புகழேந்தி நளன் கதை/3. கலி நீங்கு காண்டம்

விக்கிமூலம் இலிருந்து

வேத முனியொருவன் சாபத்தால் வெங்கானில்
ஆதபத்தின் வாய்ப்பட்டழிகின்றேன் - காதலால்
வந்தெடுத்துக் காவென்றான் மாலை மணிவண்டு
சந்தெடுத்த தோளானைத் தான் 339

சீரியாய் நீயெடுப்பத் தீமை கெடுகின்றேன்
கூருந் தழலவித்துக் கொண்டுபோய் - பாரில்
விடுகென்றான் மற்றந்த வெந்தழலால் வெம்மைப்
படுகின்றான் வேல்வேந்தைப் பார்த்து 340

என்றுரைத்த அவ்வளவிலேழுலகுஞ் சூழ்கடலும்
குன்றுஞ் சுமந்த குலப்புயத்தான் - வென்றி
அரவரசைக் கொண்டகன்றான் ஆரணியம் தன்னின்
இரவரசை வென்றான் எடுத்து 341

மண்ணின்மீதென்றனைநின் வன்றாளால் ஒன்றுமுதல்
எண்ணித் தசவென் றிடுகென்றான் - நண்ணிப்போர்
மாவலான் செய்த உதவிக்கு மாறாக
ஏவலாற் றீங்கிழைப்பே னென்று 342

ஆங்கவன்றான் அவ்வாறுரைப்ப அதுகேட்டுத்
தீங்கலியாற் செற்ற திருமணத்தான் - பூங்கழலை
மண்ணின்மேல் வைத்துத் தசவென்று வாய்மையால்
எண்ணினால் வைத்தான் எயிறு 343

ஆற்ற லரவரசே யீங்கென் னுருவத்தைச்
சீற்றமொன் றின்றிச் சினவெயிற்றால் - மாற்றுதற்கின்
றென்கா ரணமென்றான் ஏற்றமளிற் கூற்றழைக்கும்
மின்கா லயின்முகவேல் வேந்து 344

ஆகம் குறுகுதல்


வீமன் மடந்தை விழிமுடியக் கண்டறியா
வாம நெடுந்தோள் வறியோருக் - கேமங்

கொடாதார் ஆகம்போற் குறுகிற்றே மெய்ம்மை
விடாதான் திருமேனி வெந்து 345

காயும் கடகளிற்றாய் கார்க்கோ டகனென்பேர்
நீயிங்கு வந்தமை யானிணைந்து - காயத்தை
மாறாக்கிக் கொண்டு மறைந்துறைதல் காரணமா
வேறாக்கிற் றென்றான் விரைந்து 346

கூனிறால் பாயக் குவளை தவளைவாய்த்
தேனிறால் பாயும் திருநாடா - கானில்
தணியாத வெங்கனலைத் தாங்கினாய் இந்த
அணியாடை கொள்கென்றான் ஆங்கு 347

சாதிமணித்துகில்நீ சாத்தினால் தண்கழுநீர்ப்
போதின்கீழ் மேயும் புதுவரால் - தாதின்
துளிக்குநா நீட்டுந் துறைநாடர் கோவே
ஒளிக்குநாள் நீங்கும் உரு348

வாகுவன் ஆதல்


வாகு குறைந்தமையால் வாகுவனென்றுன்னாமம்
ஆக வயோத்தி நகரடைந்து - மாகனகத்
தேர்த்தொழிற்கு மிக்கானியாகென்றான் செம்மனத்தாற்
பார்த்தொழிற்கு மிக்கானைப் பார்த்து 349

இணையாரும் இல்லான் இழைத்த உதவி
புணையாகச் சூழ்கானிற் போனான் - பணையாகத்
திண்ணாக மோரெட்டுந் தாங்குந் திசையனைத்தும் 350
எண்ணாக வேந்த னெழுந்து

நினைப்பென்னும் காற்றசைப்ப நெஞ்சிடையே மூளும்
கனற்புகைய வேகின்றான் கண்டான் - பனிக்குருகு
தண்படாம் நீழல் தனிப்பேடை பார்த்திரவு
கண்படா வேலைக் கரை 351

கொம்பர் இளங்குருகே கூறா திருத்தியால்
அம்புயத்தின் போதை யறுகாலால் - தும்பி
திறக்கத்தே னுறுந் திருநாடன் பொன்னை
உறக்கத்தே நீத்தேனுக் கொன்று 352

புன்னை நறுந்தாது கோதிப் பொறிவண்டு
கன்னிப் பெடையுண்ணக் காத்திருக்கும் - இன்னருள்கண்
டஞ்சினா னாவி யழிந்தான் அறவுயிர்த்து
நெஞ்சினால் எல்லாம் நினைந்து 353

காதலியைக் காரிருளிற் கானகத்தே கைவிட்ட
பாதகனைப் பார்க்கப் படாதென்றோ - நாதம்
அளிக்கின்ற ஆழிவாய் ஆங்கலவ ஓடி
ஒளிக்கின்ற தென்னோ உரை? 354

பானலே சோலைப் பசுந்தென்றல் வந்துலவும்
காணலே வேலைக் கழிகுருகே - யானுடைய
மின்னிமைக்கும் பூணராம் வீங்கிருள்வாய் ஆங்குணர்ந்தால்
என்னினைக்குஞ் சொல்வீர் எனக்கு 355

போவாய் வருவாய் புரண்டு விழுந்திரங்கி
நாவாய் குழற நடுங்குறுவாய் - தீவாய்
அரவகற்றும் என்பபோல் ஆர்கடலே மாதை
இரவகற்றி வந்தாய்கொல் இன்று 356

முந்நீர் மடவார் முறுவல் திரள்குவிப்ப
நன்னீர் அயோத்தி நகரடைந்தான் - பொன்னி
முருகுடைக்குந் தாமரையின் மொய்ம்மலரைத் தும்பி
அருகுடைக்கும் நன்னாட் டரசு 357

அயோத்தி அடைதல்


மான்தேர்த் தொழிற்கும் மடைத்தொழிற்கும் மிக்கோனென்று
ஊன்தேய்க்கும் வேலான் உயர்நறவத் - தேன்தோய்க்கும்

தார்வேந்தற் கென்வரவு தானுரைமின் என்றுரைத்தான்
தேர்வேந்தன் வாகுவனாய்ச் சென்று 358

அம்மொழியைத் தூதர் அரசற்கு அறிவிக்கச்
செம்மொழியாத் தேர்ந்ததனைச் சிந்தித்தே - இம்மொழிக்குத்
தக்கானை இங்கே தருமி னெனவுரைக்க
மிக்கானும் சென்றான் விரைந்து 359

பொய்யடையாச் சிந்தைப் புரவலனை நோக்கித்தன்
செய்ய முகமலர்ந்து தேர்வேந்தன் - ஐயாநீ
எத்தொழிற்கு மிக்காய்யாது பெயரென்றான்
கைத்தொழிற்கு மிக்கானைக் கண்டு 360

அன்னம் மிதிப்ப அலர்வழியும் தேறல்போய்ச்
செந்நெல் விளைக்குந் திருநாடர் - மன்னா
மடைத்தொழிலும் தேர்த்தொழிலும் வல்லவன்யான் என்றான்
கொடைத்தொழிலின் மிக்கான் குறித்து 361

தமயந்தி வேதியனை அனுப்புதல்


என்னை இருங்கானில் நீத்த இகல்வேந்தன்
தன்னைநீ நாடுகெனத் தண்கோதை - மின்னுப்
புரைகதிர்வேல் வேந்தன் புரோகிதனுக் கிந்த
உரைபகர்வ தானாள் உணர்ந்து 362

காரிருளில் பாழ்மண்டபத்தேதன் காதலியைச்
சோர்துயிலின் நீத்தல் துணிவன்றோ - தேர்வேந்தற்
கென்றறைந்தால் நேர்நின் றெதிர்மாற்றம் தந்தாரைச்
சென்றறிந்து வாவென்றாள் தேர்ந்து 363

மின்னாடும் மால்வரையும் வேலையும் வேலைசூழ்
நன்னாடும் கானகமும் நாடினான் - மன்னு
கடந்தாழ் களியானைக் காவலனைத் தேடி
அடைந்தான் அயோத்தி நகர் 364

கானகத்துக் காதலியைக் காரிருளிற் கைவிட்டுப்
போனதுவும் வேந்தற்குப் போதுமோ - தானென்று
சாற்றினான் அந்தவுரை தார்வேந்தன் தன்செவியில்
ஏற்றினான் வந்தான் எதிர் 365365

ஒண்டொடி தன்னை உறக்கத்தே நீத்ததுவும்
பண்டை விதியின் பயனேகாண் - தண்டரளப்
பூத்தாம வெண்குடையான் பொன்மகளை வெவ்வனத்தே
நீத்தான்என் றையுறேல் நீ 366

எங்க ணுறைந்தனைகொல் எத்திசைபோய் நாடினைகொல்
கங்கைவள நாட்டார்தங் காவலனை - அங்குத்
தலைப்பட்ட வாறுண்டோ சாற்றென்றாள் கண்ணி
அலைப்பட்ட கொங்கையாளாங்கு 367

வாக்கினால் மன்னவனை ஒப்பான் மதித்தொருகால்
ஆக்கையே நோக்கின் அவனல்லன் - பூக்கமழும்
கூந்தலாய் மற்றக் குலப்பாகன் என்றுரைத்தான்
ஏந்துநூல் மார்பன் எடுத்து 368

மற்றும் ஓர் சுயம்வரம்


மீண்டோர் சுயம்வரத்தை வீமன் திருமடந்தை
பூண்டாளென் றந்தண நீ போயுரைத்தால் - நீண்ட
கொடைவேந்தற் கித்துரம் தேர்க்கோலம் கொள்வான்
படைவேந்தன் என்றாள் பரிந்து 369

எங்கோன் மகளுக் கிரண்டாஞ் சுயம்வரமென்
றங்கோர் முரசம் அறைவித்தான் - செங்கோலாய்
அந்நாளும் நாளை யளவென்றான் அந்தணன்போய்த்
தென்னாளுந் தாரானைச் சேர்ந்து 370

அயோத்தி மன்னன் புறப்படல்


வேத மொழிவாணன் மீண்டும் சுயம்வரத்தைக்
காதலித்தாள் வீமன்றன் காதலியென் - றோதினான்

என்செய்கோ மற்றிதனுக் கென்றான் இகல்சீறும்
மின்செய்த வேலான் விரைந்து 371

குறையாத கற்பினாள் கொண்டானுக் கல்லால்
இறவாத வேந்திழையாள் இன்று - பறிபீறி
நெல்லிற் பருவரால் ஓடும் - நெடுநாடா
சொல்லப் படுமோவிச் சொல்? 372

என்மேல் எறிகின்ற மாலை எழில்நளன்றன்
தன்மேல் விழுந்ததுகாண் முன்னாளில் - அன்னதற்குக்
காரணந்தான் ஈதன்றோ என்றான் கடாஞ்சொரியும்
வாரணந்தான் அன்னான் மறித்து 373

முன்னை வினையான் முடிந்ததோ மொய்குழலாள்
என்னைத்தான் காண விசைந்ததோ - தன்மரபுக்
கொவ்வாத வார்த்தை யுலகத் துரைப்பட்ட
தெவ்வாறு கொல்லோ விது? 374

காவலனுக் கேவற் கடன்பூண்டேன் மற்றவன்றன்
ஏவல் முடிப்பன் இனியென்று - மாவிற்
குலத்தேரைப் பூட்டினான் கோதையர்தங் கொங்கை
மலர்த்தேன் அளிக்குந்தார் மன் 375

நளன் தேர் ஒட்டுதல்


ஒற்றைத் தனியழித் தேரென்ன ஓடுவதோர்
கொற்ற நெடுந்தேர் கொடுவந்தேன் - மற்றிதற்கே
போந்தேறு கென்றுரைத்தான் பொம்மென் றளிமுரலத்
தீங்தேறல் வாக்குந்தார்ச் சேய்376

முந்தை வினைகுறுக மூவா மயல்கொண்டான்
சிந்தையினுங்கடுகச் சென்றதே - சந்தவிரைத்
தார்குன்றா மெல்லோதி தன்செயலைத் தன்மனத்தே
தேர்கின்றான் ஊர்கின்ற தேர்377

மேலாடை வீழ்ந்த தெடுவென்றான் அவ்வளவில்
நாலாறு காதம் நடந்ததே - தோலாமை
மேல்கொண்டான் ஏறிவர வெம்மைக் கலிச்சூதில்
மால்கொண்டான் கோல்கொண்ட மா 378

இத்தாழ் பணையில் இருந்தான்றிக் காயெண்ணிற்
பத்தாயிரங்கோடி பாரென்ன - உய்த்தனில்
தேர்நிறுத்தி எண்ணினான் தேவர் சபைநடுவே
தார்நிறுத்துந் தோள்வேந்தன் தான் 379

ஏரடிப்பார் கோலெடுப்ப இன்தேன் தொடைபீறிக்
காரடுத்த சோலைக் கடனாடன் - தேரடுத்த
மாத்தொழிலுக்கு இத்தொழிலும் மாற்றுதியோ என்றுரைத்தான்
தேர்த்தொழிலின் மிக்கானைத் தேர்ந்து 380

வண்டார் வளவயல்சூழ் மள்ளுவநாட் டெங்கோமான்
தண்டார் புனைசந்திரன்சுவர்க்கி - கொண்டாடும்
பாவலன்பால் நின்ற பசிபோல நீங்கிற்றே
காவலன்பால் நின்ற கலி 381

ஆமை முதுகில் அலவன் துயில்கொள்ளும்
காமர் நெடுநாடு கைவிட்டு - வீமன்தன்
பொன்னகரி சென்றடைந்தான் போர்வெட்டெழுங்கூற்றம்
அன்னகரி யொன்றுடையான் ஆங்கு 382

வெற்றித் தனித்தேரை வீமன் பெருங்கோயின்
முற்றத் திருத்தி முறைசெய்யும் - கொற்றவற்குத்
தன்வரவு கூறப் பணித்துத் தனிப்புக்கான்
மன்விரவு தாரான் மகிழ்ந்து 383

வீமன் வரவேற்றல்


கன்னி நறுந்தேறல் மாந்திக் கமலத்தின்
மன்னித் துயின்ற வரிவண்டு - பின்னையும்போய்

நெய்தற் கவாவும் நெடுநாட நீயென்பால்
எய்தற் கவியவாறென்? 384

இன்றுன்னைக் காண்பதோ ராதரவால் யானிங்ஙன்
மன்றல் மலர்த்தாராய் வந்தடைந்தேன் - என்றான்
ஒளியார் கண்ணாள்மேல் உள்ளம் துரப்பத்
தெளியாது முன்போந்த சேய் 385

ஆதி நெடுந்தேர்ப் பரிவிட் டவையாற்றிக்
கோதில் அடிசிற் குறைமுடிப்பான் - மேதிக்
கடைவாயிற் கார்நீலம் கண்விழிக்கும் நாடன்
மடைவாயிற் புக்கான் மதித்து 386

ஆதி மறைநூல் அனைத்தும் தெரிந்துணர்ந்த
நீதி நெறியாளர் நெஞ்சம்போல் - யாதும்
நிரப்பாமல் எல்லாம் நிரம்பிற்றே பொற்றேர்
வரப்பாகன் புக்க மனை 387

மக்களை அனுப்பி வைத்தல்


இடைச்சுரத்தில் தன்னை இடையிருளில் நீத்த
கொடைத் தொழிலான் என்றயிர்த்த கோமான் - மடைத்தொழில்கள்
செய்கின்ற தெல்லாம் தெரிந்துணர்ந்து வாவென்றாள்
நைகின்ற நெஞ்சாள் நயந்து 388

கோதை நெடுவேற் குமரனையும் தங்கையையும்
ஆதி அரசன் அருகாகப் - போத
விளையாட விட்டவன்மேற் செயல்நாடென்றாள்
வளையாடுங் கையாள் மதித்து 389

உரையாடல்கள்


மக்களைமுன் காணா மனநடுங்கா வெய்துயிராப்
புக்கெடுத்து வீரப் புயத்தணையா - மக்காள்நீர்

என்மக்கள் போல்கின்றீர் யார்மக்க ளென்றுரைத்தான்
வன்மக் களியானை மன் 390

மன்னு நிடதத்தார் வாள்வேந்தன் மக்கள்யாம்
அன்னைதனைக் கான்விட் டவனேக - இந்நகர்க்கே
வாழ்கின்றோம் எங்கள் வளநாடு மற்றொருவன்
ஆள்கின்றான் என்றார் அழுது 391

ஆங்கவர் சொன்ன வுரைகேட் டழிவெய்தி
நீங்கா உயிரோடு நின்றிட்டான் - பூங்காவில்
வள்ளம்போற் கோங்கு மலருந் திருநாடன்
வெள்ளம்போற் கண்ணி உகுத்து 392

உங்கள் அரசொருவன் ஆளநீர் ஓடிப்போந்து
இங்கண் உறைதல் இழுக்கன்றோ - செங்கை
வளவரசே என்றுரைத்தான் மாதவத்தாற் பெற்ற
இளவரசை நோக்கி எடுத்து 393

நெஞ்சாலிம் மாற்றம் நினைந்துரைக்க நீயல்லால்
அஞ்சாரோ மன்னர் அடுமடையா! எஞ்சாது
தீமையே கொண்ட சிறுதொழிலாய் எங்கோமான்
வாய்மையே கண்டாய் வலி 394

எந்தை கழலிணையில் எம்மருங்கும் காணலாம்
கந்து கடியும் கடாக்களிற்றின் - வந்து
பணிமுடியிற் பார்காக்கும் பார்வேந்தர் தங்கள்
மணிமுடியிற் றேய்ந்த வடு 395

மன்னர் பெருமை மடையர் அறிவரோ
உன்னை அறியாது உரைசெய்த - என்னை
முனிந்தருளல் என்று முடிசாய்த்து நின்றான்
கனிந்துருகி நீர்வாரக் கண் 396

சேடி செய்தி உரைத்தல்


கொற்றக் குமரனையும் கோதையையும் தான்கண்டு
மற்றவன்றான் ஆங்குரைத்த வாசகத்தை - முற்றும்
மொழிந்தாரம் மாற்றம் மொழியாத முன்னே
அழிந்தாள் விழுந்தாள் அழுது 397

கொங்கை யளைந்து சூழல்திருத்திக் கோலஞ்செய்
அங்கையிரண்டும் அடுபுகையால் இங்ஙன்
கருகியவோ என்றழுதிகள் காதலனை முன்னாள்
பருகியவேற் கண்ணாள் பதைத்து 398

தந்தைக்கு அறிவுறுத்தல்


மற்றித் திருநகர்க்கே வந்தடைந்த மன்னவற்குக்
கொற்றத் தனித்தேரும் கொண்டணைந்து - மற்றும்
மடைத்தொழிலே செய்கின்ற மன்னவன்கா ணெங்கள்
கொடைத்தொழிலான் என்றாள் குறித்து 399

வீமன் சென்று அழைத்தல்


போதலருங் கண்ணியான் போர்வேந்தர் சூழப்போய்க்
காதலிதன் காதலனைக் கண்ணுற்றான் - ஒதம்
வரிவளைகொண்டேறும் வளநாடன் தன்னைத்
தெரிவரிதா நின்றான் திகைத்து 400

செவ்வாய் மொழிக்கும் செயலுக்கும் சிந்தைக்கும்
ஒவ்வாது கொண்ட உருவென்னா - எவ்வாயும்
நோக்கினான் நோக்கித் தெளிந்தான் நுணங்கியதோர்
வாக்கினான் தன்னை மதித்து 401

பைந்தலைய நாக பணமென்று பூகத்தின்
ஐந்தலையின் பாளைதனை ஐயுற்று - மந்தி
தெளியா திருக்கும் திருநாடா! உன்னை
ஒளியாது காட்டுன் உரு 402

அரவரசன் தான்கொடுத்த அம்பூந் துகிலின்
ஒருதுகிலை வாங்கி உடுத்தான் - ஒருதுகிலைப்
போர்த்தான் பொருகலியின் வஞ்சனையாற் பூண்டளிக்கும்
கோத்தாயம் முன்னிழந்த கோ 403

உருவு மாறல்


மிக்கோன் உலகளந்த மெய்யடியே சார்வாகப்
புக்கோர் அருவினைபோற் போயிற்றே - அக்காலம்
கானகத்தே காதலியை நீத்துக் கரந்துறையும்
மானகத்தேர்ப் பாகன் வடிவு 404404

தாதையைமுன் காண்டலுமே தாமரைக்கண் நீரரும்பப்
போதலரும் குஞ்சியான் புக்கணைந்து - கோதிலாப்
பொன்னடியைக் கண்ணிற் புனலாற் கழுவினான்
மின்னிடையாளோடும் விழுந்து 405

தமயந்தி சந்தித்தல்


பாதித் துகிலோடு பாய்ந்திழியும் கண்ணிரும்
சீதக் களபதனம் சேர்மாசும் - போத
மலர்ந்ததார் வேந்தன் மலரடியில் வீழ்ந்தாள்
அலர்ந்ததே கண்ணி அவற்கு 406

வெவ்விடத்தோ டொக்கும் விழியிரண்டும் வீழ்துயில்கொள்
அவ்விடத்தே நீத்த அவரென்றே - இவ்விடத்தே
வாரார் முலையாளம் மன்னவனைக் காணாமல்
நீரால் மறைத்தனவே நின்று 407

உத்தமரின் மற்றிவனை ஒப்பார் ஒருவரிலை
இத்தலத்தில் என்றிமையோர் எம்மருங்கும் - கைத்தலத்தில்
தேமாரி பெய்யுந் திருமலர்தார் வேந்தன்மேற்
பூமாரி பெய்தார் புகழ்ந்து 408

கலி நீங்குதல்


தேவியிவள் கற்புக்கும் செங்கோன் முறைமைக்கும்
பூவுலகில் ஒப்பார்யார் போதுவார் - காவலனே
மற்றென்பால் வேண்டும் வரங்கேட்டுக் கொள்ளென்றான்
முற்றன்பாற் பாரளிப்பான் முன் 409

உன்சரிதம் செல்ல உலகாளும் காலத்து
மின்சொரியும் வேலாய் மிகவிரும்பி - என் சரிதம்
கேட்டாரை நீயடையேல் என்றான் கிளர்மணிப்பூண்
வாட்டானை மன்னன் மதித்து 410

என்காலத் துன்சரிதம் கேட்டாரை யானடையேன்
மின்கால் அயில்வேலாய் மெய்யென்று - நன்காவி
மட்டிறைக்குஞ் சோலை வளநாடன் முன்னின்று
கட்டுரைத்துப் போனான் கலி 411

வேத நெறிவழுவா வேந்தனையும் பூந்தடங்கண்
கோதையையும் மக்களையும் கொண்டுபோய்த் - தாது
புதையத்தேன் பாய்ந்தொழுகும் பூஞ்சோலை வேலி
விதையக்கோன் செய்தான் விருந்து 412

உன்னையான் ஒன்றும் உணரா துரைத்தவெலாம்
பொன்னமருந் தாராய் பொறுவென்று - பின்னைத்தன்
மேனிமை குன்றாவெறுந்தேர் மிசைக்கொண்டான்
மானி அயோத்தியார் மன் 413

விற்றானை முன்செல்ல வேல்வேந்தன் பின்செல்லப்
பொற்றேர்மேற் றேவியொடும் போயினான் - முற்றாம்பல்
தேனி அளித்தருகு செந்நெற் கதிர்விளைக்கும்
மாநீர் நிடதத்தார் மன் 414

தானவரை வெல்லத் தரித்தநெடு வைவேலாய்
ஏனைநெறி தூரமினி எத்தனையோ - மானேகேள்

இந்த மலைகடந்தேழுமலைக் கப்புறமா
விந்தமெனும் நம்பதிதான் மிக்கு 415

இக்கங்குல் போக இகல்வேல் நளனெறிநீர்
செய்க்கங்கு பாயுந் திருநாடு - புக்கங்கு
இருக்குமா காண்பான்போல் ஏறினான் குன்றிற்
செருக்குமான் தேர்வெய்யோன் சென்று 416

நாடு திரும்புதல்


மன்றலிளங் கோதையொடு மக்களுந் தானுமொரு
வென்றி மணிநெடுந்தேர் மேலேறிச் - சென்றடைந்தான்
மாவிந்த மென்னும் வளநகரஞ் சூழ்ந்தொரு
பூவிந்தை வாழும் பொழில் 417

மற்றவனுக் கென்வரவு சொல்லி மறுசூதுக்
குற்ற பணையம் உளதென்று - கொற்றவனைக்
கொண்டணை வீரென்று குலத்து தரைவிடுத்தான்
தண்டெரியல் தேர்வேந்தன் தான் 418

மறு ஆதாடுதல்


மாய நெடுஞ்சூதில் வஞ்சித்த வன்னெஞ்சன்
தூய நறுமலர்ப்பூஞ்சோலைவாய் - ஆய
பெருந்தானை சூழப் பெடைநடையாளோடும்
இருந்தானைக் கண்டான் எதிர். 419

செங்கோல் அரசன் முகம்நோக்கித் தேர்ச்சியிலா
வெங்கோல் அரசன் வினவினான் - அங்கோலக்
காவற் கொடைவேந்தே காதலர்க்கும் காதலிக்கும்
யாவர்க்கும் தீதிலவே என்று 420

தீது தருகலிமுன் செய்ததனை யோராதே
யாது பணயம் எனவியம்பச் - சூதாட
மையாழி யிற்றுயிலும் மாலனையாள் வண்மைபுனை
கையாழி வைத்தான் கழித்து 421

அப்பலகை யொன்றின் அருகிருந்தோர் தாமதிக்கச்
செப்பரிய செல்வத் திருநகரும் - ஒப்பரிய
வன்றானை யோடு வளநாடும் வஞ்சனையால்
வென்றானை வென்றானவ் வேந்து 422

ஆட்சி திரும்பப் பெறுதல்


அந்த வளநாடும் அவ்வரசும் ஆங்கொழிய
வந்த படியே வழிக்கொண்டான் - செந்தமிழோர்
நாவேய்ந்த சொல்லான் நளனென்று போற்றிசைக்கும்
தேர்வேந்தற் கெல்லாம் கொடுத்து 423

ஏனை முடிவேந்தர் எத்திசையும் போற்றிசைப்பச்
சேனை புடைசூழத் தேரேறி - ஆனபுகழ்ப்
பொன்னகரம் எய்தும் புரந்தரனைப் போற்பொலிந்து
நன்னகரம் புக்கான் நளன் 424

மாநகர் அடைந்த மகிழ்ச்சி


கார்பெற்ற தோகையோ கண்பெற்ற வாண்முகமோ
நீர்பெற்றுயர்ந்த நிறைபுலமோ - பார்பெற்று
மாதோடு மன்னன் வரக்கண்ட மாநகருக்கு
ஏதோ உரைப்பன் எதிர்? 425

வென்றி நிடதத்தார் வேந்தன் சரிதையீ
தென்றுரைத்த வேத யியல்முனிவன் - நன்றிபுனை
மன்னா பருவரலை மாற்றுதியென் றாசிமொழி
பன்னா நடந்திட்டான் பண்டு 426

வாழி அருமறைகள் வாழிநல் அந்தணர்கள்
வாழிநளன் காதை வழுத்துவோர் - வாழிய
மள்ளுவநாட் டாங்கண் வருசந்திரன்சுவர்க்கி
தெள்ளுறமெய்க்க கீர்த்தி சிறந்து. 427

☆ ☆ ☆