எனது நாடக வாழ்க்கை/கலைவாணரின் வளர்ச்சி

விக்கிமூலம் இலிருந்து
கலைவாணரின் வளர்ச்சி

திருமயத்திலிருந்து சாய்பு ஒருவர் கம்பெனியை ஒப்பந்தம் பேசித் திருமயத்திற்கு அழைத்துப் போனார். மாதம் பதிமூன்று நாடகங்களுக்கு ரூபாய் 1500 என்று ஒப்புக் கொண்டோம். இந்த நாளில் ஒரே ஒரு நாடகம் நடத்த 1500 ரூபாய்கள் தேவைப்படுகிறது. அன்று பதிமூன்று நாடகங்களுக்குக்கொட்டகை வாடகை, விளம்பரச் செலவு மட்டும் நீக்கி, ரூபாய் 1500 என்றால் ஆச்சரியமாக இல்லையா? காண்ட்ராக்டரின் அதிர்ஷ்டம் திருமயத்தில் நல்ல வசூலாயிற்று. இரவு 8.45 வரையில் கூட்டமே இராது. இரவு 9 மணி சுமாருக்கு, நான்கு புறங்களிலிருந்தும் ரேக்ளா வண்டிகளிலும், மாட்டு வண்டிகளிலுமாகச் செட்டிப் பிள்ளைகள் வந்து கூடி விடுவார்கள்.

பாம்புக் காடு

திருமயத்தில் ஓர் அதிசயம் நிகழ்ந்தது. ஒருநாள் அல்லி அர்ஜ்ஜுன நாடகம் நடந்துகொண்டிருந்தது. பாம்புப் பிடாரன் மகுடி ஊதும் காட்சியில் ஆர்மோனியம் கிருஷ்ணமூர்த்தி ஐயர் ஆர்மோனியத்தில் மகுடி வாசித்தார். காட்சி முடியும்போது ஆர்மோனியக்காரரின் பக்கத் தட்டியில், ஒரு நாகப்பாம்பு இருப்பதைப் பின்பாட்டுக்காரர் சாமிக்கண்ணு பார்த்து விட்டார். கூச்சல் போடாமல் ஆர்மோனியக்காரருக்கு ஜாடை மூலம் அறிவித்தார். அந்தப் பாம்பை அடிக்க முயன்றார்கள். அதற்குள் பாம்பு சரசரவென்று கீழிறங்கி எங்கோ மறைந்துவிட்டது. திருமயம் அந்த நாளில் ஒரு பாம்புக் காடாகவே இருந்தது. கற்றாழைப் புதர்களுக்கும், கரையான் புற்றுக்களுக்கும் நடுவேதான் கொட்டகை அமைந்திருந்தது. இரவு கொட்டகைக்குப் போய் வரவே எங்களுக்குப் பயமாக இருக்கும்.

மாலை நேரங்களில் வெளியே போகும்போது அடிக்கடி பாம்புகளைப் பார்க்க நேரும். அது என்ன பாம்பு என்று எங்களுக்குள் விவாதம் நிகழும். ஒவ்வொருவரும் பலவிதமான பாம்புகளின் பெயர்களைக் குறிப்பிடுவார்கள். துணிவுள்ள சில பையன்கள் இருந்தார்கள். அவர்கள் என்ன பாம்பென்று சோதித்துப் பார்க்க முயல்வார்கள். ஒரு நாள் கற்றாழைப் புதர்களின் நடுவே நாங்கள் நின்று கொண்டிருந்தோம். சரசரவென்று சத்தம் கேட்டது. சுமார் நாலடி நீளமுள்ள ஒரு பாம்பு, எங்களை லட்சியம் செய்யாமல் புதர்களுக்கிடையே சென்றது. “அது விரியன் பாம்பு” என்றார்கள் சிலர். இல்லை, “ஓலைப் பாம்பு” என்றார் நகைச்சுவை நடிகர் எம். ஆர். சாமிநாதன். இதற்குள் புதர்களுக்கிடையே சென்ற பாம்பு, இரை விழுங்கியது போல் மெதுவாக ஊர்ந்து கொண்டிருந்தது. சாமிநாதன் தன் வாக்கை மெய்ப்பித்துக் காட்ட எண்ணி, கொஞ்சம் மண்ணை அள்ளி அதன்மீது வீசினார். அவ்வளவுதான்; ஊர்ந்து கொண்டிருந்த பாம்பு நின்றது; தலையைத் துாக்கி, தான் இன்னார் என்பதைக் காட்டுவதுபோல் மெதுவாகப் படத்தை விரித்தது. ‘ஐயோ, நல்ல பாம்பு’ என்று சிலர் அலறிக்கொண்டு ஓடினார்கள். அப்புறம் நாங்கள் ஏன் அங்கே நிற்கிறோம்?...இவ்வாறு திருமயத்தில் பாம்பைப் பற்றி நினைக்காத நேரமே இல்லை என்னும்படியாகப் பல நிகழ்ச்சிகள் நடை பெற்றன.

நடிகப் பரம்பரை

திருமயத்தில் சதியனு சூயா நாடகம் தயாராயிற்று. அதிலே ஒரு ராஜா, அந்த ராஜாவுக்குப் பெயர் இல்லை. இருட்டு ராஜா என்று நாங்கள் குறிப்பிடுவது வழக்கம். நறுமதையின் சாபத்தால் உலகம் இருளடைந்து விடுகிறது. கதிரவன் ஒளியின்றிக் குடிகள் கஷ்டப்படுகிறார்கள். இருள்நீக்கி, ஒளி காட்டி உதவுமாறு இருட்டு ராஜா, பதிவிரதை அனுசூயாவிடம் முறையிடுகிறார். இந்த இருட்டு ராஜாவாகச் சுவாமிகளிடம் பாடம் கேட்டு நடித்தவர் எங்கள் பெரியண்ணா டி. கே. சங்கரன். இருட்டு ராஜா வேடம் இப்போது என்.எஸ் கிருஷ்ணனுக்குக் கொடுக்கப் பெற்றிருந்தது. பெரியண்ணா பயிற்சியளித்துக் கொண்டிருந்தார்.

என்ன ஆச்சரியம் இது-ஆகா!
என்ன ஆச்சரியம் இது
எங்கும் இருள் சூழ்ந்துல கிருண்டிருக்குது,
ஏழுநாள் ஓர் வாரத்துக்கு மேலானது .. (எ)

இது இருட்டுராஜா பாட வேண்டிய பாட்டு. என். எஸ். கிருஷ்ணன் பாடினார். ‘ஆகா!’ என்னும் இடத்தில் கொஞ்சம் தாளத்தைக் கவனித்து எடுக்கவேண்டும். பெரியண்ணா நாலைந்து முறை சொல்லிக் கொடுத்தார். தாளம் சரியாக வரவில்லை. பெரியண்ணாவுக்கு ஆத்திரம் வந்தது. ‘நிமிட்டாம்பழம்’ கொடுத்தார். நிமிட்டாம் பழம் என்றால் தெரியுமல்லவா? தொடையில் பெருவிரலையும் சுட்டுவிரலையும் சேர்த்துக் கொண்டு கிள்ளுவது. சகிக்க முடியாத வலியெடுக்கும். இதெல்லாம் அந்த காலத்தில் சர்வ சாதாரணம். என். எஸ். கிருஷ்ணன் அழுதுகொண்டே பாடினார். அழுகை வந்தாலும் பாடுவதை நிறுத்தக் கூடாது. நிறுத்தினல் மேலும் பூசை விழும். என். எஸ். கிருஷ்ணன் ஆகா என்று அழுது கொண்டே பாடியது எங்களுக்கெல்லாம் சிரிப்புண்டாக்கியது. பாடம் சொல்லிக் கொடுத்து விட்டுப் பெரியண்ணா வெளியே சென்றார், நாங்கள் என். எஸ். கிருஷ்ணன் பாடியதுபோல் பாடிக் காட்டிச் சிரித்தோம்.

“ஏம்பா சிரிக்கிறீங்க... அண்ணாச்சிதானே அடிச்சாரு; பரவாயில்லே. அவரும் இந்தப்பாட்டைக் கத்துக்கிட சங்கரதாஸ் சுவாமிக்கிட்ட அடி வாங்கித்தான் இருப்பாரு. நானும் இனிமே எத்தனையோ பேரை இப்படி அடிக்கத்தான் போறேன். இது தானே நடிக பரம்பரை. இது புரியாமே ஏன் சிரிக்கிறீங்க?” என்றார் கலைவாணர். அப்போது அதன் பொருள் எங்களுக்குப் புரியாததால் மீண்டும் சிரித்தோம். திருமயம் முடிந்ததும் கம்பெனி காரைக்குடிக்குச் சென்றது.

காரைக்குடியில்தான் என். எஸ். கிருஷ்ணன் நகைச்சுவை நடிகராவதற்குரிய சூழ்நிலை உருவாயிற்று. சாவித்திரி நாடகத்தில் ஒருமுறை சாவித்திரியின் தந்தை அஸ்வபதியாக அவர் நடித்தார். அந்தக் காலத்தில் பெரும்பாலும் நன்றாகப் பாடக் கூடிய நடிகர்களாக இருந்தால் அரங்கில் பிரவேசிக்கும் போதே பாடிக் கொண்டு வருவது வழக்கம். திருப்பரங்குன்றில் விளங் கும் குகா என்னும் மதுர பாஸ்கரதாஸின் பாடலை என். எஸ். கிருஷ்ணன் மிக நன்றாகப் பாடுவார். அஸ்வபதி மேடைக்கு வரும்போது அந்தப் பாட்டைப் பாடிக்கொண்டு வந்தார். சபையோர் அன்று இவரை உன்னிப்போடு கவனித்தார்கள்.

எனக்கும் கலைவாணருக்கும் கம்பெனி தொடங்கிய நாளிலிருந்து நெருங்கிய தொடர்பு ஏற்பட்டிருந்தது. விளையாட்டு, கதை பேசுதல், எல்லாவற்றிலும் நாங்களிருவரும் இணைந்தே கலந்து கொள்வோம். நான் எப்போதாவது சோர்ந்திருக்கும் நேரத்தில், எனக்குச் சிரிப்பூட்டுவதற்காக ஏதாவது வேடிக்கை செய்வார் அவர். கலைவாணரின் இயற்கையான நகைச்சுவைப் பண்பை அறிந்த நான், நாடகங்களில் எம். ஆர். சாமிநாதன் போட்டு வந்த நகைச்சுவைப் பாத்திரங்களையெல்லாம் நெட்டுருப் போட்டு வைக்கும்படியாக அடிக்கடி அவரிடம் கூறுவதுண்டு.

எம். ஆர். சாமிநாதனிடம் ஒரு கெட்ட குணம் இருந்தது. எந்தக் குழுவிலும் நிரந்தரமாக் இருக்க மாட்டார். திடீர் திடீரென்று சொல்லாமல் ஒடிப்போய் விடுவார். அப்புறம் திடீரென்று சொல்லாமலே வந்து விடுவார். அவருடைய தங்கை மீனாட்சியும் அப்போது எங்கள் குழுவில் நடித்துக் கொண்டிருந்தாள். அவள்தான் மனோஹரனில் விஜயாளாக நடிப்பாள். அண்ணனும் தங்கையும் ஒருநாள் சொல்லாமல் போய்விட்டார்கள். அன்று மனோஹரன் நாடகம் வைக்கப் பெற்றிருந்தது. விஜயாளாக நடிப்பதற்கு, செல்லம் என்னும் ஒரு பையனை ஏற்கனவே பயிற்சி கொடுத்து வைத்திருந்தோம். பைத்தியக்காரன் வசந்தகை யார் நடிப்பதென்பது பெரும் பிரச்னையாய் விட்டது. பழைய நடிகர்கள் யாரும் அப்போது கம்பெனியில் இல்லை. இந்தச் சந்தர்ப்பத்தைப் பயன்படுத்திக் கொள்ளும்படியாக நான் என். எஸ். கிருஷ்ணனைத் தூண்டினேன். பெரியண்ணாவிடம் போய், “என். எஸ். கிருஷ்ணன் நடிப்பதாகச் சொல்கிறார். அவர் நன்முக நடிப்பாரென்று தோன்றுகிறது” என்றேன். அண்ணா என். எஸ். கே. யைக் கூப்பிட்டுக் கேட்டார். அவர் முதலில் அஞ்சினார்; நாங்கள் அனைவரும் உற்சாகப்படுத்தவே ஒப்புக் கொண்டார். அன்று மனோஹரன் நாடகம் சிறப் பாக நடந்தது. எம். ஆர். சாமிநாதனுக்குச் சிறிதும் குறைவு படாத முறையில் என். எஸ். கிருஷ்ணன் அன்று வசந்தனாக நடித்தார். எனக்கு எல்லையற்ற மகிழ்ச்சி. எல்லோரும் அவரைப் பாராட்டினார்கள். அன்று முதல் எம். ஆர். சாமிநாதன் புனைந்து வந்த எல்லா வேடங்களையும், என். எஸ். கிருஷ்ணனுக்கே கொடுத்தார் பெரியண்ணா. கலைவாணர், கம்பெனியின் நிரந்தர நகைச் சுவை நடிகரானார். 1956இல் இராஜா அண்ணாமலை மன்றத்தில் இராஜராஜசோழன் நாடகம் நடந்தபோது கலைவாணர் தலைமை தாங்கினார். அப்போது இந்தச் செய்திகளையெல்லாம் மேடையிலேயே வெளிப்படையாக அவர் கூறி, என்னைப் பாராட்டிய போது எங்கள் இருவர் கண்களும் கலங்கின.

சின்னையாபிள்ளை வருகை

காரைக்குடியில் நல்ல வசூலில் கம்பெனி நடந்து கொண்டிருக்கும் பொழுது சின்னையாபிள்ளை வந்தார். நடிகர்களும் ஏனைய தொழிலாளர்களில் பலரும் பழனியாபிள்ளையின் ஸ்ரீ மீன லோசனி பால சற்குண நாடக சபைக்குப் போய் விட்டதாகக் கூறினார். தத்துவ மீனலோசனி வித்துவ பாலசபை மூடப்பட்ட சேதியைக் கேட்டு வருந்தினோம், நாங்கள் சொந்தமாகக் கம்பெனி நடத்த ஆரம்பித்த பிறகுதான் அதிலுள்ள கஷ்டங்களை ஒருவாறு உணர முடிந்தது. பெரியண்ணாவுக்கும் சிற்றப்பாவின் நிருவாகத்தில் கம்பெனியைத் தொடர்ந்து நடத்த இஷ்ட மில்லை. எனவே, நாங்கள் அதுவரை கம்பெனிக்காகச் செலவு செய்த ரூபாய் 2000த்தையும் கொடுத்து விட்டால் கம்பெனியை அப்படியே சின்னையாபிள்ளையிடம் ஒப்படைத்து விடுவதாகப் பெரியண்ணா கூறினார். சின்னையாபிள்ளை அப்போது அதை ஏற்க இயலாத நிலையில் இருந்ததால் போய்விட்டார். மேலும் பல நாடகங்களை நடத்திவிட்டு நாங்கள் கரூருக்குச் சென்றோம்.