நபிகள் நாயகம்-சரித்திர நிகழ்ச்சிகள்/வீரச் செயல்புரிந்த பெண்மணி

விக்கிமூலம் இலிருந்து

111. வீரச் செயல் புரிந்த பெண்மணி

அகழ்ச் சண்டையின் காரணமாகப் பெண்கள் பாதுகாப்புள்ள கோட்டைக்கு அனுப்பி வைக்கப் பட்டிருந்தனர்.

அந்தக் கோட்டை பனூ குறைலா கூட்டத்தார் வாழும் இடத்துக்கு அருகில் இருந்தது.

முஸ்லிம் வீரர்கள் எல்லோரும் பெருமானார் அவர்களுடன் அகழிலிருந்து சண்டை செய்து கொண்டிருப்பதால், பெண்கள் இருக்கும் கோட்டை பாதுகாப்பற்று இருக்கும் என்று எண்ணி, யூதர்கள் அதைத் தாக்கத் தீர்மானித்தார்கள்.

முதலில் நிலைமையை அறிந்து வருமாறு ஒரு யூதரை அனுப்பினார்கள். அந்த யூதர் கோட்டையின் வாசல் வரை போய்க் கோட்டையை எவ்வழியாகத் தாக்கலாம் என்று கவனித்துக் கொண்டிருந்தார். அந்த யூதர் வருவதைப் பெருமானார் அவர்களின் மாமியார் ஸபிய்யா நாச்சியார் பார்த்து விட்டார்கள். உடனே கோட்டையின் காவலராயிருந்த கவிஞர் ஹஸ்ஸானைக் கூப்பிட்டு, அந்த யூதரை வெட்டி விடுமாறு கூறினார்கள்.

ஹஸ்ஸான் ஒரு நோயாளி. மேலும் அவருடைய இருதயம் பலவீனம் அடைந்திருந்தது. அதனால், சண்டை நடந்து கொண்டிருப்பதைக் கூட அவர் காணச் சகிக்க மாட்டார். இந்தக் காரணத்தை ஸபிய்யா நாச்சியாரிடம் சொல்லி, “இவ்வேலைக்கு நான் தகுதியுடையவனாக இருந்தால் போர் முனைக்குப் போயிருக்க மாட்டேனா?” என்றார். உடனே ஸபிய்யா, கூடாரத்தின் கம்பு ஒன்றை எடுத்துக் கொண்டு கோட்டையை விட்டு வெளியே வந்து, அந்த யூதருடைய தலையை நோக்கி ஓங்கி அடித்தார்கள். அந்த அடியினால் மண்டை உடைந்து கீழே விழுந்தார் அந்த யூதர்.

அதன்பின், ஸபிய்யா கோட்டைக்குள் சென்று மாண்ட யூதருடைய ஆயுதங்களை எடுத்து வருமாறு ஹஸ்ஸானிடம் கூறினார்கள். அவரோ 'தமக்கு ஆயுதம் அவசியம் இல்லை' என்று கூறி விட்டார். -

பின்னர் எதிரிகளுக்கு அச்சம் உண்டாவதற்காக, அந்த யூதருடைய தலையை வெட்டி, கோட்டைக்கு வெளியே எறிந்து விடும்படி ஸபிய்யா சொன்னார்கள்.

அதுவும் ஹஸ்ஸானால் இயலாது போயிற்று. பிறகு ஸபிய்யாவே அந்த வேலையையும் செய்தார்கள்.

இந்த நிகழ்ச்சியைக் கண்டார்கள் யூதர்கள்: கோட்டைக்குள்ளும் படைகள் இருப்புதர்க எண்ணி, அதைக் தாக்காமல் விட்டு விட்டார்கள்.