நபிகள் நாயகம்-சரித்திர நிகழ்ச்சிகள்/பாதுகாப்பு வரி செலுத்துதல்

விக்கிமூலம் இலிருந்து

191. பாதுகாப்பு வரி செலுத்துதல்

நஜ்ரான் என்னும் மாநிலம், ஏமன் தேசப் பகுதியில் உள்ளது. அது மக்காவிலிருந்து 175 மைல் தொலைவாகும்.

கிறிஸ்துவர்கள் அங்கே மிகுதியாயிருந்தனர். அங்கே ஒரு பெரிய கோவில் இருந்தது. அதை அந்த நகர மக்கள் கஃபாவுக்குச் சமானமாகக் கருதினார்கள்.

பெருமானார் அவர்கள், அந்த மக்களுக்கு இஸ்லாத்தைப் பற்றிப் போதனை செய்து கடிதம் அனுப்பினார்கள்.

அக்கடிதம் கிடைத்ததும், கோயிலின் பாதுகாவலரும், மதகுருமார்களும் அடங்கிய அறுபது பேர், ஒரு கூட்டமாகப் பெருமானார் அவர்களிடம் வந்தார்கள். அக்கூட்டத்தாரைப் பள்ளி வாசலில் தங்குமாறு செய்தார்கள்.

அக்கூட்டத்தினர் தங்களுடைய ஐபத்தை பள்ளி வாசலில் ஆரம்பித்தார்கள். முஸ்லிம் தோழர்கள் அதைத் தடுத்தனர். ஆனால், பெருமானார் அவர்கள் ஜபத்தை நடத்திக் கொள்ளும்படி உத்தரவு கொடுத்தார்கள்.

அக்கூட்டத்தினருக்குப் பெருமானார் அவர்கள் இஸ்லாத்தைப் பற்றி போதனை செய்தார்கள் ஆனால், அக்கூட்டத்தார் தங்களுடைய புராதன மதத்தைக் கைவிட விரும்பவில்லை.

எனினும், அக்கூட்டத்தார், பாதுகாப்புக்காக ஆண்டு தோறும் ஒரு குறிப்பிட்ட தொகை கொடுப்பதாக ஒப்புக் கொண்டு, பெருமானார் அவர்களிடம் உடன்படிக்கை செய்து கொண்டு தங்கள் நகரத்துக்குப் புறப்பட்டார்கள்.