நபிகள் நாயகம்-சரித்திர நிகழ்ச்சிகள்/எனக்கு என்ன கட்டளை இடுகிறீர்கள்?

விக்கிமூலம் இலிருந்து

112. “எனக்கு என்ன கட்டளை இடுகிறீர்கள்?”

முற்றுகை தொடங்கிப் பல நாட்கள் ஆகிவிட்டன. ஆனால், குறைஷிகள் எந்தப் பயனையும் காணவில்லை. அதனால் குறைஷி, யூதர்களிடையே மனத்தளர்ச்சி உண்டாகியது. அவர்களுக்கு வர வர நம்பிக்கை குறைந்து கொண்டே வந்தது.

தவிர, இருபத்து நான்காயிரம் வீரர்களுக்கு உணவு தயாரித்து அளிப்பது மிகவும் சிரமமாகவும் இருந்தது. இத்தகைய சந்தர்ப்பத்தில் கால நிலையால் பலமான புயல் கிளம்பியது. அதனால் எதிரிகளின் கூடாரங்கள் சிதைந்து போயின. அடுப்பின் மீதிருந்த சமையல் பாத்திரங்கள் எல்லாம் உருண்டு, புரண்டு கீழே விழுந்தன. இதனாலும் எதிரிகள் தைரியத்தை இழந்தனர். மற்றொரு நிகழ்ச்சி: குறைஷிகளுடன் சேர்ந்து சண்டைக்கு வந்திருந்த கத்பான் கூட்டத்தாரில் பிரபலமானவரும், மதிப்புமிக்கவருமான நயீமுப்னு மஸ்வூது என்பவர் பெருமானார் அவர்களிடம் வந்து, “ஆண்டவனுடைய தூதரே, நான் மனப்பூர்வமாய் முஸ்லிம் ஆகி விட்டேன். ஆனால், இவ்விஷயம் இதுவரை என்னுடைய கூட்டத்தாருக்குத் தெரியாது. தாங்கள் என்ன கட்டளையிட்டாலும் அதை நான் நிறைவேற்றத் தயாராக இருக்கின்றேன்” என்றார்.

பெருமானார் அவர்கள், “எதிரிகளுக்குள் பிரிவினை உண்டாக்குவதைத் தவிர, ஒரு மனிதனால் வேறு என்ன செய்ய முடியும்?” என்று சொன்னார்கள்.