நபிகள் நாயகம்-சரித்திர நிகழ்ச்சிகள்/உடன்படிக்கையைகைவிட்ட துரோகிகள்

விக்கிமூலம் இலிருந்து

107. உடன்படிக்கையைக் கைவிட்ட துரோகிகள்

சண்டைக்குத் தயாரான முஸ்லிம்களோ மூவாயிரம் பேர். மிகவும் குறைவான எண்ணிக்கை.

அவர்களை அழித்து விட வேண்டும் என்ற உறுதியான தீர்மானத்துடன் இருபத்து நான்காயிரம் பேர் அடங்கிய படையானது, மும்முரமான முயற்சியோடு மதீனாவுக்கு மிக அருகில் வந்துவிட்டது.

இத்தகைய இக்கட்டான நிலையில்தான் ஷாம், ஈரான், ஏமன் ஆகிய மாகாணங்களின் ஆட்சி முஸ்லிம்களின் வசமாகும் என்று அறிவிக்கப்பட்டது.

அகழ் வெட்டி முடிந்தது; ஸலஅ என்னும் குன்றைப் படைகளுக்குப் பின்புறமாக வைத்து பெருமானார் அவர்கள் அணி வகுத்தார்கள். பெண்களைப் பாதுகாப்பான கோட்டைகளுக்கு அனுப்பி வைத்தார்கள்.

பனூ குறைலா கூட்டத்தார் முஸ்லிம்களோடு நட்புடன் இருப்பதாகவும், அவர்களைப் பகைவர்கள் தாக்கினால், உதவி புரிவதாகவும், முன்னர் ஓர் உடன்படிக்கை செய்து கொண்டிருந்தார்கள். அவ்வுடன்படிக்கைப்படி அவர்கள் இப்பொழுது நடந்து கொள்வார்கள் என நம்ப முடியாமல் இருந்தது. அவர்கள் மதீனாவின் தென்கிழக்குப் பகுதியில் வாழ்ந்து வந்தார்கள். அவர்களிடம் பல கோட்டைகள் இருந்ததால், முஸ்லிம்களுக்கு அவர்களைப் பற்றிய பயம் இருந்தது. அப்பகுதியில், பாதுகாப்புக்காக இருநூறு பேர் கொண்ட படை ஒன்றை அனுப்பி வைத்தனர். முஸ்லிம்களுக்கு ஒத்துழைப்பு அளிக்காமல் இருந்த பனூ குறைலா கூட்டத்தாரை, அவர்களுக்கு விரோதமாகச் சண்டை செய்யுமாறு தூண்டுவதற்கு பனூ நலீர் கூட்டத்தார் முயன்றார்கள்.

பனூ நலீர் கூட்டத் தலைவரான ஹூயைய் இப்னு அக்தப், பனூ குறைலா கூட்டத் தலைவர் கஅபிடம் சென்று, தங்களோடு சேர்ந்து கொள்ளும்படி வேண்டிக் கொண்டார்.

அவ்வாறு செய்ய இயலாது என கஅப் முதலில் கூறினார். பனூ நலீர் கூட்டத் தலைவர் அதோடு விடவில்லை. “தாம் ஏராளமான படைகளுடன் வந்திருப்பதாகவும், குறைஷிகளும், அரேபிய தேசத்தார் அனைவருமே ஒன்று திரண்டு வந்திருப்பதாகவும், எல்லோரும், முஹம்மதின் இரத்தத்தில் தாகம் உடையவர்களாக இருப்பதாயும் இஸ்லாத்துக்கு முடிவு காலம் வந்து விட்டதாகவும்" கூறி, "இத்தகைய அரிய சந்தர்ப்பத்தை நழுவவிடக்கூடாது” என்றும், மேலும் பலவாறு எடுத்துச் சொன்னார்.

அதைக் கேட்ட கஅப், “நான் முஹம்மதுடன் உடன்படிக்கை செய்திருக்கிறேன். வாக்குக் கொடுப்பதில் எப்போதும் அவர் உண்மையாக நடப்பவர் என்று எனக்கு நன்றாகத் தெரியும், அப்படியிருக்கும்போது, இப்போது நான் உடன்படிக்கையை மீறுவது நல்லதல்ல” என்று சொன்னார்.

ஆனால் பனூ நலீர் கூட்டத் தலைவர், பலவாறான தந்திரங்களைச் செய்து, அவரை இணங்குமாறு செய்து விட்டார்.

அதன் விளைவாக, பனூ குறைலா கூட்டத்தார் முஸ்லிம்களுக்கு விரோதமாக குறைஷிகளுடன் சேர்ந்து கொண்டனர்.

உடன்படிக்கைக்கு விரோதமாக பனூ குறைலா கூட்டத்தினர் நடந்து கொண்ட செய்தி பெருமானார் அவர்களுக்குத் தெரிய வந்தது. அது உண்மைதானா என அறிந்து வருமாறு இரண்டு அன்ஸாரிகளை அனுப்பினார்கள். அவர்கள் இருவரும், முஸ்லிம்கள் ஆவதற்கு முன்னர் யூதர்களுடன் நெருங்கிய நட்புக் கொண்டிருந்தவர்கள்.

அவ்விருவரும் பனூ குறைலா கூட்டத்தாரிடம் சென்று. உடன்படிக்கையை நினைவு படுத்தினார்கள். அதற்கு அவர்கள், “முஹம்மது யார் என்பதே எங்களுக்குத் தெரியாது. உடன்படிக்கை இன்னது என்பதும், எங்களுக்குத் தெரியாது” என்று கூறி விட்டார்கள்.

மேலும், அக்கூட்டத்தார் படைகளைத் திரட்டிக் கொண்டு சண்டைக்குத் தயாராக இருந்ததைக் கண்டு, அவர்களைக் கண்டித்தார்கள்.

அவர்கள் இருவரும் திரும்பி வந்து, பெருமானாரிடம் மட்டும் விவரத்தைத் தெரிவித்தார்கள்.

இந்தச் செய்தி படையிலுள்ளவர்களுக்குத் தெரிந்தால், மனம் தளர்ந்து விடக் கூடும் என்று கருதி பெருமானார் அவர்கள் எவரிடமும் கூறவில்லை.