நபிகள் நாயகம்-சரித்திர நிகழ்ச்சிகள்/எதிரிகளிடையே பிளவு உண்டாக்குதல்

விக்கிமூலம் இலிருந்து

113. எதிரிகளிடையே பிளவு உண்டாக்குதல்

கத்பான் கூட்டத்தாரும், பனூ குறைலா கூட்டத்தாரும் வெகுகாலமாக நட்புறவோடு இருந்து வந்தார்கள்.

கத்பான் கூட்டத்தாரின் தலைவர் நயீம், குறைலா கூட்டத்தாரிடம் சென்று, தலைவர்களை எல்லாம் அழைத்து,

“நான் உங்களிடம் ஒரு முக்கியமான விஷயத்தைப் பற்றிக் கேட்கப் போகிறேன். இப்பொழுது, நீங்கள் என்ன செய்து கொண்டிருக்கிறீர்கள் என்பதைப் பற்றி சிறிதளவாவது யோசித்தீர்களா? நான் உங்களுடைய பழைய நண்பன்: உங்களுடைய நலத்தை விரும்புகிறவன். நான் சொல்ல வந்ததை வெளிப்படையாகக் கூறி விடுகிறேன். உங்களுடைய நிலைமை வேறு. குறைஷிகளுடைய நிலைமை வேறு. குறைஷிகள் மதீனாவில் நிலையாக இருக்கக் கூடியவர்கள் அல்லர். அவர்களுக்கு மதீனாவில் பிள்ளைகளோ, சொத்துகளோ எதுவுமே இல்லை, சில நாட்கள் இங்கே இருந்து விட்டுப் பிறகு திரும்பிப் போய் விடுவார்கள். முற்றுகையை நிறுத்தி, குறைஷிகள் மக்காவுக்குத் திரும்பிப் போய் விட்டால், பிறகு நீங்கள் தனியாக முஸ்லிம்களை எதிர்த்து நிற்க இயலுமா? நீங்களும், முஸ்லிம்களும் ஒரே பகுதியில் இருப்பவர்கள். அப்படியிருக்கும் போது, நீங்கள் எதற்காக முஸ்லிம்களுடன் விரோதத்தை உண்டாக்கிக் கொள்ள வேண்டும்? உங்களுடைய நன்மையைக் கருதி நான் சொல்லும் யோசனையைக் கேளுங்கள். சண்டை செய்தே தீர வேண்டும் என்ற எண்ணம் உங்களுக்கு இருந்தால், குறைஷித் தலைவர்கள் சிலரை உங்களிடம் பிணையாக வைக்குமாறு கேளுங்கள். சண்டையைக் கடைசி வரை நடத்தாவிடில், அந்தத் தலைவர்களை விட முடியாது என்று சொல்லி விடுங்கள். அவ்வாறு அவர்கள் செய்தால், உங்களைக் கை விட்டு அவர்கள் ஒட மாட்டார்கள்” என்று கூறினார்கள்.

மேலே கண்டவாறு நயீம் கூறிய சொற்கள், யூதர்களுடைய உள்ளத்தில் நன்கு பதிந்தன. அவருடைய யோசனைப்படியே நடக்க வேண்டும் என அவர்கள் தீர்மானித்தார்கள்.