எனது நாடக வாழ்க்கை/திரைப்படமும் நாடகமும்

விக்கிமூலம் இலிருந்து
திரைப்படமும் நாடகமும்

கோவையில்தான் முதன் முதலாகத் திரைப்படம் காண்பிக்கும் தியேட்டரில் நாடகம் நடித்தோம். மாலை 6.30 முதல் 9.மணி வரை மெளனப் படம் ஏதாவது நடைபெறும். அதன் பிறகு 9.30 க்கு நாடகம் தொடங்குவோம். நாங்கள் எல்லோரும் படம் பார்க்கும் ஆசையால் விரைவாகவே சாப்பிட்டுவிட்டுக் கொட்டகைக்கு வந்துவிடுவோம்.

வெரைட்டி ஹாலில் நாங்கள் நாடகம் நடத்திய சமயத்தில் ஆங்கில சீரியல் படங்கள் ஒடிக் கொண்டிருந்தன. வில்லியம் டெஸ்ட்மாண்ட் என்னும் நடிகர் நடித்த நீளப் படம் எங்களை மிகவும் கவர்ந்தது. ஒரு படத்திற்குச் சுமார் 60 சுருணைகள் இருக்கும். இந்தச் சுருணைகளை நான்கு பகுதிகளாக்கிக் கொள்வார்கள். ஒவ்வொரு பாகத்தையும் ஒரு வாரம் போடுவார்கள். வெள்ளிக்கிழமை பாகம் மாற்றுவார்கள். பொதுமக்கள் தொடர்ந்து ஒரு மாதம் படத்தைப் பார்த்தால்தான் முழுக் கதையையும் புரிந்து கொள்ள முடியும். ஒவ்வொரு பகுதியும் முடியும் நேரத்தில் கதாநாயகனையோ, அல்லது கதாநாயகியையோ மிகவும் அபாயகரமான நிலையில் சிக்க வைத்துவிட்டு, அந்த அபாயத்திலிருந்து அவர்கள் எப்படித் தப்புகிறார்கள் என்பதைப் பார்க்கப் பொது ஜனங்களின் உணர்ச்சியைத் துண்டி விடுவார்கள். அடுத்த பகுதியை எப்போது பார்க்கப் போகிறோமென்று எங்களுக்கு ஏக்கமாக இருக்கும். நிகழ்ச்சி மாற்றத்தன்று சாப்பாட்டைக்கூட மறந்து விட்டு, முன்னாடியே சிலர் கொட்டகைக்கு வந்துவிடுவதுமுண்டு.

கடிகமணி சகஸ்ரநாமம்

கோவையிலிருந்தபோதுதான் நடிகமணி எஸ். வி. சகஸ்ர நாமம் கம்பெனியில் வந்து சேர்ந்தார். அவர் சேர்ந்ததே ஒரு சுவையான நிகழ்ச்சி. கம்பெனியில் பெற்றோர்கள் அனுமதி யில்லாமல் யாரையும் சேர்ப்பது வழக்கமில்லை. சகஸ்ரநாமம் வந்து கேட்டபோது அவருக்கு 13 வயதிருக்கலாம். “உன் தகப்பனரிடமிருந்து கடிதம் வாங்கிக் கொண்டு வா சேர்த்துக் கொள்கிறேன்” என்றார் பெரியண்ணா. உடனே சகஸ்ரநாமம் கம்பெனியில் சேரவேண்டுமென்ற ஆர்வத்தால், தகப்பனார் எழுதுவதுபோல் ஒரு கடிதத்தைத் தாமே எழுதினார். பெரியண்ணாவிடம் கொண்டு வந்து கொடுத்து விட்டுக் கம்பெனியில் சேர்ந்து கொண்டார். பிறகு அந்தக் கடிதத்தில் கண்ட முகவரிக்குப் பெரியண்ணா கடிதம் எழுதினார். தகப்பனார் அலறியடித்துக் கொண்டு வந்து சேர்ந்தார். அவருக்கு சகஸ்ரநாமத்தைக் கம்பெனியில் சேர்க்க விருப்பம் இல்லை. பெரியண்ணா அவரோடு வெகு நேரம் வாதாடினார். “நாடகத் துறையில் விருப்பமிருக்கும் பையனை வேறு துறைக்கு அனுப்புவது சரியல்ல” என்று எடுத்துச் சொன்னார். கடைசியாகத் தந்தையின் பூரண சம்மதத்தோடு சகஸ்ரநாமம் கம்பெனியில் சேர்ந்து கொண்டார்.

எடிபோலோ, எல்மோ

கோவை நாடகம் முடிந்ததும் கம்பெனி சேலம் சென்றது. சேலம் கொட்டகைகளிலும் சினிமா சீரியல் படங்கள் நடந்து வந்தன. அவை எடியோலோ, எல்மோ நடித்த படங்கள். இவ்விரு நடிகர்களும் சீரியல் மெளனப் படங்கள் வந்த காலத்தில் பிரமாதமான பெயர் பெற்றிருந்தார்கள். இந்த இரு நடிகர்களுக்கும் தனித்தனி ரசிகர்கள் இருந்தார்கள். இவர்கள் அந்நடிகரின் பெயரால் கட்சியாக நின்றனர். எங்கள் கம்பெனி நடிகர்களில் சிலர் எடிபோலோ கட்சி; சிலர் எல்மோ கட்சி; இருவரில் யார் நல்ல நடிகர்? யார் பலசாலி? என்பதில் இரு கட்சியாளருக்கும் போட்டி. சில சமயங்களில் இதற்காக வாய்ச் சண்டைகூட ஏற்படுவதுண்டு. பழங்காலத்தில் நடைபெற்ற இந்தச் சம்பவங்களே யெல்லாம் நினைத்தால் சிரிப்புத்தான் வருகிறது. இப்போதும் கட்சிச்சண்டைகள் வேறு உருவங்களில் இருந்து வருகிறதே தவிர, அடிப்படை உணர்ச்சி மாறிவிட்டதாகக் கூறுவதற்கில்லை. இவ்வாறு நாங்கள் சினிமா பார்த்து வந்த போதெல்லாம் இந்தச் சினிமாப் படம் வாய் திறந்து பேசுவது நம் காதில் விழுந் தால் எவ்வளவு அற்புதமாக இருக்கும் என எண்ணிப் பார்ப்பதுண்டு. நாமும் ஒரு காலத்தில் சினிமாப் படத்தில் நடிக்க நேருமென நாங்கள் அப்போது கனவு கூடக் காணவில்லை.

பிரதாபச்சந்திரன்

சேலத்தில் பிரதாபச்சந்திரன் நாடகம் தயாராயிற்று. இந்நாடகம் பல ஆண்டுகளுக்கு முன் இராமசாமி ராஜா என்பவரால் எழுதப் பெற்றது. திரு. கந்தசாமி முதலியாரே இந்நாடகத்தைப் பயிற்றுவித்தார். நான் பிரதாபச்சந்திரனில் விசுவாசகாதகன் என்னும் பாத்திரத்தை ஏற்றேன். பெயரே பாத்திரத்தின் பண்பை உணர்த்துகிறதல்லவா? நான் முதன் முதலாகத் தியோனாக வேடம் தாங்கியது இந்த நாடகத்தில்தான். இந் நாடகத்தை மொத்தம் நான்கு முறையே நடித்திருக்கிறோம். தொடர்ந்து நடைபெறவில்லை. காரணம், இது பெரும்பாலும் டம்பாச்சாரி நாடகத்தை அடிப்படையாகக் கொண்டது. இளஞ்சிறுவர்களுக்கு வேண்டாத பல கருத்துக்கள் இந்நாடகத்தில் இருந்தன. சிறுவர்கள் இந்நாடகத்தில் நடிப்பதை ரசிகர்கள் அவ்வளவாக வரவேற்கவில்லை. உரையாடல்கள் தமிழ், ஆங்கிலம், தெலுங்கு ஆகிய பல மொழிகளைக் கொண்டிருந்தன. இந்நாடகத்தில் எம். கே. ராதா, முழுவதும் தெலுங்கு பேசும் செட்டியாராக ஒரு நகைச்சுவைப் பாத்திரத்தை ஏற்று, அற்புதமாக நடித்ததை என்னால் மறக்க முடியவில்லை.

ரயில்வேயில் லஞ்சம்

சேலத்தில் சந்திரகாந்தா நாடகம் பாடம் கொடுக்கப் பெற்றது. ஒத்திகையும் தொடர்ந்து நடைபெற்று வந்தது. அடுத்த ஊரில் அரங்கேற்றமாகும் என நம்பிக் கொண்டிருந்தோம். இந்த நேரத்தில் கம்பெனி பெங்களுருக்குப் புறப்பட்டது. பெங்களுர் கண்டோன்மெண்ட் லக்ஷிமி தியேட்டரில் நாடகங்கள் நடத்தினோம். இங்கு நாடகம் தொடங்கு முன்பே சிறிது தொல்லை ஏற்பட்டது. சேலத்திலிருந்து சீன் சாமான்களைக் கூட்ஸ் வண்டியில் ஏற்றிவிட்டு, நாங்கள் பெங்களுருக்குப் போய் விட்டோம். சாமான் குறிப்பிட்டபடி வந்துவிடுமென்று நம்பி நாடகத் தேதியும் விளம்பரம் செய்து விட்டோம். ஆனால், சாமான்கள் குறித்த தேதியில் வரவில்லை. எங்களுக்கும் எவ்விதத் தகவலும் இல்லை. சேலம் ஜங்ஷனில் கூட்ஸ் வண்டி கழற்றி விடப்பட்டிருப்பதால் அது சரியான நிலையில் இல்லையென்றும், மீண்டும் எங்கள் ஆட்கள் வந்து சாமான்களை வேறு வண்டியில் ஏற்ற வேண்டுமென்றும், சேலத்திலிருந்து வந்த ஒரு நண்பர் கூறினார். பிறகு சேலம் போய் விசாரித்ததில் இது, ரயில்வே கூட்ஸ் ஷெட் அதிகாரி ஒருவருக்கு இலவச டிக்கெட் கொடுக்காததால் ஏற்பட்ட வினையென்பது தெரிய வந்தது. அந்த அதிகாரி தன்னால் இயன்ற புண்ணியத்தைச் செய்து, முதல் நாடகத்தையே நிறுத்தும் படியாகச் செய்து விட்டார். விபரம் தெரிந்ததும் அவருக்கு லஞ்சம் கொடுத்து, அதே வண்டியை மீண்டும் பெங்களுருக்கு அனுப்ப ஏற்பாடு செய்து வந்தார் மானேஜர்.

பார்சி கம்பெனி நாடகம்

பெங்களுரில் எங்கள் நாடகம் நடைபெறுவதற்கு முன் அதே கொட்டகையில் பார்சி கம்பெனியாரின் இரு நாடகங்களைப் பார்த்தோம். காட்சி அமைப்புகள் பிரமாதமாக இருந்தன. பிரதான நாடகத்திலேயே நகைச்சுவையை இணைக்காமல் அதற்கென்று ஒரு தனி நாடகமே நடித்தார்கள். பிரதான நாடகத்தில் ஒரு காட்சி முடிந்ததும், நகைச்சுவை நாடகத்தின் காட்சி யொன்று நடைபெறும். இரு நாடகங்களின் காட்சிகளும் ஒன்றன் பின் ஒன்றாகத் தொடர்ந்து நடைபெறும். பிரதான நாடகம் முடியு முன்பே நகைச்சுவை நாடகம் முடிந்துவிடும். இந்த முறை எங்களுக்குப் புதிதாக இருந்தது. இருந்தாலும், நாடகங்களை நன்கு ரசித்தோம். இந்த நாடகத்தைப் பார்த்ததின் மூலம் சில புதிய அனுபவங்களைப் பெற்றோம். பெங்களுரில் சரியானபடி வசூல் ஆகவில்லை. இந்த நிலையில் வாத்தியார் கந்தசாமி முதலியாரும், எம். கே. ராதாவும், கே. கே. பெருமாளும் திடீரென்று கம்பெனியிலிருந்து விலகிக் கொண்டார்கள். வாத்தியார் தயாரித்த நாடகங்களை அவர் இல்லாது நடத்துவது கஷ்டமாகி விட்டது. பெரியண்ணா டி. கே. சங்கரன், எம். கே. ராதா புனைந்து வந்த பாத்திரங்களை ஏற்க வேண்டிய நெருக்கடி ஏற்பட்டது. பெங்களுரில் விரைவில் நாடகத்தை முடித்துக்கொண்டு திருப்பத்தூர் வந்துசேர்ந்தோம்.

பிரண்டுக்கு யோகம்

அப்போது கம்பெனியில் சிறு வேஷங்களைப் போட்டுக் கொண்டிருந்த பிரண்டு ராமசாமிக்கு யோகம் அடித்தது. பெருமாள் போட்டு வந்த துப்பறியும் கோவிந்தன் பாத்திரத்தை இராஜாம்பாள், இராஜேந்திரா ஆகிய இரு நாடகங்களிலும் அவர் ஏற்றார், தெளிவாகப் பேசித் திறம்பெற நடித்தார். அந்தக் காலத்தில் துப்பறியும் கோவிந்தன் ஒன்றுதான் பாட்டுகள் இல்லாத பாத்திரம். பிரண்டு ராமசாமிக்கு நன்றாகப் பாட வராது. துப்பறியும் கோவிந்தன் வேடத்தில் அவருக்கு அபாரமான பெயர் கிடைத்தது. இரத்தினாவளியில் எம்.கே. ராதா நடித்த வசந்தகன் வேடத்தையும் ராமசாமியே திறமையாக நடித்தார்.

எம். எம். சிதம்பராாதன் நாடகம்

திருப்பத்துாரில் நாங்கள் நடித்துக் கொண்டிருந்தபோது. அருகிலிருந்த கிருஷ்ணகிரியில் எம். எம். சிதம்பரநாதனின் அரிச்சந்திரா மயான காண்டம் நாடகம் நடந்தது. நாங்கள் பாவலர் கம்பெனியை விட்டுப் பிரிந்தபின் பாவலரிடம் பயிற்சி பெற்று முன்னுக்கு வத்தவர் சிதம்பரநாதன். அரிச்சந்திரா நாடகத்தில் அப்போது அவருக்கு நல்ல பெயர். அன்று எங்களுக்கு நாடகமில்லாததால் நானும் மற்றுஞ்சிலரும் கிருஷ்ணகிரிக்கு நாடகம் பார்க்கச் சென்றோம். அப்போது கிருஷ்ணகிரிக்குத் தனியாக ரயில் வண்டித் தொடர் இருந்தது. சின்ன ரயில் அது. இப்போது பொருட்காட்சிகளில் ஒடும் விளையாட்டு ரயில்போல இருக்கும். அதில் பயணம் செய்தது எங்களுக்கு மிகுந்த குதுரகலமாக இருந்தது. அரிச்சந்திரா நாடகத்தில் சிதம்பரநாதன் மிகுந்த சுறுசுறுப்பாகவும், அற்புதமாகவும் நடித்தார். சந்திரமதியாக நடித்தவரின் பெயர் நினைவில்லை. ஆனால், சின்னஞ்சிறுவகை நின்ற அரிச்சந்திரனுக்கு, சந்திரமதி தாய்போலத் தோற்றமளித்தார். சிதம்பரநாதனுக்கு அப்போது பதினன்கு வயதிருக்கலாம். சந்திரமதியாக நடித்தவர் முப்பது வயதுக்கு மேற்பட்ட அம்மை. யாராக இருந்தார். சிதம்பரநாதன் திறமையாக நடித்ததோடு அருமையாகவும் பாடினார். அந்த நாளில் பிரசித்தி பெற்றிருந்த டி. எஸ். வேலம்மாள், தாணுவம்மாள், டி. டி. ருக்மணி, எஸ். டி. சுப்புலட்சுமி, டி. பி. இராஜலட்சுமி, டி. ஆர். முத்துலட்சுமி, மிகவும் முதுமைப் பருவமடைந்த வி. பி. ஜானகியம்மாள் உள்ளிட்ட பெரிய நடிகையர் அனைவரும் சிதம்பரநாதனோடு சந்திரமதியாக நடித்திருக்கிறார்கள் என்பது இங்கு குறிப்பிடத் தக்கதாகும். நாடகம் முடிந்ததும் சிதம்பரநாதனப் பார்த்துப் பாராட்டிவிட்டு, திருப்பத்துாருக்குத் திரும்பினோம்.

சவுக்கடி சந்திரகாந்தா

வாத்தியார் ஏற்கெனவே பயிற்சி அளித்திருந்த சந்திர காந்தா நாடகத்தை நடத்த நாங்களே முயற்சித்தோம். ஓவியர் கே. மாதவன் அப்போது எங்கள் கம்பெனியில் இருந்தார். அவரிடம் அந்த நாளிலேயே அற்புதமாக வரையும் ஆற்றல் நிரம்பியிருந்தது. அவரைக்கொண்டு சந்திரகாந்தாவுக்குப்பெரும் பொருட் செலவில் காட்சிகளை உருவாக்கினோம்.நாடக ஒத்திகை தீவிரமாக நடந்தது. ஏராளமான புகைப்படங்கள் எடுத்துப் பிரமாத விளம்பரம் செய்யப் பெற்றது.

ஜே. ஆர். ரங்கராஜு

சந்திரகாந்தாவை நாவல் வடிவில் எழுதிய ஜே.ஆர். ரங்க ராஜூ நேரில் வந்து பார்த்துத்தான் அனுமதி கொடுப்பது வழக்கம். இராஜாம்பாள் நாடகத்திற்கு இருபத்தி ஐந்து ரூபாய்களும், இராஜேந்திரா, சந்திரகாந்தா ஆகிய நாடகங்களுக்கு முப்பது ரூபாய்களும் அவருக்கு ‘ராயல்டி’ யாகக் கொடுக்க வேண்டும். அவர் சொல்வதுதான் சட்டம். நாடகத்தில் எந்த அம்சமாவது அவருக்குத் திருப்தியளிக்காவிட்டால் அனுமதி கொடுக்க மாட்டார். சந்திரகாந்தா நாடகத்திற்குத் தேதியும் போட்டுச் சுவரொட்டிகள் ஒட்டப் பெற்றன. நாடகங்களுக்கு இரண்டு நாட்களுக்கு முன் ஜே. ஆர். ரங்கராஜு வந்தார். அன்றே காலையிலும் மாலையிலுமாக உடைகளைப் போட்டுக் காட்சிகளுடன் ஒத்திகை நடத்திக் காண்பித்தோம். ஒத்திகை முடிந்ததும் சிலதிருத்தங்களைச் சொல்லிவிட்டுப் போய்விட்டார். மாமாவும், சிற்றப்பாவும் அவர் தங்கியிருந்த இடத்திற்குச் சென்றார்கள். அனுமதி அளிக்கவேண்டுமென்று கேட்டார்கள். அவரிடமிருந்து கிடைத்த பதில் சிறிதும் எதிர்பாராததாக, அதிர்ச்சி தருவதாக இருந்தது.

நாடகம் சரியில்லை; காட்சிகளின்அமைப்புச் சரியில்லை; நடிகர்களின் நடிப்புச் சரியில்லை; பாடங்கள் சரியில்லையென்று எல்லாவற்றையுமே குறை சொல்லிவிட்டு, “இவை யெல்லாவற்றையும் விரைவில் சரிபடுத்திக் கொண்டு எழுதுங்கள். மறுபடியும் வந்து ஒத்திகை பார்க்கிறேன்” என்று சொல்லிவிட்டுச் சென்னைக்குப் புறப்பட்டுவிட்டார். அன்று, அவர்மீது எங்களுக்கு வந்த கோபம், இவ்வளவு அவ்வளவென்று சொல்ல முடியாது. என்ன செய்வது? அனுமதியில்லாததால் குறித்த தேதியில் நாடகம் நடைபெறவில்லை. மீண்டும் சந்திரகாந்தாவை நடத்தும் எண்ணத்தைக் கைவிட்டோம்.

ஒவியர் மாதவனின் உன்னதக் காட்சிகள்

சந்திரகாந்தாவுக்காக ஒவியர் மாதவன் எழுதிய காட்சிகள் எங்களைப் பார்த்துச் சிரித்தன. அவற்றில் திருக்கள்ளுர் பண்டார சந்நிதியின் அந்தப்புரம் ஒன்றை மிக அருமையாக சிருஷ்டித்திருந்தார். அதில் ஆறு கதவுகள் இருந்தன. அந்த ஆறு கதவுகளிலும் ஒரு ஆள் உயரத்தில் எழுதப் பெற்றிருந்த மடாதிபதியின் காதல் மனைவியரின் உருவங்கள் கண்ணையும், கருத்தையும் கவர்வனவாக அமைந்திருந்தன. ஆறு பேரும் ஆறு ஜாதிப் பெண்கள்; உயிருடன் நிற்பது போலவே பார்ப்பவருக்குத் தோன்றும். அந்த அற்புதக் காட்சியைக் காண்பிக்க முடியாமல் செய்துவிட்ட ஜே. ஆர். ரங்க ராஜுவை நானும், கலைவாணர் என். எஸ். கிருஷ்ணனும் சபித்துக் கொண்டே இருந்தோம்.

பெரியம்மை விளையாட்டு

இந்தச் சமயத்தில் கம்பெனியின் சில நடிகர்களுக்கு அம்மை நோய் வந்தது. அவர்களைத் தனியாக வைத்து, சிகிச்சை புரிவது சிரமமாக இருந்தது. எங்கள் தாயார் நிமோனியா ஜுரத் தால் மிகவும் கஷ்டப்பட்டார்கள். தங்கை சுப்பம்மாள், சிற்றப்பா செல்லம்பிள்ளை இருவருக்கும் அம்மை போட்டிருந்தது. இன்னும் சில பையன்களும் அம்மை நோயால் அவஸ்தைப் பட்டார்கள். இந்த நிலையில்நாங்கள் பட்டாபிஷேகத்தை முடிக்காமல்கோவை நாடகத்தை நிறுத்திவிட்டோம். நோயுற்றவர்களையெல்லாம் கோவையிலேயே தங்கவைத்து, வேண்டிய ஏற்பாடுகள் செய்து விட்டுக் கரூருக்கு வந்து சேர்ந்தோம். லஷுமணன் என்னும் ஒரு நடிகர் கம்பெனியில் இருந்தார். பெண்வேடம் புனைபவர். நன்றாக நடனம் ஆடக்கூடியவர். தாம்பாள நடனம் ஆடிக்கொண்டே புறா மாதிரி துணியில் புனைந்து காட்டுவார்; பரதநாட்டியம் போன்ற பல்வேறு நடனங்களையும் நன்றாக ஆடுவார்; நாடகத்திலும் பெண் வேடங்களில் மிகத் திறமையாக நடிப்பார். அவர் அம்மை நோய்க்கு அதிகமாகப் பயந்தவர். கரூர் ரயில் நிலையத்தில் இறங்கியதும் லஷுமணன், “அப்பா! ஒரு வகையாக அம்மை நோயிலிருந்து தப்பிவிட்டேன்” என்று கூறினார். எல்லோரும் கம்பெனி வீடுவந்து சேர்ந்தோம். மறுநாட் காலையில் லஷுமணனுக்கு அம்மைக் கொப்பளங்கள் இருப்பதைக் கண்டு எல்லோரும் அதிசயித்துப் போனோம். அவர் முன்னாள் ரயில் நிலையத்தில் பேசியதின் விளைவே இது என்று பலபேர் அபிப்ராயப்பட்டார்கள். இதில் அம்மன் விளையாட்டு, தெய்வீக சக்தி என்பது மெய்யோ, பொய்யோ, ஆனால் லஷுமணன்மட்டும் அதுதெய்வசக்தியென்று: உறுதியாக நம்பிவிட்டார். அவரை, அடுத்த ரயிலில் கோவை வீட்டுக்கு அனுப்பி வைத்தோம். கோவையில் எல்லோருக்கும் குணம் ஆயிற்று. ஆனால் லஷுமணன் அம்மை விளையாட்டுக்குப் பலியானார். கம்பெனி துவங்கியபின் அதுதான் முதல் மரணம். அவரை அடக்கம் செய்துவிட்டு, சிற்றப்பா முதலியவர்கள் வந்து சேர்ந்தார்கள்.

எஸ். என். இராமையா

கரூரில் நாடகங்கள் தொடர்ந்து நடைபெற்று வந்தன. எங்கள் கம்பெனியில் அப்போது கதாநாயகனாகவேடம் புனைந்து வந்தவர் எஸ். என். இராமையா என்பதை முன்பே சொல்லி யிருக்கிறேன். சுவாமிகள் நாடகங்கள் எல்லாவற்றிலும் இவர் கதாநாயகனுக நடித்து வந்தார். மிக நன்றாகப் பாடக் கூடியவர். ஏற்கனவே சின்னையாபிள்ளை கம்பெனியில் எங்களோடு: இருந்தவர். அந்தக் கம்பெனி நிறுத்தப்பட்டதும் நாங்களே விரும்பி ராமையாவைச் சேர்த்துக் கொண்டோம். அவர், தம் குடும்பத்துடன் தனியே வசித்து வந்தார். அவருக்குப் பல புதிய நண்பர்கள் சேர்ந்தார்கள். அவர் க ளின் போதனையினல் ராமையா, அதிகச் சம்பளம் கொடுத்தால்தான் கம்பெனியில் இருக்க முடியும் என அறிவித்தார். மாதம் ஆயிரம் ரூபாய்கள் வேண்டுமென்று கேட்டார். அவருக்குப் பின்பலமாக உள்ளுரிலுள்ள ஒரு வக்கீல் இருந்து வேலை செய்தார். இராமையாவை: நிறுத்திவிட்டு, நாங்கள் நாடகம் நடத்த ஆரம்பித்தோம். அவருக்குத் துணையாக இருந்த வக்கீல், கரூரில் நல்ல செல்வாக்கு. உடையவர். அவருடைய ஆட்கள் நாடகம் நடைபெறாமல் குழப்பம் செய்து வந்தார்கள். வேறு வழியின்றிப் பஞ்சாயத்துப் பேசி ரூபாய் ஐநூறு சம்பளம் தருவதாகச் சொல்லி இராமையாவை மீண்டும் சேர்த்துக் கொண்டோம்.

கரூரிலிருந்து கம்பெனி புதுக்கோட்டைக்குப் போனதும் இராமையா மீண்டும் தொல்லை கொடுக்கத் தொடங்கினார். அவரை விலக்கிவிட்டு நன்னிலம் நடராஜன் என்னும் புதிய நடிகர் ஒருவரைச் சேர்த்துக் கொண்டோம்.