எனது நாடக வாழ்க்கை/மும்மொழி நாடகம்

விக்கிமூலம் இலிருந்து

மும்மொழி நாடகம்

திண்டுக்கல்லில் இருந்தபோது என். எஸ். கிருஷ்ணன் ஜெகன்னதய்யர் கம்பெனியில் பிரபலமாய் விளங்கிய பக்த ராமதாஸ், நாடகத்தை நடத்த விரும்பினார். அதற்கான பொறுப்புக்களை அவரே ஏற்றுக் கொண்டார். நாடக ஆசிரியர், புதுக்கோட்டை தம்புடு பாகவதர் வந்தார். இவர் ஏற்கனவே துருவன் நாடகத்தை எங்களுக்குப் பயிற்றுவித்தவர். அதன் பிறகு சிவ கங்கையிலிருந்த போது ராமதாஸ் நாடகத்தையும் பாடம் கொடுத்திருந்தார். எனவே அதனைத் தயாரிக்க இப்போது அதிக சிரமம் எடுத்துக் கொள்ளவில்லை. நாடகம் தயாராயிற்று. ஆனால் நாடகத்துக்குத் தேவையான காட்சிகள், உடைகள் முதலியவற்றைச் செய்ய வேண்டுமே; எங்களுக்கிருந்த பொருளாதார நெருக் கடியில் எதுவும் செய்ய இயலவில்லை. இருந்த சில காட்சிகளை வைத்துக் கொண்டே நாடகத்தை நடத்த முனைந்தோம். ராமதாசரை அடைத்து வைக்கும் சிறைச்சாலை ஒன்று மட்டும் தேவைப்பட்டது. அப்போது ஓவியர் யாரும் இல்லை. சிறைச் சாலைக் காட்சியை என். எஸ். கிருஷ்ணனே ஒரே நாளில் எழுதி முடித்தார். நவாவுக்கு நல்ல உடைகள் இல்லை. முழுதும் ஜரிகையாலான துணி வேண்டுமென்று எல்லோரும் சொன்னோம். காட்சியமைப்பாளர்களில் ஒருவரான மாதவன் அதற்கும் ஏற்பாடு செய்தார். ஜரிகைபோல் தோன்றும் பவுன் வண்ணமுள்ள பெரிய ரேக் காகிதங்களை வாங்கி, அதிலேயே உடைகள் தயாரிக்கப் பட்டன. காகிதம் நீடித்து இராதென்றாலும் கண்ணாக்கு அழகாகவே இருந்தது. ராமதாஸ் தமிழ், தெலுங்கு, இந்துஸ்தானி ஆகிய மும்மொழிகளில் அமைந்த நாடகம். நான் ராமதாசராகவும் பெரியண்ணா டி. கே. சங்கரன் நவாப் தானிஷாவாகவும் நடித்தோம். என். எஸ். கிருஷ்ணன் மாறுபட்ட பத்து வேடங்களில் தோன்றி மிக அற்புதமாக நடித்தார். நாடகம் சிறப்பாக அரங்கேறியது. ராமதாஸ், என். எஸ். கிருஷ்ணனுடைய முழுத் திறமையையும் வெளிப்படுத்தும் நாடகமாக அமைத்தது. திண்டுக்கல் முடிந்ததும் கம்பெனி திருச்சி, தஞ்சை முதலிய நகரங்களுக்குச் சென்றது.

எந்த ஊரிலும் வசூல் இல்லை. மிகவும் கஷ்டப்பட்டுக் கம்பெனியை நடத்தி வந்தோம். இந்தச் சமயத்தில் பேசும் படங்கள் தமிழ் நாட்டில் வேகமாக வரத் தொடங்கின. ஏதேதோ கனவுகள் கண்டு கொண்டிருந்த எங்களுக்குப் பேசும் படங்களின் வருகை இடி விழுந்தது போலிருந்தது. படமல்லவா பேசுகிறது?... மனிதர்கள் பேசுவதை யார் கேட்பார்கள்?

பேசும் படப் போட்டி

ஆகாசவாணி பேசுவதாகவும், அசரீரி ஒலமிடுவதாகவும், பதுமைகள் வாய் திறந்து பாடுவதாகவும் பழங் கதைகளில் படித்திருந்த மக்கள், படம் பேசுகிறது என்றவுடன் திருவிழாவுக்குப் போவதைப்போல் சாரி சாரியாகப் போகத் தொடங்கினார்கள். புதிதாக வந்த நிழல் மனிதனுடன், உயிர் மனிதன் போட்டியிட இயலவில்லை. கம்பெனி கடிய வேகத்தில் பள்ளத்தை நோக்கிப் பாய்ந்தது. டி. பி. ராஜலட்சுமி நடித்த வள்ளி திருமணம் படம் அமோகமாக ஓடியது. ஜனங்கள் வெறிபிடித்தவர்களைப் போலத் திரைப்படக் கொட்டகையில் போய் விழுந்தார்கள். திரைப்படங்களில் அப்போது பாடல்களுக்குத்தான் முதலிடம் கொடுக்கப் பெற்றிருந்தது. எனவே சங்கீதத்தில் தேர்ச்சி பெற்றிருந்த நடிகர்களுக்கு அதிக மதிப்பு இருந்தது. நாடகத்திலேயே பாடல்களைக் குறைத்துக் கொண்டு நாங்கள் சமுதாய நாடகங்களை நடத்தி வந்தோம். எங்கள் நாடகங்களில் நடிப்புக்குத்தான் முதலிடம். எனவே எங்களால் பொதுமக்களைக் கவர முடியவில்லை.

சுந்தரராவ்

தஞ்சையில் நாடகங்கள் நடந்துகொண்டிருந்தபோது, அங்குள்ள அமைச்சூர் சபைகளுடன் எங்களுக்குத் தொடர்பு ஏற்பட்டது. அந்நாளில் சென்னைக்கு அடுத்தபடியாகத் தஞ்சையில் தான் அதிகமான அமைச்சூர் சபைகள் இருந்தன. சுதர்சன சபா மிகப் பழைய அமைச்சூர் குழு. இதைத் தவிர விஜய விலாச சபா. சக்ரதா சபா, குமரகான சபா முதலிய பல சபைகள் இருந்தன. குமரகான சபையைச் சேர்ந்த என். விஸ்வநாதய்யர் பல நாடகங்களை எழுதி நடித்து, அச்சு வடிவிலும் கொண்டு வந்திருந்தார். விஜயவிலாச சபா, சக்ரதர சபா இவற்றுடன் நாங்கள் நெருங்கிய தொடர்பு கொண்டிருந்தோம். இந்தச் சபைகளில் ஆசிரியராகவும் நடிகராகவும் விளங்கினார் சுந்தரராவ். நல்ல எடுப்பான தோற்றம் உடையவர்; கெம்பீரமான குரல் மிகச் சிறந்த நடிகர். உஷா பரிணயம், பிரகலாதன் இரு நாடகங்களை நாங்கள் பார்த்தோம். பிரகலாதனில் இரண்யனாகவும், உஷாபரிணயத்தில் பாணுசூரனாகவும் சுந்தரராவ் அபாரத்திறமையுடன் நடித்தார். அதே நேரத்தில் பேசும் படங்களில் வந்த வற்றல் உருவங்களைப் பார்த்தபோது, ‘இப்பேர்ப்பட்டவரையல்லவா ராட்சத வேடம் போடச் செய்ய வேண்டும்’ என்று நாங்கள் எண்ணிப் பெருமூச்சு விட்டோம்.

சுந்தரராவின் கல்லெண்ணம்

எங்கள் நாடகங்களையும் நடிப்பையும் பார்த்துப் பரவசப் பட்ட சுந்தரராவ் எங்களோடு அன்னியோன்னியமாகப் பழகினார். ஒத்திகைகள் நடைபெறும் போது தாமாகவே வந்து உட்கார்ந்து கொள்வார், வாத்தியார் இல்லாததால் சுந்தரராவே அந்த ஸ்தானத்தை ஏற்றுக்கொண்டு, நடிப்புச் சொல்லிக் கொடுப்பார். பெரியண்ணாவுடன் நெருங்கிப் பழகுவது எல்லோராலும் இயலாது. அதுவே ஒரு தனிக் கலை என்றுதான் சொல்ல வேண்டும். சுந்தரராவ் எப்படியோ பெரியண்ணாவைக் கவர்ந்து விட்டார். இருவரும் மிக நெருங்கி உறவாடினார்கள். சுந்தரராவ் இரண்டாவது மகாயுத்தத்தில் சேவை புரிந்தவர், அப்போது கலைக்டர் அலுவலகத்தில் வேலை பார்த்து வந்தார். சர்க்காரால் அவருக்குக் கொஞ்சம் நிலம் மான்யமாகக் கொடுக்கப் பெற்றிருந்தது. எங்கள் நிலையை நன்குணர்ந்து அனுதாபப்பட்ட சுந்தரராவ் தமது நிலத்தை அடகு வைத்துப் பணம் வாங்கித் தருவதாகவும், நல்ல காட்சி உடைகளைத் தயாரித்து நாடகங்களைச் சிறப்பாக நடத்துமாறும் ஆலோசனை கூறினார். பெரியண்ணா அதற்கு ஒப்பவில்லை. கஷ்டங்கள் முழுவதையும் தாமே ஏற்றுக்கொள்வதாகவும், நண்பர் களை இதில் பங்கு கொள்ளச் செய்ய விரும்பவில்லையென்றும் சொல்லிவிட்டார். பின்னும் சுந்தரராவ் எங்களுக்கு ஒரு கெளரவ ஆலோசனையாளராகவும், ஆசிரியராகவும், நாங்கள் போகும். ஊர்களுக்கெல்லாம் வந்து கலந்து கொண்டார்.

எம். ஆர். ராதா

பட்டுக்கோட்டையில் நாங்கள் நாடகங்கள் நடத்திக் கொண் டிருந்த போது நடிகவேள் எம். ஆர். ராதா எங்கள் கம்பெனியில் வந்து சேர்ந்தார். என். எஸ். கிருஷ்ணன், ஜெகனாதையர் கம்பெனியிலிருந்தபோது, எம்.ஆர். ராதாவோடு நெருங்கிய நட்பு கொண்டிருந்ததால் அவரே கடிதம் எழுதி ராதாவை வரவழைத்தார். ராதா வந்ததும் ஏற்கனவே நடந்து வந்த நாடகங்களில், சில நகைச்சுவை வேடங்களைத் திறமையாக நடித்தார். பதிபக்தி நாடகம் தயாராயிற்று. பதிபக்தி நாடகத்தில் ராதாவுக்கு. அந்நாளில் பிரமாதமான புகழ் இருந்து வந்தது. ஜெகனாதையர் நாடகசபை யாழ்ப்பாணத்தில் கலைந்துபோன பிறகு, ஐயரின் புதல்வர் ராமசுப்பு அந்தக்கம்பெனியை ஒருவாறு ஒழுங்குப்படுத்தி மதுரைக்குக் கொண்டுவந்தார். அந்தக் கம்பெனியில் பதிபக்தி நாடகம் அப்போது முதலிடம் பெற்றது. நாடக ஆசிரியர் எம். எஸ். முத்துகிருஷ்ணன் கங்காதரனாகவும், எம். ஆர். ராதா துப்பறியும் சந்தானமாகவும் தோன்றி மேடையில் பயங்கரமாகச் சண்டை போடுவார்கள். இதை நாங்கள் ஏற்கனவே ஒருமுறை பார்த்திருக்கிறோம். பதிபக்தியில் நான் ராஜசேகரனாக வேடம் புனைந்தேன். தம்பி பகவதி கங்காதரனுகவும், எம். ஆர். ராதா துப்பறியும் சந்தானமாகவும் நடிக்கத் திட்டமிட்டிருந்தனார். சண்டைபோடும் நுணுக்கங்களையெல்லாம் பகவதிக்கு ராதாவே சொல்லிக்கொடுத்தார். பகவதியும்.அப்போது முரட்டுப் பேர்வழி. சாதாரண விளையாட்டுகளிலே கூட ராதாவுக்கு ஈடுகொடுக்கக் கூடியவர் பகவதி ஒருவர்தான். பதிபக்தியில் அவர்கள் சண்டை போடும் காட்சியைக்காண நாங்கள் ஆவலோடிருந்தோம். பதிபக்தி ஒத்திகை தொடர்ந்து நடைபெற்று வந்தது.

ராஜசேகரன்

தஞ்சை என்.விஸ்வநாதையர் எழுதிய ராஜசேகரன் நாடக அச்சுப் புத்தகத்தை ஒருநாள் நானும் ராதாவும் படித்தோம். அந்த நாடகம் எங்களுக்கு நிரம்பவும் பிடித்தது. ராதா ராஜ சேகரனக நடிப்பதென்று முடிவாயிற்று. உடனே பாடம் எழுதத் தொடங்கினோம். ஆனால், பதிபக்தி வெற்றிகரமாக நடைபெறுவதற்கு ஆர்வத்தோடு ஏற்பாடுகளைச்செய்த ராதா, பதிபக்தி அரங்கேறுவதற்கு முன்பே கம்பெனியை விட்டுச் சொல்லாமல் போய் விட்டார். அவர் போய்விட்டதை அறிந்த என். எஸ். கிருஷ்ணன் “அடப்பாவி, நான்தான் ராதாவைக் கம்பெனியில் சேர்த்தேன்; என்னிடம்கூடச் சொல்லாமல் போய்விட்டானே!” என்று வருந்தினார். பிறகு ராதா போடவேண்டிய சந்தானம் வேடத்தை என். எஸ். கிருஷ்ணனே போட்டார். சுவாமி நாடகங்களில் ராதாவுக்குப் பொருத்தமான வேடங்கள் ஒன்றும் இல்லாதபடியால் அவருக்குத் திருப்தி ஏற்படவில்லை. இருந்த வரை எங்களோடு அன்புடன் பழகினார். நல்ல முறையில் நடந்துகொண் டார். பெரியண்ணாவிடத்தில் அவருக்கு மிக்க மதிப்பு ஏற்பட்டிருந்தது. ராதா வரும்போது அவரைப்பற்றி முன்னாலேயே கேள்விப்பட்டிருந்த எங்களுக்கு அவர் எப்படியிருப்பாரோ வென்று யோசனையாகத்தான் இருந்தது. வந்து சிலகாலம் இருந்து போன பிறகு அவரது நட்புறவு எங்களை மிகவும் வருத்தியது. பட்டுக்கோட்டை, மன்னார்குடி, முதலிய ஊர்களில் நடித்துவிட்டு நாகப்பட்டினம் சென்றோம்.

கோல்டன் கோவிந்தசாமி நாயுடு

வசூல் நிலைமை நாளுக்கு நாள் மோசமாகிக் கொண்டே வந்தது. எல்லோரும் சேர்ந்து கம்பெனியை இழுத்து நிறுத்த முயன்றோம். இயலவில்லை. சாண் ஏறினல் முழம் சறுக்கியது. பணம் என்னும் கயிறு இருந்தால்தான் கம்பெனியைக் கட்டி இழுக்க முடியும் என்ற நிலை ஏற்பட்டுவிட்டது. பொருள் வலிமை யுடைய ஒருவரிடம் கம்பெனியை ஒப்படைத்து நடிகர்களாகவே ஊதியம் பெற்றுக் கம்பெனியின் பெயர் மறையாதபடியாவது காப்பாற்றிக் கொள்ளலாம் என எங்களுக்குத் தோன்றியது. சென்னை கோவிந்தசாமி நாயுடு, கோல்டன் கம்பெனி என்னும் ஒரு பெரிய நாடகக் குழுவை வைத்துச் சிறப்பாக நடத்தியவர். அவர் எங்கள் நாடகக் குழுவை வருஷ ஒப்பந்தம் பேசி, எடுத்து நடத்த முன்வந்தார். சுந்தரராவ் இப்படி நிரந்தரமாகக் கம்பெனியை மற்றொருவரிடம் ஒப்படைப்பதை எவ்வளவோ தடுத்தார். பல ஆண்டுகள் வசூல் இல்லாது, மனம் கசந்து இருக்கும் நிலையில் பெரியண்ணா சுந்தரராவின் யோசனையை ஏற்க வில்லை. சகல செலவுகளும் கோவிந்தசாமி நாயுடுவே செய்து கொள்வதென்றும், நாங்கள் நால்வரும் நடிப்பதற்காகவும், காட்சியமைப்புகள், உடைகள் இவற்றிற்காகவும் ஆண்டுக்கு ஆருயிரம் ரூபாய்கள் பெற்றுக் கொள்வதென்றும், கம்பெனியின் பெயர் ஸ்ரீபாலஷண்முகானந்தசபா என்றே இருக்கவேண்டுமென்றும் பேசி முடிவு செய்யப்பட்டது. எங்கள் நடிகர்கள் அனைவரும் இந்த ஏற்பாட்டுக்கு வருத்தத்துடன் ஒப்புக் கொண்டார்கள். என். எஸ் கிருஷ்ணன், பெரியண்ணாவுடன் எவ்வளவோ தடுத்துப் பேசிப் பார்த்தார். இறுதியாக அவரும் ஒப்புக் கொண்டார். மூன்றாண்டுகள் இவ்வாறு நடைபெற வேண்டு மென்று கோல்டன் கோவிந்தசாமி நாயுடுவுடன் ஒப்பந்தம் முடிவாகியது. காரைக்காலில் கடைசியாக நாடகம் நடத்தி விட்டு 1932இல் கம்பெனியை நாயுடுவிடம் ஒப்படைத்தோம்.