நபிகள் நாயகம்-சரித்திர நிகழ்ச்சிகள்/எங்களிடம் வாளைத் தவிர வேறு இல்லை

விக்கிமூலம் இலிருந்து

109. “எங்களிடம் வாளைத் தவிர வேறு இல்லை!”

முற்றுகை நாளுக்கு நாள் கடுமையாகிக் கொண்டிருந்தது.

எதிரிகள் அகழைத் தாண்ட முடியாமல், கற்களையும் அம்புகளையும் எறிந்து கொண்டிருந்தனர்.

பெருமானார் அவர்கள் முஸ்லிம் படையைv பல பகுதிகளிலும் பிரித்து வைத்திருந்தார்கள்.

முற்றுகை நீடித்துக்கொண்டு போவதால், அன்ஸாரிகள் தைரியம் இழந்து விடக் கூடாது என்று நினைத்து பெருமானார் அவர்கள், எதிரிகளில் ஒரு பிரிவினரான கத்பான் கூட்டத்தாரை தாங்கள் வசப்படுத்திக் கொள்ளலாமா என்று யோசித்தார்கள்.

அதாவது மதீனாவின் விளை பொருள்களில் மூன்றில் ஒரு பாகத்தை, ஒவ்வொரு வருடமும் கத்பான் கூட்டத்தாருக்குக் கொடுத்து விடுவது என்றும், அதற்குப் பதிலாக அவர்கள் சண்டையிலிருந்து விலகிக் கொள்ள வேண்டும் என்ற நிபந்தனையோடு, ஓர் உடன்படிக்கை அவர்களோடு செய்து கொள்ளலாமா என்று எண்ணினார்கள்.

அதைப் பற்றி அன்ஸாரிகளின் தலைவர்களான ஸஃதுப்னு உபாதா, ஸஃதுப்னு முஆத் ஆகிய இருவரிடமும் பெருமானார் அவர்கள் கலந்து ஆலோசித்தார்கள். அதற்கு அவர்கள் இருவரும், “இவ்வாறு செய்யுமாறு ஆண்டவன் தங்களுக்குக் கட்டளை பிறப்பித்திருக்கிறானா? அல்லது தங்களுடைய சொந்தக் கருத்தா? ஆண்டவனுடைய கட்டளை இவ்வாறு இருக்குமானால், அதை நாங்கள் மறுத்துக் கூற இயலாது. தங்களுடைய சொந்தக் கருத்தாக இருக்குமானால், எங்களுடைய கோரிக்கையையும் கேட்டுக் கொள்ளுமாறு வேண்டிக் கொள்கிறோம்", என்று கூறினர்.

பெருமானார், “அது தங்களுடைய சொந்தக் கருத்தே” என்று சொன்னார்கள்.

அவர்கள் இருவரும், “நாங்கள் ஆண்டவனுக்கு இணையாக விக்கிரகங்களை வணங்கிக் கொண்டு, ஆண்டவனைப் பற்றிய அறிவும், ஆண்டவனுக்குச் செய்ய வேண்டிய வணக்க முறைகளும் கொஞ்சமும் அறியாமல் காலம் கழித்துக் கொண்டிருந்த அந்தக் காலத்தில், மதீனாவிலிருந்து ஒரு பேரீச்சம் பழத்தைக் கூட விலையில்லாமல் கொண்டு போவதற்குக் கத்பான் கூட்டத்தாருக்குத் துணிவு இல்லாமல் இருந்தது. அப்படியிருக்கும் போது, தங்கள் மூலமாக ஆண்டவன் எங்களுக்கு நேர் வழியைக் காட்டி, எங்களைப் பெருமைப்படுத்தியிருக்கும் இந்தக் காலத்தில், நாங்கள் மதீனாவின் மகசூலில் மூன்றில் ஒரு பாகத்தைக் கொடுக்கலாமா? அவர்களுக்குக் கொடுப்பதற்கு இப்பொழுது எங்களிடம் வாளைத் தவிர வேறு ஒன்றும் இல்லை” என்று தெரிவித்தார்கள்.

இதைக் கேட்டதும் அன்ஸாரிகளும் உறுதியுடனே இருக்கிறார்கள் என்பதைப் பெருமானார் அறிந்து திருப்தி அடைந்தார்கள்.