நபிகள் நாயகம்-சரித்திர நிகழ்ச்சிகள்/சில நிபந்தனைகளும் - மறுப்பும்

விக்கிமூலம் இலிருந்து

190. சில நிபந்தனைகளும் - மறுப்பும்

சுற்றுப் புறங்களிலுள்ள கேர்த்திரத்தார் அனைவரும் இஸ்லாத்தைத் தழுவி விட்டார்கள். இனிமேல் தாங்களும் அதில் சேருவதைத் தவிர வேறு வழியில்லை என்பதை தாயிப் பகுதி தகீப் கூட்டத்தார் உணர்ந்தார்கள். கடைசியாக, அவர்கள் கூடி ஆலோசித்தார்கள். பெருமானார். அவர்களிடம் ஒரு தூதுக் குழுவை அனுப்பத் தீர்மானித்தனர்.

தகீப் கூட்டத்தாரின் தூதர்கள் மதீனாவுக்கு மிக அருகில் வந்து விட்டதாக அறிந்ததும், முஸ்லிம்கள் அளவற்ற மகிழ்ச்சி அடைந்தனர்.

இந்த நற்செய்தியைப் பெருமானார் அவர்களிடம் தெரிவிக்கப் பலர் ஓடினார்கள். அப்பொழுது, அபூபக்கர் அவர்கள் “மகிழ்ச்சிக்கு உரிய இந்தச் செய்தியை, நானே பெருமானார் அவர்களிடம் சென்று தெரிவிப்பேன்” என்றார்கள்.

தகீப் கூட்டத்தின் தூதர்கள், மதீனாவின் பள்ளிவாசல் முற்றத்தின் ஒரு பகுதியில் கூடாரம் அமைத்துத் தங்கியிருந்தார்கள்.

பெருமானார் அவர்கள், அக்கூட்டத்தாரிடையே சென்று இஸ்லாத்தைப் பற்றிப் போதனை செய்தார்கள். சில நாட்கள் வரை அவர்கள் அங்கேயே தங்கினார்கள்.

பெருமானார் அவர்களின் போதனைக்குப் பிறகு, அக்கூட்டத்தார் இஸ்லாத்தைத் தழுவ விருப்பப்பட்டார்கள். ஆனால், சில விஷயங்களில் தங்களைக் கட்டுப்படுத்தக் கூடாது; தங்களுக்குச் சுய உரிமை வேண்டும் என்றும் சொன்னார்கள். அவர்கள் கூறிய நிபந்தனைகளாவன :

  1. எங்களில் பலர் திருமணம் செய்து கொள்ளாமலேயே காலம் கழிப்பதால், நாங்கள் பிற பெண்களிடம் தொடர்பு கொள்வதைத் தடுக்கக் கூடாது.
  2. எங்களுக்கு முக்கியமான தொழில், பணம் வட்டிக்குக் கொடுத்து வாங்குதல்; ஆகையால், வட்டி வாங்குவதைத் தடுக்கக் கூடாது.
  3. எங்களுடைய நாட்டில், திராட்சைப்பழம் அதிகமாய் உற்பத்தியாவதால், எங்களுக்கு முக்கியமான தொழில் மது தயாரித்து விற்பது; அதையும் தடுக்கக் கூடாது.

மேற்காணும் மூன்று நிபந்தனைகளையும் பெருமானார் அவர்கள் ஒப்புக் கொள்ள மறுத்து விட்டார்கள். “அந்த நிபந்தனைகளை வற்புறுத்தாமலே இஸ்லாத்தைத் தழுவுகிறோம்; ஆனால், நாங்கள் வணங்கிக் கொண்டிருக்கும் லாத் என்னும் விக்கிரகத்தைப் பற்றி, தாங்கள் என்ன முடிவு செய்வீர்கள்?” என்று பெருமானார் அவர்களிடம் கேட்டார்கள்.

“அது உடைக்கப்படும்” என்று சொன்னார்கள் பெருமானார் அவர்கள்.

அவர்கள் அதைக் கேட்டுத் திடுக்கிட்டுத், “தாங்கள் அவ்வாறு செய்யப் போவது, எங்கள் கடவுளுக்குத் தெரிந்தால், எங்களுடைய நகரத்தைக் கடவுள் அழித்து விடுவார். எங்கள் பெண்களும் மிகவும் வருத்தப்படுவார்கள். ஆதலால் அவ்விக்கிரகத்தை மூன்று ஆண்டுகளுக்கு வைத்திருக்க அவகாசம் கொடுக்க வேண்டும்” என்று சொன்னார்கள்.

பெருமானார் அவர்கள் அதையும் மறுத்து விட்டார்கள். பின்னர் ஓரிரண்டு ஆண்டுகள், ஒரு மாதம் என்று கேட்டார்கள்.

இஸ்லாமும், விக்கிரக வணக்கமும் ஒன்றாக இருக்க முடியாது. ஆதலால், பெருமானார் அவர்கள் அதற்கும் சம்மதிக்கவில்லை.

கடைசியாக, அக்கூட்டத்தார் பெருமானார் அவர்களிடம், “எங்கள் கையினால், விக்கிரகத்தை ஒன்றும் செய்ய மாட்டோம். தாங்கள் அதை என்ன செய்ய வேண்டுமோ, செய்து கொள்ளுங்கள். ஆனால், எங்கள் கையால், அதைச் செய்யாமால் இருப்பதற்காக எங்களை மன்னித்துக் கொள்ளும்படி கேட்டுக் கொள்கிறோம்” என்று சொன்னார்கள்.

பெருமானார், அவர்கள், அதற்கு ஒப்புக் கொண்டார்கள்.

அதன் பின், அக்கூட்டத்தார், "தாங்கள் தொழுகை நடத்தாமல் இருப்பதற்கு அனுமதி கொடுக்க வேண்டும்” என்று கேட்டார்கள்.

தொழுகையில்லை என்றால் மார்க்கமேயில்லை என்று பெருமானார் அவர்கள் அதற்கு ஒப்புக் கொள்ளவில்லை.

கடைசியாக, அக்கூட்டத்தார், தாங்கள் இஸ்லாத்தைத் தழுவுவதாகச் சொல்லி, தாயிபுக்குப் புறப்பட்டுச் சென்றார்கள். அவர்களுடன் லாத்தை உடைப்பதற்காக அபூ ஸுப்யான், அல் முசீரா (ரலி) ஆகிய இருவரையும் பெருமானார் அவர்கள் அனுப்பி வைத்தார்கள்.

லாத்தை உடைக்கப் போகும் போது, தாயிபிலுள்ள பெண்கள் வீட்டை விட்டு வெளியே வந்து, தலைவிரி கோலமாய் நின்று அழுது கொண்டிருந்தார்கள்.

தகீப் கூட்டத்தார் அனைவரும் இரண்டு வருடத்துக்குள் இஸ்லாத்தில் சேர்ந்து விட்டார்கள்.