கம்பராமாயணம் (உரைநடை)/சுந்தர காண்டம்

விக்கிமூலம் இலிருந்து
சுந்தர காண்டம்

அனுமன் கடலைக் கடத்தல்

கடலைக் கடப்பதற்கு அனுமன் தன் உடம்பைப் பெருக்க வேண்டுவதாயிற்று. மண்ணும் விண்ணும் நிறைந்த பேருருவம் எடுத்தான். அவன் தலை விண்ணை முட்டியது; அங்கே மண்ணவர் வியக்கும் துறக்க நாடு இருந்தது; சீதை அங்கு வாழ விரும்புபவள் அல்லள்; அதனால், அங்கு இருக்க அவளுக்கு வாய்ப்பில்லை என்பதை உணர்ந்தான்.

அவன் ஏறி நின்றது மகேந்திர மலை; விண்ணை முட்டும் அம் மலையில் இருந்த அவனுக்குப் பொன்னை நிகர்த்த இலங்கை கண்ணில் பட்டது. “செல்லும் இடம் அதுதான் என்ற தெளிவு ஏற்பட்டது. அதனால், எல்லை யில்லா மகிழ்ச்சி அவனைத் தழுவியது.

அங்கிருந்து அ வன் இலங்கை நோக்கிப் பாய்ந்தான்; கால்களை அழுத்தமாக அம் மலையில் ஊன்றினான்; வானரனாக இருந்தவன் வானவர்போல் அந்தரத்தில் பறந்தான், பறவை போலத் தன்னை மாற்றிக் கொண்டான்; வாலை உயர்த்தினான்; கால்களை மடக்கினான்; கழுத்தை உள் அடக்கினான்; காற்றிலும் வேகமாகத் தன் ஆற்றல் தோன்ற விண்ணில் பறந்தான். அவன் செல்லும் வேகத்தால் கல்லும் முள்ளும் மரமும் செடியும், கொடியும் அவனுடன் தோழமை கொண்டன; உடன் பயணம் செய்தன. கடல் நீரைப் பார்த்தான்; அதன் அடியைக் கண்டான்; நாகர் உலகம் ஒளிவிட்டது; கடல் மீன்கள் அவனால் எழுந்த காற்றால் துடித்து இறந்தன; திக்கு யானைகள் எட்டும் திசை தடுமாறி நிலை குலைந்தன; அண்டங்கள் நடுங்கின; அண்டர் வியந்தனர்.

மலை குறுக்கிட்டது

விண்ணில் பறந்தபோது எதுவும் கண்ணில் படவில்லை; கொண்ட கொள்கை அண்ட முகட்டைத் தாவ உதவியது. கடலிலிருந்து மலை ஒன்று முளைத்தது; அது கண்டு அவன் மலைத்துப் போனான்; அவனோடு போட்டி போட்டிக் கொண்டு அஃது உயர உயர நிமிர்ந்தது; இவன் கால்பட்டு அதன் தலை சிதறியது; அது தலை கீழாய் உருண்டது; அசுரன் தலையில் கால் வைக்கும் காளிபோல் அதன்மீது நின்று, காளி நர்த்தனம் ஆடினான்; அது தன் உச்சியை அடக்கிக் கொண்டது; மானுடவடிவம் கொண்டு அவனிடம் வந்து மண்டியிட்டது. அதனை அண்ட ஒட்டாமல் அவன் அகலச் சொன்றான்.

“நீ யார்? ஏன் தொடர்கின்றாய்?” என்று வினவினான்

“நன்றி உடையேன்; அதனால், உன்னை நயக்கின்றேன்” என்றது.

“வெற்றியுடைய செய்தி இருந்தால் சொல்; வேகமாகப் போக வேண்டும்” என்றான்.

“மைந்நாகம் என்பது என் பெயர்; சிறகுகள் பெற்றிருந்தேன்; என் சிறகுகளை அறுக்க இந்திரன் என்னைத் தொடர்ந்தான்; நான் வேகமாய்ப் பறந்து செல்ல உன் தந்தை உதவினான்” என்றது.

காற்றில் மிதக்கும் கவிதையாய் இருந்தது அந்த சொற்கள் அவனுக்கு.

“நான் காற்றுக்குச் செய்யும் வந்தனை இது; நீ அதன் மைந்தன், இங்கு இருந்து உண்டு களைப்பாறிச் செல்க” என்றது.

“தான் காற்றின் மைந்தன் என்பதால் தன்னை உபசரிக்கக் கடலுள் மறைந்திருந்த மைந்நாக மலை மேல் எழுந்தது” என்பதை அறிந்தான் அனுமன்.

“நன்றி; நான் உல்லாசப் பயணம் மேற்கொண்டு உலகம் சுற்றச் செல்லவில்லை; கடமை எனக்குக் காத்திருக்கிறது; கடலைக் கடந்து காகுத்தன் துணைவி யைக் காண வேண்டும்; வேகமாகச் செல்கிறேன்; வழிவிடு” என்றான்.

அதன் வேண்டுகோளை ஏற்றுத் திரும்பி வரும்பொழுது தங்குவதாய்த் தெரிவித்தான். நந்தனுக்கு வழிவிட்ட நந்தியாய் அது வழிவிட்டுக் கடலுள் ஆழ்ந்தது.

சுரசை தடுத்தல்

அனுமன் ஆரணங்கினைக் கண்டு அறியக் கடலைக் கடக்கும் ஆற்றலும், அரக்கரை எதிர்க்கும் வீரமும் உள்ளனவா? என்று அறிய விண்ணிடை வாழும் தேவர் விரும்பினர். அதற்காகச் சுரசை என்ற அரமகள் ஒருத்தியை அரக்கி வடிவில் அவன்முன் அனுப்பி வைத்தனர். அவள் கடற்புயலை முன்நின்று தடுக்கும் பெருமலை போலக் குறுக்கே நின்றான்.

“அஞ்சனை மகனே! அரக்கி மகள் நான்; கோரப் பசியால் சோர்வுற்று இருக்கிறேன்; உன்னைத் தின்று சுவை காண விழைகிறேன்” என்றாள்.

பேருருவம் கொண்டு இடைமறித்த அவள், அங்காந்து நிற்க அவள் வாயில் புகுந்து வெளியேறினான்; உருவத்தைச் சுருக்கி, வாயுள்ளே புகுந்து வெளியே வந்து பிறகு உடம்பைப் பெருக்கிக் கொண் டான்; பேருருவம் படைத்த அவன், சிற்றுருவம் படைக்கவும் வல்லன் என்பதைக் காட்டினான்.

அங்கார தாரகை

அடுத்து அவனைத் தடுத்து நிறுத்தினாள் அங்கார தாரகை என்னும் அரக்கி ஒருத்தி; அவளைக் கண்டு அவன் இரக்கம் காட்டவில்லை; அவன் வாயுள் புகுந்து வயிற்றைக் கிழித்துக் கொண்டு வெளியே வந்தான்; அவன் பறக்கும் காற்றாடியானான்; அவனைத் தொடர்ந்து நூலாக அவள் குடல் பின் தொடர்ந்தது.

தடைகள் மூன்றும் அவனிடம் விடைபெற்றுக் கொண்டன. கடலைக் கடந்த அவன் கால்கள் பவழ மலையில் பதிவு செய்தன; அம் மலை இலங்கையின் எல்லையில் இருந்தது.

காவல் தெய்வம்

காவல் தெய்வம் ஒருத்தி இரவணன் ஏவலை ஏற்று அங்கு நின்று தடுத்தாள்.

“பொழில் சூழ்ந்த கடலை உடைய இலங்கை யில் உனக்கு என்ன வேலை?” என்று கேட்டான்.

“காலை மாலை இங்கு நீ காவல் நிற்பது ஏன்?”” என்று கேட்டான்.

“அது என் கடமை; நான் காவல் தெய்வம்; நீ இதைக் கடக்க முடியாது” என்றாள். இருவரும் கை கலந்தனர். அவன் அவள் தாக்க அவள் அழகிய பெண்ணாய் அவன் முன் நின்றாள்

“கண்ணைப் பறிக்கும் அழகுடைய பெண்ணே நீ யார்?” என்றான்.

“எழில் கொஞ்சம் நகரைப் படைத்த நாளில் நான்முகன் என்னைக் காவலுக்கு வைத்தான்; அவன் ஏவலுக்குப் பணிந்து உன்னை எதிர்த்து நின்றேன்; அஞ்சனை மகனே! உன் அங்கைபட்டதும் என் கடமையை முடித்துக் கொண்டேன்; கொடுமை நீங்கி அறம் தழைக்கும்; இனித் தீமைகள் ஒழியும் காலம் அணுகிவிட்டது. இச் சித்தரநகர், இனிச் சிதைவடையும்” என்று கூறி வழி விட்டு, விடுதலை பெற்றாள்.

ஊர் தேடுதல்

பெண்ணை ஒதுக்கி வாழ்ந்தவன், பெண்ணைத் தேடும் பணியில் அமர்ந்தான். இது ஒரு புதுமையாய் இருந்தது. இராமன் உரைத்த அடையாளம் அவனுக்கு வரைபடமாய் விளங்கியது. சீதை என்னும் கோதை, எழில் மிகு ஒவியமாய் அவன் மனத்தில் பதிந்திருந்தாள். வழியில் காணும் பெண்களை அவன் விழிகள் சந்தித்தன. அழகு என்பதற்கு அடையாளம் எதுவும் அவன் கண்ணில் படவில்லை. அரக்கியர் இடையே அணங்கனைய மகளாகிய சீதையைக் காண முடியும் என்ற நம்பிக்கை இருந்தது.

தப்பித் தவறி நங்கையர் இளமையோடும் எழிலோடும் தென்பட்டால் தான் எழுதி வைத்த சித்திரம் கொண்டு அவர்களை விசித்திரமாய்ப் பார்த்து வந்தான்.

உறங்குகின்ற கும்பகருணன்

அநுமன் பார்வை கும்பகருணன் மாளிகைப் பக்கம் சென்றது. மலை ஒன்று உருண்டு கிடப்பதைப் பார்த்தான்; அதன் தோற்றத்தைக் கண்டு வியந்தான்; பேருருவம் படைத்த அது நின்றால் எப்படி இருக்கும்? என்று நினைத்தான். மலையின் உருவை அவன் உருவில் வைத்துப் பார்த்தான்; தின்பதற்கே பிறந்தவன் அவன், என்பதை அறிந்தான். ஊனும் கள்ளும் உண்டபின் அவன் உறக்கம் கொண்டவனாய்க் காணப்பட்டான். அவன் குறட்டை விட்டுக்கொண்டு உறங்குவதைப் பார்த்தான். ‘பேரரசன் ஒருவன் இப்படிப் பெருந்துயில் பெற்றிருக்க முடியாது’ என்பதால் அவன் இராவணனாய் இருக்க முடியாது என்று தெளிந்தான்.

வீடணன் இருக்கை

அடுத்து அவன் இளவல் வீடணன் மாளிகையை அடைந்தான்; வனப்பும் அழகும் அந்த மாளிகை பெற்றிருந்தது; அங்கே அரக்க வடிவில் ஒரு அசோகனைக் கண்டான்; கறுப்பு நிறத்தில் வெள்ளை உள்ளம் குடி கொண்டிருப்பதைக் காண முடிந்தது; நீதியும் அறமும் அவனிடம் இடம் வேண்டிக் குடிகொண்டிருந்ததைக் காண முடிந்தது; ‘பகை நடுவே உறவு கொள்ள ஒருவன் உளன்’ என்பதை அறிந்தான். ‘இவன் தப்பிப் பிறந்தவன்’ என்ற முடிவுக்கு வந்தான்; கும்பகருணன் தம்பி வீடணனாகத் தான் இருக்க வேண்டும் என்று அறிந்தான்; அவன் மீது இவன் கண்ணோட்டம் சென்றது; ‘இவன் பயன்படத் தக்கவன், என்று மதிப்பீடு செய்து கொண்டான்.

இந்திரசித்தன் மாளிகை

அடுத்து, இந்திரசித்தின் அரண்மனையை அடைந்தான்; ‘இவன் இந்திரனைச் சிறையிட்டவன்’ என்பதை முன்பே கேட்டு அறிந்திருக்கிறான்; அரக்கர் குலத்தில் அழகு உடைய இளைஞன் இருந்தது அவனுக்கு வியப்பை ஊட்டியது; அவனை முருகனாய்ப் பார்த்தான். ‘இவனோடு நீண்ட போர் நிகழ்ந்த வேண்டிவரும்’ என்று மதித்தான்; “இவன் ஒரு மாவீரனாய் இருக்க வேண்டும்” என்று கண்டான்; இவனைப் போன்ற வீரர் இருப்பதால்தான் இராவணன் வலிமை மிக்கவனாய் இருக்கிறான், என முடிவு செய்தான்.

மண்டோதரியைக் கண்டான்

வித்தியாதர மகளிர் உறையும் தெருக்களைக் கடந்தான், மண்டோதரி தங்கி இருந்த மண்டபத்தை அடைந்தான்; ‘சீதையிடம் இருக்கத் தக்க வனப்பும் எழிலும் அவளிடம் இருப்பதைக் கண்டு, அங்கு அவளைக் காண முடியும்’ என்று நம்பிக்கை கொண்டான்; அங்கே மண்டோதரி கண் அயர்ந்து உறங்கிக் கிடந்தாள்; மயன் மகளாகிய மண்டோதரியைச் ‘சனகன் மகள்’ என்று தவறாய் நினைத்தான்; ‘சுகபோக சுந்தரியாக மாறி விட்டாளோ?’ என்று மயங்கினான்; சோர்ந்த குழலும், கலைந்த துயிலும், அயர்ந்த முகமும், ஜீவனற்ற முகப் பொலிவும் அவள் மண்டோதரி என்பதை உணர்த்தின. ‘நலம் மிக்க நங்கை ஒருத்தி மனைவியாய் இருக்க, மற்றொருத்தியை இவன் நாடுகிறானே’ என்று வியந்தான்.

இராவணன் மாளிகை

அடுத்தது அவன் அடைந்தது இராவணன் மாளிகை; அரம்பையர் அவன் அடிகளை வருடிக் கொண்டிருந்தனர். உறக்கம் கலைந்த நிலையில் அவன் காணப்பட்டான். நெருப்பை மடியில் கட்டிக்கொண்டு, அவனால் எப்படி அமைதியாய் உறங்கமுடியும்? சீதையை நெஞ்சில் வைத்தவன், நெருப்பு வைத்த பஞ்சாய் எரிந்து அழிந்துகொண்டிருந்தான்.

அரக்கனைக் கண்ட அனுமன் பதைபதைத்தான்; அவன் பத்துத் தலைகளையும் கிள்ளி எறிந்து, பந்தாட விரும்பினான்; ‘அவனை வென்று சீதையை மீட்பதை விடக் கொன்று முடிப்பதேமேல்’ என்று நினைத்தான்; நின்று நிதானமாய் நினைத்துப் பார்த்தான்; ‘கண்டு வரச் சொல்லி அனுப்பப்பட்டவனே தவிரக் கொண்டு வரச் சொல்லப்பட்டேன் இல்லை’ என்பதை நினைந்தான். ‘எல்லை மீறிய தொல்லைகளை விளைவிப்பது நல்லது அன்று’ என்ற முடிவுக்கு வந்தான்; “இராமன் வீரத்துக்கு விளைநிலம் வேண்டும்” என்பதற்காக அவனை விட்டு வைத்து எட்டிச் சென்றான்.

‘கட்டிய கட்டிடங்களில் சீதை கால்அடி வைக்க வில்லை; என்பதை அறிந்தான்; அவன் சுற்றாத இடமே இல்லை; எட்டிப்பாராத மாளிகை இல்லை; அவனுக்கே அலுப்பு ஏற்பட்டுவிட்டது; ‘சலிப்பதால் பயனில்லை’ என்று பயணத்தை மேலும் தொடர்ந்தான்.

கழுகின் வேந்தனாகிய தொழத் தக்க சம்பாதி என்பான் சொன்ன உறுதிமொழி அவனுக்கு நம்பிக்கை அளித்தது. ‘இலங்கையில்தான் அந்த ஏந்திழையாள் சிறைவைக்கப் பட்டிருக்கிறாள்’ என்று கூறியதில் தவறு இருக்காது, என்ற முடிவுக்கு வந்தான்.

பாய்ந்து ஒடும் அவன் கால்கள் மரங்களையும் மாட மாளிகைகளையும் தாவின. புள்ளினம் பறந்து திரிவதும் பூக்கள் நிறைந்ததும்ாகிய சோலை ஒன்று காணப்பட்டது. காக்கை திரியும் தோற்றம் கண்டு, அவன் சோகம் தீர்க்கும் அசோகவனத்தைக் கண்டான்.

சீதையைக் காணல்

இருளிடை ஒளிவிடும் மின் என, அரக்கியர் சூழ்ந் திருந்த இடத்தில் கவலையில் ஆழ்ந்த நங்கையைக் கண்டான். அதனைக் கண்டு தேவர் ஆரவாரித்தனர். வெற்றி வாசல் வழிதிறந்து காட்டியது. இராமன் அறிவித்த பேரழகு முழுவதும் எங்கும் பெயராது அங்குக் குடியிருந் தமையைக் கண்டான். சித்திரத்தில் தீட்டிய அழகு வடி வத்தைச் சிந்தனை முகத்தில் தேக்கிய வடிவத்தில் கண் டான். புகையுண்ட ஒவியமாக அவள் காணப்பட்டாள்.

‘ஆவியந்துகில் புனைவது ஒன்று அன்றி வேறு அறியாள்;
தூவி அன்னமென் புனலிடைத் தோய்கிலா மெய்யாள்;
தேவு தெண்கடல் அமிழ்துகொண்டு அனங்கவேள் செய்த
ஒவியம் புகைஉண்டதே ஒதுக்கின்ற உருவாள்'

அரக்கியர் மத்தியில் அவள் நொடிந்து இருந்தது, கற்களிடையே உணங்கிய மருந்துச்செடி போல இருந்தது.

“வன்மருங்குல்வாள் அரக்கியர் நெருக்க அங்கு இருந்தாள்;
கல்மருங்கெழுந்து என்றும் ஒர்துளிவரக் காணா
நன் மருந்துபோல் நலனற உணங்கிய நங்கை,
மென்மருங்குல்போல்வேறுளஅங்கமும் மெலிந்தாள்”.

புலிக் கூட்டத்திடையே துள்ளி ஓடாத மானைக் கண்டான்; சிந்தனை முகத்தில் தேக்கித் தன்வாழ்வை எண்ணி நிந்தனை செய்து கொண்டிருந்த சீதையைக் கண்டான். அவள் நினைவுகள் பழமைக்குச் சென்று, ஊர்ந்துகொண்டிருந்தன.

சீதையின் நினைவுகள்

“ஆட்சி இல்லை” என்றபோது நிலை கலந்காத அவனது பேராண்மை அவளுக்குப் பெருமிதம் தந்தது.

“மெய்த்திருப்பதம் மேவுஎன்ற போதினும்
இத்திருத்துறந் ‘து’ ஏகென்ற போதினும்
சித்திரத்தின் அலர்ந்தசெந் தாமரை
ஒத்திருக்கும் முகத்தினை உன்னுவாள்.”

“வில்லை முறித்து வீரம் விளைவித்துத் தன்னை மணந்து கொண்ட வெற்றியை” நினைவில் கொண்டு வந்து நிறுத்தினாள்.

அந்நியரிடமும் அன்பு காட்டி, உறவு கொண்டாடிய உயர்வை எண்ணிப்பார்த்தாள்; ஏழைமை வேடுவன்” என்றும் பாராது, அவனோடு தோழமை கொண்ட உயர் நட்பை நினைத்து மகிழ்ந்தாள்; நட்புக் கொள்ளும் இராமனது ஒப்புயர் வற்ற மனநிலை, அவள் மனக்கண் முன் வந்தது.

நகைச்சுவை நிரம்பிய நிகழ்ச்சி ஒன்று அவளைப் பார்த்துச் சிரித்தது; அந்தணன் ஒருவன், பேராசைக் காரன்; வீடு பற்றி எரியும்போது அடுப்புக்கு நெருப்புக் கேட்பது போல நாடிழந்து காடு நோக்கிச் சென்றபோது இராமனிடம் அவன்தானம் கேட்ட நிகழ்ச்சி ஏற்படுத்திய சிரிப்பை நினைவுபடுத்திக் கொண்டாள்.

மழுப்படை ஏந்தி வந்த பரசுராமனைக் கோதண்ட ராமனாக இருந்து அடக்கி ஆணவம் நீக்கியதை நினைத்துப் பார்த்தாள்.

சயந்தன் காக்கை வடிவம்கொண்டு அவர்கள் இடையே புகுந்து அற்ப ஆசையால் அவள் மார்பைக் குத்தி மகிழ்ந்தபோது தருப்பைப்புல் ஒன்று கொண்டே அவனை விரட்ட அவன் கண்ஒன்றனைக் குருடு ஆக்கியது; அச் சோகச் செய்கை அவள்கண் முன்நின்றது.

கரம்பற்றி வானிடை எடுத்துச் சென்ற கிராதகனை வாள்கொண்டு வெட்டிய வீரச் செய்கையை எண்ணிப் பார்த்தாள்.

பெருமைமிக்க இராமன் செயல்கள் அவளுக்கு ஊக்கம் தந்தன. இடர்சிறிதும் நேராமல் காத்த வீரன், தன்னை மீட்கவராதது அவளுக்கு வியப்பாய் இருந்தது; அதற்குக் காரணம் யாதாய் இருக்கும்?

“இலக்குவன் கிழித்த கோட்டை அழித்து விட்டேன்; அதற்காக என்னைத் தன் மனத்தில் அழித்து விட்டானா?”

“கொண்டு சென்ற அரக்கன் உண்டு முடித்திருப்பான் என்று அயர்ந்து ஒய்ந்து விட்டானா?”

“பாதுகையை ஏந்திச் சென்ற பரதன், விரதத்தைக் காக்க முடியாமல் வரதனிடம், வந்து திரும்ப அழைத்துச் சென்றுவிட்டானா?”

“இரக்கமற்ற இராவணன் இலங்கை நகரில் என்னைச் சிறை வைத்திருப்பான் என்பதை அறியாமல் திகைத்திருப்பானா?”

இத்தகைய வினாக்கள் வினாடிக்கு வினாடி மாறி மாறி அவள் மனத்தில் எழுந்தன.

“அழுத கண்ணோடு அவனையே நினைந்து காத்துக் கொண்டு இருக்கிறாள்” என்ற செய்தியை யார் அவனுக்குச் சொல்லப் போகிறார்கள் என்ற ஏக்கம் அவளை வாட்டியது.

திரிசடையின் ஆறுதல் மொழிகள்

உறக்கம் இழந்த நிலையில் அவளுக்கு உதவியாய்த் திரிசடை என்பவள் பேச்சுத் துணையாய் இருந்தாள்; அவள் வீடணன் மகள்; தன் இடக்கண்ணும் புருவமும் துடிப்பதை அத் தூய சீதை வீடணன் மகளிடம் எடுத்து உரைத்தாள்.

‘அது நன்மைக்கு அறிகுறி’ என்று நாலும் தெரிந்தவள் போல் அந் நங்கை சீதைக்கு விளக்கி உரைத்தாள்; அரை உறக்கத்தில் நிறைவு பெறாத தான் கண்ட கனவினையும் திரிசடை சீதைக்கு உரைத்தாள்.

பேயும் கழுதையும் இழுத்துச் சென்ற தேரில் இரத்த ஆடையனாய் இராவணன் தென்திசை நோக்கி இறுதி யாத்திரை செய்வதைக் கனவில் அவள் கண்டாள்.

அரிமா இரண்டு, புலிகளோடு வந்து யானைகளை அடித்துக் கொன்ற கனவும் கருத்துள்ளதாய் இருந்தது. இராமனும் இலக்குவனும் அனுமனோடு வந்து இலங்கை வேந்தனை வெல்லும் நிகழ்ச்சி, இதில் உருவகப்படுத்தப் பட்டுள்ளது. காட்டில் சிறைப் பட்டிருந்த தோகை மயில், விடுதலை பெற்று, விண்ணில் பறந்து சென்றது என்றும் கூறினாள். சோகத்தில் அகப்பட்டிருந்த சீதைக்கு விரைவில் விடுதலை கிடைக்கும் என்பதை அது தெரிவித்தது.

நம்பிக்கை ஊட்டும் திரிசடை கனவுகள், அவள் விரும்பிக் கேட்பவையாய் அமைந்தன.

திருமகள், திருவிளக்கு ஒன்றனை ஏந்தி இராவணன் மனையிலிருந்து வெளிப்பட்டு வீடணன் கோயிலில் அடி எடுத்து வைத்தாள்.

ஆட்சி மாறும் இராவணன் வீழ்ச்சியை இக் கனவு உணர்த்தியது.

அக் கனவுகளைத் தொடர்ந்து விருப்புற்றுக் கேட்டு மறுபடியும் திரிசடையைக் கண்ணுறங்க வேண்டினாள் சீதை.

சீதை இருக்குமிடம் அடைந்த அனுமன் கண்ட காட்சி, அவனை மகிழ்ச்சியில் ஆழ்த்தியது; நம்பிக்கை நட்சத்திரமாய் அவள் ஒளிவிடுவதைக் கண்டான்; செல்வச் சிறப்பும், இன்பக் களிப்பும், அதிகார ஆதிக்கமும் மிக்க இராவணன் ஆதிக்கத்தில் அவள் ஒளிதரும் சுடர் விளக்கமாக இருப்பதை அறிந்தாள்.

‘அறம் அழியவில்லை’ என்று அகம் மகிழ்ந்தான்; “கற்பின் மாட்சியால் அவள் பாராட்டும் சிறப்பினை உடையவள்” என்பதை அறிந்தான்; பிறந்த மனைக்கும் புகுந்த வீட்டுக்கும் பெருமை தேடித் தந்திருக்கிறாள்” என்று பாராட்டினான்; மாசுபடியாத மாணிக்கத்தைக் கண்டெடுத்த மனநிறைவு அவனை அடைந்தது; ‘இழந்த வாழ்வு மீண்டும் இராமன் பெறுகிறான்’ என்பது அவனை மகிழ்ச்சியில் ஆட்டிப்படைத்தது.

“கல்லைப் பெண்ணாக்கிய இராமன் மனைவி யின் நெஞ்சு, “கல்லைப் போன்றது” என்று கண்டு கொண்டான்; பெண்மைக்குப் பெருமை சேர்க்கும் திண்மை அவளிடத்தில் இருந்ததைக் கண்டான்.

இராவணன் நேர் உரை

எதிர்பாராதவாறு இலங்கை வேந்தன் இராவணன், ஆடை அங்காரத்தோடும், அரம்பை மகளிரும் பணிப் பெண்களும் அவனைச் சூழ்ந்து வரவும் சீதையிருக்கும் இடம் நாடி வந்தான்; அரக்கியரையும் அரம்பையரையும் விலகச் சொல்லித் தான் மட்டும் தனியனாய்ச் சீதையை நெருங்கினான்; அவள் கடும்புலிக்கு நடுங்கும் இளமான் ஆனாள்; ஆசை வெட்கம் அறிவதில்லை; நாக்கூசாமல் தன் ஆசைகளை வாய்விட்டுப் பேசினான்; தன்னை அவள் அடைவதால் அவளுக்கு உண்டாகும் நன்மைகளை எடுத்து உரைத்தான்.

“செல்வச் சிறப்பும் ஆட்சிப் பொறுப்பும் உடைய என்னை மதிக்காமல், காட்டில் திரியும் அற்ப மனிதனாகிய இராமனைக் கற்பு என்னும் பேரால் நினைத்துக் கொண்டிருப்பது அறியாமை; வாழத் தெரியாமை” என்று அறிவித்தான்.

அவளை அடையாமல் அவதிப்படும் தன் மன வேதனையைப் பலவாறு எடுத்துக் கூறினான்; “'அருள் இல்லாமல் தன்னை இருளில் விட்டுக் கஞ்சத் தனமாய் நடந்து கொள்ளும் வஞ்சிக்கொடி, என அவளைச் சாடினான்; தன்னை அவள் கூடாவிட்டால், தான் அவளை அடையாவிட்டால், உயிர் விடுவது உறுதி” என்று இயம்பினான்.

அவன் அடுக்கு மொழிகளைத் தடுத்து நிறுத்த விரும்பினாள். “இனி இதைப் பொறுப்பதில்லை” என்று சீறிச் சினந்தாள்.

அவன் செய்த தவறுகளை எடுத்துக் கூறி, அவன் கொடுமைகளைச் சாடினாள்; ‘வஞ்சனையால் மான் ஒன்றனை ஏவித் தன்னை வலையில் சிக்க வைத்தது அவனது கோழைத்தனம் என்று சுட்டிக்காட்டினாள், ‘சடாயுவைக் கொன்றது அநீதி, என்று எடுத்து உரைத் தாள்; இராமனை அற்ப மனிதன் என்று சொன்னதற்கு எதிராக அவன் வீரத்தையும், வெற்றிகளையும் விவரமாகக் கூறினாள்.

அரச மகன் என்பதால் இராமனைத் தான் மணக்க வில்லை; ஆற்றல் மிக்க வீரமகன் என்பதால் தான் மணந்து கொண்டதாய்க் கூறினாள்; “வில்லை வளைக்க முடியாமல் பேரரசர் பின்வாங்கிய நிலையில், அதனை வளைத்து அவ்வெற்றியையே தனக்கு மண மாலையாகச் சூட்டினான்” என்பதைச் சுட்டிக்காட்டினாள்.

“செல்வத்தைக் காட்டிச் செருக்கோடு பேசுவது மடமையாகும், என்றாள்; அதனால் தன்னை மருட்டுதல் பயன்தாராது என்றாள்; அறிவு குறைந்தவள் என்று சொல்லித் தன்னை ‘ஏழை’ என்று அவன் சுட்டியதற்கு எதிர்ப்பாய் அவன்தான் ஏழை என்பதனை எடுத்துக் காட்டினாள்.

“அறிவின்மை, வஞ்சகச் செயல், வீரமின்மை, கோழைத்தன்மை இவைதான் ஏழைமையின் சின்னங்கள்; நீதான் ஏழை” என்று ஏழ்மைக்குப் புதுவிளக்கம் தந்தாள்; “செல்வமின்மை ஏழ்மையன்று; அறிவின்மைதான் ஏழ்மை” என்று அறிவித்தாள்.

“தெய்வங்கள் வரம் தருகின்றன என்றால் தவத்துக்கும் ஆற்றலுக்கும் தரப்படுகின்ற மதிப்பு என்று அதனைக் கொள்ள வேண்டும். ‘ஆற்றல் உள்ளவர்க்கு வரம் அளிப்பதால் அவர்கள் உலகுக்கு நன்மை ஆற்றுவர்; உலகு நன்மை கருதிதான் பதவிகள் தரப்படுகின்றன; வரம் கொடுக்கும் தெய்வங்கள் தவறு செய்ததில்லை; தரம் கெட நடந்துகொள்ளும் நீ தான் தவறு செய்கிறாய்; அதனால் தருக்கும், செருக்கும் கொண்டு உலகை ஆட்டிப் படைக்கிறாய்; பொதுவாழ்வையும் கெடுக்கிறாய்; உன்னையும் நீ நாசப்படுத்திக் கொள்கிறாய்; பதவிகளும் பாராட்டு களும் ஆக்க வழியில் மனிதரை ஊக்குவிப் பதற்காக; அழிவுப் பாதையில் அவற்றைப் பயன்படுத்த அன்று” என்று அறிவுரை கூறினாள்.

உன் போர்க்களத்து வீரத்தைக் காட்டிப் பெருமைப் படுகிறாய்; வாழ்க்கைக் களத்தில் அப் பேராண்மை இருக்க வேண்டாவா? பிறன்மனை நோக்காத பேராண்மை உனக்குப் பீடு நடையும் பெருமையும் தருமே! ஒழுக்கம் விழுப்பம் தருமே! ஒழுக்கம் இன்மை கேடு தருமே! என்று தொடர்ந்து கூறினாள்.

நேராய் அவனொடு முகம் கொடுத்துப் பேசி, அவனைப் பெருமைப்படுத்த அவள் விரும்பவில்லை; அப்பார்வையும் அவனுக்கு வெறியை உண்டாக்கிக் கெடுத்துவிடும்; அதனால் ஒருதுரும்பை எடுத்துப் போட்டு, அதனைப் பார்த்து விளித்து, இக்கருத்து களைக் கூறினாள்; “அற்ப மனிதன், என்று கூறிய அவனை அவள் ஒர் அற்பப் புழுவாகக்கூட அவள் மதிக்கவில்லை; ஜீவனுள்ள பொருளாய் மதிக்க விரும்பவில்லை.

கிள்ளை மொழி போலப் பேசுவதாய் அவன் அவற்றை எடுத்துக்கொண்டான். அவள் பேச்சு ஒவ்வொன்றும், அவன் ஏக்கத்தால் விடும் பெரு மூச்சுக்குக் காரணமாய் அமைந்தன; “நீ இல்லாமல் நான் இல்லை” என்று சோக கீதம் பாடினான்; ‘நோய்க்கு அவள்தான் மருந்து’ என்று வற்புறுத்திக் கூறினான்; தானாய்ப் பழுக்காத பழத்தை அடித்துப் பழுக்க வைக்க நினைத்தான்; அது பழுது ஆகிவிட்டது; அச்சுறுத்தினால் அவள் நிச்சயம் பணிவாள்; நயப்புரை பேசினால் தன்னை நாடுவாள் என்று எதிர்பார்த்தான்; இரண்டிலும் தோல்வி அடைந்தான். “இன்னும் இரண்டு மாதம் தவணை தருகிறேன்” என்று தெரிவித்தான். “காலில் விழுந்து வணங்கிக் கேட்கிறேன். மறுத்தால் என் வாளில் விழுந்து நீ மடிய வேண்டுவது தான்” என்று இறுதி உரை கூறி எச்சரித்தான்.

ஆதிக்க வெறி அவனை ஆட்கொண்டது; அதிகாரத் தால் எதையும் சாதிக்க முடியும் என்று நினைத்தான்; சீதைக்குக் காவலாய் நின்ற அரக்கியருக்கு அவளைப் பணிய வைக்கும்படி ஏவல் இட்டான். “இன்னுரை கூறியாவது வன்முறைச் செயலாலாவது அவளைப் படியவைக்க வேண்டும், என்று முடிவாகக் கூறிச் சென்றான்.

அரக்கியர் ஆவேசம் கொண்டனர். “கொல்லுமின்; தின்னுமின்” என்றுகூறி, அவளைச் சுற்றி வட்டமிட்டனர்; பேய்க் கூட்டமாய் மாறிக் கூத்திட்டு அச்சுறுத்தினர்; அருவருப்பான அக்காட்சி சீதைக்கு வெறுப்பு ஊட்டியது; வேதனையைத் தந்தது; இராவணனை எதிர்க்க முடிந்தது; இப்பேய்க் கூட்டத்தை ஒட்ட முடியவில்லை; திரிசடை இடை மறித்தாள். ‘ஆட்சி நிலைக்கும் என்று ஆரவாரம் செய்கிறீர்; நாளை ஆட்சி மாறினால் அதிகாரிகளின் நிலை யைப் பற்றிச் சிந்தித்துப் பாருங்கள்’ என்று குறிப்பாய் அறிவுறுத்தினாள்; அடிமைகள் அவர்கள்; அதனால். அடங்கி நின்றனர்; அரசனின் ஆணைக்கு அஞ்சிப் புறக்காவல் மட்டும் மேற்கொண்டு ஒதுங்கினர்.

அனுமன் அறிமுகம்

சீதைக்கு வாழ்க்கை கசந்துவிட்டது; துன்பத்துக் கும் ஒர் எல்லை உண்டு; உயிர் அவளுக்குச் சுமையாய் விளங்கியது; உயிருக்கும் உணர்வுக்கும் மதிப்புத் தாராமல் தன் உடலை இராவணன் விரும்புவதை அவள் வெறுத்தாள்; அழகு தனக்கு எதிராகப் போரிடுவதை அறிந்தாள்; “மானம் இழந்த பின் வாழாமை இனியது” என்ற முடிவுக்கு வந்தாள்.

உயிர் விடுதற்குத் துணிந்தாள்; அருகில் இருந்த குருக்கத்திச் செடி அவளுக்கு உதவியாய் நின்றது. அதனைச் சுருக்குக் கயிறாய் மாற்ற நினைத்தாள்; வாழ்க்கையின் கரை ஓரத்தைக் கண்டாள். மயிர் இழையில் அவள் உயிர் ஊசலாடிக் கொண்டிருந்தது; தடுத்து நிறுத்த வேண்டும்; என்ன செய்வது? அவள் நோய்க்கு மருந்து யாது?

அனுமன் நடந்த இந் நிகழ்ச்சிகளை நாடகம்போல் கவனித்து வந்தான். சோகத்தின் எல்லையில் இருப்பவளை வேகமாகக் காத்தல் வேண்டும்; அதற்கு மருந்து? ‘இராமன்’ என்ற திருப்பெயர்தான்; ‘இராமன் வாழ்க’ என்று குரல் கொடுத்தான்.

அப்பெயர் அவளுக்கு உயிரைத் தந்தது; புத்தொளியைக் கண்டாள்; அவள் பார்வை, ஒலி வந்த திக்கை நோக்கிற்று. “வீரனே நீ யார்?” என்று கேட்டாள்.

“இராமன் அனுப்பிய தூதுவன்; பெயர் அனுமன்” என்றான்.

காட்டுக் கூச்சல் கேட்டுப் பழகிய அவளுக்குத் தெய்வ கீதம் கேட்பதுபோல் இருந்தது; அவள் உள்ளம் உருகியது; இராமன் பெயரைக் கேட்டதும் அவளுக்கு வாழ்க்கை வாயில் தென்பட்டது; வேதங்கள் மறையவில்லை; அவற்றின் நாதங்களை அவளால் கேட்க முடிந்தது; நீதியும் அறமும் அழிய வில்லை; நேர்மைகள் தழைக்கின்றன என்பதை உணர்ந்தாள்; “இராமன் தன்னைக் கைவிடவில்லை; உயிர்க் காவலனாய் இருக்கிறான்” என்பதை அறிந்தாள்.

அரக்கர் வாழும் இடத்துக்குக் குரங்கினம் வந்தமை அவளுக்கு வியப்பைத் தந்தது.

“நீ எப்படி இங்கு வந்தாய்?” என்று கேட்டாள்.

அங்கதன் தலைமையில் தென்திசை நோக்கி அனுப்பப்பட்ட படை வீரர்களுள் தான் ஒருவன் என்பதையும் தான் இலங்கை மாநகரில் சீதையைக் கண்டதையும் விளம்பினான். இங்குதான் இருப்பது அவனுக்கு எப்படித் தெரியும்? என்று கேட்டாள். “காட்டிடை நீவிர் இட்ட மற்றைய அணிகலன்கள்தான் உம் மங்கல அணியைக் காத்தன” என்று கூறினான்.

செய்தி கேட்டதும் ‘உய்தி உண்டு’ என்று நம்பினாள்; அவன் சொன்னவற்றிற்கு ஆதாரம் காட்ட முடியுமா? என்று கேட்டாள். இராமனிடமிருந்து தான் வந்ததையும் அவன்தான் அனுப்பி வைத்தான் என்பதை யும் கூறி இராமன் திருமேனி அழகைக் கூறினான்; அப்போது அவன் தான் ஒரு சொல்லின் செல்வன் என்பதை நிறுவினான்; கவிஞனாகவும் காட்சி அளித்தான்.

“இராமன் திருவடிகள் தாமரை போன்றும் பவழத்தைப் போன்றும் உள்ளன; கால் விரல்கள் இளஞ்சூரியனைப் போன்றன; நகங்கள் வைரத்தினும் அழகியன கணுக்கள் அம்பறாத் துணியைப் போன்றன; தொடைகள் கருடனின் கழுத்தைப் போன்றன; உந்தி மகிழ மலருக்கு ஒப்பாகும்; மார்பு திருமகன் உறையும் இடமாகும்; கைகள் ஐராவதம் என்னும் யானையின் துதிக்கை போன்றது; கை நகங்கள் அரும்பு போலக் கூர்மையன; தோள்கள் மலை போன்றன; கழுத்து திருமாலின் கரத்தில் உள்ள சங்கு போன்றது. முகமும் கண்களும் தாமரை மலர்கள் போன்றன; பல்லுக்கு முத்தும் நிலவின் துண்டும் உவமைகள்; குனித்த புருவம் வளைந்த வில் போன்றது; நெற்றி எட்டாம்நாள் சந்திரன் போன்றது; நடைக்கு எருதும் யானையும் உவமை” என்றான்.

இராமன் உருவை இவ்வருணைனைகளால் அனுமன் காட்டினான்.

அவனுடைய ஒவ்வொரு சொல்லும் அமுதத் துளிகளாய் அவள் செவிகளில் நிறைந்தன; தேன் துளிகளாய் இனித்தன.

“உன் அமுத மொழிகள் என் மனத்தை வருக்கி விட்டன. என் உயிரைத் தளிர்ப்பச் செய்து விட்டாய்; வாழ்க நீ” என்று வாழ்த்தினாள்.

“காட்சிக்குச் சான்று தந்த நீ சாட்சி வேறு யாதாவது கூற முடியுமா” என்று கேட்டாள்.

இராமனுக்கும் சீதைக்கும் மட்டுமே தெரிந்த சுவை யான அனுபவங்கள் சில அனுமனிடம் தெரிவிக்கப் பட்டன. அவற்றுள் இரண்டனை அவன் எடுத்துரைத்தான்.

நாட்டைவிட்டுக் காட்டுக்குச் சென்றபோது, அயோத்தியின் மதிலைக் கடக்கும் முன்பு, “காட்டை அடைந்து விட்டோமா?” என்று கேட்ட சீதையின் குழந்தைத்தனத்தை நினைவுப்படுத்தினான்.

சுமந்திரனிடம் பூவையையும் கிள்ளையையும். கவனித்துக் கொள்ளும்படி தங்கையர்க்குச் சொல்லி அனுப்பிய அன்புச் செய்தியை அறிவித்தான்.

கூற்றுகளால் அவளை நம்ப வைத்த அனுமன், உறுதி தரும் அடையாளம் ஒன்றனையும் அவள் முன் நீட்டினான். இராமன் கை விரலை அழகுபடுத்திய மோதிரமாய் அது இருத்தலைக் கண்டாள்; அதை அன்புடன் வாங்கிக் கொண்டாள்; வஞ்சகர் நாட்டுக்கு வந்ததால் அது மாசு பட்டுவிட்டதே என்று கூறி கண்ணிரால் அதனைக் குளிப்பாட்டினாள்.

அவள் அடைந்த மகிழ்ச்சிக்கு அளவே இல்லை; செத்தவர் உயிர் பெற்றது போலவும், இழந்த மாணிக்கத்தைப் பெற்ற நாகத்தைப் போலவும், விழி பெற்ற குருடனைப் போலவும், பிள்ளையப் பெற்ற மலடியைப் போலவும் அவள் விளங்கினாள். “என் உயிரைத் தந்த உத்தமன் நீ” என்று அனுமனை அவள் பாராட்டினாள்.

சூடாமணியைத் தருதல்

உள்ளத்தால் இருவரையும் ஒன்று படுத்திய அனுமன், “கள்ளத்தால் அவளை இராமனிடம் சேர்க்க முடியும்” என்று நினைத்தான்; அதற்கு அவள் இசை வினை எதிர்பார்த்தான்.

அவன் பிள்ளைமதியைக் கண்டு அவள், எள்ளி நகையாடினாள்.

“கடலிடை அரக்கர் வந்து எதிர்த்தால், உன் நிலைமை என்ன ஆகும்? கைப் பிள்ளையை இடுப்பில் வைத்துக் கொண்டு போராடும் தாயாகத்தான் நீ இயங்க முடியும்; குழந்தையையும் கீழே வைக்க முடியாது; பகையையும் புறங்கொடுக்கச் செய்ய முடியாது” என்று உணர்த்தினாள்.

“நீ ஐம்புலன் அடக்கியவன்; என்றாலும், ஆடவன் ஆடவன்தான்; உன் தோள்மீது அமர்வது என் பெண்மைக்கு இழுக்கு” என்று சுட்டிக் காட்டினாள்.

“கோழை ஒருவன், தான் தாழ என்னைச் சிறை எடுத்தான்; கள்வனைப் போல சிறை எடுத்த அவனுக்கும் இறைமை உடைய உனக்கும் வேறுபாடு இல்லாமல் போய்விடும்; நீ நல்லது செய்ய நினைக்கலாம்; அல்லதாய் உன் செயல்முடியும்; இதைச் சிந்தித்துப் பார்”.

இராமன் அன்புக்கு அவனை இரையாக்குவது தன் மானத்துக்குப் பெருமை; பெண்மை வீறிட்டு எழுந்தால் தீமைகள் அழியும்; இராமனுக்கு இழுக்கு எனக் கருதி அதற்கு அவள் வாய்ப்புக் கொடுக்கவில்லை; “இராமனின் வீரத்துக்கு மாசு கற்பிக்கிறாய்” என்றாள்.

‘தப்பித்துச் செல்ல நினைப்பதைவிட உயிர் விடுவதே மேல்’ என்பதைச் சுட்டிக் காட்டினாள்.

காவிய நாயகி கடுஞ்சொற்கள் அவனை அடக்கி வைத்தன; வீர மறக்குலத்தில் பிறந்த பாரதப் பெண் மணியைக் கண்டான்; “வாழ்க்கை கிடைக்கிறது” என்பதற்காக அவள் தாழ்ந்து போக விரும்பவில்லை; வீர சுதந்ததிரம் வேண்டி நிற்கும் பேராண்மை அவளிடம் காணப்பட்டது.

இராமனிடம் சொல்ல வேண்டிய செய்திகளைக் கனிந்த மொழிகளால் அனுமனிடம் அவள் சொல்லி அனுப்பினாள்.

“சிறந்த என் மாமியர்க்குச் “சீதை இறக்கும்போது உங்களைத் தொழுதாள் என்ற செய்தியை இராமன் என்பால் அருள் இல்லாத காரணத்தால் மறந்தாலும் நீ சொல்ல மறக்க வேண்டாம்”.

“அரசனாய்ப் பிறந்ததால் உரிமை கொண்டு மற்றொரு தாரத்தை அவன் மணக்க நேரிடலாம்; அதனைத் தடுக்க முடியாது, என்றாலும், மறுதாரம் மனித இயல்படி குற்றம் என்பதை அவனுக்குச் சாற்று. எழுதாத சட்டம் அவனைத் தடுத்து நிறுத்தும்; அதில் எனக்கு நம்பிக்கை உண்டு; அவன் அதீத ஆடவன் என்பதை என்னால் மறக்க முடியாது”.

“என்னைக் கரம் பிடித்து மணந்த நாளில் “இந்த இப்பிறவியில் இருமாதரைச் சிந்தையாலும் தொடேன்” என்று எனக்குத் தந்த வரத்தை எடுத்துச் சொல்க” என்று கூறி, இராமன் ஓர் இலட்சிய புருஷன் என்பதை வற்புறுத்தி அறிவுறுத்தினாள்.

“அரசு இருந்து ஆளவும், வீரசு கோலங்கள் பூண்டு அவனோடு உடன் வீற்றிருக்கவும் யான் கொடுத்து வைக்கவில்லை; விதி என்னைச் சதி செய்து விட்டது” என்று கழிவிரக்கமாய் உருகி உரைத்தாள்.

துதுவன் என்ற எல்லையை மீறித் தான் ஒதிய கருத்தை நினைத்து அனுமன் வருந்தினான்; பெண்மை பேசும் நல்லுரைகள் அவன் நெஞ்சைக் குளிர்வித்தன.

“இராமனிடம் சொல்ல நினைக்கும் செய்திகள் உளவோ?” என்று அடக்கமாய்க் கேட்டான்.

“தாரம் அல்லள் என்று சொல்லி என்னை ஒரம் கட்டலாம்; அதற்காகத் தன் வீரம் காட்டாமல் இருப்பது அவன் ஆண்மைக்கு இழுக்கு” என்பதை நினைவுறுத்துக” என்றாள்.

“வாழ்வதா வீழ்வதா? என்பதுதான் என் வாழ்க்கைப் பிரச்சினை” என்றாள்.

“நம்பிக்கை என்னை வாழ வைக்கலாம்; அதற்கும் ஒர் வரையறை உண்டு; திங்கள் ஒன்று இங்கு இருப்பேன்; அது தீர்ந்தால் என் உயிரை மாய்ப்பேன்” என்று உறுதியாய்க் கூறினாள். “'என்னைப் பற்றியே நான் பேசுவதும், அதனால் அவரை ஏசுவதும் தவறுதான்; அவரை நம்பி நான் ஒருத்திதானா உயிர் வாழ்கிறேன்?”

“பட்டம் கட்டிக் கொண்டு அவர் பாரினை ஆள உலகம் அவரை எதிர்நோக்குகிறது; தாய்ப் பாசம் அவரை இழுக்கிறது. பரதன் அழுகை அவரை அழைக்கிறது; அவர் யாருக்காக வாழ்வது? கரை கடந்து தவிக்கும் என் துயருக்குக் கறை காண முடியாது; கரையைக் கரைக்க அவருக்கு அக்கறை பிறக்கும் என்று எதிர்பார்க்க முடியாது.”

“உற்ற கணவன் என்னைத் துறந்து கைவிட்டாலும் பெற்ற தந்தை. என்னை நினைந்து அழாமல் இருக்க மாட்டார்; அவருக்கு என் இறுதி வணக்கத்தை இயம்புக”

“உன் தலைவன் சுக்கிரீவனுக்கு இந்தச் செய்தியைச் சொல்லுக! சுந்தரத் தோழனுக்கு மணிமுடி சூட்டி அழகு பார்க்கச் சொல்; மாலை சூட்டி மகிழச் சொல்” என்று கண்களில் நீர் மல்கத் தன் இறுதிச் செய்தியைச் சொல்லி அனுப்பினாள்.

அவள் நெஞ்ச அவலத்தை அஞ்சனை மகன் அறிந்து வருந்தினான்; அதைத் துடைக்க ஆறுதல் மொழிகளைக் கூறினான்.

‘நீர் செப்புவது அனைத்தையும் ஒப்புக் கொள்ள முடியாது; மரணத்தைப் பற்றிச் சிந்திக்க இது தருணம் அன்று; திங்கள் ஒன்று நீங்கள் இங்குத் தங்கி இருக்கத் தேவை இல்லை; ஊண் உறக்கமின்றித் தவிக்கும் புவிக்கு நாயகன், நீர் இருக்கும் இடம் அறியாக் குறையே தவிரப் படை எடுக்கத் தடை ஏதும் இல்லை” என்று ஆறுதல் கூறினான்.

“நறுக்கென்று சொல்லத்தக்க நினைவுகளைச் சொன்னால் யான் உங்களைச் சந்தித்தமைக்குச் சிறந்த சான்றுகளாய் அமையும்” என்று கூறினான்.

“இந்திரன் மகன் சயந்தன், எங்கள் ஏகாந்தத்தின் இடை புகுந்து, காக்கை வடிவில் என் யாக்கையைத் தொட்டான்; புல் ஒன்று கொண்டு அப்புள்ளினை விரட்டினான் இராமன்; இந்தச் செய்தியைச் சொல்லுக” என்றாள்.

“காக்கை ஒன்று தொட்டதற்கே அவன் பொறுமை காட்டவில்லை; அரக்கன் ஒருவன் சிறை வைத்திருப்பதை அவனால் எப்படிப் பொறுத்திருக்க முடியும்?” என்ற கருத்தை உண்டாக்க இந்தச் செய்தியை நினைவுப் படுத்தினாள்.

“எல்லாம் விதியின் செயல்” என்று எண்ணிப் பெரு மூச்சு விடும் அவள், இத் துன்பங்களுக்கெல்லாம் காரணம் யார்? என்று எண்ணிப் பார்த்தாள்.

“மாமியார் செய்த கொடுமை” என்பதைச் சொல்லாமல் சொல்லி அனுப்புகிறாள்.

“அன்பாக வளர்த்து வந்த தன் கிளிக்கு யார் பெயர் இடுவது?” என்று இராமனைக் கேட்க, அவன், தான் நேசித்து வந்த மதிப்புமிக்க அன்னை கேகயன் மகள் பெயரை வைக்கும்படி கூறியதை நினைவுப்படுத்தினாள்.

அர்த்தமுள்ள நிகழ்ச்சியாக இது இருந்ததால் அதனை எடுத்து உரைத்தாள்.

“எந்தத் தாயை அவன் உயிரினும் மேலாக நேசித்தானோ அவளே அவன் வாழ்வுக்கு உலை வைத் தாள்” என்பதை நாகரிகமாய்ச் சுட்டிக் காட்டினாள்.

கணையாழியைக் கொடுத்த இராமனுக்கு அதற்கு இணையாய்த் தன் தலையில் குடியிருந்த சூடாமணியை எடுத்து அவனிடம் தந்தாள்.

“இது எங்கள் மணநாளை நினைவுபடுத்தும் அடையாளம்” என்றாள்.

துகிலில் முடித்து வைத்திருந்த அந்நகையை அவனிடம் தந்து, விடை தந்து அனுப்பி வைத்தாள்.

அனுமன் சீற்றம்

நெருப்போடு விளையாடிய இராவணுனுக்குப் பாடம் கற்பிக்க விரும்பினான்; ‘மானிடர் இருவர், என்று மதித்து இடர்விளைவித்த இராவணன், அவர்தம் ஆற்றலை அறியவேண்டும், என்று விரும்பினான் அனுமன்.

‘சீதை இருந்த சோலை அது அவளுக்கு நிழலைத் தந்தாலும், அது சிறையாக இருப்பதை வெறுத்தான்; அப்பொழிலில் இருந்த மரங்களை வேரோடு பிடுங்கி எறிந்தான். அவற்றை விண்ணில் எறிந்து வீடுகளில் விழச் செய்தான்.

ஊருக்குள் நுழைந்தான்; விண்ணை முட்டும் மாடங்களை எரியிட்டுக் கொளுத்தினான்; யானை, குதிரை, தேர் இப் படைகள் இருந்த கொட்டில்களை எட்டி உதைத்து, அழிவு செய்தான்; வேள்வி மண்டபங்கள் வேதியர் இல்லாமலேயே நெருப்பு களைக் கக்கின. யார் இது செய்தது? என்ற கேள்விகள் எழும்படி அரக்கர் அழிவுகளைச் சந்தித்தனர். சீதைக்குச் சோகம் விளைவித்த அசோகவனம், எரிதழலுள் வைகியது; அதனைக் காவல் செய்த பருவத் தேவர் உருக்குலைந்து ஓடினர்; சித்திர நகரின் எழில் சிதைந்து போனது; அரக்கர் அழிவு கண்டு ஒலமிட்டனர்; இராவணனிடம் சென்று முறையிட்டனர்.

கிங்கரர் வளைத்தல்

செய்தி அறிந்து, செல்வக் கோமான் இராவணன், கிங்கரரை அழைத்து அவனை வளைக்குமாறு ஏவினான். தோரண வாயிலில் இருந்த கணைய மரத்தைக் கொண்டு கிங்கரரைத் தாக்கினான்; அவர்கள் உயிரைப் போக்கினான்.

சம்புமாலி என்ற படைவீரன் அனுமனை அணுகினான்; அவன் படையுடன் அழிந்து இடம் தெரியாமல் மறைந்தான்; “பஞ்ச சேனாதிபதியர்” என்ற படைத்தலைவர் அவனிடம் மோதிப் பஞ்சாய்ப் பறந்தனர். இராவணன் இளைய மகன், அக்ககுமரன் களம் நோக்கிக் கால் வைத்தான்; அவன் படைகள் அக்கு வேறு ஆணி வேறாய்ச் சிதைந்தன; அனுமன் அவனைக் காலால் தரையொடு தரையாய்த் தேய்த்தான். அவனும் வீரமரணம் அடைந்தான்.

அக்ககுமரன் இறந்த செய்தி மண்டோதரியைக் கையறு நிலை பாட வைத்தது; ஒப்பாரி வைத்து அழவைத்தது, இராவணன் கடுஞ்சினம் கொண்டான்; தம்பி இறந்த செய்தி கேட்டு இந்திரசித்து, மிக்க சீற்றம் கொண்டான்; போர்மேற் சென்றான்; அவன் தேர் தரையோடு தரையாயிற்று; படைகள் இழந்து பார் வேந்தன் மகன் தன் கையில் இருந்த மந்திர வலிமை வாய்ந்த பிரமாத்திரத்தை ஏவினான்; அதன் மந்திர சக்திக்கு ஆட்பட்டு அனுமன், அடங்கிக் கட்டுண்டான்; கட்டுண்டான் என்பதை விடக் கட்டுப்பட்டான் என்பதே பொருத்தம்; அடங்கியவன் போல் நடித்தான்.

நடிப்பு வெற்றி தந்தது; நாலு தெருக்கள் வழியே அவனை இழுத்துச் சென்றனர். “அவனைக் கொல்லாமல் இழுத்து வருக” என்று இராவணன் ஆணையிட்டான்.

இராவணனை அவன் அத்தாணி மண்டபத்தில் நேருக்கு நேர் சந்தித்தான்; அநுமன் அவனைக் காணும் வாய்ப்புக்கு அகமகிழ்ந்தான்; அவனைக் கொல்வதற்கும் வெல்வதற்கும் இராமன் ஒருவனால்தான் முடியும் என்பதைக் கண்டான்; விரைவில் விடுபட்டு இராமனுக்குச் செய்தி சொல்ல விரும்பினான்; அத் திரத்தை முறித்துக் கொண்டு வெளிவருவது வேத விதிக்கு முரணாகும்; அதனால் பொறுத்திருந்தான்;

“கட்டுண்டோம் காலம் வரும்” என்று காத்திருந்தான்.

“தூதுவனாய் வந்த நீ துயர்விளைவிக்கும் அழிவினை ஏன் செய்தாய்?” என்று இலங்கையர் கோன் கேட்டான்.

“கட்டுக் காவல் மிக்க உன்னைச் சந்திக்க, இதுதான் வழி எனக் கண்டேன்; அரச மரியாதையுடன் உன் ஊர்ப் பெருமக்கள் ஊர்வலம் நடத்தி என்னை உன்னிடம் அழைத்து வந்தனர்” என்றான்.

அவன் ஆணவப் பேச்சைக் கேட்ட அரசன், அவனைக் கொல்லுமாறு ஆணையிட்டான்.

பாரதக் கதையில் துரியோதனன் அருகில் துச்சாதனன் இருந்தான்; வேடிக்கை பார்க்கும் வீரண் கர்ணன் இருந்தான்; தடுத்துப் பேச ஒரு விதுரன் தான் அங்கு இருக்க முடிந்தது.

இங்கே வீடணன் விதுரனாய்ச் செயல்பட்டான்.

“மாதரையும் துதுவரையும் கொல்வது அரச நீதியாகாது” என்று சாத்திரம் அறிந்த அவன், நீதியை எடுத்து உரைத்தான்.

இந்திரசித்து, பிரம்மாத்திரத்தால் கட்டுண்டவன், வெட்டுண்பது வேத நெறி ஆகாது; அதனால் வேறு கயிறுகளைக் கொண்டு கட்டுமாறு கட்டளையிட்டான் இராவணன்.

அவனைக் கொல்வதைவிட அவன் வாலை ஒட்ட நறுக்குவதே தக்கது என்றான்.

நம் வீரத்தை மாற்றாரிடம் விளம்ப அவனைத் திரும்ப அனுப்புவதேமேல் என்று விளக்கம் கூறினான்.

தங்கையை இராமலக்குவர் அங்கபங்கப்படுத்தியது போல, இவன் வாலுக்கு நெருப்பு வைப்பதே உகந்தது என்று கூறினான்.

மந்திரத்தின் கட்டு அவனைவிட்டு நீங்கியது. மாந்தரின்கட்டு அவனைக் கட்டியது; வீதிதோறும் அவன் இழுத்துச் செல்லப்பட்டான்; அப் பொன்ன கரின் எழிலும் பரப்பும் அவன் காண முடிந்தது.

நகரத்தின் நடுப்பகுதியில் அவனை நிற்க வைத்தனர், அவன் வாலுக்குத் துணிசுற்றி அதில் நெருப்பு வைத்தனர்.

சீதைக்கு இச்செய்தி எட்டியது; அவள் அங்கியங் கடவுளை அவனிடம் தணிந்து நடக்குமாறு வேண்டினாள்; அவன் அதற்குப் பணிந்து அவனுக்கு ஊறு விளைவிக்கவில்லை; அனுமன் ஊருக்குத் தீ வைத்தான்; இலங்கை பற்றி எரிந்தது.

“சுட்டது குரங்கு, கெட்டது “கடிநகர் என்ற செய்தி எங்கும் பரவியது; பற்றுதிர்; அவனை எற்றுதிர் என்று இராவணன் இட்ட ஏவலால் அவனை வீரர் தொடர்ந்தனர்.

சீதை தங்கி இருந்த இடத்துக்கு நெருப்புச் செல்லவில்லை; கற்பின் பொற்பு அவளுக்கு அரணாய் அமைந்தது; “அநுமன் குறையின்றிச் சேர வேண்டுமே, என்று தெய்வங்களிடம் முறையிட்டாள். பவழமலை யிலிருந்து சென்று மைந்நாக மலைக்குத் தாவினான்; அங்கு அதன் விருந்தினனாய்க் களைப்பு ஆறினான். அங்கிருந்து மகேந்திர மலைக்குத் தாவினான்.

செய்தி சொல்லல்

அனுமனைக் கண்ட வானர வீரர், உவகை கொண்டனர்; ஆரவாரம் செய்து, கடல் ஒலியைக் கரையில் எழுப்பினர். அவன் வாய் திறந்து பேசவில்லை; அவன் தோற்றமே அவன் ஏற்றத்தை உணர்த்தியது.

“ஞான நாயகன் தேவி கூறினாள் நன்மை” என்றான்; அதனால் சீதையை அவன் கண்டு வந்ததை அறிந்தனர்.

“அவன் உடல் வடுக்கள், அவன் வீரச் செயல்களை விளம்புகின்றன; வானில் எழுந்த புகை, அவன் இலங்கைக்குத் தீ மூட்டியதைக் காட்டுகிறது; சீதை அவனுடன் திரும்பவில்லை; அது பகைவரின் படை வலிமையைக் காட்டுகிறது” என்று வாலி மைந்தன் அங்கதனும், கரடி வேந்தன் சாம்பவனும் உரைத்தனர்.

“கண்டனன் கற்பினுக்கு அணியைக் கண்களால்
தெண்திரை அலைகடல் இலங்கைத் தென்னகர்
அண்டர் நாயக! இனித் தவிர்தி ஐயமும்
பண்டுளதுயரும்என்று அனுமன் பன்னினான்.”

“அவள், தன் பொறுமையாலும் சீலத்தாலும் தன் கற்பின் திறத்தை நிலைநாட்டிவிட்டாள்” என்று கூறினான்; “அதனால் பிறந்த வீட்டுக்கும், புகுந்த வீட்டுக்கும் பெருமை தேடித் தந்திருக்கிறாள்; எனக்கும் அதனால் பெருமை உண்டாகி இருக்கிறது; தன்னைத் தனிமை செய்த இராவணன் வன்குல, தைக் கூற்றுக்குத் தர இருக்கிறாள்; வானரர் குலத்தை வாழ்வித்தாள்” என்று சொல்லி, அவள் இருந்த காட்சியை அநுமன் இராமனிடம் தெரிவித்தான்.

காவியத்தின் நீதியைத் தொடக்கூடிய நிலையில் அனுமன் கூற்று அமைந்தது. “'சீதை மண்மகள் தந்த மாமகள்; அவள் விண்மகளிரையும் உயர்த்திவிட்டாள்” என்றான். ‘பெண்ணினத்துக்கே அவளால் பெருமை சேர்ந்துவிட்டது’ என்று கூறினான்.

“சோகத்தாளாய நங்கை கற்பினாள் தொழுதற்குஒத்த மாகத்தார் தேவிமாரும் வான்சிறப்பு உற்றார்; மற்றைப் பாகத்தாள் அல்லள் ஈசன், மகுடத்தாள்; பதுமத்தாளும் ஆகத்தாள் அல்லள்; மாயன் ஆயிரம் மோலி மேலாள்”

என்று கூறினான்.

கணையாழி கொடுத்ததைப் பெற்றுக்கொண்டு அவள் உள்ளம் குளிர்ந்ததை எடுத்துக் கூறினான்; அவ்வாறே அவள் தந்து அனுப்பிய சூடாமணியை இராமன் கையில் தந்தான்;

“விற்பெரும் தடந்தோள் வீர!
வீங்கு நீர் இலங்கை வெற்பில்
நற்பெரும் தவத்தள் ஆய
நங்கையைக் கண்டேன் அல்லேன்;
இற்பிறப்பு என்பது ஒன்றும்
இரும்பொறை என்பது ஒன்றும்
கற்பெனப் படுவதொன்றும்
களிநடம் புரியக் கண்டேன்”

என்றான். (அருகிலுள்ள படத்திலுள்ளது தவறு. ´கற்பெனப் படுவதொன்றும்` என்பதுதான் சரியானது.)

இராமன் உள்ளம் பூரித்தான்; உவகைக்கு எல்லை இல்லை; அந்த மகிழ்ச்சியில் அவன் ஆழ்ந்து போகாமல் சுக்கிரீவன் செயல்பாட்டுக்குத் துண்டிவிட்டான். “ஐயனே! கேள்; தலைவியை நாம் எளிதில் மீட்க முடியும் என்று அறிந்த பின்பும் அடங்கி இருப்பது தக்கது அன்று; பேர்ருக்குப் புறப்படச் செயல் படுவோம்” என்று உரைத்தான்.

“எழுக வெம்படை” என்றான். “ஏய் என்னும் அளவில் கடல்போன்ற சேனை தென்திசை நோக்கிப் புறப்பட்டது.