நபிகள் நாயகம்-சரித்திர நிகழ்ச்சிகள்/கொடிவர்களுக்கும் மன்னிப்பு அளித்தல்

விக்கிமூலம் இலிருந்து

161. கொடியவர்களுக்கும் மன்னிப்பு அளித்தல்

முஸ்லிம் சேனையானது மக்காவுக்குள் நுழைந்ததும், மக்காவாசிகளில் சிலர், தாங்கள் முன்பு முஸ்லிம்களுக்கு இழைத்த தீங்குகளுக்காக, அவர்கள் தங்களைப் பழி வாங்கக் கூடும் என்று பயந்து மக்காவை விட்டே ஓடி விட்டார்கள். அவர்கள் அனைவரும் மன்னிக்கப்பட்டனர்.

அபூஜஹிலின் மகன் இக்ரிமாவும், அவ்வாறு ஓடியவர்களில் ஒருவர். அவர் மக்காவை விட்டு ஒடியதும் அவருடைய மனைவி உம்மு ஹகீம் பெருமானார் அவர்களிடம் வந்து, “ஆண்டவனுடைய தூதரே! இக்ரிமாவைக் கொல்லும்படி நீங்கள் கட்டளையிடுவீர்களோ என்ற அச்சத்தால், அவர் ஏமனுக்கு ஓடி விட்டார். அவரை மன்னிக்கும்படி தங்களை மன்றாடிக் கேட்டுக் கொள்கிறேன்” என்றார்.

மன்னித்து விட்டதாகப் பெருமானார் கூறினார்கள். உடனே மனைவி, இக்ரிமாவைத் தேடிச் சென்று, அவரைக் கண்டு: “மிகுந்த தயாளமும், மேன்மையும் மிக்க ஒருவரிடமிருந்து நான் உம்மிடம் வந்திருக்கிறேன். ஆகையால், உம்மையே நாசமாக்கிக் கொள்ள வேண்டாம். ஏனெனில் பெருமானார் அவர்களிடமிருந்து நான் மன்னிப்புப் பெற்று வந்திருக்கிறேன்" என்று கூறினார்.

உடனே இக்ரிமா இஸ்லாத்தைத் தழுவினார்; தம் மனைவியோடு மக்காவுக்கு வந்து பெருமானார் அவர்கள் இருக்கும் இடம் சென்றார்.

இக்ரிமா, இஸ்லாத்துக்கு இழைத்த கொடுமைகள் கொஞ்ச நஞ்சம் அல்ல. அவருடைய தந்தையான அபுஜஹிலோ, இஸ்லாத்தை அழிப்பதையே குறிக்கோளாகக் கொண்டவர். அத்தகைய கொடிய பகைவரான இக்ரிமா இஸ்லாத்தைத் தழுவியது பெருமானார் அவர்களுக்கு அளவற்ற மகிழ்ச்சியை அளித்தது.