உரை செய் நாதனே (101)

பரம் உனக்கு எனக்கு வேறு பயம் இலை பராபரா
கரம் எடுத்து நித்தலும் குவித்திடக் கடவதும்
சிரம் உருகி ஆர்த்தலும் சிவபிரானே என்னலும்
உரம் எனக்கு நீ அளித்த ஓம் நமச்சிவாயவே (102)

பச்சை மண் பதிப்பிலே புழுப்பதிந்த வேட்டுவன்
நிச்சலும் நினைந்திட நினைந்தவண்ணம் ஆயிடும்
பச்சைமண் இடிந்துபோய் பறந்த தும்பி ஆயிடும்
பித்தர்காள் அறிந்து கொள்பிரான் இயற்று கோலமே (103)

ஒளியதான காசிமீது வந்துதங்கு வோர்க்கெலாம்
வெளியதான சோதிமேனி விஸ்வநா தனானவன்
தெளியு மங்கை உடன் இருந்து செப்புகின்ற தாரகம்
எளியதோர் இராமராம ராமவிந்த நாமமே (104)

விழியினோடு புனல் விளைந்த வில்லவல்லி யோனியும்
வெளியிலே பிதற்றலாம் விளைவு நின்றது இல்லையே
வெளிபரந்த தேசமும் வெளிக்குள் மூல வித்தையும்
தெளியும் வல்ல ஞானிகள் தெளிந்திருத்தல் திண்ணமே (105)

ஓம் நமச்சிவாயமே உணர்ந்து மெய் உணர்ந்த பின்
ஓம் நமசிவாயமே உணர்ந்து மெய் தெளிந்தபின்
ஓம் நமசிவாயமே உணர்ந்து மெய் உணர்ந்தபின்
ஓம் நமசிவாயமே உட்கலந்து நிற்குமே (106)

அல்லல் வாசல் ஒன்பதும் அடைத்தடைந்த வாசலும்
சொல்லும் வாசல் ஓர் ஐந்தும் சொம்மி விம்மி நின்றது
நல்ல வாசலைத் திறந்து ஞான வாசல் ஊடுபோய்
எல்லைவாசல் கண்டவர் இனிப் பிறப்பது இல்லையே (107)

ஆதியானது ஒன்றுமே அநேக அநேக ரூபமாய்
சாதிபேதமாய் எழுந்து சர்வ ஜீவன் ஆனது
ஆதுயோடு இருந்து மீண்டு எழுந்து ஜென்மம் ஆனபின்
சோதியான ஞானியாகிச் சுத்தமாய் இருப்பனே (108)

மலர்ந்ததாது மூலமாய் வையகம் மலர்ந்ததும்
மலர்ந்தபூ மயக்கம் வந்து அடுத்ததும் விடுத்ததும்
பலன்கள் ஐந்தும் பொறிகலங்கி பூமிமேல் விழுந்ததும்
இலங்கலங்கி நின்ற மாயம் நின்ன மாயம் ஈசனே (109)

பாரடங்க உள்ளதும் பரந்தவானம் உள்ளதும்
ஓரிடமும் இன்றியே ஒன்றி நின்ற ஒண்சுடர்
அரிடமும் இன்றியே அகத்துளும் புறத்துளும்
சீரிடங்கள் கண்டவன் சிவன் தெரிந்த ஞானியே (110)

120 வரை[தொகு]

தல யாத்திரை நீக்கல்
மண்கிடார மேசுமந்து மலையுள் ஏறி மறுகுறீர்
எண்படாத காரியங்கள் இயலும் என்று கூறுகிறீர்
தம்பிரானை நாள் தோறும் தரையிலே தலைபடக்
கும்பிடாத மாந்தரோடு கூடி வாழ்வது எங்ஙனே (111)

ஞான நிலை
நாவினூல் அழிந்ததும் நலம்குலம் அழிந்ததும்
மேவுதேர் அழிந்ததும் விகாரமும் குறைந்ததும்
பாவிகாள் இதென்ன மாயம் வாமநாடு பூசலாய்
ஆவியார் அடங்குநாளில் ஐவரும் அடங்குவார் (112)

இல்லை இல்லை என்று நீர் இயம்புகின்ற ஏழைகாள்
இல்லை என்றஃ நின்றதொன்றை இல்லை என்னலாகுமோ
இல்லை அல்ல ஒன்றுமல்ல இரண்டும் ஒன்றி நின்றதை
எல்லைகண்டு கொண்டபேர் இனிப்பிறப்பது இல்லையே (113)

காரகார காரகார காவல் ஊழி காவலன்
போர போர போர போர போரில் நின்ற புண்ணியன்
மாரமார மாரமார மரங்கள் ஏழும் எய்தஸ்ரீ
ராமராம ராமராம ராம என்னும் நாமமே (114)

நீடுபாரிபல பிறந்து நேயமான காயந்தான்
வீடுவேறு இதுஎன்றபோது வேண்டி இன்பம் வேண்டுமே
பாடி நாலுவேதமும் பாரிலே படர்ந்ததோ
நாடுராம ராமராம ராம என்னும் நாமமே (115)

உயிரு நன்மையால் உடல்எடுத்துவந்து இருந்திடும்
உயிர் உடம்பு ஒழிந்தபோது ரூபரூபமாயிடும்
உயிர் சிவத்தின் மாயை ஆகி ஒன்றைஒன்று கொன்றிடும்
உயிரும் சத்திமாயை ஆகி ஒன்றை ஒன்று தின்னுமே (116)

நெட்டெழுத்து வட்டமோ நிறைந்தமல்லி யோனியும்
நெட்டெழுத்திர் வட்ட மொன்று நின்றதொன்றும் கண்டிலேன்
குற்றெழுத்தில் உற்றதென்று கொம்புகால் குறித்திடில்
நெட்டெழுத்தின் வட்டம் ஒன்றில் நேர்படான் நம் ஈசனே (117)

விண்ணிலுள்ள தேவர்கள் அறியொணாத மெய்ப்பொருள்
கண்ணிலாணி யாகவே கலந்து நின்ற தென்பிரான்
மண்ணிலாம் பிறப்பறுத்து மலரடிகள் வைத்தபின்
அண்ணலாரும் எம்முளே அமர்ந்து வாழ்வது உண்மையே (118)

விண் கடந்து நின்ற சோதி மேலை வாசலைத் திறந்து
கண் களிக்க உள்ளுளே கலந்து பிக்கிருந்தபின்
மண் பிறந்த மாயமும் மயக்கமும் மறந்துபோய்
எண் கலந்த ஈசனோடு இசைந்திருப்பது உண்மையே (119)

மூலமான மூச்சதில் மூச்சறிந்து விட்டபின்
நாளுநாளு முன்னிலோரு நாட்டமாகி நாட்டிடில்
பாலனாகி நீடலாம் பரப்பிரமம் ஆகலாம்
ஆலம் உண்ட கண்டர் ஆணை அம்மைஆணை உண்மையே (120)

130 வரை[தொகு]

மின்எழுந்து மின்பந்து மின் ஒடுங்கும் வாறு போல்
என்னுள் நின்ற என்னுள் ஈசன் என்னுளே அடங்குமே
கண்ணுள் நின்ற கண்ணில் நேர்மை கண் அறிவிலாமையால்
என்னுள் நின்ற வென்னியானி நான் அறிந்தது இல்லையே (121)

இருக்கலாம் இருக்கலாம் அவனியில் இருக்கலாம்
அரிக்குமால் பிரமனும் அண்டம் ஏழு அகற்றலாம்
கருக்கொளாத குழியிலே காலிலாத கண்ணிலே
நெருப்பறை திறந்த பின்பு நீயும் நானும் ஈசனே (122)

ஏகபோகம் ஆகியே இருவரும் ஒருவராய்
போகமும் புணர்ச்சியும் பொருந்துமாறது எங்ஙனே
ஆகிலும் அழிகிலும் அதன் கண்நேயம் ஆனபின்
சாகிலும் பிறக்கிலும் இவை இல்லை இல்லையே (123)

வேதம் நாலும் பூதமாய் விரவும் அங்கி நீரதாய்
பாதமே இலிங்கமாய்ப் பரிந்து பூசைபண்ணினால்
காதினின்று கடைதிறந்து கட்டறுத்த ஞானிகள்
ஆதி அந்தமும் கடந்து அரிய வீடு அடைவரே (124)

ஞான நிலை
பருத்திநூல் முறுக்கிவிட்டுப் பஞ்சிஓதும் மாந்நதரே
துருத்தி நூல் முறுக்கிவிட்டுத் துன்பம் நீங்க வல்லிரேல்
கருத்தில் நூல் கலைபடும் காலநூல் கழிந்திடும்
திருத்தி நூல் கவலறும் சிவாய அஞ்சு எழுத்துமே (125)

சாவதான தத்துவச் சசடங்கு செய்யும் ஊமைகாள்
தேவர் கல்லும் ஆவரோ சிரிப்பதன்றி என்செய்வேன்
மூவராலும் அறியொணாத முக்கணன் முதற்கொழுந்து
காவலாக உம்முளே கலந்திருப்பன் காணுமே (126)
காலைமாலை நீரிலே முழுகும் அந்த மூடர்காள்
காலைமாலை நீரிலே கிடந்ததேரை என்பெறும்
காலமே எழுந்திருந்து கண்கண் மூன்றில் ஒன்றினால்
மூலமே நினைப்பிராகில் முத்திசித்தி ஆகுமே (127)

மதவாதம் மறுத்தல்
எங்கள் தேவர் உங்கள் தேவர் என்றிரண்டு தேவரோ
இங்குமங்கு மாய் இரண்டு தேவரே இருப்பரோ
அங்கும் இங்கும் ஆகிநின்ற ஆதிமூர்த்தி ஒன்றலோ
வங்கவாரம் சொன்ன பேர்கள் வாய்புழுத்து மாள்வரே (128)

அறிவு நிலை
அறையறை இடைக்கிட அன்று தூமை என்கிறீர்
முறை அறிந்து பிறந்தபோதும் அன்றஃ தூமை என்கிறீர்
துரை அறிந்து நீர் குளித்தால் அன்று தூமை என்கிறீர்
பொறை இலாத நீசரோடும் பொருந்து மாறது எங்ஙனே (129)

சுத்தம் வந்த வெளியிலே சிலமிருந்து வந்ததும்
மத்தமாகி நீரிலே துவண்டு மூழ்கும் மூடரே
சுத்தம் ஏது கட்டதேது தூய்மைகண்டு நின்றது ஏது
பித்தர்காயம் உற்றதேது பேதம் ஏதுபோதமே (130)

140 வரை[தொகு]

மாதாமாதம் தூமைதான் மறந்து போன தூமைதான்
மாதம் அற்று நின்றலோ வளர்ந்துருபம் ஆனது
நாதம் ஏது வேதம் ஏது நற்குலங்கள் ஏதடா
வேதம் ஓதும் வேதியா விளைந்தவாறு பேசடா (131)

தூமை அற்று நின்றலோ சுதீபமுற்று நின்றது
ஆண்மை அற்று நின்றலோ வழக்கமற்று நின்றது
தாண்மை அற்று ஆண்மை அற்று சஞ்சலங்கள் அற்றுநின்ற
தூமைதூமை அற்றகாலம் சொல்லும் அற்று நின்றதே (132)

ஊறி நின்ற தூமையை உறைந்து நின்ற சீவனை
வேறு பேசி மூடரே விளைந்தவாறது ஏதடா
நாறுகின்ற தூமையல்லோ நற்குலங்கள் ஆவன
சீறுகின்ற மூடனே அத்தூமை நின்ற கோலமே (133)

தூமைகண்டு நின்ற பெண்ணின் தூமைதானும் ஊறியே
சீமை எங்கும் ஆணும் பெண்ணும் சேர்ந்து உலகம் கண்டதே
தூமைதானும் ஆசையாய் துறந்திருந்த சீவனை
தூமை அற்று கொண்டிருந்த தேசம் ஏது தேசமே (134)

வேணும் வேணும் என்று நீர் வீண் உழன்று தேடுவீர்
வேணும் என்று தேடினாலும் உள்ளதல்லது இல்லையே
வேணும் என்று தேடுகின்ற வேட்கையைத் திறந்தபின்
வேணும் என்ற அப்பொருள் விரைந்து காணல் ஆகுமே (135)

சிட்டர் ஓது வேதமும் சிறந்து ஆக மங்களும்
நட்ட காரணங்களும் நவின்ற மெய்மை நூல்களும்
கட்டி வைத்த போதகம் கதைக்கு கந்த பித்தெலாம்
பொட்டதாய் முடிந்ததே பிரானையான் அறிந்தபின் (136)

நூறுகோடி ஆகமங்கள் நூறுகோடி மந்திரம்
நூறுகோடி நாள் இருந்தும் ஓதினால் அதன்பயன்
ஆறும் ஆறும் ஆறுமாய் அகத்தில் ஓர் எழுத்துமாய்
ஏறுசீர் எழுத்தை ஓத ஈசன் வந்து பேசுமே (137)

காலைமாலை தம்மிலே கலந்து நின்ற காலனார்
மாலைகாலையாச் சிவந்தமாயம் ஏது செப்பிடீர்
காலைமாலை அற்றுநீர் கருத்திலே ஒடுங்கினால்
காலைமாலை ஆகி நின்ற காலன் இல்லை இல்லையே (138)

எட்டு மண்டலத்துளே இரண்டு மண்டலம் வளைத்து
இட்ட மண்டலத்துளே எண்ணி ஆறு மண்டலம்
தொட்ட மண்டலத்திலே தோன்றி மூன்றுமண்டலம்
நட்ட மண்டபத்துளே நாதன் ஆடி நின்றதே (139)

நாலிரண்டு மண்டலத்துள் நாத நின்றது எவ்விடம்
காலிரண்டு மூலநாடி கண்ட தங்கு உருத்திரன்
சேரிரண்டு கண்கலந்து திசைகள் எட்டு மூடியே
மேலிரண்டு தான் கலந்து வீசி ஆடி நின்றதே (140)

150 வரை[தொகு]

அம்மை அப்பன் அப்புநீர் அறிந்ததே அறிகிலீர்
அம்மை அப்பன் அப்புநீர் அரிஅயன் அரனுமாய்
அம்மை அப்பன் அப்புநீர் ஆதியாகி ஆனபின்
அம்மை அப்பன் அன்னை அன்றி யாரும் இல்லை ஆனதே (141)

உருத்தரிப்ப தற்குமுன் உடல்கலந்தது எங்ஙனே
கருத்தரிப்ப தற்குமுன் காரணங்கள் எங்ஙனே
பொருத்திவைத்த போதமும் பொருந்துமாறது எங்ஙனே
குருத்திருத்தி வைத்தசொல் குறித்துணர்ந்து கொள்ளுமே (142)

ஆதி உண்டு அந்தம் அல்லை அன்றிநாலு வேதம் இல்லை
சோதி உண்டு சொல்லும் இல்லை சொல்லிறந்தது ஏதும் இல்லை
ஆதியான மூவரில் அமர்ந்திருந்த வாயுவும்
ஆதி அன்று தன்னையும் யார் அறிவது அண்ணலே (143)

புலால் புலால் புலால் அதென்று பேதமைகள் பேசுறீர்
புலாலை விட்டு எம்பிரான் பிரிந்திருந்தது எங்ஙனே
புலாலுமாய் பிதற்றுமாய் பேருலாவும் தானுமாய்
புலாலிலே முளைத்தெழுந்த பித்தன் காணும் அத்தனே (144)

உதிரமான பால்குடித்து ஒக்க நீர் வளர்ந்ததும்
இதரமாய் இருந்தது ஒன்று இரண்டுபட்டது என்னலாம்
மதிரமாக விட்டதேது மாமிசப்புலால் அதென்று
சதிரமாய் வளர்ந்ததேது சைவரான மூடரே (145)

உண்டகல்லை எச்சில் என்று உள்ளெறிந்து போடுறீர்
கண்ட எச்சில் கையலோ பரமனுக்கும் ஏறுமோ
கண்ட எச்சில் கேளடா கலந்தபாணி அப்பிலே
கொண்ட சுத்தம் ஏதடா குறிப்பிலாத மூடரே (146)

ஓதிவைத்த நூல்களும் உணர்ந்துகற்ற கல்வியும்
மாதுமக்கள் சுற்றமும் மறக்க வந்த நித்திரை
ஏதுபுக் கொளித்ததோ எங்குமாகி நின்றதோ
சோதிபுக் கொளித்தமாயம் சொல்லடா சுவாமியே (147)

ஈனெருமையின் கழுத்தில் இட்ட பொட்டணங்கள் போல்
மூணு நாலு சீலையில் முடிந்த விழ்க்கும் மூடர்காள்
மூணு நாலு லோகமும் முடிவிலாத மூர்த்தியை
ஊணி ஊணி நீர் முடிந்த உண்மை என்ன உண்மையே (148)

சாவல்நாலு குஞ்சது அஞ்சு தாயதீன வாறுபோல்
காயமான கூட்டிலே கலந்துசண்டை கொள்ளுதே
கூவமான கிழநரி கூட்டிலே புகுந்தபின்
சாவல் நாலு குஞ்சது அஞ்சும் தான் இறந்து போனவே (149)

மூலமாம் குளத்திலே முளைத்தெழுந்த கோரையை
காலமே எழுந்திருந்து நாலுகட்டு அறுப்பிரேல்
பாலனாகி வாழலாம் பரப்பிரமம் ஆகலாம்
ஆலம் உண்ட கண்டர் பாதம் அம்மைபாதம் உண்மையே (150)

160 வரை[தொகு]

செம்பினில் களிம்புவந்த சீதரங்கள் போலவே
சீவனுக்கு அழிவுவந்த சேதி ஏது செப்பிடீர்
அம்பினில் எழுதொணாத அணியரங்க சோதியை
வெம்பி வெம்பி வெம்பியே மெலிந்துமேல் கலந்திட
செம்பினில் களிம்புவிட்ட சேதி ஏது காணுமே(151)

நாடி நாடி தம்முளே நயந்து காண வல்லிரேல்
ஓடி ஓடி மீளுவார் உம்முளே அடங்கிடும்
தேடி வந்த காலனும் திகைத்திருந்து போய்விடும்
கோடி காலமும் உகந்து இருந்தவாறது எங்ஙனே (152)

பிணங்குகின்றது ஏதடா பிரஞ்ஞை கெட்ட மூடரே
பிணங்கிலாத பேரொளி பிராணனை அறிகிலீர்
பிணங்கும் ஓர் இருவினைப் பிணக்கு அறுக்க வல்லிரேல்
பிணங்கிலாத பெரிய இன்பம் பெற்றிருக்க லாகுமே (153)

மீன் இறைச்சி தின்றதில்லை அன்றும் இன்றும் வேதியர்
மீன் இருக்கும் நீரலோ மூழ்வதும் குடிப்பதும்
மான் இறைச்சி தின்றதில்லை அன்றும் இன்றும் வேதியர்
மான் உரித்த தோல்லோ மார்பில் நூல் அணிவதும் (154)
 
ஆட்டிறைச்சி தின்றதில்லை அன்றும் இன்றும் வேதியர்
ஆட்டிறைச்சி அல்லவோ யாகம் நீங்கள் ஆற்றலே
மாட்டிறைச்சி தின்றதில்லை அன்றும் இன்றும் வேதியர்
மாட்டிறைச்சி அல்லவோ மரக்கறிக் கிடுவது (155)

அக்கிடீர் அனைத்துயிர்க்கும் ஆதியாகி நிற்பதும்
முக்கிடீர் உமைப்பிடித்து முத்தரித்து விட்டதும்
மைக்கிடில் பிறந்து இறந்து மாண்டுமாண்டு போவதும்
ஒக்கிடில் உமக்குநான் உணர்த்துவித்தது உண்மையே (156)

ஐயன் வந்து மெய்யகம் புகுந்தவாறது எங்ஙனே
செய்ய தெங்கு இளங்குரும்பை நீர்புகுந்த வண்ணமே
ஐயன் வந்து மெய்யகம் புகுந்து கோயில் கொண்டபின்
வையகத்தில் மாந்தரோடு வாய்திறப்பது இல்லையே (157)

நவ்வுமவ்வையும் கடந்து நாடொணாத சியின் மேல்
வவ்வுயவ்வுளும் சிறந்த வண்மை ஞான போதகம்
ஒவ்வுசுத்தி யுள் நிறைந்து உச்சியூடுருவியே
இவ்வகை அறிந்த பேர்கள் ஈசன் ஆணை ஈசனே (158)

அக்கரம் அனாதியோ ஆத்துமம் அனாதியோ
புக்கிருந்த பூதமும் புலன்களும் அனாதியோ
தர்க்கமிக்க நூல்களும் சாத்திரம் அனாதியோ
தற்பரத்தை ஊடறுத்த சற்குரு அனாதியோ (159)

பார்த்ததேது பார்த்திடில் பார்வையூ பழிந்திடும்
கூத்ததாய் இருப்பிரேல் குறிப்பில் அச் சிவம் அதாம்
பார்த்த பார்த்த போதெலாம் பார்வையும் இகந்துநீர்
பூத்த பூத்த காயுமாய் பொருந்துவீர் பிறப்பிலே (160)

170 வரை[தொகு]

நெற்றி பற்றி உழலுகின்ற நீலமா விளக்கினைப்
பத்தி ஒத்தி நின்று நின்று பற்றறுத்தது என்பலன்
உற்றிருந்து பாரடா உள் ஒளிக்கு மேல் ஒளி
அத்தனார் அமர்ந்திடம் அறிந்தவன் அனாதியே (161)

நீரை அள்ளி நீரில்விட்டு நீ நினைந்த காரியம்
ஆரை உன்னி நீரெல்லாம் அவத்திலே இறைக்கிறீர்
வேரை உன்னி வித்தை உன்னி வித்திலே முளைத்தெழுந்த
சீரை உன்ன வல்லிரேல் சிவபதங்கள் சேரலாம் (162)

நெற்றியில் தியங்குகின்ற நீலமா விளக்கினை
உய்த்துணர்ந்து பாரடா உள்ளிருந்த சோதியை
பத்தியில் தொடர்ந்தவர் பரமயம் அதானவர்
அத்தலத்தில் இருந்த பேர்கள் அவர் எனக்கு நாதரே (163)

கருத்தரிக்கு முன்னெலாம் காயம் நின்றது எவ்விடம்
உருத்தரிக்கு முன்னெலாம் உயிர்ப்பு நின்றது எவ்விடம்
அருள் தரிக்கு முன்னெலாம் ஆசை நின்றது வாயுவில்
திருக்கறுத்துக் கொண்டதே சிவாயம் என்று கூறுவீர் (164)

கருத்தரிக்கு முன்னெலாம் காயம் நின்றது தேயுவில்
உருத்தரிக்கு முன்னெலாம் உயிர்ப்பு நின்றது அப்புவில்
அருள் தரிக்கு முன்னெலாம் ஆசை நின்றது வாயுவில்
திருக்கறுத்துக் கொண்டதே சிவாயம் என்று கூறுவீர் (165)

தாதரான தூதரும் தலத்தில் உள்ள சைவரும்
கூதரைப் பறைச்சிமக்கள் கூடிசெய்த கார்ரியம்
வீதிபோகும் ஞானியை விரைந்து கல் எறிந்ததும்
பாதகங்கள் ஆகவே பலித்ததே சிவாயமே (166)

ஓடிஓடி பாவிழைத்து உள்ளங்கால் வெளுத்ததும்
பாவியான பூனை வந்து பாவிலே குதித்ததும்
பணிக்கன் வந்து பார்த்ததும் பாரம் இல்லை என்றதும்
இழை அறுந்து போனதும் என்ன மாயம் ஈசனே (167)

சதுரம் நாலு மறையும் எட்டு தானதங்கி மூன்றுமே
எதிரதான வாயு ஆறு எண்ணும் வட்ட மேவியே
உதிரந்தான் வரைகள் எட்டும் எண்ணும் என்சிரசின்மேல்
கதிரதான காயகத்தில் கலந்தெழுந்த நாதமே (168)

நாலொடாறு பத்துமேல் நாலுமூன்றும் இட்டபின்
மேலுபத்து மாறுடனூ மேதிரண்ட தொன்றுமே
கோல்அஞ் செழுத்துடே குருவி வந்து கூறிடில்
தோலுமேனி நாதமாய்த் தோற்றி நின்ற கோசமே (169)

கோசமாய் எழுந்ததும் கூடுருவி நின்றதும்
தேசமாய் பிறந்ததும் சிவாயம் அஞ்செழுத்துமே
ஈசனார் இருந்திடம் அனேகனேக மந்திரம்
ஆசனம் நிறைந்து நின்ற ஐம்பத்தோர் எழுத்துமே (170)

180 வரை[தொகு]

அங்கலிங்க பீடமாய் ஐயிரண்டு எழுத்திலும்
பொங்குதா மரையிதும் பொருந்துவார் அகத்தினும்
பங்குகொண்ட சோதியும் பரந்த அஞ்சு எழுத்துமே
சிங்கநாத ஓசையும் சிவாயம் அல்லது இல்லையே (171)

உவமையிலாப் பேரொளிக்குள் உருவமானது எவ்விடம்
உவலையாகி அண்டத்தில் உருவி நின்றது எவ்விடம்
தவமதான பரமனார் தரித்து நின்றது எவ்விடம்
தற்பரத்தில் சலம் பிறந்து தாங்கி நின்றது எவ்விடம்

சுகமதாக எருது மூன்று கன்றை ஈன்றது எவ்விடம்
சொல்லுகீழு லோகம் ஏழும் நின்றவாறது எவ்விடம்
அவளதான மேருவும் அம்மைதானது எவ்விடம்
அவனும் அவளும் ஆடலாம் அருஞ்சீவன் பிறந்ததே (172)

உதிக்கின்றது எவ்விடம் ஒடுங்குகின்றது எவ்விடம்
கதிக்குகின்றது எவ்விடம் கன்றுறக்கம் எவ்விடம்
மதிக்க நின்றது எவ்விடம் மதிமயக்கம் எவ்விடம்
விதிக்கவல்ல ஞானிகாள் விரித்துரைக்க வேணுமே (173)

திரும்பி ஆடு வாசல் எட்டு திறம் உரைத்த வாசல் எட்டு
மருங்கிலாத கோலம் எட்டு வன்னியாடு வாசல் எட்டு
துரும்பிலாத கோலம் எட்டு சுற்றிவந்த மருளரே
அரும்பிலாத பூவும் உண்டு ஐயன் ஆணை உண்மையே (174)

தானிருந்து மூல அங்கி தணல் எழுப்பி வாயுவால்
தேனிருந்து அறை திறந்து தித்தி ஒன்று ஒத்தவே
வானிருந்து மதியமூன்று மண்டலம் புகுந்தபின்
ஊனிருந் தளவு கொண்ட யோகி நல்ல யோகியே (175)

முத்தனாய் நினைந்தபோது முடிந்த அண்டத்து ச்சிமேல்
பத்தனாரும் அம்மையும் பரிந்து ஆடல் ஆடினார்
சித்தரான ஞானிகாள் தில்லை ஆடல் என்பீர்காள்
அத்தன் ஆடல் உற்றபோது அடங்கல் ஆடல் உற்றவே (176)

ஒன்றும் ஒன்றும் ஒன்றுமே உலகனைத்தும் ஒன்றுமே
அன்றும் இன்றும் ஒன்றுமே அனாதியானது ஒன்றுமே
கன்றல் நின்ற செம்பொனைக் களிம்பறுத்து நாட்டினால்
அன்றுதெய்வம் உம்முளே அறிந்ததே சிவாயமே (177)

நட்டதாவரங்களும் நவின்ற சாத்திரங்களும்
இட்டமான ஓமகுண்டம் இசைந்த நாலு வேதமும்
கட்டுவைத்த புத்தகம் கடும்பிதற்று இதற்கெலாம்
பொட்டதாய் முடிந்ததே பிரானையான் அறியவே (178)

வட்டமான கூட்டிலே வளர்ந்தெழுந்த அம்புலி
சட்டமீ படைத்திலே சங்குசக்கரங்களாய்
விட்டது அஞ்சு வாசலில் கதவினால் அடைத்தபின்
முட்டையில் எழுந்தசீவன் விட்டவாறது எங்ஙனே (179)

கோயில்பள்ளி ஏதடா குறித்து நின்றது ஏதடா
வாயினால் தொழுது நின்ற மந்திரங்கள் ஏதடா
ஞானமான பள்ளியில் நன்மையாய் வணங்கினால்
காயமான பள்ளியில் காணலாம் இறையையே (180)

190 வரை[தொகு]

நல்லவெள்ளி ஆறதாய் நயந்தசெம்பு நாலதாய்
கொல்லுநாகம் மூன்றதாக் குலாவு செம்பொன் இரண்டதாய்
வில்லின் ஓசை ஒன்றுடன் விளங்க ஊத வல்லிரேல்
எல்லைஒத்த சோதியானை எட்டுமாற்ற தாகுமே (181)

மனத்தகத்து அழுக்கறாத மவுன ஞான யோகிகாள்
வனத்தகத்து இருக்கினும் மனத்தகத்து அழுக்கறார்
மனத்தகத்து அழுக்கறுத்த மவுன ஞான யோகிகாள்
முலைத்தடத்து இருக்கினும் பிறப்பறுத்து இருப்பரே (182)

உருவும் அல்ல ஒளியும் அல்ல ஒன்றதாகி நின்றதே
மருவும் அல்ல கந்தம் அல்ல மந்தநாடி உற்றதல்ல
பெரியதல்ல சிறியதல்ல பேசும் ஆவி தானும் அல்ல
அரியதாக நின்ற நேர்மை யாவர் காண வல்லிரே (183)

ஈரெழுத்து உலகெலாம் உதித்தஅட் சரத்துளே
ஈரெழுத்து இயம்புகின்ற இன்பமேது அறிகிலீர்
மூவெழுத்து மூவராய் மூண்டெழுந்த மூர்த்தியை
நாலெழுத்து நாவிலே நவின்றதே சிவாயமே (184)

ஆதி அந்த மூலவிந்து நாதம் ஐந்து பூதமாம்
ஆதி அந்த மூலவிந்து நாதம்மேவி நின்றதும்
ஆதி அந்த மூலவிந்து நாதம்மேவி நின்றதும்
ஆதி அந்த மூலவிந்து நாதமே சிவாயமே (185)

அன்னம்இட்ட பேரெலாம் அனேககோடி வாழவே
சொன்னம் இட்ட பேரெலாம் துரைத்தனங்கள் பண்ணலாம்
விண்ணம் இட்ட பேரெலாம் வீழ்வர்வெந் நரகிலே
கன்னம் இட்ட பேரெலாம் கடந்துநின்ற திண்ணமே (186)

ஓதொணமல் நின்றநீர் உறக்கம் ஊணும் அற்றநீர்
சாதிபேதம் அற்றநீர் சங்கையின்றி நின்ற நீர்
கோதிலாத அறிவிலே குறிப்புணர்ந்து நின்றநீர்
ஏதும் இன்றி நின்றநீர் இயங்குமாறது எங்ஙனே (187)

பிறந்தபோது கோவணம் இலங்குநூல் குடுமியும்
பிறந்ததுடன் பிறந்ததோ பிறங்குநாள் சடங்கெலாம்
மறந்த நாலு வேதமும் மனத்துளே உதித்ததோ
நிலம்பிளந்து வான் இடிந்து நின்றது என்ன வல்லிரே (188)

துருத்தியுண்டு கொல்லன் உண்டு சொர்னமான சோதி யுண்டு
திருத்தமாய் மனத்தில் உன்னித் திகழ ஊத வல்லிரேல்
பெருத்ததூண் இலங்கியே பிழம்பதாய் விரிந்திடும்
நிருத்தமான சோதியும் நீயும் அல்லது இல்லையே (189)

வேடமிட்டு மணிதுலக்கி மிக்க தூபதீபமாய்
ஆடறுத்து கூறுபோட்ட அவர்கள் போலும் பண்ணுறீர்
தேடிவைத்த செம்பெலாம் திரள்படப் பரப்பியே
போடுகின்ற புட்பபூசை பூசை என்ன பூசையே (190)

200 வரை[தொகு]

முட்டுகண்ட தூமையின் முளைத்தெழுந்த சீவனை
கட்டிகொண்டு நின்றிடம் கடந்து நோக்க வல்லிரேல்
முட்டும் அற்று சுட்டும் அற்று முடியில் நின்ற நாதனை
எட்டுதிக்கும் கையினால் இருந்தவீட தாகுமே (191)

அருக்கனோடு சோமனும் அதுக்கும் அப்புறத்திலே
நெருக்கி ஏறு தாரகை நெருங்கி நின்ற நேர்மையை
உருக்கி ஓர் எழுத்துளே ஒப்பிலாத வெளியிலே
இருக்கவல்ல பேரலோ இனிப்பிறப்பது இல்லையே (192)

மூலவட்டம் மீதிலே முளைத்த அஞ்சு எழுத்தின் மேல்
கோலவட்டம் மூன்று மாய் குலைந்தலைந்துநின்ற நீர்
ஞானவட்ட மன்றுளே நவின்ற ஞானம் ஆகிலோ
ஏலவட்டம் ஆகியே இருந்ததே சிவாயமே (193)

சுக்கிலத் திசையுளே சுரோணிதத் தின் வாசலுள்
முச்சதுரம் எட்டுளே மூலாதார வரையிலே
அச்சமற்ற சவ்வுளே அரி அரன் அயனுமாய்
உச்சரிக்கும் மந்திரம் உண்மையே சிவாயமே (194)

பூவம் நீரும் என் மனம் பொருந்து கோயில் என் உளம்
ஆவிஓடி லிங்கமாய் அகண்டம் எங்கும் ஆகினால்
மேவுகின்ற ஐவரும் விளங்கு தூபதீபமாய்
ஆடுகின்ற கூத்தனுக்கோர் அந்தி சந்தி இல்லையே (195)

உருக்கலந்த பின்னலோ உன்னை நான் அறிந்தது
இருக்கில் என் மறக்கில் ஏன் நினைந்திருந்த போதெலாம்
உருக்கலந்து நின்றபோது நீயும் நானும் ஒன்றலோ
திருக்கலந்த போதலோ தெளிந்ததே சிவாயமே (196)

சிவாயம் அஞ்செழுத்திலே தெளிந்து தேவர் ஆகலாம்
சிவாயம் அஞ்செழுத்திலே தெளிந்து வானம் ஆளலாம்
சிவாயம் அஞ்செழுத்துளே தெளிந்து கொண்ட வான் பொருள்
சிவாயம் அஞ்செழுத்துளே தெளிந்து கொள்ளும் உண்மையே (197)

பொய்க் குடத்தில் ஐந்நொ துங்கி போகம் வீசுமாறுபோல்
இச்சடமும் இந்திரியமும் நீருமேல் அலைந்ததே
அக்குடம் சலத்தை மொண்டு அமர்ந்திருந்த வாறு போல்
இச்சடம் சிவத்தை மொண்டு உகந்து அமர்ந்து இருப்பதே (198)

பட்டமும் கயிறுபோல் பறக்க நின்ற சீவனை
பார்வையாலே பார்த்து நீ படுமுடிச்சு போடடா
திட்டவும் படாதடா சீவனை விடாதடா
கட்டடாநீ சிக்கெனக் களவறிந்த கள்ளனை (199)

அல்லிறந்து பகலிறந்து அகம் பிரமம் இறந்துபோய்
அண்டரண்ட மும்கடந்த அனேகனேக ருபமாய்
சொல்லிறந்து மனமிறந்த சுக சொருப உண்மையைச்
சொல்லியாற என்னில்வேறு துணைவரில்லை ஆனதே (200)

210 வரை[தொகு]

ஐயிரண்டு திங்களாய் அடங்கி நின்ற தூமைதான்
கையிரண்டு காலிரண்டு கண்ணிரண்டும் ஆகியே
மெய்திரண்டு சத்தமாய் விளங்கிரச கந்தமும்
துய்யகாயம் ஆனதும் சொல்லுகின்ற தூமையே (201)

அங்கவிங்க பீடமும் அசவை மூன்று எழுத்தினும்
சங்கு சக்கரத்திலும் சகல வானத்திலும்
பங்கு கொண்ட யோகிகள் பரமவாசல் அஞ்சினும்
சிங்கநாத ஓசையும் சிவாயம் அல்லது இல்லையே (202)

அஞ்செழுத்தும் மூன்றெழுத்தும் என்றுரைக்கும் அன்பர்கள்
அஞ்செழுத்தும்மூன்றெழுத்தும் அல்லகாணும் அப்பொருள்
அஞ்செழுத்து நெஞ்சழுத்தி அவ்வெழுத் தறிந்தபின்
அஞ்செழுத்தும் அவ்வின் வண்ணம் ஆனதே சிவாயமே (203)

ஆதரித்த மந்திரம் அமைந்த ஆக மங்களும்
மாதர்மக்கள் சுற்றமும் மயக்கவந்த நித்திரை
ஏதுபுக் கொளித்ததோ எங்கும் ஆகி நின்றதோ
சோதிபுக் கொளித்திடம் சொல்லடா சுவாமியே (204)

அக்கரம் அனாதியோ ஆத்துமா அனாதியோ
புக்கிருந்த பூதமும் புலன்களும் அனாதியோ
தக்கமிக்க நூல்களும் சதாசிவம் அனாதியோ
மிக்க வந்த யோகிகாள் விரைந்துரைக்க வேணுமே (205)

ஒன்பதான வாசல் தான் ஒழியுநாள் இருக்கையில்
ஒன்பதாம் ராமராம ராம என்னும் நாமமே
வன்மமான பேர்கள்வாக்கில் வந்து நோய் அடைப்பராம்
அன்பரான பேர்கள் வாக்கில் ஆய்ந்தமைந்து இருப்பதே (206)

அள்ளி நீரை இட்டதேது அங்கையில் குழைத்ததேது
மெள்ளவே மிணமிண வென்று விளம்புகிற்கி மூடர்கள்
கள்ள வேடம் இட்ட தேது கண்ணை மூடி விட்டதேது
மெள்ளவே குருக்களே விளம்பிடீர் விளம்பிடீர் (207)

அன்னை கர்ப்பத் தூமையில் அவதரித்த சுக்கிலம்
மின்னையே தரித்ததும் பனித்துளி போலாகுமே
உன்னிதொக் குளழலும் தூமையுள் அடங்கிடும்
பின்னையே பிறப்பதும் தூமைகாணும் பித்தரே (208)

அழுக்கறத் தினங்குளித்து அழுக்கறாத மாந்தரே
அழுக்கிருந்த அவ்விடம் அழுக்கிலாத்து எவ்விடம்
அழுக்கிருந்த அவ்விடத்து அழுக்கறுக்க வல்லிரேல்
அழுக்கிலாத சோதியோடு அணுகி வாழலாகுமே (209)

அனுத் திரண்ட கண்டமாய் அனைத்து பல்லி போனியாய்
மனுப்பிறந்து ஓதி வைத்த நூலிலே மயங்குறீர்
சனிப்பது ஏது சாவது ஏது தாபரத்தின் ஊடுபோய்
நினைப்பது ஏது நிற்பது ஏது நீர் நினைந்து பாருமே (210)

220 வரை[தொகு]

ஆதியாகி அண்டரண்டம் அப்புறத்தும் அப்புறம்
சோதியாகி நின்றிலங்கு சுருதிநாத சோமனை
போதியாமல் தம்முளே பெற்றுணர்ந்த ஞானிகள்
சாதிபேதம் என்பதொன்று சற்றுமில்லை இல்லையே (211)

ஆக்கை முப்பது இல்லையே ஆதி காரணத்திலே
நாக்கை மூக்கையுள் மடித்து நாதநாடி யூடுபோய்
எக்கறுத்தி ரெட்டையும் இறுக்கழுத்த வல்லிரேல்
பார்க்க பார்க்க திக்கெல்லாம் பரப்பிரம்மம் ஆகுமே (212)

அஞ்சும் அஞ்சும் அஞ்சும் அஞ்சும் அல்லல் செய்து நிற்பதும்
அஞ்சும் அஞ்சும் அஞ்சுமே அமர்ந்துளே இருப்பதும்
அஞ்சும் அஞ்சும் அஞ்சுமே ஆதரிக்க வல்லிரேல்
அஞ்சும் அஞ்சும் உம்முளே அமர்ந்ததே சிவாயமே (213)

அஞ்செழுத்தின் அனாதியாய் அமர்ந்து நின்றது ஏதடா
நெஞ்செழுத்தி நின்றுகொண்டு நீ செபிப்பது ஏதடா
அஞ்செழுத்தின் வாளதால் அறுப்பதாவது ஏதடா
பிஞ்செழுத்தின் நேர்மைதான் பிரித்துரைக்க வேண்டுமே (214)

உயிரிருந்தது எவ்விடம் உடம்பெடுப்பதின் முனம்
உயிரதாவது ஏதடா உடம்பதாவது ஏதடா
உயிரையும் உடம்பையும் ஒன்றுவிப்பது ஏதடா
உயிரினால் உடம்பெடுத்த உண்மைஞானி சொல்லடா (215)

சுழித்தவோர் எழுத்தையும் சொன்முகத்து இருத்தியே
துன்ப இன்பமுங் கடந்து சொல்லுமூல நாடிகள்
அழுத்தமான அக்கரம் அங்கியுள் எழுப்பியே
ஆறுபங்கயம் கலந்து அப்புறத் தலத்துளே (216)

உருத்தரிப்ப தற்குமுன் உயிர் புகுந்த நாதமும்
கருத்தரிப்ப தற்குமுன் காயம் என்ன சோணிதம்
அருள்தரிப்ப தற்குமுன் அறிவு மூலா தாரமாம்
குறித்தறிந்து கொள்ளுவீர் குணங்கெடும் குருக்களே (217)

எங்கும் உள்ள ஈசனார் எம்முடல் புகுந்தபின்
பங்குகூறு பேசுவார் பாடுசென்று அணுகிலார்
எங்கள் தெய்வம் உங்கள் தெய்வம் என்றிரண்டு பேதமோ
உங்கள் பேதம் அன்றியே உண்மை இரண்டும் இல்லையே (218)

அரியுமாகி அயனுமாகி அண்டமெங்கும் ஒன்றதாய்
பெரியதாகி உலகுதன்னில் நின்றபாதம் ஒன்றலோ
விரிவதென்று வேறுசெய்த வேடமிட்ட மூடரே
அறிவினோடு பாரும் இங்கும் அங்கும் எங்கும் ஒன்றதே (219)

வெந்தநீறு மெய்க்கணிந்து வேடமும் தரிக்கிறீர்
சிந்தையுள் நினைந்துமே தினம் செபிக்கும் மந்திரம்
முந்த மந்திரத்திலோ மூல மந்திரத்திலோ
எந்த மந்திரத்திலோ ஈசன் வந்து இயங்குமே (220)

230 வரை[தொகு]

அகார காரணத்திலே அனேகனேக ருபமாய்
உகார காரணத்திலே உருத்தரித்து நின்றனன்
மகார காரணத்திலே மயக்குகின்ற வையகம்
சிகார காரணத்திலே தெளிந்ததே சிவாயமே (221)

அவ்வெழுத்தில் உவ்வுவந்து அகாரமும் சனித்ததோ
உவ்வெழுத்து மவ்வெழுத்தும் ஒன்றைஒன்றி நின்றதோ
செவ்வைஒத்து நின்றலோ சிவபதங்கள் சேரினும்
மிவ்வையொத்த ஞானிகாள் விரித்துரைக்க வேணுமே (222)

ஆதியான அஞ்சிலும் அனாதியான நாலிலும்
சோதியான மூன்றிலும் சொருபம் அற்ற ரெண்டிலும்
நீதியான தொன்றிலே நிறைந்து நின்ற வஸ்துவை
ஆதியான தொன்றுமே அற்றதஞ் செழுத்துமே (223)

வானிலாத்து ஒன்றுமில்லை வானுமில்லை வானிடில்
ஊனிலாத்து ஒன்றுமில்லை ஊனுமில்லை ஊனிடில்
நானிலாத்து ஒன்றுமில்லை நானுமில்லை நண்ணிடில்
தானிலாத்து ஒன்றுமில்லை தயங்கி ஆடுகின்றதே (224)

சுழித்ததோர் எழுத்தை உன்னி சொல்முகந்து இருத்தியே
துன்ப இன்பமுங்கடந்து சொல்லும் நாடி யூடுபோய்
அழுத்தமான வக்கரத்தின் அங்கியை எழுப்பியே
ஆறுபங்கயம் கடந்து அப்புறத்து வெளியிலே

விழித்த கண் குவித்தபோது அடைந்துபோய் எழுத்தெலாம்
விளைந்துவிட்ட இந்திரசால வீடதான வெளியிலே
அழுத்தினாலு மதிமயங்கி அனுபவிக்கும் வேளையில்
அவனுமுண்டு நானுமில்லை நாருமில்லை ஆனதே (225)

நல்லமஞ்சனங்கள் தேடி நாடி நாடி ஓடு றீர்
நல்லமஞ்சனங்களுண்டு நாதன் உண்டு நம்முளே
எல்லை மஞ்சனங்கள் தேடி ஏகபூசை பண்ணினால்
தில்லை மேவும் சீவனும் சிவபதத்துள் ஆடுமே (226)

உயிர் அகத்தில் நின்றிடும் உடம்பெடுத்ததற்கு முன்
உயிர் அகாரம் ஆயிடும் உடல் உகாரம் ஆயிடும்
உயிரையும் உடம்பையும் ஒன்றுவிப்பது அச்சிவம்
உயிரினால் உடம்புதான் எடுப்பவாறு உரைக்கினே (227)

அண்டம் ஏழும் உழலவே அனந்தயோனி உழலவே
பண்டைமால் அயனுடன் பரந்து நின்று உழலவே
எண்திசை கடந்து நின்ற இரூண்டசத்தி உழலவே
அண்டரண்டம் ஒன்றதாய் ஆதிநட்டம் ஆடுமே (228)

உருவநீர் உறுப்புகொண்டு உருத்தரித்து வைத்திடும்
பெரியபாதை பேசுமோ பிசாசை ஒத்த மூடரே
கரியமாலும் அயனுமாக காணொணாத கடவுளை
உரிமையாக உம்முளே உணர்ந்துணர்ந்து கொள்ளுமே (229)

பண்ணிவைத்த கல்லையும் பழம் பொருள் அதென்றுநீர்
எண்ணமுற்றும் என்ன பேர் உரைக்கிறீர்கள் ஏழைகாள்
பண்ணவும் படைக்கவும் படைந்து வைத்து அளிக்கவும்
ஒண்ணுமாகி உலகளித்த ஒன்றை நெஞ்சில் உன்னுமே (230)

240 வரை[தொகு]

நாலதான யோனியும் நவின்ற விந்தும் ஒன்றதாய்
ஆலதான வித்துளே அமர்ந்தொடுங்கு மாறுபோல்
சூலதான உற்பனம் சொல்வதான மந்திரம்
மேலதான ஞானிகாள் விரித்துரைக்க வேணுமே (231)

அருவமாய் இருந்தபோது அன்னை அங்கு அறிந்திலை
உருவமாய் இருந்தபோது உன்னை நான் அறிந்தனன்
குருவினால் தெளிந்து கொண்டு கோதிலாத ஞானமாம்
பருவமான போதலோ பரப்பிரமம் ஆனதே (232)

பிறப்பதும் இறப்பதும் பிறந்திடாது இருப்பதும்
மறப்பதும் நினைப்பதும் மறைந்ததைத் தெளிந்ததும்
துறப்பதும் தொடுப்பதும் சுகித்துவாரி உண்பதும்
பிறப்பதும் இறப்பதும் பிறந்தவீடு அடங்குமே (233)

கண்ணிலே இருப்பனே கருங்கடல் கடைந்தமால்
விண்ணிலே இருப்பனே மேவி அங்கு நிற்பனே
தன்னுளே இருப்பனே தராதலம் படைத்தவன்
என்னுளே இருப்பனே எங்குமாகி நிற்பனே (234)

ஆடுநாடு தேடினும் ஆனை சேனை தேடினும்
கோடிவாசி தேடினும் குறுக்கே வந்து நிற்குமோ
ஓடிஇட்ட பிச்சையும் உகந்து நெய்த தர்மமும்
சாடிவிட்ட குதிரைபோல தர்மம் வந்து நிற்குமே (235)

எள இரும்பு கம்பளி இடும்பருத்தி வெண்கலம்
அள்ளி உண்ட நாதனுக்கோர் ஆடைமாடை வஸ்திரம்
உள்ளிருக்கும் வேதியர்க்கு உற்றதானம் ஈதிரால்
மெள்ள வந்து நோய் அனைத்தும் மீண்டிடும் சிவாயமே (236)

ஊரிலுள்ள மனிதர்காள் ஒருமன தாய்க்கூடியே
தேரிலே வடத்தைவிட்டு செம்பை வைத்து இழுக்கிறீர்
ஆரினாலும் அறியொணாத ஆதிசித்த நாதரை
பேதையான மனிதர் பண்ணும் பிரளிபாரும் பாருமே (237)

மருள்புகுந்த சிந்தையால் மயங்குகின்ற மாந்தரே
குருக்கொடுத்த மந்திரம் கொண்டு நீந்த வல்லிரேல்
குருக்கொடுத்த தொண்டரும் குகனொடிந்த பிள்ளையும்
பருத்திபட்ட பன்னிரண்டுபாடுதான் படுவரே (238)

அன்னை கர்ப்ப அறை அதற்குள் அங்கியின் பிரகாசமாய்
அந்தறைக்குள் வந்திருந்து அரியவிந்து ரூபமாய்
தன்னை ஒத்து நின்றபோது தடையறுத்து வெளியதாய்
தங்கநற் பெருமை தந்து தலைவனாய் வளர்ந்ததே

உன்னையற்ப நேரமும் மறந்திருக்க லாகுமோ
உள்ள மீது உறைந்தெனை மறைப்பிலாத சோதியை
பொன்னைவென்ற பேரெளிப் பொருவிலாத ஈசனே
பொன்னடிப் பிறப்பில்லாமை என்று நல்க வேணுமே (239)

பிடித்ததொண்டும் உம்மதோ பிரமமான பித்தர்காள்
தடித்தகோலம் அத்தை விட்டு சாதிபே தங்கொண்மினோ
வடித்திருந்த தோர்சிவத்தை வாய்மை கூற வல்லிரேல்
திடுக்கமுற்ற ஈசனைச் சென்று கூடலாகுமே (240)

250 வரை[தொகு]

சத்தி நீ தயவும்நீ தயங்குசங்கின் ஓசை நீ
சித்தி நீ சிவனும்நீ சிவாயமாம் எழுத்து நீ
முத்திநீ முதலும் நீ மூவரான தேவர் நீ
அத்திபூரம் உம்முளே அறிந்துணர்ந்து கொள்ளுமே (241)

சட்டையிட்டு மணிதுலங்கும் சாத்திரச் சழக்கரே
பொஸ்தகத்தை மெத்தவைத்து போதமோதும் பொய்யரே
நிட்டை ஏது ஞானமேது நீரிருந்த அக்ஷரம்
பட்டை ஏது சொல்லிரே பாதகக் கபடரே (242)

உண்மையான சுக்கிலம் உபாயமாய் இருந்ததும்
வெண்மையாகி நீரிலே விரைந்து நீரதானதும்
தண்மையான காயமே தரித்து உருவம் ஆனதும்
தெண்மையான ஞானிகாள் தெளிந்துரைக்க வேணுமே (243)

வஞ்சகப் பிறவியை மனத்துளே விரும்பியே
அஞ்செழுத்தின் உண்மையை அறிவிலாத மாந்தர்காள்
வஞ்சகம் பிறவியை வதைத்திடவம் வல்லிரேல்
அஞ்செழுத்தின் உண்மையை அறிந்து கொள்ள லாகுமே (244)

காயிலாத சோலையில் கனியுகந்த வண்டுகள்
ஈயிலாத தேனையுண்டு இராப்பகல் உறங்குறீர்
பாயிலாத கப்பலேறி அக்கரைப் படுமுனே
வாயினால் உரைப்பதாகு மோமவுன ஞானமே (245)

பேய்கள் பேய்கள் என்கிறீர் பிதற்றுகின் றபேயர்காள்
பேய்கள் பூசை கொள்ளுமோ பிடாரி பூசை கொள்ளுதோ
ஆதி பூசை கொள்ளுமோ அனாதி பூசை கொள்ளுதோ
காயமான பேயலோ கணக்கறிந்து கொண்டதே (246)

மூல மண்டலத்திலே முச்சதுரம் ஆதியாய்
நாலுவாசல் எம்பிரான் நடு உதித்த மந்திரம்
கோலி எட்டி தழுமாய் குளிர்ந் தலர்ந்த தீட்டமாய்
மேலும் வேறு காண்கிலேன் விளைந்ததே சிவாயமே (247)

ஆதிகூடு நாடிஓடி காலைமாலை நீரிலே
சோதி மூலமான நாடி சொல்லிறந்த தூவெளி
ஆதிகூடி நெற்பறித்த காரமாதி ஆகமம்
பேதபேதம் ஆகியே பிறந்துடல் இறந்ததே (248)

பாங்கினோடு இருந்து கொண்டு பரமன் அஞ்செழுத்துளே
ஓங்கிநாடி மேல் இருந்து உச்சரித்த மந்திரம்
மூங்கில் வெட்டி நார் உரித்து முச்சில் செய்விதத்தினில்
ஆய்ந்த நூலில் தோன்றுமே அறிந்துணர்ந்து கொள்ளுமே (249)

புண்டரீக மத்தியில் உதித்தெழுந்த சோதியை
மண்டலங்கள் மூன்றினோடுமன்னுகின்ற மாயனை
அண்டரண்டம் ஊடறுத்து அறிந்துணர வல்லிரேல்
கண்ட கோயில் தெய்வம் என்று கையெடுப்பது இல்லையே (250)

260 வரை[தொகு]

அம்பலங்கள சந்தியில் ஆடுகின்ற வம்பனை
அன்பனுக்குள் அன்பனாய் நிற்பன் ஆதி வீரனே
அன்பருக்குள் அன்பராய் நின்ற ஆதி நாயனே
உன்பருக்கு உண்மையாய் நின்ற உண்மை உண்மையே (251)

அண்ணலாவது ஏதடா அறிந்துரைத்த மந்திரம்
தண்ணலாக வந்தவன் சகல புராணம் கற்றவன்
கண்ணனாக வந்தவன் காரணத் துதித்தவன்
ஒண்ணதாவது ஏதடா உண்மையான மந்திரம் (252)

உள்ளதோ புறம்பதோ உயிர் ஒடுங்கி நின்றிடம்
மெள்ளவந்து கிட்டிநீர் வினவவேணும் என்கிறீர்
உள்ளதும் புறம்பதும் ஒத்தபோது நாதமாம்
கள்ளவாசலைத் திறந்து காணவேணும் அப்பனே (253)

ஆரலைந்து பூதமாய் அளவிடாத யோனியும்
பாரமான தேவரும் பழுதிலாத பாசமும்
ஓரொணாத அண்டமும் உலோகலோக லோகமும்
சேர வெந்து போயிருந்த தேகம் ஏது செப்புமே (254)

என்னகத்துள் என்னை நான் எங்கு நாடி ஓடினேன்
என்னகத்துள் என்னைநான் அறிந்திலாத தாகையால்
என்னகத்துள் என்னே நான் அறிந்துமே தெரிந்தபின்
என்னகத்துள் என்னை அன்றி யாதுமென்றும் இல்லையே (255)

விண்ணினின்று மின்னெழுந்து மின்னொடுங்கும் ஆறுபோல்
என்னுள் நின்றும் எண்ணும் ஈசன் என்னகத்து இருக்கையால்
கண்ணினின்று கண்ணில் தோன்றும் கண்ணறி விலாமையால்
என்னுள் நின்ற என்னையும் யான்றிந்தது இல்லையே (256)

அடக்கினும் அடக்கொணாத அம்பலத்தின் ஊடுபோய்
அடக்கினும் அடக்கொணாத அன்புருக்கும் ஒன்றுளே
கிடக்கினும் இருக்கினும் கிலேசம் வந்து இருக்கினும்
நடக்கினும் இடைவிடாத நாதசங் கொலிக்குமே (257)

மட்டுலாவு தண் துழாய் அலங்கலாய் புனல்சுழல்
விட்டு வீழில் தாகபோக விண்ணில் மண்ணில் வெளியினும்
எட்டினோடு இரண்டினும் இதத்தினால் மனந்தனைக்
கட்டி வீடிலாது வைத்த காதலின்பம் ஆகுமே (258)

ஏகமுத்தி மூன்று முத்தி நாலுமுத்தி நன்மைசேர்
போகமுற்றி புண்ணியத்தில் முத்தி அன்றி முத்தாய்
நாகமுற்ற சயனமாய் நலங் கடல் கடந்த தீ
யாகமுற்றி ஆகி நின்ற தென்கொலாதி தேவனே (259)

மூன்று முப்பது ஆறினோடு மூன்று மூன்று மாயமாய்
மூன்று முத்தி ஆகி மூன்று மூன்றுமூன்று மூன்றுமாய்
தோன்றுசாதி மூன்றதாய் துலக்கமில் விளக்கதாய்
ஏன்றனாவின் உள்புகுந்த தென்கொலோ நம் ஈசனே (260)

270 வரை[தொகு]

ஐந்தும் ஐந்தும் ஐந்துமாய் அல்லவற்றுள் ஆயுமாய்
ஐந்தும் மூன்றும் ஒன்றுமாகி நின்ற ஆதிதேவனே
ஐந்தும் ஐந்தும் ஐந்துமாய் அமைந்தனைத்தும் நின்ற நீ
ஐந்தும் ஐந்தும் ஆயநின்னை யாவர் காண வல்லரே (261)

ஆறும் ஆறும் ஆறுமாய் ஓர் ஐந்தும் ஐந்தும் ஐந்துமாய்
ஏறுசீர் இரண்டு மூன்றும் ஏழும் ஆறும் எட்டுமாய்
வேறு வேறு ஞானமாகி மெய்யினோடு பொய்யுமாய்
ஊறும் ஓசையாய் அமர்ந்த மாமாயம் மாயனே (262)

எட்டும் எட்டும் எட்டுமாய் ஓர் ஏழும் ஏழும் ஏழுமாய்
எட்டும் ஒன்றும் மூன்றுமாகி நின்ற ஆதிதேவனே
எட்டுமாய் பாதமோடு இறைஞ்சி நின்ற வண்ணமே
எட்டெழுத்தும் ஓதுவார்கள் அல்லல் நீங்கி நிற்பரே (263)

பத்தினோடு பத்துமாய் ஓர் ஏழினோடு ஒன்பதாய்
பத்து நாற் திசைக்கு நின்ற நாடு பெற்ற நன்மையா
பத்துமாய் கொத்தமோடும் அத்தலமிக் காதிமால்
பத்தர்கட்க லாதுமுத்தி முத்தி முத்தியாகுமே (264)

வாசியாகி நேசம் ஒன்றி வந்தெதிர்ந்த தென்னுக
நேசமாக நாளுலாவ நன்மைசேர் பவங்களில்
வீசிமேல் நிமிர்ந்த தோளியில்லையாக்கி னாய்கழல்
ஆசையால் மறக்கலாது அமரர் ஆகல் ஆகுமே (265)

எளியதான காயமீதும் எம்பிரான் இருப்பிடம்
அளிவுறாது நின்றதே அகாரமும் உகாரமும்
கொளுகையான ஜோதியும் குலாவிநின்றது அவ்விடம்
வெளியதாகும் ஒன்றிலே விளைந்ததே சிவாயமே (266)

அஞ்செழுத்தும் மூன்றெழுத்தும் என்றுரைக்கும் அன்பர்காள்
அஞ்செழுத்தும் மூன்றெழுத்தும் அல்லகாணும் அப்பொருள்
அஞ்செழுத்தை நெஞ்சழுத்தி அவ்வெழுத்தை அறிந்தபின்
அஞ்செழுத்தும் மூன்றெழுத்தும் அவ்வுமாம் சிவாயமே (267)

பொய்யுரைக்க போதமென்று பொய்யருக் கிருக்கையால்
மெய்யுரைக்க வேண்டுதில்லை மெய்யர்மெய்க் கிலாமையால்
வையகத்தில் உண்மை தன்னை வாய்திறக்க அஞ்சினேன்
நையவைத்தது என்கொலோ நமசிவாய நாதனே (268)

ஒன்றை ஒன்று கொன்றுகூட உணவுசெய்து இருக்கினும்
மன்றினூடு பொய்களவு மாறுவேறு செய்யினும்
பன்றிதேடும் ஈசனைப் பரிந்துகூட வல்லிரேல்
அன்றுதேவர் உம்முளே அறிந்துணர்ந்து கொள்ளுமே (269)

மச்சகத்து ளே இவர்ந்து மாயைபேசும் வாயூவை
அச்சகத்துளே இருந்து அறிவுணர்த்தி கொள்விரேல்
அச்சகத்து ளேயிருந்து அறுஉணர்த்தி கொண்டபின்
இச்சை அற்ற எம்பிரான் எங்கும் ஆகி நிற்பனே (270)

280 வரை[தொகு]

வயலிலே முளைத்த நெல் களையதான வாறுபோல்
உலகினோரும் வண்மைகூறில் உய்யுமாறது எங்ஙனே
விரகிலே முளைத்தெழுந்த மெய்யலாது பொய்யதாய்
நரகிலே பிறந்திருந்து நாடுபட்ட பாடதே (271)

ஆடுகின்ற எம்பிரானை அங்குமிங்கும் என்று நீர்
தேடுகின்ற பாவிகாள் தெளிந்ததொன்றை ஓர்கிலீர்
காடுநாடு வீடுவீண் கலந்து நின்ற கள்வனை
நாடிஓடி உம்முளே நயந்துணர்ந்து பாருமே (272)

ஆடுகின்ற அண்டர் கூடும் அப்புற மதிப்புறம்
தேடுநாலு வேதமும் தேவரான மூவரும்
நீடுவாழி பூதமும் நின்றதோர் நிலைகளும்
ஆடுவாழின் ஒழியலா தனைத்தும் இல்லை இல்லையே (273)

ஆவதும் பரத்துளே அழிவதும் பரத்துளே
போவதும் பரத்துளே புகுவதும் பரத்துளே
தேவரும் பரத்துளே திசைகளும் பரத்துளே
யாவரும் பரத்துளே யானும் அப் பரத்துளே (274)

ஏழுபார் எழுகடல் இடங்கள் எட்டு வெற்புடன்
குழுவான் கிரிகடந்து சொல்லும் ஏழுலகமும்
ஆழிமால் விசும்புகொள் பிர்மாண்டரண்ட அண்டமும்
ஊழியான் ஒளிக்குளே உதித்துடன் ஒடுங்குமே (275)

கயத்துநீர் இறைக்குறீர் கைகள் சோர்ந்து நிற்பதேன்
மனத்துள் ஈரம் ஒன்றில்லாத மதியிலாத மாந்தர்காள்
அகத்துள் ஈரம் கொண்டுநீர் அழுக்கறுக்க வல்லிரேல்
நினைத்திருந்த வோதியும் நீயும் நானும் ஒன்றலோ (276)

நீரிலே பிறந்திருந்து நீர் சடங்கு செய்கிறீர்
ஆரை உன்னிநீரெலாம்அவத்திலே இறைக்கிறீர்
வேரை உன்னி வித்தை உன்னி வித்திலே முளைத்தெழும்
சீரை உன்ன வல்லிரேல் சிவபதம் அடைவிரே (277)

பத்தொடுற்ற வாசலில் பரந்து மூல வக்கர
முத்திசித்தி தொந்தமென்று இயங்குகின்ற மூலமே
மத்த சித்த ஐம்புலன் மகாரமான கூத்தையே
அத்தியூரர் தம்முளே அமைந்ததே சிவாயமே (278)

அணுவினோடும் அண்டமாய் அளவிடாத சோதியை
குணமதாகி உம்முளே குறித்திருக்கில் முத்தியாம்
முணமுணென்று உம்முளே விர லைஒன்றி மீளவும்
தின ந்தினம் மயக்குவீர் செம்புபூசை பண்ணியே (279)

மூலமான அக்கரம் முகப்பதற்கு முன்னெலாம்
மூடமாக மூடுகின்ற மூடமேது மூடரே
காலனான அஞ்சுபூதம் அஞ்சிலே ஒடுங்கினால்
ஆதியோடு கூடுமோ அனாதியோடு கூடுமோ (280)

290 வரை[தொகு]

முச்சதுர மூலமூகி முடிவுமாகி ஏகமாய்
அச்சதுரம் ஆகியே அடங்கியோர் எழுத்துமாய்
மெய்ச்சதுர மெய்யுளே விளங்குஞான தீபமாய்
உச்சரிக்கும் மந்திரத்தின் உண்மையே சிவாயமே (281)

வண்டுலங்கள் போலும்நீர் மனத்துமாசு அறுக்கிலீர்
குண்டலங்கள் போலுநீர் குளத்திலே முழுகிறீர்
பண்டும் உங்கள் நான்முகன் பறந்துதேடி காண்கிலான்
கண்டிருக்கும் உம்முளே கலந்திருப்பர் காணுமே (282)

நின்றதன்று இருந்ததன்று நேரிதன்று கூறிதன்று
பந்தமன்று வீடுமன்று பாவகங்கள் அற்றது
கெந்தமன்று கேள்வியன்று கேடிலாத வானிலே
அந்தமின்றி நின்றதொன்றை எங்ஙனே உரைப்பதே (283)

பொருந்துநீரும் உம்முளே புகுந்து நின்ற காரணம்
எருதிரண்டு கன்றை ஈன்ற வேகமொன்றை ஓர்கிலீர்
அருகிருந்து சாவுகின்ற யாவையும் அறிந்திலீர்
குருவிருந்து உலாவுகின்ற கோலம் என்ன கோலமே (284)

அம்பரத்துள் ஆடுகின்ற அஞ்செழுத்து நீயலோ
சிம்புளாய் பரந்து நின்ற சிற்பரமும் நீயலோ
எம்பிரானும் எவ்வுயிர்க்கும் ஏகபோகம் ஆதலால்
எம்பிரானும் நானுமாய் இருந்ததே சிவாயமே (285)

ஈரொளிய திங்களே இயங்கி நின்றது அப்புறம்
பேரொளிய திங்களே யாவரும் அறிகிலீர்
காரொளிப் படலமும் கடந்துபோன தற்பரம்
பேரொளிப் பெரும்பதம் ஏகநாத பாதமே (286)

கொள்ளொணாது மெல்லொணாது கோதறக் குதட்டடா
தள்ளொணாது அணுகொணாது ஆகலான் மனத்துளே
தெள்ளொணாது தெளியொணாது சிற்பரத்தின் உட்பயன்
விள்ளொணாத பொருளை நான் விளம்புமாறது எங்ஙனே (287)

வாக்கினால் மனத்தினால் மதித்தகார ணத்தினால்
நோக்கொணாத நோக்கையுன்னி நோக்கையாவர் நோக்குவார்
நோக்கொணாத நோக்குவந்து நோக்கநோக்க நோக்கிடில்
நோக்கொணாத நோக்குவந்து நோக்கை எங்கள் நோக்குமே (288)

உள்ளினும் புறம்பினும் உலகம் எங்ஙணும் பரந்து
எள்ளில் எண்ணெய் போலநின்று இயங்குகின்ற எம்பிரான்
மெள்ளவந்து என்னுட் புகுந்து மெய்த்தவம் புரிந்தபின்
வள்ளலென்ன வள்ளலுக்கு வண்ணமென்ன வண்ணமே (289)

வேதமொன்று கண்டிலேன் வெம்பிறப்பு இலாமையால்
போதம் நின்ற வடிவதாய்ப் புவனமெங்கும் ஆயினாய்
சோதியுள் ஒளியுமாய்த் துரியமொடு அதீதமாய்
ஆதிமூலம் ஆதியாய் அமைந்ததே சிவாயமே (290)

300 வரை[தொகு]

சாண் இரு மடங்கினால் சரிந்த கொண்டை தன்னுளே
பேணி அப்பதிக்குளே பிறந்திறந்து உழலுவீர்
தோணியான ஐவரைத் துறந்தறுக்க வல்லிரேல்
காணிகண்டு கோடியாய்க் கலந்ததே சிவாயமே (291)

அஞ்சுகோடி மந்திரம் அஞ்சுளே அடங்கினால்
நெஞ்சு கூற உம்முளே நினைப்பதோர் எழுத்துளே
அஞ்சு நாலு மூன்றதாகி உம்முளே அடங்கினால்
அஞ்சும் ஓர் எழுத்ததாய் அமைந்ததே சிவாயமே (292)

அக்கரந்த அக்கரத்தில் உட்கரந்த அக்கரம்
சக்கரத்து சிவ்வையுண்டு சம்புளத் திருந்ததும்
எள்கரந்த எண்ணெய்போய் எவ்வெழுத்தும் எம்பிரான்
உள்கரந்து நின்ற நேர்மை யாவர் காணவல்லரே (293)

ஆகமதின் உட் பொருள் அகண்டமூலம் ஆதலால்
தாகபோகம் அன்றியே தரித்ததற் பரமும் நீ
ஏகபாதம் வைத்தனை உணர்த்தும் அஞ்செழுத்துளே
ஏகபோகம் ஆகியே இருந்ததே சிவாயமே (294)

மூலவாசல் மீதுளே முச்சதுரம் ஆகியே
நாலுவாசல் எண்விரல் நடுஉதித்த மந்திரம்
கோலம் ஒன்றும் அஞ்சுமாகுமெ இங்கலைந்து நின்ற நீ
வேறுவேறு கண்டிலேன் விளைந்ததே சிவாயமே (295)

சுக்கிலத் தடியுளே சுழித்ததோர் எழுத்துளே
அக்கரத் தடியுளே அமர்ந்த ஆதிசோதி நீ
உக்கரத் தடியுளே உணர்ந்த அஞ்செழுத்துளே
அக்கரம் அதாகியே அமர்ந்ததே சிவாயமே (296)

குண்டலத்து ளேயுளே குறித்தகத்து நாயகன்
கண்டவந்த மண்டலம் கருத்தழித்த கூத்தனை
விண்டலர்ந்த சந்திரன் விளங்குகின்ற மெய்ப்பொருள்
கண்டு கொண்ட மண்டலம் சிவாயம் அல்லது இல்லையே (297)

சுற்றும் ஐந்து கூடமொன்று சொல்லிறந்ததோர்வெளி
சக்தியும் சிவனுமாக நின்றதன்மை ஒக்கிலீர்
சக்தியாவது உம்முடல் தயங்குசீவ னுட்சிவம்
பித்தர்காள் அறிந்திலீர் பிரான் இருந்த கோலமே (298)

மூலம் என்ற மந்திரம் முளைத்த அஞ்செழுத்துளே
நாலுவேதம் நாவுளே நவின்றஞான மெய்யுளே
ஆலம்உண்ட கண்டனும் அரி அயனும் ஆதலால்
ஓலம் என்ற மந்திரம் சிவாயம் அல்லது இல்லையே (299)

தத்துவங்கள் என்றுநீர் தமைக்கடிந்து போவிர்காள்
தத்துவம் சிவமதாகில் தற்பரமும் நீரல்லோ
முத்திசீவ னாதமே மூலபாதம் வைத்தபின்
அத்தனாரும் உம்முளே அறிந்துணர்ந்து கொள்ளுமே (300)

310 வரை[தொகு]

மூன்று பத்து மூன்றையும் மூன்றுசொன்ன மூலனே
தோன்று சேரஞானிகாள் துய்யபாதம் என் தலை
ஏன் றுவைத்த வைத்தபின் இயம்பும் ஐந்தெழுத்தையும்
தோன்றோத வல்லிரேல் துய்யசோதி காணுமே (301)

உம்பர் வானகத்தினும் உலகபாரம் ஏழினும்
நம்பர்நாடு தன்னிலும் நாவலென்ற தீவினும்
செம்பொன் மாடம் மல்குதில்லை அம்பலத்துள் ஆடுவான்
எம்பிரான் அலாது தெய்வம் இல்லை இல்லை இல்லையே (302

பூவாலய ஐந்துமாய் புனலில் நின்ற நான்குமாய்
தீயிலாய மூன்றுமாய் சிறந்தகால் இரண்டுமாய்
வேயிலாய தொன்றுமாய் வேறு வேறு தன் மையாய்
நீயலாமல் நின்றநேர்மை யாவர் காண வல்லரே (303)

அந்தரத்தில் ஒன்றுமாய் அசைவுகால் இரண்டுமாய்
செந்தழலில் மூன்றுமாய்ச் சிறந்துவப்பு நான்குமாய்
ஐந்துபாரில் ஐந்துமாய் அமர்ந்திருந்த நாதனை
சிந்தையில் தெளிந்தமாயை யாவர்காண வல்லரே (304)

மனவிவகாரம் அற்றுநீர் மதித்திருக்க வல்லிரேல்
நினைவிலாத மணிவிளக்கு நித்தமாகி நின்றிடும்
அனைவர் ஓதும் வேதமும் அகம்பிதற்ற வேணுமேல்
கனவுகண்டது உண்மை நீர் தெளிந்ததே சிவாயமே (305)

இட்டகுண்டம் ஏதடா இருக்கு வேதம் ஏதடா
சுட்டமண் கலத்திலே சுற்று நூல்கள் ஏதடா
முட்டிநின்ற தூணிலே முளைத் தெழுந்த சோதியை
பற்றி நின்றது ஏதடா பட்டநாத பட்டரே (306)

நீரிலே முளைத்தெழுந்த தாமரையின் ஓரிலை
நீரினோடு கூடி நின்றும் நீரிலாத வாறுபோல்
பாரிலே முளைத்தெழுந்த பண்டிதப் பராபரம்
பாரினோடு கூடிநின்ற பண்புகண்டு இருப்பிரே (307)

உறங்கில் என் விழிக்கில் என் உணர்வு சென்று ஒடுங்கில் என்
சிறந்தஐம் பலன்களும் திசைத்திசைகள் ஒன்றின் என்
புறம்புமுள்ளும் எங்ஙனும் பொருந்திருந்த தேகமாய்
நிறைந்திருந்த ஞானிகாள் நினைப்பது ஏதும் இல்லையே (308)

ஓதுவார்கள் ஓதுகின்ற ஓர் எழுத்தும் ஒன்றதே
வேதம் என்ற தேகமாய் விளம்புகின்ற தன்றிது
நாதம் ஒன்று நான்முகன் மாலும் நானும் ஒன்றதே
ஏதுமன்றி நின்றதொன்றை யான் உணர்ந்த நேர்மையே (309)

பொங்கியே தரித்த அச்சு புண்டரீக வெளியிலே
தங்கியே தரித்தபோது தாதுமா துளையதாம்
அங்கியுள் சரித்தபோது வடிவுகள் ஒளியுமாய்க்
கொம்புமேல் வடிவுகொண்டு குரு இருந்த கோலமே (310)

320 வரை[தொகு]

மண்ணுளோரும் விண்ணுளோரும் வந்தவாறது எங்கெனில்
கண்ணினோடு சோதிபோல் கலந்தநாத விந்துவும்
அண்ணலோடு சத்தியும் அஞ்சு பஞ்சபூதமும்
பண்ணினோடு கொடுத்தழிப் பாரொடேழும் இன்றுமே (311)

ஒடுக்குகின்ற சோதியும் உந்தி நின்ற ஒருவனும்
நடுத்தலத்தில் ஒருவனும் நடத்துகாலில் ஏறியே
விடுத்து நின்ற இருவரோடு மெய்யினோடு பொய்யுமாய்
அடுத்துநின்று அறிமினோ அனாதி நின்ற ஆதியே (312)

உதித்தமந் திரத்தினும் ஒடுங்கும் அக்கரத்தினும்
மதித்த மண்டலத்தினும் மறைந்து நின்ற சோதிநீ
மதித்த மண்டலத்துளே மரித்து நீர் இருந்தபின்
சிரித்தமண்டலத்துளே சிறந்ததே சிவாயமே (313)

திருத்திவைத்த சற்குருவைச் சீர்பெற வணங்கிலீர்
குருக்கொடுக்கும் பித்தரே கொண்டு நீந்த வல்லிரோ
குருக்கொடுக்கும் பித்தரும் குருக்கொள் வந்த சீடனும்
பருத்திபட்ட பாடுதான் பன்னிரண்டும்பட்டதே (314)

விழித்த கண்துதிக்கவும் விந்துநாத ஓசையும்
மேருவும் கடந்த அண்ட கோலமுங் கடந்துபோய்
எழுத்தெலாம் அழிந்துவிட்ட இந்திரஞான வெளியிலே
யானும் நீயு மேகலந்த தென்ன தன்மை ஈசனே (315)

ஓம்நமா என்றுளே பாவையென்று அறிந்தபின்
பானுடல் கருத்துளே பாவையென்று அறிந்தபின்
நானும் நீயும் உண்டடா நலங்குலம் அது உண்டடா
ஊனும் ஊணும் ஒன்றுமே உணர்ந்திடா எனக்குளே (316)

ஐம்புலனை வென்றவர்க்கு அன்னதானம் ஈவதாய்
நல்புலன்க ளாகி நின்ற நாதருக்கது ஏறுமோ
ஐம்புலனை வென்றிடாது அவத்தமே உழன்றிடும்
வம்பருக்கும் ஈவதும் கொடுப்பதும் அவத்தமே (317)

ஆணியான ஐம்புலன்கள் அவையும் மொக்குள் ஒக்குமே
யோனியில் பிறந்திருந்த துன்பமிக்கு மொக்குமோ
வீணர்காள் பிதற்றுவீர் மெய்மையே உணர்த்திரேல்
ஊன்உறக்க போகமும் உமக்கெனக்கும் ஒக்குமே (318)

ஓடுகின்ற ஐம்புலன் ஒடுங்க அஞ் செழுத்துளே
நாடுகின்ற நான்மறை நவிலுகின்ற ஞானிகாள்
கூடுகின்ற கண்டித குணங்கள் மூன் றெழுத்துமே
ஆடுகின்ற பாவையாய் அமைந்ததே சிவாயமே (319)

புவனசிக்க ரத்துளே பூதநாத வெளியிலே
பொங்கு தீப அங்கியுள் பொதிந்தெழுந்த வாயுவைத்
தவனசோமர் இருவரும் தாம் இயங்கும் வாசலில்
தண்டுமாறி ஏறிநின்ற சரசமான வெளியிலே

மவுன அஞ்செழுத்திலே வாசிஏறி மெள்ளவே
வானளாய் நிறைந்த சோதி மண்டலம் புகுந்தபின்
அவனும் நானும் மெய்கலந்து அனுபவித்த அளவிலே
அவனுமுண்டு நானுமில்லை யாருமில்லை யானதே (320)

330 வரை[தொகு]

வாளுறையில் வாளடக்கம் வாயுறையில் வாய்வடக்கம்
ஆளுறையில் ஆளடக்கம் அருமை என்ன வித்தைகாண்
தாளுறையில் தாளடக்கம் தன்மையான தன்மையும்
நாளுறையில் நாளடக்கம் நானும் நீயும் கண்டதே (321)

வலுத்திடான் அழித்திடான் மாயரூபம் ஆகிடான்
கழின்றிடான் வெகுண்டிடான் காலகால காலமும்
துவண்டிடான் அசைந்திடான் தூயதுபம் ஆகிடான்
சுவன்றிடான் உரைத்திடான் சூக்ஷ சூக்ஷ சூக்ஷமே (322)

ஆகிகூவென் றேஉரைத்த அக்ஷரத்தின் ஆனந்தம்
யோகியோகி என்பர் கோடி உற்றறிந்து கண்டிடார்
பூகமாய் மனக்குரங்கு பொங்குமங்கும் இங்குமாய்
ஏகம்ஏக மாகவே இருப்பர்கோடி கோடியே (323)

கோடி கோடி கோடி கோடி குவலயத்தோர் ஆதியை
நாடிநாடி நாடி நாடி நாளகன்று வீணதாய்
தேடி தேடி தேடி தேடி தேகமும் கசங்கியே
கூடி கூடி கூடி கூடி நிற்பர் கோடி கோடியே (324)

கருத்திலான் வெளுத்திலான் பரன் இருந்த காரணம்
இருத்திலான் ஒளித்திலான் ஒன்றும் இரண்டும் ஆகிலான்
ஒருத்திலான் மரித்திலான் ஒழிந்திடான் அழிந்திடான்
கருத்தில்கீயும் கூவும்உற்றோன் கண்டறிந்த ஆதியே (325)

வாதி வாதி வாதி வாதி வண்டலை அறிந்திடான்
ஊதி ஊதி ஊதி ஊதி ஒளிமழுங்கி உளறுவான்
வீதி வீதி வீதி வீதி விடைஎருப் பொறுக்குவோன்
சாதி சாதி சாதி சாதி சாகரத்தை கண்டிடான் (326)

ஆண்மை ஆண்மை ஆண்மை ஆண்மை ஆண்மை கூறும் அசடரே
காண்மையான வாதிருபம் காலகால காலமும்
பாண்மையாகி மோனமான பாசமாகி நின்றிடும்
நாண்மையான நரலை வாயில் நங்குமிங்கும் அங்குமே (327)

மிங்குஎன்ற அட்சரத்தின் மீட்டுவாகி கூவுடன்
துங்கமாகச் சோமனோடு சோமன்மாறி நின்றிடும்
அங்கமா முனைச்சுழியில் ஆகும் ஏகம் ஆகையால்
கங்குலற்றுக் கியானமுற்று காணுவாய் சுடரொளி (328)

சுடரெழும்பும் சூட்சமும் சுழிமுனையின் சூட்சமும்
அடரெழும்பி ஏகமாக அமர்ந்து நின்ற சூட்சமும்
திடரதான சூட்சமும் திரியின்வாலை சூட்சமும்
கடலெழும்பு சூட்சந்தன்னை கண்டறிந்தோன் ஞானியே (329)

ஞானிஞானி என்றுரைத்த நாய்கள் கோடி கோடியே
வானிலாத மழைநாளென்ற வாதிகோடி கோடியே
தானிலாத சாகரத்தின் தண்மைகாணா மூடர்கள்
முனிலாமல் கோடி கோடி முன்ன றிந்த தென்பரே (330)

340 வரை[தொகு]

சூக்ஷமான கொம்பிலே சுழிமுனைச் சுடரிலே
வீச்சமான வீயிலே விபுலைதங்கும் வாயிலே
கூச்சமான கொம்பிலே குடி இருந்த கோவிலே
தீக்ஷையான தீவிலே சிறந்ததே சிவாயமே (331)

பொங்கிநின்ற மோனமும் பொதிந்து நின்ற மோனமும்
தங்குநின்ற மோனமும் தயங்கிநின்ற மோனமும்
கங்கையான மோனமும் கதித்து நின்ற மோனமும்
திங்களான மோனமும் சிவனிருந்த மோனமே (332)

மோனமான வீதியில் முனைச்சுழியின் வாலையில்
பானமான வீதியில் பசைந்த செஞ் சுடரிலே
ஞான மானமூலையில் நரலை தங்கும் வாயிலில்
ஒனமான செஞ்சுடர் உதித்ததே சிவாயமே (333)

உதித்தெழுந்த வாலையும் உயங்கிநின்ற வாலையும்
கதித்தெழுந்த வாலையும் காலையான வாலையும்
மதித்தெழுந்த வாலையும் மறைந்து நின்ற ஞானமும்
கொதித்தெழுந்து கும்பலாகி ஹூவும் ஹீயும் ஆனதே (334)

கூவுமுகியும் மோனமாகி கொள்கையான கொள்கையை
மூவிலே உதித் தெழுந்த முச்சுடர் விரிவிலே
பூவிலே நறைகள்போல் பொருந்திநின்ற பூரணம்
ஆவிஆவி ஆவிஆவி அன்பருள்ளம் உற்றதே (335)

ஆண்மைகூறும் மாந்தரே அருக்கினோடும் வீதியை
காண்மையாகக் காண்பிரே கசடறுக்க வல்லிரே
தூண்மையான வாதிசூட்சம் சோபமாகும் ஆகுமே
நாண்மையான வாயிலில் நடித்து நின்ற நாதமே (336)

நாதமான வாயிலில் நடித்துநின்ற சாயலில்
வேதமான வீதியில் விரிந்தமுச் சுடரிலே
கீதமான ஹீயிலே கிளர்ந்துநின்ற கூவிலே
பூதமான வாயிலைப் புகலறிவன் ஆதியே (337)

ஆவி ஆவி ஆவி ஆவி ஐந்துகொம்பின் ஆவியே
மேவி மேவி மேவி மேவி மேதினியில் மானிடர்
வாவிவாவி வாவிவாவி வண்டல்கள் அறிந்திடார்
பாவிபாவி பாவிபாவி படியிலுற்ற மாந்தரே (338)

வித்திலே முளைத்த சோதி வில்வளைவின் மத்தியில்
உத்திலே ஒளிவதாகி யோனமான தீபமே
ந்ததிலோ திரட்சிபோன்ற நாதனை அறிந்திடார்
வத்திலே கிடந்துழன்ற வாலையான சூட்சமே (339)

மாலையோடு காலையும் வடிந்து பொங்கும் மோனமே
மாலையோடு காலையான வாறறிந்த மாந்தரே
மூலையான கோணமின் முளைத்தெழுந்த செஞ்சுடர்
காலையோடு பானகன்று தங்கி நின்ற மோனமே (340)

350 வரை[தொகு]

மோனமான வீதியில் முடிகி நின்ற நாதமே
ஈனமின்றி வேகமான வேகம் என்ன வேகமே
கானமான மூலையில் கனிந்து நின்ற வாலையில்
ஞானமான செஞ்சுடர் நடந்ததே சிவாயமே (341)

உச்சி மத்தி வீதியில் ஒழிந்திருந்த சாதியில்
பச்சியுற்ற சோமனும் பரந்து நின்றுலவுமே
செச்சியான தீபமே தியானமான மோனமே
கச்சியான மோனமே கடந்ததே சிவாயமே (342)

அஞ்சு கொம்பில் நின்றநாத மாலைபோல் எழும்பியே
பிஞ்சினோடு பூமலர்ந்து பெற்றியுற்ற சுத்தமே
செஞ்சுடர் உதித்தபோது தேசிகன் சுழன்றுடன்
பஞ்சபூதம் ஆனதே பறந்து நின்ற மோனமே (343)

சடுதியான கொம்பிலே தத்துவத்தின் ஹீயிலே
அடுதியான ஆவிலே அரன் இருந்த ஹூவிலே
இடுதி என்ற சோலையில் இருந்த முச்சுடரிலே
நடுதி என்று நாதம் ஓடி நன்குற அமைந்ததே (344)

அமையுமால் மோனமும் அரன் இருந்த மோனமும்
சமையும்பூத மோனமும் தரித்திருந்த மோனமும்
இமையும் கொண்ட வேகமும் இலங்கும் உச்சி மோனமும்
தமையறிந்த மாந்தரே சடத்தை உற்று நோக்கிலார் (345)

பாய்ச்ச லூர் வழியிலே பரன் இருந்த சுழியிலே
காய்ச்ச கொம்பின் நுனியிலே கனி இருந்த மலையிலே
வீச்சமானது ஏதடா விரிவுதங்கும் இங்குமே
மூச்சினோடு மூச்சை வாங்கு முட்டிநின்ற சோதியே (346)

சோதி சோதி என்று நாடித் தோற்பவர் சிலவரே
ஆதி ஆதி என்று நாடும் ஆடவர் சிலவரே
வாதி வாதி என்று சொல்லும் வம்பரும் சிலவரே
நீதிநீதி நீதிநீதி நின்றிடும் முழுச்சுடர் (347)

சுடரதாகி எழும்பியங்கும் தூபமான காலமே
இடரதாய்ப் புவியும் விண்ணும் ஏகமாய் அமைக்கமுன்
படரதாக நின்ற ஆதிபஞ்சபூதம் ஆகியே
அடரதாக அண்டம் எங்கும் ஆண்மையாக நின்றதே (348)

நின்றிருந்த சோதியை நிலத்தில் உற்ற மானிடர்
கண்டறிந்து கண்குளிர்ந்து காதலுற்று உலாவுவோர்
கண்டமுற்ற மேல் முனையின் காட்சி தன்னைக் காணுவார்
நன்றி அற்று நரலைபொங்கி நாதமும் மகிழ்ந்திடும் (349)

வயங்கு மோனச் செஞ்சுடர் வடிந்தசோதி நாதமும்
கயங்கள் போலக் கதறியே கருவூரற்ற வெளியிலே
பயங்கொடின்றி இன்றியே படர்ந்து நின்ற பான்மையை
நயங்கள் கோவென்றே நடுங்கி நங்கையான தீபமே (350)

360 வரை[தொகு]

தீபஉச்சி முனையிலே திவாகரத்தின் சுழியிலே
கோபமாறு கூவிலே கொதித்து நின்ற தீயிலே
தாபமான மூலையில் சமைந்து நின்ற சூக்ஷமும்
சாபமான மோட்சமும் தடிந்துநின்று இலங்குமே (351)

தேசிகன் சுழன்றதே திரிமுனையின் வாலையில்
வேசமோடு வாலையில் வியன் இருந்த மூலையில்
நேச சந்திரோதயம் நிறைந்திருந்த வாரமில்
வீசிவீசி நின்றதேவிரிந்து நின்ற மோனமே (352)

உட்கமல மோனமில் உயங்கிநின்ற நந்தியை
விக்கலோடு கீயுமாகி வில்வளைவின் மத்தியில்
முட்பொதிந்தது என்னவே முடுகிநின்ற செஞ்சுடர்
கட்குவைகள் போலவும் கடிந்துநின்ற காட்சியே (353)

உந்தியில் சுழிவழியில் உச்சியுற்ற மத்தியில்
சந்திரன் ஒளிகிரணம் தாண்டிநின்ற செஞ்சுடர்
பந்தமாக வில்வளைவில் பஞ்சபூத விஞ்சையாம்
கிந்துபோல் கீயில் நின்று கீச்சு மூச்சு என்றதே (354)

செச்சையென்ற மூச்சினோடு சிகாரமும் வகாரமும்
பச்சையாகி நின்றதே பர வெளியின் பான்மையே
இச்சையான ஹூவிலே இருந்தெழுந்த ஹீயிலே
உச்சியான கோணத்தில் உதித்ததே சிவாயமே (355)

ஆறுமுலைக் கோணத்தில் அமைந்த ஒன்பதாத்திலே
நாறுமென்று நங்கையான நாவியும் தெரிந்திட
கூறுமென்று ஐவர் அங்கு கொண்டு நின்ற மோனமே
பாறுகொண்டு நின்றதுபரந்ததே சிவாயமே (356)

பறந்ததே கறந்த போது பாய்ச்சலூர் வழியிலே
பிறந்ததே பிராணன் அன்றிப் பெண்ணும் ஆணும்
துறந்ததோ சிறந்ததோ தூயதுங்கம் ஆனதோ
இறந்த போதில் அன்றதே இலங்கிடும் சிவாயமே (357)

அருளிருந்த வெளியிலே அருக்கன் நின்ற இருளிலே
பொருளிருந்த சுழியிலே புரண்டெழுந்த வழியிலே
தெருளிருந்த கலையிலே தியங்கி நின்ற வலையிலே
குருவிருந்த வழியினின்று ஹூவும் ஹீயும் ஆனதே (358)

ஆனதோர் எழுத்திலே அமைந்துநின்ற ஆதியே
கானமோடு தாலமீதில் கண்டறிவது இல்லையே
தானும் தானும் ஆனதே சமாந்தமாலை காலையில்
வேனலோடும் வாறுபோல் விரிந்ததே சிவாயமே (359)

ஆறுகொண்ட வாரியும் அமைந்துநின்ற தெய்வமும்
தூறுகொண்ட மாரியும் துலங்கிநின்ற தூபமும்
வீறுகொண்ட போனமும் விளங்கும் உள் கமலமும்
மாறுகொண்ட ஊவிலே மடிந்ததே சிவாயமே (360)

370 வரை[தொகு]

வாயில்கண்ட கோணமில் வயங்கும் ஐவர்வைகியே
சாயல்கண்டு சார்ந்ததும் தலைமன்னாய் உறைந்ததும்
காயவண்டு கண்டதும் கருவூர் அங்கு சென்றதும்
பாயும் என்று சென்றதும் பறந்ததே சிவாயமே (361)

பறந்ததே துறந்தபோது பாய்ச்சலூர் வழியிலே
மறந்ததே கவ்வுமுற்ற வாணர்கையுன் மேவியே
பிறந்ததே இறந்தபோதில் பீடிடாமல் கீயிலே
சிறந்துநின்ற மோனமே தெளிந்ததே சிவாயமே (362

வடிவுபத்ம ஆசனத்து இருத்திமூல அனலையே
மாதத்தி னால்எழுப்பி வாசல் ஐந்து நாலையும்
முடிவுமுத்தி ரைப்படுத்தி மூலவீணா தண்டினால்
முளரி ஆல யம் கடந்து மூலநாடி ஊடுபோய்

அடிதுலக்கி முடியளவும் ஆறுமா நிலங்கடந்து
அப்புறத்தில் வெளிகடந்த ஆதி எங்கள் சோதியை
உடுபதிக்கண் அமுதருந்தி உண்மைஞான உவகையுள்
உச்சிபட்டு இறங்குகின்ற யோகிநல்ல யோகியே (363)

மந்திரங்கள் உண்டுநீர் மயங்குகின்ற மானிடர்
மந்திரங்கள் ஆவது மரத்திலூறல் அன்றுகாண்
மந்திர்ரங்கள் ஆவது மதித்தெழுந்த வாயுவை
மந்திரத்தை உண்டவர்க்கு மரணம் ஏதும் இல்லையே (364)

மந்திரங்கள் கற்று நீர் மயங்குகின்ற மாந்தரே
மந்திரங்கள் கற்றநீர் மரித்தபோது சொல்விரோ
மந்திரங்கள் உம்முளே மதித்த நீரும் உம்முளே
மந்திரங்கள் ஆவது மனத்தின் ஐந்து எழுத்துமே (365)

உள்ளதோ புறம்பதோ உயிர் ஒடுங்கி நின்றிடம்
மெள்ளவந்து கிட்டிநீர் வினாவ்வேண்டும் என்கிறீர்
உள்ளதும் பிறப்பதும் ஒத்தபோது நாதமாம்
கள்ளவாச லைத்திறந்து காண வேண்டும் மாந்தரே (366)

ஓரெழுத்து லிங்கமாய் ஓதும் அட்சரத்துளே
ஓரெழுத்து இயங்குகின்ற உண்மையை அறிகிலீர்
மூவெழுத்து மூவராய் முளைத்தெழுந்த சோதியை
நாவெழுந்து நாவிளே நவுன்றதே சிவாயமே (367)

முத்தி சித்தி தொந்தமாய் முயங்குகின்ற மூர்த்தியை
மற்று உதித்த அப்புலன்கள் ஆகுமத்தி அப்புலன்
அத்தர் நித்தர் காளகண்டர் அன்பினால் அனுதினம்
உச்சரித்து உளத்திலே அறிந்துணர்ந்து கொண்மினே (368)

மூன்றிரண்டும் ஐந்துமாய் முயன்றெழுந்த தேவராய்
மூன்றிரண்டும் ஐந்ததாய் முயன்றதே உலகெலாம்
ஈன்றதாயும் அப்பனும் இயங்குகின்ற நாதமாய்
தோன்றும் ஓர் எழுத்தினோடு சொல்ல ஒன்றும் இல்லையே (369)

வெளியுருக்கி அஞ்செழுத்து விந்து நாத சத்தமும்
தளியுருக்கி நெய்கலந்து சகலசத்தி ஆனதும்
வெளியிலும் அவ்வினையிலும் இருவரை அறிந்த பின்
வெளிகடந்த தன்மையால் தெளிந்ததே சிவாயமே (370)

380 வரை[தொகு]

முப்புறத்தில் அப்புறம் முக்கணன் விளைவிலே
சிற்பரத்துள் உற்பனம் சிவாயம் அஞ்செழுத்துமாம்
தற்பரம் உதித்து நின்று தாணுஎங்கும் ஆனபின்
இப்புறம் ஒடுங்குமோடி எங்கும் லிங்கம் ஆனதே (371)

ஆடிநின்ற சீவன் ஓர் அஞ்சு பஞ்ச பூதமோ
கூடிநின்ற சோதியோ குலாவிநின்ற மூலமோ
நாடுகண்டு நின்றதோ நாவுகற்ற கல்வியோ
வீடுகண்டு விண்டிடின் வெட்டவெளியும் ஆனதே (372)

உருத்தரித்த போது சீவன் ஒக்கநின்ற உண்மையும்
திருத்தமுள்ளது ஒன்றிலும் சிவாயம் அஞ் செழுத்துமாம்
இருத்துநின்று உறுத்தடங்கி ஏகபோகம் ஆனபின்
கருத்தினின்று உதித்ததே கபாலம் ஏந்தும் நாதனே (373)

கருத்தரித்து உதித்தபோது கமலபீடம் ஆனதும்
கருத்தரித்து உதித்தபோது காரணங்கள் ஆனதும்
கருத்தரித்து உதித்தபோது கரணம் இரண்டு கண்களாய்
கருத்தினின்று உதித்ததே கபாலம் ஏந்து நாதனே (374)

ஆன வன்னி மூன்றுகோணம் ஆறிரண்டு எட்டிலே
ஆனசீவன் அஞ்செழுத்து அகாரமிட்டு அலர்ந்தது
மானசோதி உண்மையும் அனாதியான உண்மையும்
ஆனதான தானதாய் அவலமாய் மறைந்திடும் (375)

ஈன்றறெழுந்த எம்பிரான் திருவரங்க வெளியிலே
நான்றபாம்பின் வாயினால் நாலுதிக்கும் ஆயினான்
மூன்றுமூன்று வளையமாய் முப்புரம் கடந்தபின்
ஈன்றெழுந்த அவ்வினோசை எங்குமாகி நின்றதே (376)

எங்கும் எங்கும் ஒன்றலோ ஈரேழ் லோகம் ஒன்றலோ
அங்கும் இங்கும் ஒன்றலோ அனாதியானது ஒன்றலோ
தங்கு தாபரங்களும் தரித்தவாரது ஒன்றலோ
உங்கள் எங்கள் பங்கினில் உதித்ததே சிவாயமே (377)

அம்பரத்தில் ஆடும் சோதியான வன்னி மூலமாம்
அம்பரமும் தம்பரமும் அகோரமிட்டு அலர்ந்தது
அம்பரக் குளியிலே அங்க மிட்டுருக்கிட
அம்பரத்தில் ஆதியோடு அமர்ந்ததே சிவாயமே (378)

வாடிலாத பூமலர்ந்து வண்டுரிசை நாவிலே
ஓடிநின்று உருவெடுத்து உகாரமாய் அலர்ந்தது
மாடிஆடி அங்கமும் அகப்படக் கடந்தபின்
கூடிநின்று உலாவுமே குருவிருந்த கோலமே (379)

விட்டடி விரைத்ததோ வேர் உருக்கி நின்றதோ
எட்டி நின்ற சீவனும் ஈரேழ்லோகம் கண்டதோ
தட்டுவரும் ஆகிநின்ற சதாசிவத்து ஒளியதோ
வட்டவீடு அறிந்த பேர்கள் வானதேவர் ஆவரே (380)

390 வரை[தொகு]

வானவர் நிறைந்த சோதிமானிடக் கருவிலே
வானதேவர் அத்தனைக்குள் வந்தடைவர் வாதேனவர்
வானகமும் மண்ணகமும் வட்டவீடு அறிந்தபின்
வானெலாம் நிறைந்த மண்ணு மாணிக்கங்கள் ஆனவே (381)

பன்னிரண்டு கால் நிறுத்தி பஞ்சவர்ணம் உற்றிடின்
மின்னியே வெளிக்குள் நின்று வேறிடத்து அமந்ததும்
சென்னியாம் தலத்திலே சீவன் நின்று இயங்கிடும்
பன்னி உன்னி ஆய்ந்தவர் பரப்பிரம்மம் ஆனதே (382)

உச்சி கண்டு கண்கள் கட்டி உண்மைக் கண்டது எவ்விடம்
மச்சுமாளி கைக்குளே மானிடம் கலப்பிரேல்
எச்சிலான வாசல்களும் ஏகபோகம் ஆய்விடும்
பச்சைமாலும் ஈசனும் பரந்ததே சிவாயமே (383)

வாயிலிட்டு நல்லுரிசை அட்சரத்தொலியிலே
கோயிலிட்டு வாவியும் அம்கொம்பிலே உலர்ந்தது
மாயலிட்ட காயமும் அனாதியிட்ட சீவனும்
வாயுவிட்ட வன்னியும் வளர்ந்ததே சிவாயமே (384)

அட்சரத்தை உச்சரித்து அனாதியங்கி மூலமாம்
அச்சரத்தையும் திறந்து அகோரமிட்டு அலர்ந்தது
மட்சரத்தில் உட்கரம் அகப்படக் கடந்தபின்
அட்சரத்தில் ஆதியோடு அமர்ந்ததே சிவாயமே (385)

கோயிலும் குளங்களும் குறியினில் குருக்களாய்
மயிலும் மடியிலும் மனத்திலே மயங்குறீர்
ஆயனை அரனையும அறிந்துணர்ந்து கொள்வீரேல்
தாயினும் தகப்பனோடு தான் அமர்ந்த துஒக்குமே (386)

கோயில் எங்கும் ஒன்றலோ குளங்கள் நீர்கள் ஒன்றலோ
தேயு வாயு ஒன்றலோ சிவனும் அங்கே ஒன்றலோ
ஆயசீவன் எங்குமாய் அமர்ந்துவாரது ஒன்றலோ
காயம் ஈதறிந்த பேர்கள் காட்சியாவர் காணுமே (387)

காது கண்கள் மூக்கு வாய் கலந்து வாரது ஒன்றலோ
சோதி யிட்டெடுத்ததும் சுகங்கள் அஞ்சும் ஒன்றலோ
ஓதிவைத்த சாத்திரம் உதித்து வாரது ஒன்றலோ
நாதவீடு அறிந்தபேர்கள் நாதர் ஆவர் காணுமே (388)

அவ்வுதித்த அட்சரத்தின் உட் கலந்த அட்சரம்
சவ்வுதித்த மந்திரம் சம்புளத்து இருந்ததால்
மவ்வுதித்த மாய்கையால் மயங்குகின்ற மாந்தர்காள்
உவ்வுதித்தது அவ்வுமாய் உருத்தரித்தது உண்மையே (389)

அகாரமென்னும் அக்கரத்தில் அக்கரம் ஒழிந்ததோ
அகாரமென்னும் அக்கரத்தில் அவ்வுவந்து உதித்ததோ
உகாரமும் அகாரமும் ஒன்றி நன்று நின்றதோ
விகாரமற்றி ஞானிகாள் விரிந்துரைக்க வேணுமே (390)

400 வரை[தொகு]

சத்தியாவது உன்னுடல் தயங்கு சீவன் உட்சிவம்
பித்தர்காள் இதற்குமேல் பிதற்றுகின்றது இல்லையே
சுத்தி ஐந்துகூடம் ஒன்று சொல்லிறந்நதோர் வெளி
சத்தி சிவமும் ஆகி நின்று தண்மையாவது உண்மையே (391)

சுக்கிலத் துளையிலே சுரோணிதக் கருவுளே
முச்சதுர வாசலில் முளைத்தெழுந்த மோட்டினில்
மெய்ச்சதுர மெய்யுளே விளங்குஞான தீபமாய்
உச்சரிக்கும் மந்திரம் ஓம் நமசிவாயமே (392)

அக்கரம் அனாதி அல்ல ஆத்துமா அனாதி அல்ல
புக்கிலுந்த பூதமும் புலன்களும் அனாதி அல்ல
தக்கமிக்க நூல்களும் சாஸ்திரம் அனாதி அல்ல
ஒக்க நின்று உடன்கலந்த உண்மை காண் அனாதியே (393)

மென்மையாகி நின்றது ஏதுவிட்டு நின்ற தொட்டது ஏது
உண்மையாக நீயுரைக்க வேணும் எங்கள் உத்தமா
பெண்மையாகி நின்றதொன்றுவிட்டு நின்ற தொட்டதை
உண்மையாய் உரைக்க முத்தி உட்கலந்து இருந்ததே (394)

அடக்கினால் அடங்குமோ அண்டம் அஞ்செழுத்துளே
உடக்கினால் எடுத்த காயம் உண்மையென்று உணர்ந்து நீ
சடக்கில் ஆறு வேதமும் தரிக்க ஓதிலாமையால்
விடக்கு நாயு மாயவோதி வேறு வேறு பேசுமோ (395)

உண்மையான சக்கரம் உபாயமாய் இருந்ததும்
தன்மையான சக்கரம் காயமும் தரித்த ருபம் ஆனதும்
வெண்மையாகி நீறியே வீளைந்து நின்றதானதும்
உண்மையான ஞானிகள் விரித்துரைக்க வேண்டுமே (396)

எள்ளகத்தில் எண்ணெய்போல எங்குமாகி எம்பிரான்
உள்ளகத்தி லேயிருக்க ஊசலாடும் மூடர்காள்
கொள்ளை நாயின் வாலினைக் குணக்கெடுக்க வல்லிரேல்
வள்ளலாகி நின்ற சோதி காணலாகும் மெய்ம்மையே (397)

வேணுமென்ற ஞானமும் விரும்புகின்ற நூலிலே
தாணு உண்டு அங்கு என்கிறீர் தரிக்கிலீர் மறக்கிலீர்
தாணுவொன்று மூலநாடி தன்னுள்நாடி உம்முளே
காணுமன்றி வேறியாவும் கனாமயக்கம் ஒக்குமே (398)

வழக்கிலே உரைக்கிறீர் மனத்துளே தவிக்கிறீர்
உழக்கிலாது நாழியான வாறுபோலும் ஊமைகாள்
உழக்குநாலு நாழியான வாறுபோலும் உம்முளே
வழக்கிலே உரைக்கிறீர் மனத்துள் ஈசன் மன்னுமே (399)

ஆடுகின்ற எம்பிரானை அங்கும்இங்கும் நின்றுநீர்
தேடுகின்ற வீணர்காள் தெளிவதொன்றை ஓர்கிலீர்
நாடிநாடி உம்முளே நவின்று நோக்க வல்லிரேல்
கூடொணாத தற்பரம் குவிந்து கூடல் ஆகுமே (400)

410 வரை[தொகு]

சுற்றி ஐந்து கூடம் ஒன்று சொல்லிறந்த தோர் வெளி
சத்தியும் சிவமுமாகி நின்ற தன்மை ஓர்கிலீர்
சத்தியாவது எம்முடன் தயங்குசீவன் உட்சிவம்
பித்தர்காள் அறிந்துகொள்பிரான் இருந்த கொலமே (401)

அகாரமானது அம்பலம் அனாதியானது அம்பலம்
உகாரமானது அம்பலம் உண்மையானது அம்பலம்
மகாரமானது அம்பலம் வடிவமானது அம்பலம்
சிகாரமானது அம்பலம் தெளிந்ததே சிவாயமே (402)

சக்கரம் பறந்ததோடி சக்கரமேல் பலகாயாய்
செக்கிலாமல் எண்ணெய்போல சிங்குவாயு தேயுவு
முக்கிலே ஒளிகலந்து உகங்களும் கலக்கமாய்
புக்கிலே புகுந்தபோது போனவாறது எங்ஙனே (403)

வளர்ந்தெழுந்த கொங்கைதன்னை மாயமென்று எண்ணிநீர்
அருள்கொள்சீவ ராருடம்பு உடைமையாகத் தோர்வீர்காள்
விளங்குஞானம் மேவியே மிக்கோர் சொல்லைக் கேட்பிரேல்
களங்கமற்று நெஞ்சுளே கருத்து வந்து புக்குமே (404)

நாலுவேதம் ஓதுகின்ற ஞானம் ஒன்று அறிவிரோ
நாலுசாமம் ஆகியே நவின்றஞான போதமாய்
ஆலம்உண்ட கண்டனும் அயனும் அந்த மாலுமாய்ச்
சால உன்னிநெஞ்சுளே தரித்ததே சிவாயமே (405)

சுற்றம் என்று சொல்வதும் சுருதி முடிவில் வைத்திடீர்
அத்தன் நித்தம் ஆடியே அமர்ந்திருந்தது எவ்விடம்
பத்திமுற்றி அன்பர்கள் பரத்தில் ஒன்றுபாழது
பித்தரே இதைக்கருதி பேசலாவது எங்ஙனே (406)

எங்ஙஙனே விளக்கதுக்குள் ஏற்றவாறு நின்றுதான்
எங்ஙனே எழுந்தருளி ஈசன்நேசர் என்பரேல்
அங்ஙனே இருந்தருளும் ஆதியான தற்பரம்
சிங்கம் அண்மி யானை போலத் திரிமலங்கள் அற்றவே (407)

அற்றவுள் அகத்தையும் அலகிடும் மெழுக்கிடும்
மெத்ததீபம் இட்டதில் பிற வாதபூசை ஏத்தியே
நற்றவம் புரிந்து ஏக நாதர் பாதம் நாடியே
கற்றிருப்ப தேசரிதை கண்டுகொள்ளும் உம்முளே (408)

பார்த்துநின்றது அம்பலம் பரமன் ஆடும் அம்பலம்
கூத்துநின்றது அம்பலம் கோரமானது அம்பலம்
வார்த்தையானது அம்பலம் வன்னியானது அம்பலம்
சீற்றமானது அம்பலம் தெளிந்ததே சிவாயமே (409)

சென்று சென்று இடந்தோறும்சிறந்த செம்பொன் அம்பலம்
அன்றும் இன்றும் நின்றதோர் அனாதியான அம்பலம்
என்றும் என்றும் இருப்பதோர் உறுதியான அம்பலம்
ஒன்றி ஒன்றி நின்றதுள் ஒழிந்ததே சிவாயமே (410)

420 வரை[தொகு]

தந்தைதாய் தமரும் நீ சகலதே வதையும் நீ
சிந்தைநீ தெளிவும்நீ சித்தி முத்தி தானும்நீ
விந்துநீ விளைவுநீ மேலதாய வேதம் நீ
எந்தைநீ இறைவன்நீ என்னை ஆண்ட ஈசனே (411)

எப்பிறப்பி லும்பிறந்து இறந்து அழிந்த ஏழைகாள்
இப்பிறப்பிலும்பிறந்து என்ன நீறு பூசுறீர்
அப்புடன் மலம் அறுத்து ஆசை நீக்க வல்லிரேல்
செப்புநாத ஓசையில் தெளிந்துகாணல் ஆகுமே (412)

எட்டுயோகம் ஆனதும் இயங்குகின்ற நாதமும்
எட்டு அக்கரத்துளே உகாரமும் மகாரமும்
விட்டலர்ந்த மந்திரம் வீணாதண்டின் ஊடுபோய்
அட்ட அக்ஷரத்துளே அமர்ந்ததே சிவாயமே (413)

பிரான்பிரான் என்றுநீர் பினத்துகின்ற மூடரே
பிரானைவிட்டு எம்பிரான் பிரிந்தவாறது எங்ஙனே
பிரானுமாய் பிரானுமாய் பேருலகு தானுமாய்
பிரானிலே முளைத்தெழுந்த பித்தர்காணும் உம்முடல் (414)

ஆதியில்லை அந்தமில்லை ஆனநாலு வேதமில்லை
சோதியில்லை சொல்லுமில்லை சொல்லிறந்த தூவெளி
நீதியில்லை நேசமில்லை நிச்சயப் படாததும்
ஆதிகண்டு கொண்டபின் அஞ்செழுத்தும் இல்லையே (415)

அம்மையப்பன் அப்ப நீர் அமர்ந்தபோது அறிகிலீர்
அம்மையப்பன் ஆனநீர் ஆதியான பாசமே
அம்மையப்பன் நின்னை அன்றி யாருமில்லை ஆனபின்
அம்மையப்பன் நின்னை அன்றி யாருமில்லை இல்லையே (416)

நூறுகோடி மந்திரம் நூறு கோடி ஆகமம்
நூறுகோடி நாளிருந்து ஊடாடினாலும் என் பயன்
ஆறும் ஆறும் ஆறுமாய் அகத்தில் ஓர் எழுத்ததாய்
சீரை ஓத வல்லிரேல் சிவபதங்கள் சேரலாம் (417)

முந்த ஓர் எழுத்துளே முளைத்தெழுந்த செஞ்சுடர்
அந்த ஓர் எழுத்துளே பிறந்துகாயம் ஆனதும்
அந்த ஓர் எழுத்துளே ஏகமாகி நின்றதும்
அந்த ஓர் எழுத்தையும் அறிந்துணர்ந்து கொள்ளுமே (418)

கூட்டம் இட்டு நீங்களும் கூடிவேதம் ஓதுறீர்
ஏட்டகத்துள் ஈசனும் இருப்பதென் எழுத்துளே
நாட்டம் இட்டு நாடிடும் நாலுமூன்று தன்னுளே
ஆட்டகத்துள் ஆடிடும் அம்மை ஆணை உண்மையே (419)

காக்கை மூக்கை ஆமையர் எடுத்துரைத்த காரணம்
நாக்கை ஊன்றி உள்வளைத்து ஞானநாடி ஊடுபோய்
ஏக்கை நோக்க அட்சரம் இரண்டெழுத்தும் ஏத்திடில்
பார்த்தபார்த்த திக்கெல்லாம் பரப்பிரமம் ஆனதே (420)

430 வரை[தொகு]

ஓசை உள்ள கல்லை நீர் உடைத்து இரண்டாய் செய்துமே
வாசலில் பதித்த கல்லை மழுங்கவே மிதிக்கிறீர்
பூசனைக்கு வைத்த கல்லில் பூவும் நீரும் சாத்துறீர்
ஈசனுக்கு உகந்தகல் எந்தக்கல்லு சொல்லுமே (421)

ஓட்டுவைத்து கட்டி நீர் உபாயமான மந்திரம்
கட்டுபட்ட போதிலும் கர்ந்தன் அங்கு வாழுமோ
எட்டும் எட்டும் எட்டுளே இயங்குகின்ற வாயுவை
வட்டம் இட்ட யவ்விலே வைத்துணர்ந்து பாருமே (422)

இந்த ஊரில் இல்லை என்று எங்குநாடி ஓடுறீர்
அந்த ஊரில் ஈசனும் அமர்ந்து வாழ்வது எங்ஙனே
அந்தமான பொந்திலாரில் மேவி நின்ற நாதனை
அந்தமான சீயில் அவ்வில்அறிந்துணர்ந்து கொள்ளுமே (423)

புக்கிருந்த தும்முளே பூரியிட்ட தோத்திரம்
தொக்குசட்சு சிங்குவை ஆக்கிராணன் சூழ்ந்திடில்
அக்குமணி கொன்றைசூடி அம்பலத்துள் ஆடுவார்
மிக்க சோதி அன்புடன் விளம்பிடாது பின்னையே (424)

பின்னெழுந்த மாங்கிசத்தை பேதையர் கண்பற்றியே
பின்புமாங் கிஷத்தினால் போகமாய்கை பண்ணினால்
துன்புறும் வினைகள்தான் சூழ்ந்திடும்பின் என்றலோ
அன்பராய் இருந்த பேர்கள் ஆறுநீந்தல் போல்விடே (425)

விட்டிருந்த தும்முளே விதனமற்று இருக்கிறீர்
கட்டிவைத்த வாசல் மூன்று காட்சியான வாசல் ஒன்று
கட்டி வைத்த வாசலும் கதவு தாள் திறந்துபோய்த்
திட்டமான ஈசனைத் தெளியுமாங் கிஷத்துளே (426)

ஆகும்ஆகும் ஆகுமே அனாதியான அப்பொருள்
ஏகர்பாதம் நாடிநாடி ஏத்தி நிற்க வல்லிரேல்
பாகுசேர் மொழி உமைக்குப் பாலனாகி வாழலாம்
வாகுடனே வன்னியை மருவியே வருந்திடீர் (427)

உண்மையான தொன்ற தொன்றை உற்றுநோக்கி உம்முளே
வண்மையான வாசியுண்டு வாழ்த்தி ஏத்த வல்லிரேல்
தண்மைபெற்று இருக்கலாம் தவமும் வந்து நேரிடும்
கன்மதன்மம் ஆகும் ஈசர் காட்சிதானுங் காணுமே (428)

பாலகனாக வேணும் என்று பத்திமுற்றும் என்பரே
நாலுபாதம் உண்டதில் நனைந்திரண்டு அடுத்ததால்
மூல நாடி தன்னில் வன்னி மூட்டி அந்த நீருண்
ஏலவார் குழலியோடே ஈசர்பாதம் எய்துமே (429)

எய்து நின்னை அன்பினால் இறைஞ்சி ஏத்த வல்லிரேல்
எய்தும் உண்மை தன்னிலே இறப்பிறப்பு அகற்றிடும்
மைஇலங்கு கண்ணிபங்கன் வாசிவானில் ஏறிமுன்
செய்தவல் வினைகளும் சிதறும் அது திண்ணமே (430)

440 வரை[தொகு]

திண்ணம் என்று சேதி சொன்ன செவ்வியோர்கள் கேண்மினோ
அண்ணல் அன்புளன்புருகி அறிந்து நோக்கலாயிடும்
மண்ணதிர விண்ணதிர வாசியை நடத்திடில்
நண்ணி எங்கள் ஈசனும் நமதுடலில் இருப்பனே (431)

இருப்பன் எட்டெட் டெண்ணிலே இருந்து வேறது ஆகுவன்
நெருப்புவாயு நீருமண்ணும் நீள்விசும்பும் ஆகுவான்
கருப்புகுந்து காலமே கலந்த சோதி நாதனைக்
குருப்புனலில் மூழ்கினார் குறித்துணர்ந்து கொள்வரே (432)

கொள்ளுவார்கள் சிந்தையில் குறிப்புணர்ந்த ஞானிகள்
விள்ளுவார்கள் பக்குவத்தில் வேண்டி வேண்டி ஏத்தினால்
உள்ளுமாய் புறம்புமாய் உணர்வதற்கு உணர்வுமாய்த்
தெள்ளிதாக நின்றசோதி செம்மையைத் தெளிந்திடே (433)

தெளிந்தநற் சரியை தன்னில் சென்றுசா லோகம்பெறும்
தெளிந்தநற் கிரியைபூசை சேரலாம் சாமீபமே
தெளிந்தநல்ல யோகம் தன்னில் சேரலாகும் சாரூபம்
தெளிந்தஞானம் நான்கிலும் சேரலாம் சாயுச்யமே (434)

சேருவார்கள் ஞானம் என்று செப்புவார் தெளிவுளோர்
சேருவார்கள் நாலுபாதச் செம்மை என்றது இல்லையே
சேருவார்கள் சிவகதி திருவருளைப் பெற்றபேர்
சேருமாறு கண்டு நாலும் செய்தொழில் திடப்படே (435)

திறமலிக்கு நாலுபாதம் செம்மையும் திடப்படார்
அறிவிலிகள் தேசநாடி அவத்திலே அலைவதே
குறியதனைக் காட்டி உள்குறித்து நோக்கவல்லிரேல்
வெறிகமழ் சடையுடை யோன்மெய்ப்பதம் அடைவரே (436)

அடைவுளோர்கள் முத்தியை அறிந்திடாத மூடரே
படையுடைய தத்துவமும் பாதகங்கள் அல்லவோ
மடைதிறக்க வாரியின் மடையில் ஏறுமாறுபோல்
உடலில் மூலநாடியை உயர ஏற்றி ஊன்றிடே (437)

ஊன்றியேற்றி மண்டலம் உருவிமூன்று தாள் திறந்து
ஆன்றுதந்தி ஏறிடில் அமுர் தம் வந்து இறங்கிடும்
நான்றிதென்று தொண்டருக்கு நாதனும் வெளிப்படும்
ஆன்றியும் உயிர்பரம் பொருந்தி வாழ்வதாகவே (438)

ஆகமூல நாடியில் அனல்எழுப்பி அன்புடன்
மோகமான மாயையில் மியல்வதும் ஒழிந்திடில்
தாகமேரு நாடி ஏகர் ஏகமான வாறுபோல்
ஏகர்பாதம் அன்புடன் இறைஞ்சினார் அறிவரே (439)

அறிந்து நோக்கி உம்முளே அயன் தியானம் உம்முளே
இருந்திராமல் ஏகர்பாதம் பெற்றிருப்பது உண்மையே
அறிந்துமீள வைத்திடா வகையுமரணம் ஏத்தினார்
செறிந்துமேலை வாசலைத் திறந்துபாரும் உம்முளே (440)

450 வரை[தொகு]

சோதியாக உம்முளே தெளிந்து நோக்க வல்லிரேல்
சோதிவந்து உதித்திடும் துரியாதீதம் உற்றிடும்
ஆதிசக் கரத்தினில் அமர்ந்து தீர்த்தம் ஆடுவன்
பேதியாது கண்டுகொள் பிராணனைத் திருத்தியே (441)

திருவுமாய் சிவனுமாய் தெளிந்துளோர்கள் சிந்தையில்
மருவிலே எழுந்துவீசும் வாசனைய தாகுவன்
கருவிலே விழுந்தெழுந்த கனமவாதனை யெலாம்
ப,உதிமுன் இருளதாய் பறியும் அங்கி பாருமே (442)

பாரும் எந்தை ஈசர் வைத்த பண்பிலே இருந்துநீர்
சேருமே நடுவறிந்து செம்மையான அப்பொருள்
வேரையும் முடியையும் விரைந்து தேடி மால் அயன்
பார் இடந்து விண்ணிலே பறந்தும் கண்டது இல்லையே (443)

கண்டிலாது அயன்மால் என்று காட்சியாகச் சொல்லுறீர்
மிண்டினால் அரனுடன் மேவலாய் இருக்குமோ
தொண்டுமட்டும் அன்புடன்தொழுது நோக்க வல்லீரேல்
பண்டுமுப் புரம் எரித்த பத்தி வந்து முற்றுமே (444)

முற்றுமே அவன் ஒழிந்து முன்பின் ஒன்றும் காண்கிலேன்
பற்றிலாத ஒன்று தன்னை பற்றிநிற்க வல்லது
கற்றதாலே ஈசர்பாதம் காண லாயிருக்குமோ
பெற்றபேரை அன்புடன் பிரியமாகக் கேளுமே (445)

கேட்டுநின்ற உன்னிலை கிடைத்த காலத்துளே
வாட்டம் உள்ள தத்துவ மயக்கமும் அகற்றிடும்
வீட்டிலே வெளியாகும் விளங்கவந்து நேரிடும்
கூட்டி வன்னி மாருதம் குயத்தை விட்டு எழுப்புமே (446)

எழுப்பி மூல நாடியை இதப்படுத்தலாகுமோ
மழுப்பிலாத சபையை நீர் மலித்துவாங்க வல்லிரேல்
சுழுத்தியும் கடந்துபோய் சொப்பன த்தில் அப்புறம்
அழுத்தி ஓர் எழுத்துளே அமைப்பது உண்மை ஐயனே (447)

அல்லதில்லை என்றுதான் ஆவியும் பொருளுடல்
நல்லஈசர் தாள் இணைக்கு நாதனுக்கும் ஈந்திலை
என்றும்என்னுள் நேசமும் வாசியை வருத்தினால்
தொல்லையாம் வினைவிடென்று தூர தூரம் ஆனதே (448)

ஆனதே பதியது அற்றதே பசுபாசம்
போனதே மலங்களும் புலன்களும் வினைகளும்
கானகத்தில் இட்டதீயில் காற்றுவந்து அடுத்ததோ
ஊனகத்தில் வாயுஉன்னி ஒன்றியே உலாவுமே (449)

உலாவும் உவ்வும் மவ்வுமாய் உதித்தடர்ந்து நின்றதும்
உலாவிஐம் புலன்களும் ஒருதலத்து இருந்திடும்
நிலாவும் அங்கு நேசமாகி நின்றமுர் தம் உண்டுதாம்
குலாவும் எங்கள் ஈசனைக் குறித்துணர்ந்து கும்பிடே (450)

460 வரை[தொகு]

கும்பிடும் கருத்துளே குகனை ஐங்கரனையும்
நம்பியே இடம் வலம் நமஸ்கரித்து நாடிட
எம்பிரானும் அம்மையும் இருத்தியே நடுவணைத்
தும்பிபோல வாசகம் தொடர்ந்து சோம்பி நீங்குமே (451)

நீங்கும் ஐம்புலன்களும் நிறைந்த வல் வினைகளும்
ஆங்காரமாம் ஆசையும் அருந்தடர்ந்த பாவமும்
ஓங்காரத்தின் உள்ளிருந்த ஒன்பதொழிந் தொன்றிலத்
தூங்கீசர் சொற்படி துணிந்திருக்க சுத்தமே (452)

கருக்கலந்த காலமேகண்டு நின்ற காரணம்
உருக்கலந்த போதலோ உன்னை நான் உணர்ந்தது
விரிக்கில் என் மறைக்கில் என் வினைக்கிசைந்த போதெலாம்
உருக்கலந்து நின்றபோது நீயும் நானும் ஒன்றலோ (453)

ஞான நூல்கள் தேடியே நவின்றஞான யோகிகாள்
ஞானமான சோதியை நாடிஉள் அறிகிலீர்
ஞானம் ஆகி நின்றதோர் நாதனை அறிந்தபின்
ஞானம் அல்லது இல்லை வேறு நாம் உரைத்தது உண்மையே (454)

கருத்தரிப்பதற்கு முன் காயம் நின்றது எவ்விடம்
உருத்தரிப்ப தற்குமுன் உயிர்ப்பு நின்றது எவ்விடம்
அருட்பொதிந்த சிந்தையில் மயக்கம் நின்றது எவ்விடம்
உருப்புணர்ந்த ஞானிகள் விரித்துரைக்க வேணுமே (455)

கருவினில் கருவதாய் எடுத்த ஏழு தோற்றமும்
இருவினைப் பயத்தினால் பிறந்திறந்து உழன்றிடும்
மருவினைப் பிறவிமூன்று காலமும் வகுத்தபின்
உருவினைப் பயன் இதென்று உணர்ந்த ஞானி சொல்லுமே (456)

வாயில் எச்சில் போகவே நீர்குடித்துத் துப்புவீர்
வாயிருக்க எச்சில் போன வாறதென்ன எவ்விடம்
வாயில் எச்சில் அல்லவோ நீர் உரைத்த மந்திரம்
நாதனை அறிந்தபோது நாடும் எச்சில் ஏது சொல் (457)

தொடக்கதென்று நீர்விழத் தொடங்குகின்ற ஊமர்காள்
தொடக்கிருந்தது எவ்விடம் சுத்தியானது எவ்விடம்
தொடக்கிருந்த வாறறிந்து சுத்திபண்ண வல்லிரேல்
தொடக்கிலாத சோதியைத் தொடர்ந்து காணலாகுமே (458)

மேதியோடும் ஆவுமே விரும்பியே புணர்ந்திடில்
சாதிபேதமாய் உருத்தரிக்கும் ஆறுபோலவே
வேதம் ஓது வானுடன் புலைச்சிசென்று மேவிடில்
பேதமாய்ப் பிறக்கிலாத வாறதென்ன பேசுமே (459)

வகைக்குலங்கள் பேசியே வழக்குரைக்கும் மாந்தர்காள்
தொகைக் குலங்கள் ஆன நேர்மை நாடியே உணர்ந்தபின்
மிகைத்தசுக்கிலம் அன்றியே வேறு ஒன்று கண்டிலீர்
. . . (460)

470 வரை[தொகு]

ஓதும் நாலு வேதமும் உரைத்த சாஸ்திரங்களும்
பூததத் துவங்களும் பொருந்தும் ஆகமங்களும்
சாதிபேத வன்மையும் தயங்குகின்ற நூல்களும்
பேதபேதம் ஆகியே பிறந்து உழன்று இருந்ததே (461)

உறங்கில் என் விழிக்கில் என் உணர்வு சென்று ஒடுங்கில் என்
திறம்பில் என் திகைக்கில் என் சில திசைகள் எட்டில் என்
புறம்பும் உள்ளும் எங்கணும் பொதிந்திருந்த தேகமாய்
நிறைந்திருந்த ஞானிகள் நினைப்பதும் ஏதும் இல்லையே (462)

அங்கலிங்கம் பூண்டு நீர் அகண்ட பூசை செய்கிறீர்
அங்கலிங்கம் பூண்டு நீ அமர்ந்திருந்த மார்பனே
எங்கும் ஓடி எங்கும் எங்கும் ஆடழிந்து மாய்கிறீர்
செங்கல் செம்பு கல்லெலாம் சிறந்து பார்க்கும் மூடரே (463)

தீட்டம் தீட்டம் என்று நீர் தினம் முழுகும் மூடரே
தீட்டமாகி அல்லவோ திரண்டு காயம் ஆனது
பூட்ட காயம் உம்முளே புகழுகின்ற பேயரே
தீட்டு வந்து கொண்டலோ தெளிந்ததே சிவாயமே (464)

உந்திமேலே நாலுமூன்று ஓம் நம சிவாயமாம்
சந்தி சந்தி என்றுநீர் சாற்றுகின்ற பேயரே
முந்தவந்து நம்முளே மூலநாடி ஊடுபோய்
அந்தி சந்தி அற்றிடம் அறிந்துணர்ந்து பாருமே (465)

வன்னி மூன்று தீயினில் வாழும் எங்கள் நாதனும்
கன்னியான துள்ளிருக்கக் காதல் கொண்டது எவ்விடம்
சென்னிநாலு கையிரண்டுசிந்தையில் இரண்டில் ஒன்று
உன்னி உன்னி நம்முளே உய்த்துணர்ந்து பாருமே (466)

தொண்டு செய்து நீங்களும் சூழ ஓடி மாள்கிறீர்
உண்டு உழன்று நம்முளே உற்றுணர்ந்து பார்க்கிலீர்
வண்டுளாடு சோலை சூழ் வாழும் எங்கள் நாதனும்
பண்டுபோல நம்முளே பகுத்திருப்பன் ஈசனே (467)

பரம் உனக்கு எனக்கு வேறு பயமும் இல்லை பாரையா
கரம் உனக்கு நித்தமும் குவித்திடக் கடமையாம்
சிரமுருக்கி அமுதளித்த சீருலாவும் நாதனே
உரம் எனக்கு நீ அளித்த உண்மை உண்மை உண்மையே (468)

மூலவட்ட மீதிலே முளைத்த ஐந்து எழுத்திலே
கோலவட்டம் மூன்றுமாய்க் குளிர்ந்தலர்ந்து நின்ற தீ
ஞாலவட்ட மன்றுளே நவின்ற ஞானி மேலதாய்
ஏலவட்டம் ஆகியே இருந்ததே சிவாயமே (469)

முச்சதுர மூலமாகி மூன்றதான பேதமாய்
அச்சதுரம் உம்முளே அடங்கவாசி யோகமாம்
மெய்ச்சதுர மெய்யுளே விளங்குஞான தீபமாய்
உச்சரித்த மந்திரம் ஓம் நமசிவாயமே (470)

480 வரை[தொகு]

இடங்கள் பண்ணி சுத்திசெய்தே இட்டபீட மீதிலே
அடங்கநீறு பூசல்செய்து அருந்தவங்கள் பண்ணுவீர்
ஒடுங்குகின்ற நாதனார் உதிக்கும் ஞானம் எவ்விடம்
அடங்குகின் றது எவ்விடம் அறிந்து பூசை செய்யுமே (471)

புத்தகங்களைச் சுமந்து பொய்களைப் பிதற்றுவீர்
செத்திடம் பிறந்திடம் அது எங்ஙன் என்றுஅறிகிலீர்
அத்தனைய சித்தனை அறிந்து நோக்க வல்லிரேல்
உத்தமத் தூள் ஆயசோதி உணரும்போகம் ஆகுமே (472)

அருளிலே பிறந்துதித்து மாயைருபம் ஆகியே
இருளிலே தயங்குகின்ற ஏழைமாந்தர் கேண்மினோ
பொருளிலே தவம்புனைந்து பொருந்திநோக்க வல்லிரேல்
மருள் அது ஏது வன்னியின் மறைந்ததே சிவாயமே (473)

தன்மசிந்தை ஆம் அளவும் தவமறியாத் தன்மையாய்க்
கன்மசிந்தை வெயில்உழன்று கருத்தமிழ்ந்த கசடரே
சென்ம சென்மம் தேடியும் தெளிவொணாத செல்வனை
நன்மையாக உம்முளே நயந்து காண வேண்டுமே (474)

கள்ளவுள்ள மேயிருக்க கடந்த ஞானம் ஓதுவீர்
கள்ளம்உள் அறுத்தபோது கதி இதன்றிக் காண்கிலீர்
உள்ளமே விளக்கிநித்தம் ஒளியணுக வல்லிரேல்
தெள்ளுஞானம் உம்முளே சிறந்ததே சிவாயமே (475)

காண வேண்டும் என்றுநீர் கடல்மலைகள் ஏறுவீர்
ஆணவம் அதல்லவோ அறிவில்லாத மாந்தரே
வேணும் என்றவ் வீசர்பாதம் மெய்யுளே தரிப்பிரேல்
தாணுவாக நின்றசீவன் தான்சிவம் அதாகுமே (476)

அணுவினோடு அகண்டமாய் அளவிடாத சோதியைக்
குணமதாக உம்முளே குறித்து நோக்கின் முத்தியாம்
மிணமிணென்று விரலை எண்ணி மீளொணாத மயக்கமாய்
துணிவிலாத படியினால் தொடர்ந்து பூசை செய்குவீர் (477)

எச்சில் எச்சில் என்றுநீர் இடைந்திருக்கும் ஏழைகாள்
துச்சில்எச்சில் அல்லவோ தூயகாயம் ஆனதும்
வைத்த எச்சில் தேனலோ வண்டின் எச்சில் பூவலோ
கைச்சுதாவில் வைத்துடன் கறந்தபாலும் எச்சிலே (478)

தீர்த்தலிங்கமூர்த்தி என்று தேடி ஓடும் தீதரே
தீர்த்தலிங்கம் உள்ளில் நின்ற சீவனைத் தெளியுமே
தீர்த்தலிங்கம் உம்முளே தெளிந்துகாண வல்லிரேல்
தீர்த்தலிங்கம் தான் அதாய்ச் சிறந்ததே சிவாயமே (479)

ஆடுகொண்டு கூறு செய்து அமர்ந்திருக்கும் ஆறுபோல்
தேடுகின்ற செம்பினைத் திடப்படப் பரப்பியே
நாடுகின்ற தம்பிரானும் நம்முளே இருக்கவே
போடுதர்ப்பபூசை என்ன பூசை என்ன பூசையே (480)

490 வரை[தொகு]

என்னை அற்ப நேரமும் மறக்கிலாத நாதனே
ஏகனே இறைவனே இராசராச ராசனே
உன்னை அற்ப நேரமும் ஒழிந்திருக்க லாகுமோ
உனது நாட்டம் எனதுநாவில் உதவி செய்வீர் ஈசனே (481)

எல்லையற்று நின்றசோதி ஏகமாய் எரிக்கவே
எந்தைபூர ணப்பிரகாசர் ஏகபோகம் ஆகியே
நல்லின்ப மோனசாக ரத்திலே அழுத்தியே
நாடொணாத அமிர்தம் உண்டு நான் அழிந்து நின்றநாள் (482)

ஆனவாற தாயிடும் அகண்டமான சோதியை
ஊனைகாட்டி உம்முளே உகந்துகாண வல்லிரேல்
ஊனகாயம் ஆளலாம் உலகபாரம் ஆளலாம்
வான நாடும் ஆளலாம் வண்ண நாடார் ஆணையே (483)

நித்தமும் மணி துலக்கி நீடுமூலை புக்கிருந்து
கத்தியே கதறியே கண்கள்மூடி என்பயன்
எத்தனை பேர் எண்ணினும் எட்டிரண்டும் பத்தலோ
அத்தனுக்கு இது ஏற்குமோ அறிவிலாத மாந்தரே (484)

எட்டிரண்டும் கூடியே இலிங்கமான தேவனை
மட்டதாக உம்முளே மதித்துநோக்க வல்லிரேல்
கட்டமான பிறவிஎன் கருங்கடல் கடக்கலாம்
இட்டமான வெளியினோடு இசைந்திருப்பீர் காண்மினே (485)

உண்மையான மந்திரம் ஒளியிலே இருந்திடும்
தன்மையான மந்திரம் சமைந்து ரூபம் ஆகியே
வெண்மையான மந்திரம் விளைந்து நீற தானதே
உண்மையான மந்திரம் அதொன்றுமே சிவாயமே (486)

பன்னிரண்டு நாள் இருத்திப் பஞ்சவன்னம் ஒத்திட
மின்னி அவ்வெளிக்குள் நின்று வேரெடுத்து அமர்ந்தது
சென்னியான தலத்திலே சீவன் நின்று இயங்கிடும்
பன்னி உன்னி ஆய்ந்தவர் பரப்பிரமம் ஆவரே (487)

தச்சுவாயில் உச்சிமேல் ஆயிரம் தலங்களாய்
முச்சுடரும் மூவிரண்டு மூண்டெழுந்த தீச்சுடர்
வச்சிரம் அதாகியே வளர்ந்து நின்றது எவ்விடம்
இச்சுடரும் இந்திரியமும் ஏகமானது எங்ஙனே (488)

முத்திசித்தி தொந்தமாய் முயங்குகின்ற மூர்த்தியை
மற்று உதித்த ஐம்புலன்கள் ஆகும் மத்தி அப்புலன்
அத்தனித்த காளகண்டர் அன்பினால் அனுதினம்
உச்சரித்து உளத்திலே அறிந்துணர்ந்து கொண்மினே (489)

வல்லவாசல் ஒன்பதும் மருத்தடைத்த வாசலும்
சொல்லும்வாசல் ஓர் ஐந்தும் சொல்ல விம்மி நின்றதும்
நல்லவாச லைத்திறந்து ஞானவாசல் ஊடுபோய்
எல்லைவாசல் கண்டபின் இனிப்பிறப்பது இல்லையே (490)

500 வரை[தொகு]

வண்டுபூ மணங்களோடு வந்திருந்த தேன்எலாம்
உண்டுளே அடங்கும் வண்ணம் ஓதுலிங்க மூலமாய்க்
கண்டுகண்டு வேரிலே கருத் தொடுங்க வல்லிரேல்
பண்டுகொண்ட வல்லினை பறந்திடும் சிவாயமே (491)

ஓரெழுத்தி லிங்கமாகஓதும் அக் கரத்துளே
ஓரெழுத்து இயங்குகின்ற உண்மையை அறிகிலீர்
மூவெழுத்தும் மூவராய் முளைத்தெழுந்த சோதியை
நாலெழுத்து நாவுளே நவின்றதே சிவாயமே (482)

தூரதூர தூரமும் தொடர்ந்தெழுந்த தூரமும்
பாரபார பாரம் என்று பரிந்திருந்த பாவிகாள்
நேரநேர நேரமும் நினைந்திருக்க வல்லிரேல்
தூரதூர தூரமும் தொடர்ந்து கூடல் ஆகுமே (493)

குண்டலங்கள் பூண்டுநீர் குளங்கள் தோறும் மூழ்குறீர்
மண்டுகங்கள் போலநீர் மனத்தின்மா சறுக்கிலீர்
மண்டை ஏந்துகையரை மனத்திருத்த வல்லிரேல்
பண்டைமால் அயன் தொழப்பணிந்து வாழ லாகுமே (494)

கூடுகட்டி முட்டையிட்டுக் கொண்டிருந்த வாறுபோல்
ஆடிரண்டு கன்றை ஈன்ற அம்பலத்துள் ஆடுதே
மாடுகொண்டு வெண்ணெய் உண்ணும் மானிடப் பசுக்களே
வீடுகண்டு கொண்டபின்பு வெட்டவெளியும் காணுமே (495)

நட்டகல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
சுற்றிவந்து முணமுணென்று சொல்லு மந்திரம் ஏதடா
நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள் ளிருக்கையில்
சுட்டசட்டி சட்டுவம் கறிச்சுவை அறியுமோ (496)

நானும் அல்ல நீயும் அல்ல நாதன் அல்ல ஓதுவேன்
வானில் உள்ள சோதி அல்ல சோதி நம்முள் உள்ளதே
நானும் நீயும் ஒத்தபோது நாடிக்காண லாகுமோ
தானதான தத்ததான நாதனான தான்னா (497)

நல்லதல்ல கெட்டதல்ல நடுவில் நிற்பது ஒன்றுதான்
நல்லதென்ற போத்து நல்லதாகி நின்றுபின்
நல்லதல்ல கெட்டதென்றால் கெட்டதாகும் ஆதலால்
நல்லதென்று நாடிநின்று நாமம் சொல்ல வேண்டுமே (498)

பேய்கள் கூடிப் பிணங்கள் தின்னும் பிரியமில்லாக் காட்டிலே
நாய்கள் சுற்ற நடனமாடும் நம்பன் வாழ்க்கை ஏதடா
நாய்கள்பால் உதிக்கும் இச்சை தவிர வேண்டி நாடினால்
நோய்கள் பட்டு உழல்வது ஏது நோக்கிப்பாரும் உம்முளே (499)

உப்பைநீக்கில் அழுகிப்போகும் ஊற்றையாகும் உடலில் நீ
அப்பியாசை கொண்டிருக்கல் ஆகுமோசொல் அறிவிலா
தப்பிலிப்பொய் மானம் கெட்ட தடியனாகும் மனமேகேள்
ஒப்பிலாசெஞ் சடையனாகும் ஒருவன் பாதம் உண்மையே (500)

510 வரை[தொகு]

பிறப்பதெல்லாம் இறப்பது உண்டு பேதைமக்கள் தெரிகிலாது
இறப்பது இல்லை என மகிழ்ந்து எங்கள் உங்கள் சொத்தெனக்
குறிப்புப்பேசித் திரிவரன்றிக் கொண்ட கோலம் என்னவோ
நிறப்பும் பொந்தி அழிந்தபோது நேசமாமோ ஈசனே (501)

சுட்டெரித்த சாந்துபூசும் சுந்தரப்பெண் மதிமுகத்
திட்டநெட்டு எழுத்தறியாது ஏங்கிநோக்கு மதவலீர்
பெட்டகத்துப் பாம்புறங்கும் பித்தலாட்டம் அறியிரோ
கட்டவிழ்த்துப் பிரமன் பார்க்கில் கதி உமக்கும் ஏதுகாண் (502)

வேதம் ஓது வேலையோ வீணதாகும் பாரிலே
காதகாத தூரம் ஓடிக் காதல் பூசை வேணுமோ
ஆதிநாதன் வெண்ணெயுண்ட அவனிருக்க நம்முளே
கோது பூசை வேதம் ஏது குறித்து பாரும் உம்முளே (503)

பரம் இலாதது எவ்விடம் பரம் இருப்பது எவ்விடம்
அறம் இலாத பாவிகட்குப் பரம் இலை அது உண்மையே
கரம் இருந்தும் பொருளிருந்தும் அருளிலாத போதது
பரம் இலாத சூன்யமாகும் பாழ் நரகம் ஆகுமே (504)

மாதர்தோள் சேராத தேவர் மாநிலத்தில் இல்லையே
மாதர் தோள் புணர்ந்தபோது மனிதர் வாழ் சிறக்குமே
மாதராகுஞ் சத்தியொன்று மாட்டிக் கொண்ட தாதலால்
மாதராகும் நீலிகங்கை மகிழ்ந்து கொண்டான் ஈசனே (505)

சித்தர் என்றும் சிறியர் என்றும் அறியொணாத சீவர்காள்
சித்தர் இங்கு இருந்தபோது பித்தன் என்று எண்ணுவீர்
சித்தர் இங்கு இருந்தும் என்ன பித்தன் நாட்டிருப்பரே
அத்தன் நாடும் இந்தநாடும் அவர்களுக்கெலாமொன்றே (506)

மாந்தர் வாழ்வு மண்ணிலே மறந்தபோது விண்ணிலே
சாந்தனான ஆவியை சரிப்படுத்த வல்லிரேல்
வேந்தன் ஆகி மன்றுளாடும் விமலன் பாதம் காணலாம்
கூந்தலம்மை கோணல் ஒன்றும் குறிக்கொணாது இது உண்மையே (507)

சருகருந்தி நீர்குடித்துச் சாரல்வாழ் தவசிகாள்
சருகருந்தி தேகங்குன்றிச் சஞ்சலம் உண்டாகுமே
வருவிருந்தோடு உண்டு உடுத்தி வளர்மனை சுகிப்பிரேல்
வருவிருந்தோன் ஈசனாகி வாழ்வளிக்கும் சிவாயமே (508)

காடுமேடு குன்றுபள்ளம் கானின் ஆறகற்றியும்
நாடுதேசம் விட்டலைவர் நாதன் பாதம் காண்பரோ
கூடுவிட்டு அகன்று உன் ஆலி கூத்தனூர்க்கே நோக்கலால்
வீடுபெற்று அரன் பதத்தில் வீற்றிருப்பர் இல்லையே (509)

கட்டையால் செய் தேவரும் கல்லினால்செய் தேவரும்
மட்டையால்செய் தேவரும் மஞ்சளால்செய் தேவரும்
சட்டையால்செய் தேவரும் சாடியால்செய் தேவரும்
வெட்டவெளிய தன்றிமற்று வேறுதெய்வம் இல்லையே (510)

520 வரை[தொகு]

தங்கள் தேகம் நோய் பெறின் தனைப்பிடாரி கோயிலில்
பொங்கல் வைத்து ஆடுகோழிப் பூசைப்பலியை இட்டிட
நங்கச் சொல்லு நலிமகுந்து நாளும் தேய்ந்து மூஞ்சூராய்
உங்கள் குலதெய்வம் உங்கள் உருக்குலைப்பது உண்மையே (511)

ஆசைகொண்டு அனுதினமும் அன்னியர் பொருளினை
மோசம் செய்து அபகரிக்க முற்றிலும் அலைபவர்
பூசையோடு நேமநிட்டை பூரிக்கச் செய் பாதகர்
காசினியில் ஏழுநரகைக் காத்திருப்பது உண்மையே (512)

நேசமுற்றுப் பூசை செய்து நீறுபூசிச் சந்தனம்
வாசமோடு அணிந்து நெற்றி மைதிலர்தம் இட்டுமே
மோசம் பொய்புனை சுருட்டு முற்றிலும் செய் மூடர்காள்
வேசரிக ளம்புரண்ட வெண்ணீறாகும் மேனியே (513)

வாதம் செய்வேன் வெள்ளியும் பொன் மாற்றுயர்ந்த தங்கமும்
போதவே குருமுடிக்கப் பொன் பணங்கள் தர வெனச்
சாதனை செய் தெத்திச் சொத்து தந்ததைக் கவர்ந்துமே
காததூரம் ஓடிச் செல்வர் காண்பதும் அருமையே (514)

யோகசாடை காட்டுவார் உயரவும் எழும்புவார்
வேகமாக அட்டசித்து வித்தைகற்று நெட்டுவார்
மோகம்கொண்டு மாதரின் மூத்திரப்பை சிக்கிப்பின்
பேயது பிடித்தவர் போல் பேருலகில் சாவரே (515)

காயகாயம் உண்பதாகக் கண்டவர் மதித்திட
மாயவித்தை செய்வது எங்கு மடிப்பு மோசம் செய்பவர்
நேயமாக் கஞ்சா அடித்துநேர் அபினைத் தின்பதால்
நாயதாக நக்கிமுக்கி நாட்டினில் அலைவரே (516)

நீரினில் குமிழிஒத்த நிலையிலாத காயம் என்று
ஊரினில் பறை அடித்து உதாரியாய்த் திரிபவர்
சீரினில் உனக்கு ஞான சித்திசெய்வேன் பாரென
நேரினில் பிறர்பொருளை நீளவும் கைப்பற்றுவார் (517)

காவியும் சடைமுடி கமண்டலங்கள் ஆசனம்
தாவுருத்தி ராட்சம் யோகத் தண்டு கொண்ட மாடுகள்
தேவியை அலையவிட்டுத் தேசம் எங்கும் சுற்றியே
பாவியேன்ன வீடெலாம் பருக்கை கேட்டு அலைவரே (518)

முத்திசேரச் சித்தி இங்கு முன்னளிப்பேன் பாரென
சத்தியங்கள் சொல்லி எங்கும் சாமிவேடம் பூண்டவர்
நித்தயம் வயிறு வளர்க்க நீதிஞானம் பேசியே
பத்தியாய்ப் பணம் பறித்துப் பாழ்நரகில் வீழ்வரே (519)

செம்மை சேர்மரத்திலே சிலைதலைகள் செய்கிறீர்
கொம்மையற்ற கிளையில்பாத குறடு செய்து அழிக்கிறீர்
நும்முளே விளங்குவோனை நாடி நோக்க வல்லிரேல்
இம்மளமும் மும்மளமும் எம்மளமும் அல்லவே (520)

526 வரை[தொகு]

எத்திசை எங்கும் எங்கும் ஓடி எண்ணிலாத நதிகளில்
சுற்றியும் தலைமுழுகச் சுத்த ஞானி யாவரோ
பத்தியோடு அரன்பதம் பணிந்திடாத பாவிகாள்
முத்தி இன்றி பாழ்நரகில் மூழ்கி நொந்து அலைவரே (521)

கல்லு வெள்ளி செம்பிரும்பு காய்ந்திடும் தராக்களில்
வல்லதேவ ருபபேதம் அங்கமைத்துப் போற்றிடில்
தொல்லை அற்றிடப்பெரும் சகந்தருமோ சொல்லுவீர்
இல்லை இல்லை இல்லை இல்லை ஈசன் ஆணை இல்லையே (522)

இச்சகம் சனித்ததுவும் ஈசன் ஐந்து எழுத்திலே
மெச்சவும் சராசரங்கள் மேவம் ஐந்து எழுத்திலே
உச்சிதப் பலுயிர்கள் ஓங்கல் அஞ்சு எழுத்திலே
நிச்சயம் மெய்ஞ் ஞானபோதம் நிற்கும் ஐந்து எழுத்திலே (523)

சாத்திரங்கள் பார்த்துப் பார்த்து தான் குருடு ஆவதால்
நேத்திரம் கெட வெய்யோனை நேர்துதி செய் மூடர்கள்
பாத்திரம் அறிந்து மோன பக்தி செய்ய வல்லிரேல்
சூத்திரப்படி யாவரும் சுத்தர் ஆவர் அங்ஙனே (524)

மனவுறுதி தானிலாத மட்டிப் பிண மாடுகள்
சினமுறப் பிறர் பொருளைச் சேகரித்து வைத்ததைத்
தினந்தினம் ஊர் எங்கும் சுற்றி திண்டிக்கே அலைபவர்
இனமதில் பலர்கள் வையும் இன்பம் அற்ற பாவிகள் (525)

சிவாயவசி என்னவும் செபிக்க இச்சகம் எலாம்
சிவாயவசி என்னவும் செபிக்க யாவும் சித்தியாம்
சிவாயவசி என்னவும் செபிக்க வானம் ஆளலாம்
சிவாயவசி என்பதே இருதலைத் தீ ஆகுமே (526)

"https://ta.wikisource.org/w/index.php?title=சிவவாக்கியார்&oldid=1400284" இலிருந்து மீள்விக்கப்பட்டது