எனது நாடக வாழ்க்கை/கொங்கு நாட்டில்

விக்கிமூலம் இலிருந்து
கொங்கு நாட்டில்

மானேஜர் காமேஸ்வரய்யர் கரூரில் சில தகிடுதத்த வேலைகள் செய்ய ஆரம்பித்தார். நாடகம் முடிந்ததும் காலையில் கணக்குப் பார்க்கும் பொறுப்பு மானேஜரிடம் ஒப்படைக்கப் பெற்றது. இரவு கொட்டகையில் கூட்டம் பிரமாதமாக இருக்கும். ஆனால் காலையில் வசூல் கணக்கைப் பார்த்தால் மிகவும் குறைவாக இருக்கும். இது எல்லோருக்கும் அதிசயமாக இருந்தது. அந்த நாளில் தரை டிக்கட்டுகளைக் கொஞ்சம் கனமான அட்டை களிலேயே அச்சிட்டுக்கொடுத்து வந்தார்கள். பலவண்ண அட்டைகளில் இவற்றை அச்சிட்டு வைத்துக்கொண்டு, ஒவ்வொரு நாடகத்திற்கும் வண்ணங்களை மாற்றிக் கொள்வது வழக்கம். தவிர டிக்கெட்டுகளைக் கிழிப்பதில்லை. மானேஜர் ஐயர் ஒரு தந்திரம் செய்தார். தரை வாயிலில் டிக்கெட்டுகளை வாங்கி ஒரு பெட்டியில் போட்டு விடுவார்கள். மானேஜர் காலையில் அந்தப் பெட்டியைத் திறந்து விற்பனையான டிக்கெட்டுகளில் பலவற்றை மறுபடியும் கணக்குப் பெட்டிக்குள் வைத்து விட்டு அவற்றுக்குரிய பணத்தை எடுத்துக் கொள்வார். இப்படியே ஐயரின் வேலை நடைபெற்று வந்தது. ஒருநாள் பெரியண்ணா சந்தேகங்கொண்டு. ஐயருக்குத் தெரியாமல் இரவே வசூல் கணக்கைப் பார்த்து முடித்து விட்டுப் பெட்டிச் சாவியை ஐயரிடம் கொடுத்து விட்டார். விபரம் தெரியாத ஐயர், வழக்கம்போல் தமது காரியத்தைச் செய்யவே அவருடைய திருட்டு வெளிப்பட்டு விட்டது. மாமா, ஐயரை உடனே நீக்கிவிட வேண்டுமென்று ஆத்திரப்பட்டார். பெரியண்ணா சிபாரிசின் பேரில் ஐயருக்கு மன்னிப்பு அளிக்கப்பட்டது. அதன் பிறகு மானேஜரிடம் பெட்டிச் சாவி கொடுப்பதை நிறுத்திக் கொண்டார்கள். மாமாவே முன்னின்று எல்லாக் காரியங்களையும் மேற்பார்த்து வந்தார். மானேஜருக்கு வெளி அலுவல்களை மட்டுமே கவனித்துக் கொள்ளும் பொறுப்பு கொடுக்கப்பட்டது. அடுத்த ஊர் திருப்பூர் போவதாக முடிவு செய்தனர்

திருப்பூருக்கு நாங்கள் போனபோது தண்ணிர்ப் பஞ்சம் அதிகமாயிருந்தது. பல ஆண்டுகளாக மழையே இல்லை. எங்கு பார்த்தாலும் வறண்டு போயிருந்தது. காலையிலும் மாலையிலும் தண்ணிருக்காக நெடுந்துாரம் சென்று வருவோம். இறங்கிக் குளிக்கக் கூடிய முறையில் சில கிணறுகள் இருந்தன. சிலர் குளிக்க அனுமதிப்பார்கள். ஒருசிலர் கூடாதென்று மறுத்து விடுவார்கள். எப்படியோ கெஞ்சிக் கூத்தாடி, இலவச டிக்கெட்டுகள் கொடுத்து, சிலரைச் சரிபடுத்திக் கொண்டோம்.

காக்கை வலிப்பு

கம்பெனியில் எம். சங்கரன் என்று ஒரு நடிகர் இருந்தார். அவர் பெண் வேடம் புனைபவர். அவருக்கு காக்கைவளி நோய் உண்டு. அது எதிர்பாராமல் திடீரென்று வந்துவிடும். அதுவும் தண்ணிர்த்துறைகளில்தான் இந்த நோய் பெரும்பாலும் வருவது வழக்கம். ஒருநாள் முற்பகலில் நாங்கள் எல்லோரும் எண்ணெய் தேய்த்துக் குளித்துக் கொண்டிருந்தோம். எம். சங்கரன் சாவ காசமாகவே எதையும் செய்வார். குளிப்பதிலும் அப்படித்தான். முதலில் ஒரு கிணற்றில் சீயக்காய் தேய்த்துத் தலையை நன்றாக அலசிவிட்டு, பிறகு அருகிலுள்ள மற்றொரு கிணற்றில் குளிக்க வேண்டும். எனவே நடிகர்கள் இரண்டு கிணற்றிலுமாகக் குளித்துக் கொண்டிருந்தோம்.

முதல் கிணற்றில் சங்கரனும், சின்னண்ணாவும் இன்னும் இரண்டொருவரும் மட்டுமே இருந்தார்கள். சங்கரன் திடீரென்று கை கால்களே அடித்துக்கொண்டு தண்ணிரில் மூழ்கினார்... ஒரு நிமிடம், இரண்டு நிமிடம்; மூழ்கியவர் வெளிவரவே இல்லை. பக்கத்தில் குளித்துக் கொண்டிருந்தவர்கள் பரபரப்படைந்தார்கள். சின்னண்ணா கொஞ்சம் துணிவுள்ளவர். மூழ்கிப் பார்த்தார். ஆழமான கிணறு. அடிப்புறத்தில் ஏதோ உருவம் கிடப்பது போல் புலப்பட்டது அவருக்கு. இரண்டாவது முறையும் மூழ்கித் துாக்கிப் பார்த்தார். முடியவில்லை. இதற்குள் செய்தியறிந்து பக்கத்துக் கிணற்றில் குளித்துக் கொண்டிருந்தவர்களும் ஓடி வந்தார்கள். வந்தவர்களில் கோபால் பிள்ளை மிகவும் தைரிய சாலி, அவர் வந்த வேகத்திலேயே கிணற்றில் குதித்து மூழ்கினார். அடுத்த நிமிடத்தில் சங்கரனையும் தூக்கிக் கொண்டு மேலே வந்தார். எல்லோரும் வியப்போடும், கவலையோடும் அவரையே பார்த்துக்கொண்டு நின்றோம். கரைக்குக் கொண்டு வந்து, மூர்ச்சித்துக் கிடந்த சங்கரனைத் தலைமீது வைத்துக் கொண்டு சுற்றினார். சங்கரன் வாய்வழியாகத் தண்ணிர் வெளியேவந்தது. சில நிமிடங்களுக்குப் பிறகு சங்கரனுக்கு மூச்சு வந்தது. எங்களுக்கும் உயிர் வந்தது.கோபாலபிள்ளையின் துணிவை எல்லோரும். பாராட்டி வாழ்த்தினார்கள்.

கோபால பிள்ளை இவ்வாறு பலசந்தர்ப்பங்களில் எங்களுக்கு மகத்தான உதவிகள் புரிந்திருக்கிறார். இவர் கோட்டயத்திலே பிறந்தவர். ஆர்மோனியம் கே. டி. கடராஜ பிள்ளை நடத்தி வந்த சிறுவர் கம்பெனியில் சில ஆண்டுகள் பணிபுரிந்தவர். பின்னால் தத்துவ மீனலோசினி வித்துவ பாலசபையில் ஆடையணிவிக்கும் பொறுப்பில் பல ஆண்டுகள் சிறப்பாகச் செயலாற்றியவர். நாங்கள் சொந்தக் கம்பெனி தொடங்கியபின் உரிமையோடு எங்களிடம் வந்து, பணியாளராக மட்டுமல்லாது, பாதுகாப்பாளராகவும் இருந்து வந்தார். இவருடைய வலிமையும் வீரமும். எங்கள் குழுவுக்குத் தோன்றாத் துணையாக இருந்து வந்தன.