நபிகள் நாயகம்-சரித்திர நிகழ்ச்சிகள்/எதிரிகளிடையே குழப்பம்

விக்கிமூலம் இலிருந்து

114. எதிரிகளிடையே குழப்பம்

குறைஷிகள் இருக்கும் இடத்துக்கு கத்பான் கூட்டத்தாரின் தலைவர் நயீம் சென்று அபூ ஸூப்யான் முதலான தலைவர்களை எல்லாம் அழைத்து:

“நேற்று இரவு எனக்கு இரகசியமான செய்தி ஒன்று கிடைத்தது. நான் உங்களுடைய பழைய நண்பன், உங்களுடைய நன்மையை விரும்புகிறவன். ஆகையால் உங்களிடம் சொல்லாமலிருக்க என் மனம் இடம் கொடுக்கவில்லை. நீங்கள் ஏமாந்து விடக் கூடாது. முன்பு பனூ குறைலா கூட்டத்தார், முஹம்மதுடன் உடன்படிக்கை செய்து கொண்டிருந்தார்கள் அல்லவா? அந்த உடன்படிக்கைக்கு விரோதமாகத் தானே இப்பொழுது இந்தச் சண்டையில் சேர்ந்திருக்கிறார்கள்? அவ்வாறு மாறியதைப் பற்றி, குறைலா கூட்டத்தார் அச்சமுற்று, முஹம்மது அவர்களிடம் ஒரு சேதி இரகசியமாகச் சொல்லி அனுப்பியுள்ளார்கள்.

அதாவது “முன்னர் நாங்கள் செய்து கொண்ட உடன்படிக்கையை மீறி, நடந்து கொண்டதற்காக மிகவும் வருந்துகிறோம். மறுபடியும், உங்களுடன் புது உடன்படிக்கை செய்து கொள்ள விரும்புகிறோம். எங்கள் மீது உங்களுக்கு நம்பிக்கை உண்டாவதற்காக, குறைஷிகளிலிருந்தும், கத்பான் கூட்டத்திலிருந்தும் சில தலைவர்களை உங்களிடம் ஒப்படைத்து விடுகிறோம்; அதன் பின், நாம் இரு கூட்டத்தாரும் இணைந்து, அவர்களுடன் சண்டை செய்து அவர்களைத் துரத்தி விடுவோம். அவ்வாறு நாம் செய்யா விடில், அவர்கள் மதீனாவையும், சுற்றுப்புறங்களையும் கைப்பற்றி விடுவார்கள். இதுவே அந்த இரகசியச் செய்தி” என்று கூறி முடித்தார் நயீம்.

அவர் கூறிய மேற்கண்ட செய்தி குறைஷிகளுக்குக் கலக்கத்தை உண்டாக்கியது.

நயீம் கத்பான் கூட்டத்தாரிடம் சென்று அவர்களிடமும் மேற்கண்டவாறு கூறினார். அவர்களும் கலங்கி விட்டனர்.

கத்பான் கூட்டத்தின் தலைவரான நயீம், பனூ குறைலா கூட்டத்தார், குறைஷிக் கூட்டத்தார், கத்பான் கூட்டத்தார் ஆகியோரிடையே சென்று, சாதுர்யமாகப் பேசி, அவர்களிடையே பிளவு உண்டாக்க முயன்றார்.